மனம் போன போக்கில்

Archive for May 2012

சமீபத்தில் துருக்கி சென்ற நண்பர் ஒரு பேனா வாங்கி வந்து பரிசளித்தார். அதன் விசேஷம், மேலோட்டமாகப் பார்த்தால் பேனாபோலவே இருக்கும், அழகாக எழுதும், ஆனால் உண்மையில் அது ஒரு பென்சில். அதன் மூடியில் ஒரு தக்கனூண்டு பேனாவைப் பொருத்திவைத்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் புரிந்தபிறகு, அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பென்சிலாகவே தோன்றுகிறது, மிகச் சாதாரணமாக அதைக் கடந்துபோகிறேன், ஆனால் முதன்முறையாக அவர் அந்தப் பேனா முனையைப் பிரித்துப் பென்சிலை வெளிக்காட்டியபோது நான் அடைந்த ஆச்சர்யம் சாதாரணமானது அல்ல.

கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் ’Easter Egg’ ஆச்சர்ய உணர்வு, சில கவிதைகளிலும் ஏற்படும். ஒரு வார்த்தையை மேலோட்டமாகப் பார்த்தால் ஓர் அர்த்தம், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம் என வித்தை காட்டும்.

உதாரணமாக, என் சமீபத்திய கிறுக்கு, கம்ப ராமாயணம், அதில் ஒரு பாட்டு. அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் திருமாலிடம் முறையிடுகிறார்கள். இப்படி:

’ஐ இரு தலையினோன், அனுசர் ஆதி ஆம்

மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே

செய்தவம் இழந்தன, திருவினாயக

உய்திறன் இல்லை’யென்று உயிர்ப்பு வீங்கினார்

ஐ இரு தலை = 5 * 2 = 10 தலை கொண்ட ராவணன்

அனுசர் = தம்பிகள்

ஆதி ஆம் = முதலான

மெய் வலி அரக்கரால் = உடல் பலம் கொண்ட அரக்கர்களால்

விண்ணும் மண்ணும் செய் தவம் இழந்தன = வானுலகத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தவம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்

இதுவரை ஓகே, அடுத்து ‘திருவினாயக’ என்று வருகிறது. திருமாலைப்போய் யாராவது ‘பிள்ளையாரே’ என்று அழைப்பார்களோ?

அங்கேதான் நாம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. அது ‘திரு வினாயகா’ (மரியாதைக்குரிய வினாயகரே) அல்ல, ‘திருவி நாயகா’, அதாவது திருமகளாகிய லட்சுமியின் கணவனே, திருமாலே!

இந்த மேட்டரைச் சினிமாக்காரர்கள் சும்மா விடுவார்களா? கவிஞர் வாலி ஒரு பாட்டில் அட்டகாசமாகப் புகுத்திவிட்டார்:

வராது வந்த நாயகன், ஒரே சிறந்த ஓர் வரன்

தராதரம் புரிந்தவன், நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன், தரம் தரம் (?) இணைந்தவன்,

இவன் தலை விநாயகன்

இந்தப் பாடலை வீடியோ வடிவமாகப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும், நாயகனும் நாயகியும் ஒரு விநாயகர் கோயிலில் பாடுவதுபோன்ற காட்சி அமைப்பு. ஆகவே ‘இவன் தலை விநாயகன்’ என்ற வரிக்கு நேரடியான Religious அர்த்தமும் கொள்ளலாம், ‘இவன் தலைவி நாயகன்’ என்று பிரித்து Romantic அர்த்தமும் காணலாம்.

காதல் பாட்டிலேயே ரெட்டை அர்த்தம் வைக்கிற வாலி கலாட்டா பாட்டு என்றால் சும்மா விடுவாரா? எல்லாருக்கும் தெரிந்த ஓர் Easter Egg இது:

கட்ட வண்டி கட்ட வண்டி

காப்பாத்த வந்த வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி

நாகரீகம் அறிஞ்ச வண்டி

இங்கே ’காப்பாத்த வந்த வண்டி’ என்று சாதாரணமாக வரும் வரியைக் கொஞ்சம் சேர்த்துப் படித்தால் ‘காப்பாற்ற வந்தவன்-டி, நாலும் தெரிஞ்சவன்-டி, நாகரீகம் அறிஞ்சவன்-டி’ என்று விவகாரமாக மாறிவிடுகிறது.

இதுவும் ஒரு ராமர் பாட்டிலிருந்து வந்த Inspirationதான் என்று நினைக்கிறேன். அருணாசலக் கவிராயர் எழுதிய ‘ராமனுக்கு மன்னன் முடி’ என்ற பாடலில் இப்படிச் சில வரிகள் வரும்:

பட்டம் கட்ட ஏற்றவன்-டி,

நாலு பேரில் மூத்தவன்-டி,

’கட்ட வண்டி’ பாட்டைப் பிரித்துக் கேட்டபிறகு, எனக்கு இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ‘பட்டம் கட்டுவதற்குச் சிறந்த வண்டி இது, நாலு வண்டிகளில் மிக மூத்தது’ என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. ராமர் மன்னிப்பாராக.

இந்த ‘வாடி போடி’ உத்தியை வாலி இன்னொரு பாட்டிலும் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதையும் பாடியது கமலஹாசன்தான், ஆனால் பெண் குரலில்:

தூணுக்குள்ளும் இருப்பான்-டி,

துரும்பிலும் இருப்பான்-டி,

நம்பியவர் நெஞ்சில் நிற்பான்-டி

இப்படி இந்தப் பாட்டின் பல்லவி முழுவதும் பல ‘டி’யில் முடியும் வரிகள் இருக்கும். இவை மரியாதைக்குறைவாக எழுதப்பட்டவை அல்ல.  அப்படியே இருந்தாலும், கதைப்படி இவற்றைப் பாடுவது வயதான ஒரு பெண்மணி என்பதால் ஒன்றும் தவறில்லை.

ஆனால் உண்மையில் இத்தனை ’டி’களுக்குக் காரணம், அந்தப் படத்து ஹீரோவின் பெயர் பாண்டியன். கதாநாயகி அவனுடைய மனைவி, ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.

ஆகவே, அந்தப் பாண்டியனை அவளுக்கு நினைவுபடுத்தும்விதமாக, ஒவ்வொரு வரியின் கடைசிப் பகுதியிலும் ‘பாண்டி’, ‘பாண்டி’ என்று வருவதுபோல் எழுதியிருப்பார் வாலி.

இதுபோன்ற விஷயங்களை ஒருமுறை தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் ஆச்சர்யம் இருக்காது, ’ச்சே, இவ்ளோதானா?’ என்று தோன்றும், ஆனால் இந்த மேட்டர் புரியாமல் பாட்டின் நேரடிப் பொருளைமட்டுமே பலர் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு இந்த  ’உள் குத்து’ விளங்கும்போது, ‘அட’ என்று ஒரு திகைப்பு தோன்றும், அதற்காகவே இதுமாதிரி சமத்காரப் பாடல்கள் எழுதப்படுகின்றன.

நிறைவாக, இன்னொரு Easter Egg. இதுவும் வாலிதான். என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. முகம் காட்டாமலே காதலிக்கும் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கிறான் நாயகன். அப்போது அவன் பாடும் வரிகள்:

தேடும் கண் பார்வை தவிக்க, துடிக்க,

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ,

வெறும் மாயமானதோ!

நேரடியான, எளிய வரிகள்தான். காட்சிக்குப் பொருத்தமான பொருளைத் தருகின்றன.

ஆனால் அந்த மூன்றாவது வரி, ‘வெறும் மாயமானதோ’ என்பதைக் கொஞ்சம் மாற்றிப் பிரித்தால்? ‘வெறும் மாய மான் அதோ!’ … முகம் காட்டாமல் மறைந்து மறைந்து போகிறாளே, இவள் நிஜமாகவே பெண்தானா? அல்லது வெறும் மாயமானா?’

தூக்கிவாரிப்போடுகிறதில்லையா? அவ்ளோதான் மேட்டர்!

***

என். சொக்கன் …

30 05 2012

  1. nchokkan
    இன்று ஒரு கலீக் என்னுடன் பர்ஸனலாகப் பேச வந்தார்.கல்லூரி முடித்து சுமார் இரண்டு வருடங்களாகிறவர்,அவரை Team Leader ஆக்கப் பார்க்கிறார்கள் |1
    Tue, May 29 2012 11:30:58
  2. nchokkan
    இவருக்குத் தலைமை தாங்குவதில் ஆர்வம் இல்லை, என்னை ப்ரொக்ராமராகவே நிரந்தரமாக இருக்கவிடமாட்டீர்களா? என்றார் கெஞ்சலாக |2
    Tue, May 29 2012 11:31:30
  3. nchokkan
    ’பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன் |3
    Tue, May 29 2012 11:32:07
  4. nchokkan
    ‘நான் ப்ரொக்ராம் எழுதப் படித்திருக்கிறேன், தலைமை தாங்கப் படிக்கவில்லை, வேணும்னா 2வருஷம் லீவ் தாங்க,MBA படிச்சுட்டு வர்றேன்’ என்கிறார் |4
    Tue, May 29 2012 11:33:22
  5. nchokkan
    ’எம்பிஏவுக்கும் தலைமை தாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை தம்பி, இது உனக்குப் பிடிக்காட்டி உன் மேனேஜர்கிட்ட சொல்லு’ என்றேன், பயப்படுகிறார் |5
    Tue, May 29 2012 11:33:59
  6. nchokkan
    ’காலமெல்லாம் ப்ரொக்ராம் எழுதிகிட்டே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்,Just because I am senior to someone, doesn’t mean I have to lead them’ |6
    Tue, May 29 2012 11:34:58
  7. nchokkan
    ’நான் எதிர்பார்க்கறது தப்பா? இங்கே நாலஞ்சு வருஷம் குப்பை கொட்டின எல்லாரும், பிடிக்காட்டியும், திறமை இல்லாட்டியும் மேனேஜராகியே தீரணுமா?’|7
    Tue, May 29 2012 11:36:11
  8. nchokkan
    அப்புறம், ப்ராக்டிகல் பிரச்னைக்கு வருகிறார், ’ஒருவேளை நான் இப்போ இதை மறுத்துட்டா, என் சம்பளம் குறைஞ்சுடுமோ? காசுக்காக மேனேஜணுமா?’ |8
    Tue, May 29 2012 11:37:10
  9. nchokkan
    இப்படி வரிசையாகப் பல கவலைகளைச் சொன்னார், 24 வயதில் 60 வயதுவரை கற்பனை செய்துவைத்திருக்கிறார், அதுசார்ந்த பல குழப்பங்கள் |9
    Tue, May 29 2012 11:38:29
  10. nchokkan
    நான் எல்லாம் கேட்டுக்கொண்டேன். அவர் கேள்விகளில் நியாயம் உண்டு, அதேசமயம், தன் உரிமைகளை அறியாமலிருக்கிறார், கொஞ்சம் வழிகாட்டினேன் |10
    Tue, May 29 2012 11:40:34
  11. nchokkan
    அதற்குமேல் நான் பேசுவது தகாது. அவர் மேனேஜருக்கும் எனக்கும் அரசியலாகும். ‘மகனே, உன் சமர்த்து, போய் HRரிடம் பேசு’ என்று அனுப்பிவிட்டேன் |11
    Tue, May 29 2012 11:41:19
  12. nchokkan
    ஆனால் அப்போதிலிருந்து அவர் கேட்ட கேள்விகளின் நினைப்பாகவே இருக்கிறது.இந்த IT துறை உருவாக்கிய விருப்பற்ற, அரைகுறை மேனேஜர்கள்தான் எத்தனை!|12
    Tue, May 29 2012 11:42:08
  13. nchokkan
    எனக்குத் தெரிந்து பலர் இதை மறுப்பதில்லை, பயம் காரணமில்லை, எல்லாரும் இதையே செய்வதால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் |13
    Tue, May 29 2012 11:43:44
  14. nchokkan
    எனக்கு யாரையும் மேய்க்கத் தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கம்? தன்னை ஒழுங்காக மேய்க்கத் தெரிந்தாலே அது பெரும்திறமை அல்லவா? |14
    Tue, May 29 2012 11:44:56
  15. nchokkan
    ஐடி துறையில் இணைந்து 18 மாதம் கடந்த அனைவருக்கும் இதுகுறித்து ஒரு தெளிவான Counseling நடத்தினால் நன்றாயிருக்கும், யார் செய்வார்கள்? |15/15

ட்விட்டரில் இன்று காலை எதேச்சையாக வாலி பற்றிப் பேச்சு வந்தது.

வாலி என்றால், சினி கவிஞர் வாலி அல்ல, ராமாயணக் ‘கவி’ஞர் வாலி, அதாவது குரங்குகளின் அரசர், சுக்ரீவனின் அண்ணாத்தே, பத்து தலை ராவணனை வாலில் கட்டி உலகமெல்லாம் இழுத்துச் சென்ற கில்லாடி, ராமனின் அம்பால் தாக்கப்பட்டு, பின்னர் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்துத் தாக்கோ தாக்கென்று தாக்கியவர்.

இந்த வாலியைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், ’வாலி வதை படலம்’ குறித்து நண்பர் ‘டகால்டி’ (அவரது நிஜப் பெயர் எனக்குத் தெரியவில்லை) நிகழ்த்திய ஒரு சிறிய உரை கிடைத்தது. ஆவலுடன் கேட்கத் தொடங்கினேன்.

உண்மையில் இது மேடைப்பேச்சோ, ஆழமான தத்துவ விசாரணைகளுடன் கூடிய அலசலோ இல்லை. இயல்பான மொழியில் தான் வாசித்த ராமாயண நுணுக்கங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிற ஒரு முயற்சி. அநாவசிய அலங்காரங்கள், வார்த்தை விளையாட்டுகள் எவையும் இல்லாமல் நம் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதுபோன்ற விளக்கம், கம்பனின் பாடல்களைச் சந்தத்துடன் வாசிக்கும் அழகு, அதில் உள்ள நுட்பமான தகவல்களை விவரிக்கும் ஆர்வம் என்று நிஜமாகவே கிறங்கடித்துவிட்டார் மனிதர். கேட்டு முடித்தவுடன், இப்படி மொத்த ராமாயணத்தையும் யாராவது விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று ஏங்கதான் முடிந்தது.

இதற்குமுன் நான் இப்படி நினைத்தது, ஹரி கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ என்ற புத்தகத்தை வாசித்தபோது. அதன்பிறகு டிகேசியின் சில ராமாயணக் கட்டுரைகள் இப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. இப்போது டகால்டி. வாழ்க நீர் எம்மான், வணக்கங்கள்!

அந்த ஆடியோ பதிவைக் கீழே தந்துள்ளேன். கேளுங்கள், நண்பர் ‘டகால்டி’யின் வலைதளம் : http://dagalti.blogspot.in/ அவரது ட்விட்டர் இணைப்பு : https://twitter.com/#!/dagalti

***

என். சொக்கன் …

28 05 2012

  1. nchokkan
    சினிமாவில் ஒரு கதாநாயகனைப் பெரிய ஆள் என்று காட்சிப்படுத்தவேண்டுமென்றால், அவனோடு மோதும் வில்லன் பெரிய பலசாலி என்று காட்டவேண்டும் |1
    Wed, May 23 2012 00:18:05
  2. nchokkan
    அவன் நாலு பேரைப் போட்டுத் துவைப்பதுபோல் காட்சி செய்து, பின்னர் அந்த வில்லனை இந்த ஹீரோ துவைத்தால்தான் ‘நச்’ன்னு இருக்கும் |2
    Wed, May 23 2012 00:18:39
  3. nchokkan
    இதே டெக்னிக்கைக் கவிஞர்களும் நிறைய பயன்படுத்துவார்கள்.ராமனுடன் மோதும் ஒவ்வொரு அரக்கனையும் ‘வஞ்சனையில்லாமல் வர்ணிப்பது’ கம்பர் பழக்கம் |3
    Wed, May 23 2012 00:19:28
  4. nchokkan
    இன்றைக்குப் படித்த உதாரணம், ஆரணிய காண்டத்தில் வரும் கவந்தன். இவனுக்குத் தலை இல்லை வயிற்றுக்கு நடுவில் தலை, விநோதமான உருவம் |4
    Wed, May 23 2012 00:20:12
  5. nchokkan
    தலை இல்லாத அரக்கனைப் பொருத்தமா வர்ணிக்கணுமில்லையா? ‘மேக்கு உயர் கொடுமுடி இழந்த மேரு நேர்’ என்கிறார் கம்பர் |5
    Wed, May 23 2012 00:20:44
  6. nchokkan
    மேக்கு உயர் கொடுமுடி என்றால், மிக உயர்ந்த சிகரங்கள், அதாவது சிகரங்களை இழந்த மலைபோல கவந்தன் இருந்தானாம் |6
    Wed, May 23 2012 00:21:29
  7. nchokkan
    இந்த வரியைப் படித்தவுடன், எனக்கு ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்ற பாட்டுதான் காதுக்குள் கேட்டது. காரணம், ‘கொடுமுடி’ என்ற வார்த்தை |7
    Wed, May 23 2012 00:21:57
  8. nchokkan
    KB சுந்தராம்பாள் என்பதில் உள்ள K = கொடுமுடி, ஈரோடு அருகில் உள்ள ஊர், அங்கே பிறந்த அவருக்குக் ‘கொடுமுடி கோகிலம்’ என்று பட்டம் உண்டு |8
    Wed, May 23 2012 00:22:37
  9. nchokkan
    அந்தக் கொடுமுடிக்கும் இங்கே கம்பர் சொல்லும் கொடுமுடிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? கொஞ்சம் தேடினேன்,செம சுவாரஸ்யமான கதை சிக்கியது |9
    Wed, May 23 2012 00:23:16
  10. nchokkan
    அந்தக் காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் போட்டி, ‘நீ பலசாலியா? நான் பலசாலியா? பார்த்துவிடலாம்!’ |10
    Wed, May 23 2012 00:23:47
  11. nchokkan
    போட்டி இதுதான் : மேரு மலையை ஆதிசேஷன் பிடித்துக்கொள்ளவேண்டியது, வாயுதேவன் அதை ஊதித் தகர்க்கவேண்டியது, யார் ஜெயிப்பார்கள்? |11
    Wed, May 23 2012 00:24:22
  12. nchokkan
    மேரு மலையில் 1000 சிகரங்கள் உண்டாம். அவற்றை ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் பிடித்துக்கொள்ள, மிஸ்டர் வாயு ஊதுறார், ஊதுறார்… |12
    Wed, May 23 2012 00:25:01
  13. nchokkan
    ரொம்ப நேரம் ஊதியபின், மேருமலையில் இருந்த சில சிகரங்கள்மட்டும் பிய்ந்து சென்று தென் இந்தியாவில் விழுந்துவிட்டனவாம் |13
    Wed, May 23 2012 00:25:58
  14. nchokkan
    அப்படிப் பிய்ந்தவை நான்கு சிகரங்கள் என்கிறார்கள், ஐந்து சிகரங்கள் என்றும் சொல்கிறார்கள் |14
    Wed, May 23 2012 00:26:18
  15. nchokkan
    அப்படி விழுந்த சிகரங்களில் ஒன்றுதான், கொடுமுடி (மற்றவை: திருவண்ணாமலை, ரத்தினகிரி, ஈங்கோய் மலை, பொதிகை மலை) |15
    Wed, May 23 2012 00:27:44
  16. nchokkan
    தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் இதுமாதிரி சுவையான கதைகள் இருக்கும்போல. தேடணும்! |16/16ற்

நேற்றைக்கு ஓசூர் சென்றிருந்தேன். தனியார் நிறுவனமொன்றில் மேலதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் என்ற நண்பரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சுவாரஸ்யமான அரட்டை.

இளங்கோவன் திருக்குறள் பிரியர். ’இந்தப் புத்தகத்தில்மட்டும்தான் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும்’ என்பார்.

உதாரணமாக, அவர் குறிப்பிட்ட ஒரு குறள்:

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)

ஊதியம் இல்லை உயிர்க்கு

இந்தக் குறளுக்குப் பொதுவாகத் தரப்படும் விளக்கம் என்ன?

ஈதல் = வேண்டியவர்களுக்கு ஒரு பொருளைத் தருதல்

இசைபட வாழ்தல் = அதனால் புகழ் உண்டாகும்படி வாழ்தல்

இந்த இரண்டும் இல்லாவிட்டால், மனித வாழ்க்கைக்குப் பயன் எதுவும் இல்லை

இங்கே இசை = புகழ் என்ற பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் நாம் சகஜமாகத் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை. இசை = Music என்பதுதான் பெரும்பாலானோர் அறிந்திருக்கிற பொருள்.

ஆனால் கொஞ்சம் மறைமுகமாக, இசை = புகழ் என்ற பொருளும் நமக்கு ஓரளவு பரிச்சயமானதுதான். ’எசகேடாப் பேசாதே’ என்று சொல்கிறோம் அல்லவா? அது ‘இசை கேடாகப் பேசாதே’ என்பதன் கொச்சை. அதாவது, ‘அவசரப்பட்டு உன்னுடைய புகழ் கெடும்படி ஏதாவது பேசிவைக்காதே’ என்று அர்த்தம்.

இன்னும் நம்பிக்கை இல்லையா? கம்பன் சொன்னால் நம்புவீர்களா?

கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராத்திரி நேரத்து நிலாவைப் பார்க்கும் ராமன் ‘நீள் நிலாவின் இசை’ என்கிறான்.

ஒருவேளை ராமன் ‘வண்டின் இசை’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை, ‘நிலாவின் இசை’ என்கிறான், நிலாவுக்கு ஒளிதான் உண்டு. இசை / சத்தம் கிடையாது. ஆகவே, இங்கே ‘நிலாவின் இசை’ என்பது, நிலவின் புகழைதான் குறிக்கிறது.

ஆக, திருவள்ளுவரும் ‘இசை பட வாழ்தல்’ என்று சொல்வதன் அர்த்தம் ‘புகழ் சேர்ந்து வாழ்வது’ என்பதாகதான் இருக்கவேண்டும். பரிமேலழகர், மணக்குடவர் தொடங்கிக் கலைஞர், சுஜாதாவரை எல்லாரும் இப்படிதான் விளக்கம் தந்திருக்கிறார்கள்.

‘அந்த விளக்கங்களில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அதேசமயம் இதைக் கொஞ்சம் மாற்றிப் படித்தால் இந்தக் குறளுக்கு வேறோர் அருமையான அர்த்தம் புரியும்’ என்றார் இளங்கோவன்.

‘எப்படி மாற்றணும்?’ என்றேன் ஆவலுடன்.

’ஈதல், அப்புறம் இசைபட வாழ்தல்ன்னு பிரிக்காம, இசைபட ஈதல் வாழ்தல்ன்னு பிரிச்சுப் பாருங்க.’

‘இசை பட ஈதலா? நாம கொடுக்கறதை ஊருக்கெல்லாம் சொல்லிப் புகழ் தேடிக்கணும்ங்கறீங்களா? அது தப்பாச்சே!’

‘அப்படியில்லைங்க, இங்கே இசை-க்கு அர்த்தம் புகழ் இல்லை’ என்றார் இளங்கோவன், ‘இசைந்திருத்தல், அதாவது In Harmony.’

’ம்ஹூம், சுத்தமாப் புரியலைங்க.’

அவர் ஓர் எளிய உதாரணத்துடன் விளக்கினார். ’இப்போ ஒரு குடிகாரன் இருக்கான், அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா அது ஈதல்தான், ஆனா தப்பான ஈதல், Not in harmony. அந்த ஆயிரம் ரூபாய்ல அவன் இன்னும் குடிச்சுட்டுப் புறளுவான்.’

‘அதுக்குப் பதிலா, அவனோட குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா, அவங்க அரிசி, பருப்பு வாங்குவாங்க, ஒரு மாசம் வயிறாரச் சாப்பிடுவாங்க. அந்த ஈதல், In Harmony.’

‘அதாவது, நாம பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடணும், நாம யாருக்கு உதவறோமோ அவங்களுக்கு நன்மை தரக்கூடியமாதிரி பொருத்தமான உதவிகளைமட்டும்தான் செய்யணும், அதுதான் இசை பட ஈதல், அதாவது பொருத்தமான, இசைவான ஈதல், அதைச் செஞ்சு வாழ்தல், அதுதான் உயிருக்கு ஊதியம், நாம வாழறதுக்கு அர்த்தம். என்ன சொல்றீங்க?’

***

என். சொக்கன் …

20 05 2012

  1. nchokkan
    இன்றைக்குக் கம்பன் காலை. முனிவரோடு வீதியில் நடந்த ராமனை சீதைமட்டுமா பார்த்தாள்? பலபேர் ஜொள்ளு,கம்பர் அதை அட்டகாசமாகப் பதிவு செய்கிறார் |1
    Mon, Feb 20 2012 22:50:52
  2. nchokkan
    ’இத்தனை பெண்களின் விழிகளெல்லாம் பட்டுப்பட்டுதான் ராமன் தேகம் கருத்துவிட்டதா? அல்லது அவனது கரிய நிறம் அவர்கள் கண்களில் ஒட்டிக்கொண்டதா? |2
    Mon, Feb 20 2012 22:51:50
  3. nchokkan
    இன்னொரு பாட்டில், பெண் ஒருத்தி தன் தோழியை அழைக்கிறாள், ‘என்னை அப்படியே கைத்தாங்கலாகப் படுக்கைக்குக் கொண்டுபோ’ என்கிறாள் |3
    Mon, Feb 20 2012 22:52:19
  4. nchokkan
    ’ஏண்டி? உனக்குக் கண் தெரியாதா?’ என்கிறாள் தோழி. ‘இல்லை, நான் என் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன், இனி திறக்கமாட்டேன்’ என்கிறாள் இவள் |4
    Mon, Feb 20 2012 22:52:53
  5. nchokkan
    ’ஏன் திறக்கமாட்டாய்?’ என்று விசாரிக்கிறாள் தோழி |5
    Mon, Feb 20 2012 22:53:12
  6. nchokkan
    ’ராமனைப் பார்த்தேன், அவன் என்னை விட்டுத் தப்பித்துப் போகமுடியாதபடி கண்களுக்குள் சிறை செய்துவிட்டேன்’ என்று பதில் வருகிறது |6
    Mon, Feb 20 2012 22:53:41
  7. nchokkan
    இன்னொரு பெண்ணின் புலம்பல், ‘ராமனும் தசரதனும் வாழும் தேசத்தில் ஒருவன் இந்த அப்பாவிப் பெண்ணைத் தாக்குகிறான், நியாயமா?’ |7
    Mon, Feb 20 2012 22:54:33
  8. nchokkan
    அப்பாவிப் பெண்ணைத் தாக்கிய அந்த ‘ஒருவன்’, மன்மதன். ராமனைப் பார்த்த அவள்மேல் மெல்லிய மேனி என்றும் பார்க்காமல் மலர் அம்பு விடுகிறானாம் |8
    Mon, Feb 20 2012 22:55:17
  9. nchokkan
    இன்னொருத்தி ‘இத்தனை பெரிய இளவரசன் ராமன், இவன் ஏன் வீதியில் தனி ஆளாக நடந்து வருகிறான்?’ என்கிறாள் |9
    Mon, Feb 20 2012 22:56:13
  10. nchokkan
    ’என்னடி பேத்தல் இது? ராமனோடு முனிவர் வர்றார், லட்சுமணன் வர்றான், நீ என்னடான்னா தனியா வர்றான்னு சொல்றியே?’ |10
    Mon, Feb 20 2012 22:56:47
  11. nchokkan
    ’அவங்களையெல்லாம் யார் பார்த்தாங்க? என் கண்ணுக்கு ராமன்மட்டும்தான் தெரிஞ்சான்’ என்கிறாள் இந்தப் பெண் |11
    Mon, Feb 20 2012 22:57:14
  12. nchokkan
    ராமனைப் பார்த்தவர்களும், முழுக்கப் பார்க்கலையாம், ’தோள் கண்டார், தோளே கண்டார்’ பாடல் எல்லாருக்கும் தெரியும், அதில் டாப் கடைசி வரி |12
    Mon, Feb 20 2012 22:57:48
  13. nchokkan
    எல்லாரும் ஒரு கடவுளைப் பார்த்துவிட்டு அவர்மட்டுமே உண்மை என்று நினைக்கிறார்கள், நிஜமான முழுக் கடவுளைப் பார்த்தவர்கள் யாருமில்லை |12a
    Mon, Feb 20 2012 22:58:38
  14. nchokkan
    ’ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்’ என்று முடிக்கிறார் கம்பர். நாம் யானை கண்ட குருடர்களை ஒப்பிடலாம் |14
    Mon, Feb 20 2012 22:59:30
  15. nchokkan
    இன்னொருத்தி ‘சிபிச் சக்கரவர்த்தி வம்சத்தில் வந்தவன்தானே இந்த ராமன், குலப் பெருமையில் கொஞ்சமும் இவனுக்கு இல்லையே’ என்று இகழ்கிறாள் |15
    Mon, Feb 20 2012 23:00:26
  16. nchokkan
    ஏன்? ராமனுக்கு என்ன குறை? ஏன் இகழணும்? |16
    Mon, Feb 20 2012 23:00:59
  17. nchokkan
    சிபி புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுத்தான்,ஆனால் இந்த ராமன் எங்களிடம் இருக்கும் உயிரைப் பறித்துக்கொள்கிறான், திருப்பித் தர மறுக்கிறான் |17
    Mon, Feb 20 2012 23:01:35
  18. nchokkan
    ’நயந்தார் உய்யத் தங்கள் இன்னுயிரும் கொடுத்தார் தமர், எங்கள் இன்னுயிர் எங்களுக்கு ஈகல் இவன்’ 🙂 |18/18
    Mon, Feb 20 2012 23:02:15
  19. nchokkan
    காலை நேரத்தில் கம்ப ராமாயணத்தில் எந்தப் பக்கத்தையும் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கக்கூடாது. ஆஃபீசுக்கு லீவ் போடத் தோன்றும்!
  1. nchokkan
    ராமனுக்குப் பட்டம் சூட்டுவது என்று சுயமாக முடிவெடுத்தாலும், தசரதன் உடனே அதைச் செயல்படுத்திவிடுவதில்லை,அதற்கென்று ஒரு மிக நீண்ட Process |1
    Step 1: வசிஷ்டரையும் தன் மந்திரிகளையும் அழைத்து இந்த முடிவைத் தெரிவிக்கிறான். ‘உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்கிறான் |2
    Sun, Apr 22 2012 10:57:51
  2. nchokkan
    Step 2 : வசிஷ்டர் தன் சம்மதத்தைச் சொல்கிறார் |3
    Sun, Apr 22 2012 10:59:26
  3. nchokkan
    Step 3 : மந்திரிகளின் சார்பாக சுமந்திரன் சம்மதம் சொல்கிறார் (குரல் ஓட்டுபோல், ‘முக ஓட்டு’ வைத்து முடிவு : face language) |4
    Sun, Apr 22 2012 10:59:46
  4. nchokkan
    மந்திரிகள் சார்பாகப் பேசும் சுமந்திரன், ‘நீ துறவறம் போகுமுன், ராமனுக்கு முடி சூட்டிவிடு’ என்கிறார் : Sequence முக்கியம் அரசே! |5
    Sun, Apr 22 2012 11:00:24
  5. nchokkan
    Step 4 : எல்லாருக்கும் நன்றி சொல்லும் தசரதன், ‘எனக்குத் தந்த அதே ஒத்துழைப்பை என் மகனுக்கும் தரவேண்டும்’ என்று கோருகிறான் |6
    Sun, Apr 22 2012 11:00:57
  6. nchokkan
    Step 5 : ராமனை வரவழைக்கிறான். கட்டளை இடவில்லை, தன்னுடைய தீர்மானத்தைக் காரணத்துடன் சொல்லி ‘பதவியை ஏற்றுக்கொள்வாயா?’ என்று கேட்கிறான் |7
    Sun, Apr 22 2012 11:02:30
  7. nchokkan
    Step 6 : ராமன் சம்மதம் (சந்தோஷத்தில் குதிக்கவும் இல்லை, வெறுக்கவும் இல்லை, கடமை என ஏற்றான் என்கிறார் கம்பர்) |8
    Sun, Apr 22 2012 11:03:00
  8. nchokkan
    Step 7 : தசரதன் தன் சிற்றரசர்கள் அனைவரையும் வரவழைக்கிறான், அவர்கள் கருத்தைக் கேட்கிறான் |9
    Sun, Apr 22 2012 11:03:30
  9. nchokkan
    Step 8 : அவர்கள் ‘ராமன் தகுதியான அரசன்’தான் என்று சம்மதம் சொல்கிறார்கள். தசரதனுக்கு மகிழ்ச்சி, ஆனாலும் குறுக்குக் கேள்வி கேட்கிறான் |10
    Sun, Apr 22 2012 11:04:25
  10. nchokkan
    Step 9 : ’அரசர்களே, நீங்கள் நான் சொல்வதால் சம்மதித்தீர்களா? அல்லது நிஜமாகவே ராமனுக்கு ஒத்துழைப்புத் தருவீர்களா? உண்மையைச் சொல்லுங்கள்’|11
    Sun, Apr 22 2012 11:05:01
  11. nchokkan
    Step 10 : சிற்றரசர்கள் ராமனின் பெருமைகளைப் பட்டியல் போட்டு ‘நாங்கள் எடுத்த முடிவு Rationalதான்’ என்று உறுதிப்படுத்துகிறார்கள் |12
    Sun, Apr 22 2012 11:05:32
  12. nchokkan
    Step 11 : பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்தல் Step 12 : ராமனுக்கு வசிஷ்டரின் அறிவுரைகள் எட்ஸட்ரா |13
    Sun, Apr 22 2012 11:06:25
  13. nchokkan
    இப்படி ஒரு நுணுக்கமான / கச்சிதமான / எதையும் தவறவிடாத Process இயல்பானதா? அல்லது கம்பரின் ஆசையா? வால்மீகியைப் படித்தோர் சொல்லவும் |14/14
  1. nchokkan
    ஒரு வீட்டில் கி.வா.ஜ.க்கு விருந்து. முதலில் மாம்பழம், பின் சாப்பாடு, தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள மாவடு போட்டார்கள் |1
    Sat, May 05 2012 03:44:20
  2. nchokkan
    அதுபற்றி அவர் பாடிய வெண்பாவின் கடைசி வரிக் குறும்பு: ‘கனிக்கப்புறம் வருமாங் காய்’ (வரும் மாங்காய், வருமாம் காய் 🙂 |2
    Sat, May 05 2012 03:44:49
  3. nchokkan
    மன்னிக்க, அது ‘கனிக்கப்புறம்’ அல்ல ‘கனிக்குப்பின்’ |3
    Sat, May 05 2012 03:45:54
  4. nchokkan
    கிவாஜ கலந்துகொண்ட ஒரு கவியரங்கம். கவிஞர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார்கள், ‘மாலை இல்லையா?’ என்று கேட்டார் ஒருவர் |4
    Sat, May 05 2012 03:47:10
  5. nchokkan
    ’கவிகளுக்கு மாலை போட்டால் என்ன ஆகும் என்று தெரியாதா?’ என்று குறும்பாகக் கேட்டார் கிவாஜ (கவி = குரங்கு) |5
    Sat, May 05 2012 03:47:42
  6. nchokkan
    கிவாஜவைப் பேச அழைத்த ஒருவர் ‘என் கவனிப்பில் குற்றம் குறை இருந்தால் மன்னிக்க’ என்றார், இவர் பதிலுக்கு ‘குற்றம் குறைதான்’ என்றார் |6
    Sat, May 05 2012 03:48:59
  7. nchokkan
    ’தென்னைக்கும் மனிதனுக்கும் நேர் விரோதம்’ என்பார் கிவாஜ. காரணம், தென்னைக்கு இளமையில் வழுக்கை, மனிதனுக்கு முதுமையில் |7
    Sat, May 05 2012 03:49:41
  8. nchokkan
    கிவாஜ பெயரைச் சிலர் ‘ஜெகந்நாதன்’ என்று எழுதுவார்கள். ‘எனக்குக் கொம்பு இல்லை’ என்று நாசூக்காகத் திருத்துவார் |8
    Sat, May 05 2012 03:50:59
  9. nchokkan
    தன் டிரைவர்களுக்குக் கிவாஜ சூட்டிய செல்லப் பெயர்கள் ‘பார்த்தசாரதி’ (நான் பார்த்த சாரதி),’சக்கரபாணி’ (ஸ்டீயரிங் வீல் பிடித்திருப்பதால்) |9
    Sat, May 05 2012 03:53:04
  10. nchokkan
    ’ரயில் ரொம்ப சத்தம் போடுகிறது’ என்றார் நண்பர். ‘ஆமாம், இந்த ரயிலில் சத்தம் அதிகம்தான்’ என்றார் கிவாஜ (சத்தம் = sound / ticket price) |10
    Sat, May 05 2012 03:54:37
  11. nchokkan
    ’முருகன் தேவர்கள் படைக்குத் தலைவனாக, தேவ சேனாபதியாக இருந்தான், பின் தேவயானியை மணந்து தேவசேனா பதி ஆனான்’ : கிவாஜ |11
    Sat, May 05 2012 03:55:52
  12. nchokkan
    கணவன் மனைவி ஒருவரை நமஸ்கரிக்கும்போது, ஆணுக்கு வலப்புறம் பெண் நிற்பது ஏன்? காரணம் ‘பெண்ணுக்கு ஆண் இடம் தரமாட்டான்’ : கிவாஜ |12
    Sat, May 05 2012 03:56:56
  13. nchokkan
    ஒருவர் கிவாஜவுக்கு முந்திரிப் பழம் தந்தார்.‘முழுப்பழம் இல்லையா, முந்திரிப் பழம்தானா?’ என்று சிரித்தார் இவர். முந்திரி=1/32 in tamil |13
    Sat, May 05 2012 03:58:48
  14. nchokkan
    நண்பர் மகள் அவருக்கு மாதுளம்பழம் கொடுத்தார். ‘இந்த மாது உளங்கனிந்து கொடுத்த மாதுளங்கனி ரொம்ப இனிக்கிறது’ என்றார் கிவாஜ |14
    Sat, May 05 2012 03:59:34
  15. nchokkan
    கிவாஜ குள்ளம். அவரை ஒருவர் அகத்தியர் என்றார். ‘ஆமாம், நானும் கும்பத்தில்தான் பிறந்தேன்’ என்றார் இவர் கும்பம் = குடம் / ஒருவகை ராசி |15
    Sat, May 05 2012 04:01:02
  16. nchokkan
    முந்தைய 15 ட்வீட்களில் வந்த துணுக்குகள் அனைத்தும், ’சிரிக்க வைக்கிறார் கிவாஜ’ புத்தகத்திலிருந்து. அல்லயன்ஸ் பதிப்பகம், விலை ரூ 35/- |16
    Sat, May 05 2012 04:01:54
  17. nchokkan
    பாதிக்குப் பாதி அருமையான சிலேடைகள். கிவாஜ எந்நேரமும் வார்த்தைகளோடு செம ஜாலியாக விளையாடியபடி வாழ்ந்திருக்கிறார் |17
    Sat, May 05 2012 04:02:32
  18. nchokkan
    இந்தப் புத்தகத்தை இணையத்தில் இலவசமாகவும் டவுன்லோட் செய்து படிக்கலாம், Strongly recommended : http://tamilvu.org/library/nationalized/pdf/46.KI.VA.JA/SIRIKKAVAIKIRARKI.VA.JA(114).pdf |18
    Sat, May 05 2012 04:03:10
  19. nchokkan
    கிவாஜ எழுதிய நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், அனைத்தும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள இங்கே : http://tamilvu.org/library/nationalized/html/naauthor-44.htm |19/19
    Sat, May 05 2012 04:04:49
  20. nchokkan
    கிவாஜ வாழ்க்கை வரலாறு : எங்க ஊர்க் காரர் 🙂 http://groups.google.com/group/minTamil/msg/6e33fa89f3f2b8dc?pli=1 |20/20
  1. nchokkan
    ராவணன் சபையை வர்ணிக்கும்போது கம்பரின் குறும்பு அபாரம், சில சமீபத்திய அரசியல் தலைவர்களை நினைவுபடுத்தக்கூடும், உதாரணமாகச் சிலது |1
    Sun, May 13 2012 01:48:40
  2. nchokkan
    ராவணனோட கால் கழல் தங்கம் இல்லை, ஆனா ஜொலிக்கும், ஏன்?அவன் கால்ல விழற மந்திரிகள் தலைக்கிரீடத்திலேர்ந்து டெய்லி அங்கே தங்கம் ஒட்டிஒட்டி.. |2
    Sun, May 13 2012 01:49:59
  3. nchokkan
    ராவணன் எப்ப நம்ம பக்கம் திரும்புவானோ தெரியாது, எதுக்கும் இருக்கட்டும்ன்னு மந்திரிமார்கள் எப்பவும் தலைல கை வெச்சுக் கும்பிட்டபடி… |2
    Sun, May 13 2012 01:50:22
  4. nchokkan
    ராவணன் ‘அந்த ஃபேனைப் போடு’ன்னு பணிப்பெண்கிட்ட சொன்னா, தங்கள்கிட்டே சொன்னதா நினைச்சு அமைச்சர்கள் எல்லாம் போட்டி போட்டுகிட்டு ஓடி… |4
    Sun, May 13 2012 01:51:18
  5. nchokkan
    ராவணன் யார்ட்டயாவது தணிஞ்ச குரல்ல பேசினாப் போச்சு, மத்த எல்லாரும் அவன் தங்களைப்பத்திதான் பேசறானோன்னு பயந்து நடுங்குவாங்களாம்… |5
    Sun, May 13 2012 01:51:52
  6. nchokkan
    சத்தியமா இதெல்லாம் பல நூறு வருஷங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது, நம்பணும் :> #கம்பன்டா |6/6
  1. nchokkan
    ராவணனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா (http://storify.com/nchokkan/-5) கம்பீரத்திலிருந்து சடாரென்று ட்ராக் மாறுகிறான் ராவணன், காரணம் சூர்ப்பணகை |1
    Mon, May 14 2012 22:32:05
  2. nchokkan
    சீதையின் அழகை அவள் புகழோ புகழென்று புகழ்ந்து தள்ள … (இவளைப் பற்றி உன்னிடம் சொன்னதால், உன் பெண்டாட்டிமார்களுக்கு நான் விரோதி) |2
    Mon, May 14 2012 22:32:51
  3. nchokkan
    ராவணன் காதல்வயப்படுகிறான். உடம்பெல்லாம் அனல் கொதிக்கிறது. படுக்கை நோகிறது (கருகுகிறது), காற்று வாங்கலாம் என்று சோலைக்குப் போகிறான் |3
    Mon, May 14 2012 22:33:26
  4. nchokkan
    பின்பனிக்காலம், ஆனால் இவன் உடம்பு கொதிக்கிறது,‘என்னடா வெதர் இது? Change This’ என்கிறான், இயற்கை பயந்து வேனிற்காலத்துக்கு switch ஆகிறது |4
    Mon, May 14 2012 22:34:43
  5. nchokkan
    ’ம்ஹூம், இது சரிப்படாது, எனக்குக் குளிர் காலம் வேணும்’ என்கிறான் ராவணன். உடனே Winter தொடங்கிவிடுகிறது :> |5
    Mon, May 14 2012 22:35:11
  6. nchokkan
    ’இது குளிர்காலமாடா? கொதிக்குது, இதுக்குக் கோடைகாலமே பரவாயில்லையே’ என்கிறான் ராவணன். என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கிறது இயற்கை |6
    Mon, May 14 2012 22:35:51
  7. nchokkan
    ’எனக்கு எந்தக் காலமும் வேணாம், Cancel All’ என்கிறான், எல்லாக் காலங்களும் பயந்து ஓடிவிடுகின்றன :))) |7
    Mon, May 14 2012 22:36:34
  8. nchokkan
    ’சீதையை நினைச்சு உடம்பு ரொம்ப கொதிக்குது, கொஞ்சம் இதமா ஏதாச்சும் வேணும், நிலவைக் கொண்டு வா, கட்டிலில் கட்டி வை’ என்கிறான் ராவணன் |8
    Mon, May 14 2012 22:37:08
  9. nchokkan
    அப்போது நிலா அந்தப் பக்கமே இல்லை, ராவணனுக்குப் பயந்து எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது, சேவகர்கள் ஓடிப்போய் அதை அழைக்கிறார்கள் |9
    Mon, May 14 2012 22:37:41
  10. nchokkan
    முன்பு இந்த நிலாவிடம் ராவணன் ஏதோ வம்பு செய்திருக்கிறான். ஆகவே நிலாவுக்கு அவன்மீது கடுப்பு, ஆனால் அதை வெளிக்காட்டமுடியாத நிலைமை |10
    Mon, May 14 2012 22:38:15
  11. nchokkan
    ஆகவே, இப்போது ‘நல்ல சான்ஸ்’ என்று முடிவு செய்கிறது நிலா. காதல் தாபத்தில் இருக்கும் அவன்மீது பனியைப் பொழிந்து இன்னும் வேகவைக்கிறது |11
    Mon, May 14 2012 22:38:55
  12. nchokkan
    ராவணன் கடுப்பாகிறான், ‘டேய் அப்ரெண்டிசுகளா, நிலாவைக் கூட்டிவரச் சொன்னா மறந்துபோய் சூரியனை இழுத்துகிட்டு வந்துட்டீங்களேடா’ என்கிறான் |12
    Mon, May 14 2012 22:39:36
  13. nchokkan
    வேலைக்காரர்கள் நடுங்கிப்போகிறார்கள், ‘ஐயா, நாங்க உங்க பேச்சை மீறுவோமா? இது நிலாதான், நம்புங்க’ என்கிறார்கள் |13
    Mon, May 14 2012 22:40:46
  14. nchokkan
    ராவணன் நம்பாமல் பார்க்கிறான், ‘ஏய் நிலா, உனக்கு என்னாச்சு? என்னைமாதிரி எவமேலயோ காதல்வயப்பட்டுப் புத்தி மாறிட்டியா?’ என்கிறான் :> |14
    Mon, May 14 2012 22:41:28
  15. nchokkan
    ’எனக்குத் தெரியும், நீ சீதையோட முக அழகுக்கு முன்னாடி தோத்துப்போய்ட்டே, அதான் உனக்குக் கடுப்பு’ என்று நிலாவிடம் சொல்கிறான் ராவணன் |15
    Mon, May 14 2012 22:43:55
  16. nchokkan
    இதில் காமெடி என்னவென்றால், ராவணன் சீதையைப் பார்த்ததே கிடையாது, சூர்ப்பணகையின் நேர்முக வர்ணனை effect :> |16
    Mon, May 14 2012 22:44:31
  17. nchokkan
    நடுவில் ஒரு பாட்டு, ‘சீதை ராவணனின் மனத்தில் கலந்துவிட்டாள், அவன் எப்படி அவளை மறப்பான்? அதற்கு இன்னொரு மனமா இருக்கு?’ என்கிறார் கம்பர் |17
    Mon, May 14 2012 22:45:46
  18. nchokkan
    இதை ’இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன், நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று’ என்று அட்டகாசமாக எளிமைப்படுத்தினார் கவியரசர் |18
    Mon, May 14 2012 22:46:23
  19. nchokkan
    பார்க்காத ஒரு பெண்ணை நினைத்து ராவணன் இந்தப் பாடு படுகிறான் என்றால், சூர்ப்பணகையின் சொல்திறனை வியக்கவேண்டும், அவள் செம intelligent |19
    Mon, May 14 2012 22:47:08
  20. nchokkan
    ராமன், லட்சுமணன், கரன், இப்போது ராவணன் என்று வரிசையாக ஒவ்வொருவரிடமும் அவள் பயன்படுத்தும் ‘தூண்டில்’கள் சைக்காலஜி தெரிந்தவை |20
    Mon, May 14 2012 22:47:43
  21. nchokkan
    ஒரு வில்லி பாத்திரத்தைக்கூட வெறுக்கமுடியாமல் ரசிக்கும்படி காட்சிப்படுத்துவது சாதாரண விஷயமில்லை #கம்பன்டா |21/21

முன்னெச்சரிக்கை: செம நீளமான மொக்கைக் கட்டுரை. பத்தாங்கிளாஸ் இலக்கண வகுப்பை நினைவுபடுத்தும். Enter at your own risk.

இன்று மதியச் சாப்பாட்டுக்காக வீடு வரும் நேரம், ஃபோனில் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.

பலமுறை கேட்ட பாட்டுதான். இந்த ப்ளாகிலேயே அதைச் சிலாகித்து ஒரு நீண்ட வியாசம்கூட எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அந்தப் பாட்டின் முதல் வார்த்தையிலேயே ஒரு சந்தேகம்.

பூ + கதவு = பூக்கதவு என்றல்லவா வரவேண்டும்? அந்த ‘ங்’ எங்கிருந்து நுழைந்தது?

கொஞ்சம் யோசித்தபோது வேறு பல சினிமாப் பாடல்கள் நினைவுக்கு வந்தன: ‘பூந்தேனில் கலந்து’தான், ‘பூத்தேனில் கலந்து’ அல்ல, ‘பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்’தான், ‘பூப்பாவாய் ஆம்பல் ஆம்பல்தான்’, ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’தான், ‘பூ முடிப்பாள் இந்தப் பூக்குழலி’ அல்ல.

ஆனாலும், சந்தேகம் தீரவில்லை. ட்விட்டரில் இப்படி எழுதிவைத்தேன்:

பூங்கதவே? பூக்கதவே? என்ன வித்யாஸம்?

அடுத்த சில நிமிடங்களுக்குள், பல நண்பர்கள் பதில் எழுதியிருந்தார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை:

@nradhakn

பூங்காவிற்கும் பூக்காவிற்கும் உள்ள வித்யாஸம்தான், ஆனால் அது என்னவென்று மறந்து போயிற்று 😉

@kanavey

பூவிலான கதவு பூங்கதவு! கதவில் பூ இருந்தால் பூக்கதவு… (எதாவது சொல்லி வைப்போம்)

@BalaramanL

பூங்கதவு – ‘பூ’ போன்ற கதவு?, பூக்கதவு – பூவினால் ஆன கதவு? உறுதியா தெரியல.

@psankar

பூங்கா என்ற சொல் பூ மற்றும் கா விலிரிந்து வந்ததாகப் படித்திருக்கிறேன். அந்த இலக்கணப்படிதான் பூங்கதவாய் இருக்கும்.

@Thamizhpesy

made by flower. another one was make with flower.

@rsGiri

பூவைப் போன்ற கதவு பூங்கதவு. பூவில் செய்த கதவு பூக்கதவு!

இந்த பதில்களில் பெரும்பாலானவை சரியாகத் தோன்றினாலும், அதற்குப் பொருத்தமான இலக்கண விளக்கத்தை இவர்கள் சொல்லவில்லை. அதைச் செய்தவர் நண்பர் @sramanaa . அவர் சுட்டிக்காட்டிய இணைப்பு : http://t.co/OU9ZrA9b

இந்த இணைப்பில் ஒரு நன்னூல் சூத்திரம் (புணர்ச்சி விதி) உள்ளது. இப்படி:

பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்

சுருக்கமான இந்தச் சூத்திரத்தைக் கொஞ்சம் நீட்டினால் இப்படி மாறும்:

‘பூ’ என்ற வார்த்தையுடன் இன்னொரு சொல் சேர்ந்தால், அந்தச் சொல்லின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால், அதன் இனமாகிய மெல்லின எழுத்து அங்கே ஒற்று வடிவத்தில் தோன்றும்.

உதாரணமாக,

1. பூ + கதவு

இங்கே ‘பூ’வுடன் சேரும் வல்லின எழுத்து ‘க’, அதன் இனமாகிய மெல்லின எழுத்து ‘ங’, அதன் ஒற்று ‘ங்’, ஆக, பூ + ங் + கதவு = பூங்கதவு.

2. பூ + சிரிப்பு

இங்கே ‘பூ’வுடன் சேரும் வல்லின எழுத்து ‘ச’, அதன் இனமாகிய மெல்லின எழுத்து ‘ஞ’, அதன் ஒற்று ‘ஞ்’, ஆக, பூ + ஞ் + சிரிப்பு = பூஞ்சிரிப்பு.

அவ்ளோதான். பிரச்னை தீர்ந்தது. எல்லாரும் காபி சாப்பிடப் போகலாம்!

ஆனால் எனக்கு இந்தச் சூத்திரத்தில் முழுத் திருப்தி இல்லை. ’பூங்கதவு’ சரி என்று புரிகிறது, ஆனால் ‘பூக்கதவு’ எப்படித் தப்பாகும்? ‘பூக்கடை’ என்று சகஜமாகச் சொல்கிறோமே, அது என்ன கணக்கு?

கூகுளில் கொஞ்சம் நோண்டினேன். நண்பர்கள் @sramanaa மற்றும் @BalaramanL நல்ல உதாரணங்களைச் சேர்த்து உதவினார்கள்.

சிறிது நேரத்துக்குப்பின், ஒரு மேட்டர் சிக்கியது.

பொதுவாக, ‘பூ’ என்ற சொல் இரண்டு அர்த்தங்களில் வரலாம்:

1. பூ மாதிரி (மென்மையான) கதவு

2. பூவினால் செய்யப்பட்ட கதவு

இதை முன்வைத்து யோசிக்கும்போது, ‘ங்’, ‘க்’ குழப்பத்துக்கும் ஒருமாதிரி குத்துமதிப்பான பதில் கிடைத்தது:

எடுத்துக்காட்டாக, பூ + குழலி (குழல் = கூந்தல், குழலி = கூந்தலைக் கொண்டவள்) என்பதைப் பார்ப்போம். இதற்கு இரண்டு அர்த்தங்கள் சொல்லமுடியும்:

1. மலர் போன்ற மென்மையான கூந்தலைக் கொண்ட பெண்

2. மலரைக் கூந்தலில் சூடிய பெண்

முதல் உதாரணத்தில் அந்தப் பெண் தலையில் பூவைச் சூடியிருக்கவேண்டிய அவசியமே இல்லை, அந்த தலை முடி பூப்போல மென்மையானது என்பதுதான் மேட்டர்.

இங்கே பூ + குழலி = ’பூங்குழலி’ என்பது கச்சிதமாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

இரண்டாவது உதாரணத்தில் வரும் பெண், தலையில் பூவைச் சூடியுள்ளாள். இவளுடைய முடி கரடுமுரடாக இருந்தாலும், அவள் பூ வைத்திருப்பதால், இவளும் பூ + குழலிதான், ஆனால் ‘பூங்குழலி’ அல்ல, ‘பூக்குழலி’.

இதேபோல்,

பூ + கடை = பூக்கடை = (நிஜ) பூக்களை விற்கும் கடை

ஆனால்

பூ + கவிதை = பூங்கவிதை = பூப்போல மென்மையான கவிதை, நிஜமான பூக்களைக் கசக்கிப் பிழிந்து மை தயாரித்து எழுதியது அல்ல Smile

ஆக, the rule is:

1. பூவுடன் வல்லினம் சேரும்போது

1a. அந்தப் பூ நிஜமான பூவாக இருந்தால், அந்த வல்லின எழுத்தின் ஒற்று அங்கே வரும் (பூ + க் + கதவு)

1b. அந்தப் பூ நிஜமாக இல்லாமல், ‘பூப்போன்ற மென்மை’யைக் குறித்தால், அங்கே அந்த வல்லின எழுத்தின் இனமாகிய மெல்லின எழுத்து ஒற்று வரும் (பூ + ங் + கதவு), பூவின் மென்மையைக் குறிக்க எக்ஸ்ட்ராவாக ஒரு மெல்லின எழுத்து Smile

என்ன? ஒருமாதிரி கோவையாக வருகிறதா?

இந்த விளக்கம் எனக்குத் திருப்தி. நண்பர்கள் @sramanaa மற்றும் @BalaramanL இதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒரே பிரச்னை, இது சரியா தவறா என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த விளக்கத்தை Explicit ஆகச் சொல்லும் சூத்திரங்கள் எவையும் எங்களுக்கு அகப்படவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து உறுதிப்படுத்துங்கள்.

அது நிற்க. இந்தக் கட்டுரையை எழுதியபின்னர், கூடுதல் உதாரணங்கள் ஏதேனும் கிடைக்குமா என்று நெட்டில் தேடினேன். அருமையான ஒரு பாட்டு கிடைத்தது.

சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் ஒரு கதாபாத்திரம். அவளுக்குப் ‘பூம்பாவை’ என்று பெயர் சூட்டுகிறார்கள். ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்:

பூவினாள் என வருதலின் பூம்பாவை என்றே

மேவு நாமமும் விளம்பினர்

அதாவது, அவள் பூவைப் போன்ற பாவை, ஆகவே அவளுக்குப் ‘பூம்பாவை’ என்று பெயர் சூட்டினார்கள்.

இதற்கு விளக்கம் எழுதிய திரு சி. கே. சுப்பிரமணிய முதலியார் கூடுதலாக ஒரு வரியைச் சேர்க்கிறார்:

’பூப்பாவை’ என்று வல்லொற்று வரின் இவளின் மெல்லிய பண்புக்கு மேவாது

அடடே!

***

என். சொக்கன் …

09 05 2012

UPDATE:

மேற்சொன்ன இந்த விதி(?)க்குப் பொருந்தாத வார்த்தைகள் சிலவற்றை இங்கேயும் ட்விட்டரிலும் பேசினோம், அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். சரியான இலக்கண சூத்திரம் கிடைத்தால் இந்த மர்மம் விலகிவிடும்:

1. பூஞ்சோலை : (நிஜப்) பூக்கள் உள்ள சோலை, அப்போ ‘பூச்சோலை’ என்று வரணுமோ?

2. பூந்தேன்: இங்கேயும் நிஜப் பூவின் தேன்தானே? அப்போ அது ‘பூத்தேன்’ என்று வரணுமா? (அதன் அர்த்தம் வேறாச்சே 🙂 )

3. பூந்தோட்டம்: Same question, பூத்தோட்டம் என்று எழுதணுமா?

இந்த சினிமாப் பாட்டு வரியைக் கவனியுங்கள்: ‘பூந்தோட்டக் காவல் காரா, பூப்பறிக்க இத்தனை நாளா?’

இதில் பூ + தோட்டம் என்பதும் பூ + பறிக்க என்பவை இரண்டும் ஒன்றுதான், நிஜப் பூ + வல்லினம், ஆனால் முதல் வார்த்தையில் மெல்லின ஒற்று (ந்) வருகிறது (பூந்தோட்டம், not பூத்தோட்டம்), ஆனால் இரண்டாவது வார்த்தையில் வல்லின ஒற்று (ப்) வருகிறது (பூப்பறிக்க, not பூம்பறிக்க) … குழப்பம் continues

அப்புறம் இன்னொரு விஷயம், இந்தப் பதிவின் பின்னூட்டத்திலும் ட்விட்டரிலும் பல நண்பர்கள் இந்தக் கட்டுரையை ‘ஆராய்ச்சி’ என்றார்கள். அது தப்பான வார்த்தை. இது ஆராய்ச்சி என்றால் உண்மையாகவே உழைத்துச் செய்கிற நிஜ ஆராய்ச்சிக்கு மரியாதை போய்விடும், வேண்டுமென்றால் இதை ‘ஆர்வாய்ச்சி’ என்று அழைப்போம் 🙂

நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’

‘அதனால?’

’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’

‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’

என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.

மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.

என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.

புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.

அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>

இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.

சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.

பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’

‘இல்லை அங்கிள்.’

‘ஏன்? என்னாச்சு?’

’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.

’இப்ப லீவ்தானேடா?’

’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’

அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.

அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’

இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.

ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’

இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’

‘அப்ப நான் எதை எடுக்கறது?’

‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’

உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.

இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.

ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.

‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.

ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?

நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’

’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:

  1. நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
  2. என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
  3. நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்

கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.

ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.

என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.

ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.

’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’

‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’

போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’

கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.

அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.

இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.

எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.

’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’

‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’

நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.

ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!

அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.

இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’

’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.

நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.

‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’

‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’

நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.

***

என். சொக்கன் …

06 05 2012


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2012
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031