Archive for May 2012
பிரித்தலும் சேர்த்தலும்
Posted May 30, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Poetry | Puzzle | Relax | Uncategorized | Vaalee
- 20 Comments
சமீபத்தில் துருக்கி சென்ற நண்பர் ஒரு பேனா வாங்கி வந்து பரிசளித்தார். அதன் விசேஷம், மேலோட்டமாகப் பார்த்தால் பேனாபோலவே இருக்கும், அழகாக எழுதும், ஆனால் உண்மையில் அது ஒரு பென்சில். அதன் மூடியில் ஒரு தக்கனூண்டு பேனாவைப் பொருத்திவைத்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் புரிந்தபிறகு, அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பென்சிலாகவே தோன்றுகிறது, மிகச் சாதாரணமாக அதைக் கடந்துபோகிறேன், ஆனால் முதன்முறையாக அவர் அந்தப் பேனா முனையைப் பிரித்துப் பென்சிலை வெளிக்காட்டியபோது நான் அடைந்த ஆச்சர்யம் சாதாரணமானது அல்ல.
கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் ’Easter Egg’ ஆச்சர்ய உணர்வு, சில கவிதைகளிலும் ஏற்படும். ஒரு வார்த்தையை மேலோட்டமாகப் பார்த்தால் ஓர் அர்த்தம், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம் என வித்தை காட்டும்.
உதாரணமாக, என் சமீபத்திய கிறுக்கு, கம்ப ராமாயணம், அதில் ஒரு பாட்டு. அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் திருமாலிடம் முறையிடுகிறார்கள். இப்படி:
’ஐ இரு தலையினோன், அனுசர் ஆதி ஆம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய்தவம் இழந்தன, திருவினாயக
உய்திறன் இல்லை’யென்று உயிர்ப்பு வீங்கினார்
ஐ இரு தலை = 5 * 2 = 10 தலை கொண்ட ராவணன்
அனுசர் = தம்பிகள்
ஆதி ஆம் = முதலான
மெய் வலி அரக்கரால் = உடல் பலம் கொண்ட அரக்கர்களால்
விண்ணும் மண்ணும் செய் தவம் இழந்தன = வானுலகத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தவம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்
இதுவரை ஓகே, அடுத்து ‘திருவினாயக’ என்று வருகிறது. திருமாலைப்போய் யாராவது ‘பிள்ளையாரே’ என்று அழைப்பார்களோ?
அங்கேதான் நாம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. அது ‘திரு வினாயகா’ (மரியாதைக்குரிய வினாயகரே) அல்ல, ‘திருவி நாயகா’, அதாவது திருமகளாகிய லட்சுமியின் கணவனே, திருமாலே!
இந்த மேட்டரைச் சினிமாக்காரர்கள் சும்மா விடுவார்களா? கவிஞர் வாலி ஒரு பாட்டில் அட்டகாசமாகப் புகுத்திவிட்டார்:
வராது வந்த நாயகன், ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன், நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன், தரம் தரம் (?) இணைந்தவன்,
இவன் தலை விநாயகன்
இந்தப் பாடலை வீடியோ வடிவமாகப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும், நாயகனும் நாயகியும் ஒரு விநாயகர் கோயிலில் பாடுவதுபோன்ற காட்சி அமைப்பு. ஆகவே ‘இவன் தலை விநாயகன்’ என்ற வரிக்கு நேரடியான Religious அர்த்தமும் கொள்ளலாம், ‘இவன் தலைவி நாயகன்’ என்று பிரித்து Romantic அர்த்தமும் காணலாம்.
காதல் பாட்டிலேயே ரெட்டை அர்த்தம் வைக்கிற வாலி கலாட்டா பாட்டு என்றால் சும்மா விடுவாரா? எல்லாருக்கும் தெரிந்த ஓர் Easter Egg இது:
கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி
நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி
இங்கே ’காப்பாத்த வந்த வண்டி’ என்று சாதாரணமாக வரும் வரியைக் கொஞ்சம் சேர்த்துப் படித்தால் ‘காப்பாற்ற வந்தவன்-டி, நாலும் தெரிஞ்சவன்-டி, நாகரீகம் அறிஞ்சவன்-டி’ என்று விவகாரமாக மாறிவிடுகிறது.
இதுவும் ஒரு ராமர் பாட்டிலிருந்து வந்த Inspirationதான் என்று நினைக்கிறேன். அருணாசலக் கவிராயர் எழுதிய ‘ராமனுக்கு மன்னன் முடி’ என்ற பாடலில் இப்படிச் சில வரிகள் வரும்:
பட்டம் கட்ட ஏற்றவன்-டி,
நாலு பேரில் மூத்தவன்-டி,
’கட்ட வண்டி’ பாட்டைப் பிரித்துக் கேட்டபிறகு, எனக்கு இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ‘பட்டம் கட்டுவதற்குச் சிறந்த வண்டி இது, நாலு வண்டிகளில் மிக மூத்தது’ என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. ராமர் மன்னிப்பாராக.
இந்த ‘வாடி போடி’ உத்தியை வாலி இன்னொரு பாட்டிலும் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதையும் பாடியது கமலஹாசன்தான், ஆனால் பெண் குரலில்:
தூணுக்குள்ளும் இருப்பான்-டி,
துரும்பிலும் இருப்பான்-டி,
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்-டி
இப்படி இந்தப் பாட்டின் பல்லவி முழுவதும் பல ‘டி’யில் முடியும் வரிகள் இருக்கும். இவை மரியாதைக்குறைவாக எழுதப்பட்டவை அல்ல. அப்படியே இருந்தாலும், கதைப்படி இவற்றைப் பாடுவது வயதான ஒரு பெண்மணி என்பதால் ஒன்றும் தவறில்லை.
ஆனால் உண்மையில் இத்தனை ’டி’களுக்குக் காரணம், அந்தப் படத்து ஹீரோவின் பெயர் பாண்டியன். கதாநாயகி அவனுடைய மனைவி, ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.
ஆகவே, அந்தப் பாண்டியனை அவளுக்கு நினைவுபடுத்தும்விதமாக, ஒவ்வொரு வரியின் கடைசிப் பகுதியிலும் ‘பாண்டி’, ‘பாண்டி’ என்று வருவதுபோல் எழுதியிருப்பார் வாலி.
இதுபோன்ற விஷயங்களை ஒருமுறை தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் ஆச்சர்யம் இருக்காது, ’ச்சே, இவ்ளோதானா?’ என்று தோன்றும், ஆனால் இந்த மேட்டர் புரியாமல் பாட்டின் நேரடிப் பொருளைமட்டுமே பலர் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு இந்த ’உள் குத்து’ விளங்கும்போது, ‘அட’ என்று ஒரு திகைப்பு தோன்றும், அதற்காகவே இதுமாதிரி சமத்காரப் பாடல்கள் எழுதப்படுகின்றன.
நிறைவாக, இன்னொரு Easter Egg. இதுவும் வாலிதான். என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.
படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. முகம் காட்டாமலே காதலிக்கும் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கிறான் நாயகன். அப்போது அவன் பாடும் வரிகள்:
தேடும் கண் பார்வை தவிக்க, துடிக்க,
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ,
வெறும் மாயமானதோ!
நேரடியான, எளிய வரிகள்தான். காட்சிக்குப் பொருத்தமான பொருளைத் தருகின்றன.
ஆனால் அந்த மூன்றாவது வரி, ‘வெறும் மாயமானதோ’ என்பதைக் கொஞ்சம் மாற்றிப் பிரித்தால்? ‘வெறும் மாய மான் அதோ!’ … முகம் காட்டாமல் மறைந்து மறைந்து போகிறாளே, இவள் நிஜமாகவே பெண்தானா? அல்லது வெறும் மாயமானா?’
தூக்கிவாரிப்போடுகிறதில்லையா? அவ்ளோதான் மேட்டர்!
***
என். சொக்கன் …
30 05 2012
நான் ஏன் மேனேஜராகணும்? (ட்விட்டுரை)
Posted May 30, 2012
on:- In: ட்விட்டுரை | நவீன அபத்தங்கள் | Characters | Communication | Confidence | Differing Angles | Expectation | Fear | Financial | Honesty | IT | Learning | Money | Open Question | Peer Pressure | People | Perfection | Pulambal | Uncategorized | Youth
- 2 Comments
சிறியன சிந்தியாதான்
Posted May 28, 2012
on:- In: ஓசிப் பதிவு | Blogs | Introduction | Media | Reviews | Uncategorized
- 8 Comments
ட்விட்டரில் இன்று காலை எதேச்சையாக வாலி பற்றிப் பேச்சு வந்தது.
வாலி என்றால், சினி கவிஞர் வாலி அல்ல, ராமாயணக் ‘கவி’ஞர் வாலி, அதாவது குரங்குகளின் அரசர், சுக்ரீவனின் அண்ணாத்தே, பத்து தலை ராவணனை வாலில் கட்டி உலகமெல்லாம் இழுத்துச் சென்ற கில்லாடி, ராமனின் அம்பால் தாக்கப்பட்டு, பின்னர் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்துத் தாக்கோ தாக்கென்று தாக்கியவர்.
இந்த வாலியைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், ’வாலி வதை படலம்’ குறித்து நண்பர் ‘டகால்டி’ (அவரது நிஜப் பெயர் எனக்குத் தெரியவில்லை) நிகழ்த்திய ஒரு சிறிய உரை கிடைத்தது. ஆவலுடன் கேட்கத் தொடங்கினேன்.
உண்மையில் இது மேடைப்பேச்சோ, ஆழமான தத்துவ விசாரணைகளுடன் கூடிய அலசலோ இல்லை. இயல்பான மொழியில் தான் வாசித்த ராமாயண நுணுக்கங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிற ஒரு முயற்சி. அநாவசிய அலங்காரங்கள், வார்த்தை விளையாட்டுகள் எவையும் இல்லாமல் நம் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதுபோன்ற விளக்கம், கம்பனின் பாடல்களைச் சந்தத்துடன் வாசிக்கும் அழகு, அதில் உள்ள நுட்பமான தகவல்களை விவரிக்கும் ஆர்வம் என்று நிஜமாகவே கிறங்கடித்துவிட்டார் மனிதர். கேட்டு முடித்தவுடன், இப்படி மொத்த ராமாயணத்தையும் யாராவது விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று ஏங்கதான் முடிந்தது.
இதற்குமுன் நான் இப்படி நினைத்தது, ஹரி கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ என்ற புத்தகத்தை வாசித்தபோது. அதன்பிறகு டிகேசியின் சில ராமாயணக் கட்டுரைகள் இப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. இப்போது டகால்டி. வாழ்க நீர் எம்மான், வணக்கங்கள்!
அந்த ஆடியோ பதிவைக் கீழே தந்துள்ளேன். கேளுங்கள், நண்பர் ‘டகால்டி’யின் வலைதளம் : http://dagalti.blogspot.in/ அவரது ட்விட்டர் இணைப்பு : https://twitter.com/#!/dagalti
***
என். சொக்கன் …
28 05 2012
கொடுமுடிக் கதை (ட்விட்டுரை)
Posted May 23, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Etymology | Reading | Relax | Religion | Uncategorized
- 9 Comments
இசைபட ஈதல்
Posted May 20, 2012
on:- In: Characters | Communication | Creativity | Differing Angles | Hosur | Imagination | Language | Learning | Poetry | Tamil | Uncategorized
- 11 Comments
நேற்றைக்கு ஓசூர் சென்றிருந்தேன். தனியார் நிறுவனமொன்றில் மேலதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் என்ற நண்பரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சுவாரஸ்யமான அரட்டை.
இளங்கோவன் திருக்குறள் பிரியர். ’இந்தப் புத்தகத்தில்மட்டும்தான் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும்’ என்பார்.
உதாரணமாக, அவர் குறிப்பிட்ட ஒரு குறள்:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு
இந்தக் குறளுக்குப் பொதுவாகத் தரப்படும் விளக்கம் என்ன?
ஈதல் = வேண்டியவர்களுக்கு ஒரு பொருளைத் தருதல்
இசைபட வாழ்தல் = அதனால் புகழ் உண்டாகும்படி வாழ்தல்
இந்த இரண்டும் இல்லாவிட்டால், மனித வாழ்க்கைக்குப் பயன் எதுவும் இல்லை
இங்கே இசை = புகழ் என்ற பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் நாம் சகஜமாகத் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை. இசை = Music என்பதுதான் பெரும்பாலானோர் அறிந்திருக்கிற பொருள்.
ஆனால் கொஞ்சம் மறைமுகமாக, இசை = புகழ் என்ற பொருளும் நமக்கு ஓரளவு பரிச்சயமானதுதான். ’எசகேடாப் பேசாதே’ என்று சொல்கிறோம் அல்லவா? அது ‘இசை கேடாகப் பேசாதே’ என்பதன் கொச்சை. அதாவது, ‘அவசரப்பட்டு உன்னுடைய புகழ் கெடும்படி ஏதாவது பேசிவைக்காதே’ என்று அர்த்தம்.
இன்னும் நம்பிக்கை இல்லையா? கம்பன் சொன்னால் நம்புவீர்களா?
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராத்திரி நேரத்து நிலாவைப் பார்க்கும் ராமன் ‘நீள் நிலாவின் இசை’ என்கிறான்.
ஒருவேளை ராமன் ‘வண்டின் இசை’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை, ‘நிலாவின் இசை’ என்கிறான், நிலாவுக்கு ஒளிதான் உண்டு. இசை / சத்தம் கிடையாது. ஆகவே, இங்கே ‘நிலாவின் இசை’ என்பது, நிலவின் புகழைதான் குறிக்கிறது.
ஆக, திருவள்ளுவரும் ‘இசை பட வாழ்தல்’ என்று சொல்வதன் அர்த்தம் ‘புகழ் சேர்ந்து வாழ்வது’ என்பதாகதான் இருக்கவேண்டும். பரிமேலழகர், மணக்குடவர் தொடங்கிக் கலைஞர், சுஜாதாவரை எல்லாரும் இப்படிதான் விளக்கம் தந்திருக்கிறார்கள்.
‘அந்த விளக்கங்களில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அதேசமயம் இதைக் கொஞ்சம் மாற்றிப் படித்தால் இந்தக் குறளுக்கு வேறோர் அருமையான அர்த்தம் புரியும்’ என்றார் இளங்கோவன்.
‘எப்படி மாற்றணும்?’ என்றேன் ஆவலுடன்.
’ஈதல், அப்புறம் இசைபட வாழ்தல்ன்னு பிரிக்காம, இசைபட ஈதல் வாழ்தல்ன்னு பிரிச்சுப் பாருங்க.’
‘இசை பட ஈதலா? நாம கொடுக்கறதை ஊருக்கெல்லாம் சொல்லிப் புகழ் தேடிக்கணும்ங்கறீங்களா? அது தப்பாச்சே!’
‘அப்படியில்லைங்க, இங்கே இசை-க்கு அர்த்தம் புகழ் இல்லை’ என்றார் இளங்கோவன், ‘இசைந்திருத்தல், அதாவது In Harmony.’
’ம்ஹூம், சுத்தமாப் புரியலைங்க.’
அவர் ஓர் எளிய உதாரணத்துடன் விளக்கினார். ’இப்போ ஒரு குடிகாரன் இருக்கான், அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா அது ஈதல்தான், ஆனா தப்பான ஈதல், Not in harmony. அந்த ஆயிரம் ரூபாய்ல அவன் இன்னும் குடிச்சுட்டுப் புறளுவான்.’
‘அதுக்குப் பதிலா, அவனோட குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா, அவங்க அரிசி, பருப்பு வாங்குவாங்க, ஒரு மாசம் வயிறாரச் சாப்பிடுவாங்க. அந்த ஈதல், In Harmony.’
‘அதாவது, நாம பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடணும், நாம யாருக்கு உதவறோமோ அவங்களுக்கு நன்மை தரக்கூடியமாதிரி பொருத்தமான உதவிகளைமட்டும்தான் செய்யணும், அதுதான் இசை பட ஈதல், அதாவது பொருத்தமான, இசைவான ஈதல், அதைச் செஞ்சு வாழ்தல், அதுதான் உயிருக்கு ஊதியம், நாம வாழறதுக்கு அர்த்தம். என்ன சொல்றீங்க?’
***
என். சொக்கன் …
20 05 2012
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Poetry | Reading | Uncategorized
- 1 Comment
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Poetry | Reading | Uncategorized
- 2 Comments
- In: ட்விட்டுரை | Books | Reading | Reviews | Uncategorized
- 1 Comment
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Humor | Poetry | Reading | Uncategorized
- 2 Comments
ராவணன் பட்ட பாடு (ட்விட்டுரை)
Posted May 20, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Poetry | Reading | Uncategorized
- 1 Comment
பூவும் கதவும்
Posted May 9, 2012
on:- In: ஓசிப் பதிவு | Grammar | Tamil | Uncategorized
- 12 Comments
முன்னெச்சரிக்கை: செம நீளமான மொக்கைக் கட்டுரை. பத்தாங்கிளாஸ் இலக்கண வகுப்பை நினைவுபடுத்தும். Enter at your own risk.
இன்று மதியச் சாப்பாட்டுக்காக வீடு வரும் நேரம், ஃபோனில் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
பலமுறை கேட்ட பாட்டுதான். இந்த ப்ளாகிலேயே அதைச் சிலாகித்து ஒரு நீண்ட வியாசம்கூட எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அந்தப் பாட்டின் முதல் வார்த்தையிலேயே ஒரு சந்தேகம்.
பூ + கதவு = பூக்கதவு என்றல்லவா வரவேண்டும்? அந்த ‘ங்’ எங்கிருந்து நுழைந்தது?
கொஞ்சம் யோசித்தபோது வேறு பல சினிமாப் பாடல்கள் நினைவுக்கு வந்தன: ‘பூந்தேனில் கலந்து’தான், ‘பூத்தேனில் கலந்து’ அல்ல, ‘பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்’தான், ‘பூப்பாவாய் ஆம்பல் ஆம்பல்தான்’, ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’தான், ‘பூ முடிப்பாள் இந்தப் பூக்குழலி’ அல்ல.
ஆனாலும், சந்தேகம் தீரவில்லை. ட்விட்டரில் இப்படி எழுதிவைத்தேன்:
பூங்கதவே? பூக்கதவே? என்ன வித்யாஸம்?
அடுத்த சில நிமிடங்களுக்குள், பல நண்பர்கள் பதில் எழுதியிருந்தார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை:
@nradhakn
பூங்காவிற்கும் பூக்காவிற்கும் உள்ள வித்யாஸம்தான், ஆனால் அது என்னவென்று மறந்து போயிற்று 😉
@kanavey
பூவிலான கதவு பூங்கதவு! கதவில் பூ இருந்தால் பூக்கதவு… (எதாவது சொல்லி வைப்போம்)
@BalaramanL
பூங்கதவு – ‘பூ’ போன்ற கதவு?, பூக்கதவு – பூவினால் ஆன கதவு? உறுதியா தெரியல.
@psankar
பூங்கா என்ற சொல் பூ மற்றும் கா விலிரிந்து வந்ததாகப் படித்திருக்கிறேன். அந்த இலக்கணப்படிதான் பூங்கதவாய் இருக்கும்.
@Thamizhpesy
made by flower. another one was make with flower.
@rsGiri
பூவைப் போன்ற கதவு பூங்கதவு. பூவில் செய்த கதவு பூக்கதவு!
இந்த பதில்களில் பெரும்பாலானவை சரியாகத் தோன்றினாலும், அதற்குப் பொருத்தமான இலக்கண விளக்கத்தை இவர்கள் சொல்லவில்லை. அதைச் செய்தவர் நண்பர் @sramanaa . அவர் சுட்டிக்காட்டிய இணைப்பு : http://t.co/OU9ZrA9b
இந்த இணைப்பில் ஒரு நன்னூல் சூத்திரம் (புணர்ச்சி விதி) உள்ளது. இப்படி:
பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்
சுருக்கமான இந்தச் சூத்திரத்தைக் கொஞ்சம் நீட்டினால் இப்படி மாறும்:
‘பூ’ என்ற வார்த்தையுடன் இன்னொரு சொல் சேர்ந்தால், அந்தச் சொல்லின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால், அதன் இனமாகிய மெல்லின எழுத்து அங்கே ஒற்று வடிவத்தில் தோன்றும்.
உதாரணமாக,
1. பூ + கதவு
இங்கே ‘பூ’வுடன் சேரும் வல்லின எழுத்து ‘க’, அதன் இனமாகிய மெல்லின எழுத்து ‘ங’, அதன் ஒற்று ‘ங்’, ஆக, பூ + ங் + கதவு = பூங்கதவு.
2. பூ + சிரிப்பு
இங்கே ‘பூ’வுடன் சேரும் வல்லின எழுத்து ‘ச’, அதன் இனமாகிய மெல்லின எழுத்து ‘ஞ’, அதன் ஒற்று ‘ஞ்’, ஆக, பூ + ஞ் + சிரிப்பு = பூஞ்சிரிப்பு.
அவ்ளோதான். பிரச்னை தீர்ந்தது. எல்லாரும் காபி சாப்பிடப் போகலாம்!
ஆனால் எனக்கு இந்தச் சூத்திரத்தில் முழுத் திருப்தி இல்லை. ’பூங்கதவு’ சரி என்று புரிகிறது, ஆனால் ‘பூக்கதவு’ எப்படித் தப்பாகும்? ‘பூக்கடை’ என்று சகஜமாகச் சொல்கிறோமே, அது என்ன கணக்கு?
கூகுளில் கொஞ்சம் நோண்டினேன். நண்பர்கள் @sramanaa மற்றும் @BalaramanL நல்ல உதாரணங்களைச் சேர்த்து உதவினார்கள்.
சிறிது நேரத்துக்குப்பின், ஒரு மேட்டர் சிக்கியது.
பொதுவாக, ‘பூ’ என்ற சொல் இரண்டு அர்த்தங்களில் வரலாம்:
1. பூ மாதிரி (மென்மையான) கதவு
2. பூவினால் செய்யப்பட்ட கதவு
இதை முன்வைத்து யோசிக்கும்போது, ‘ங்’, ‘க்’ குழப்பத்துக்கும் ஒருமாதிரி குத்துமதிப்பான பதில் கிடைத்தது:
எடுத்துக்காட்டாக, பூ + குழலி (குழல் = கூந்தல், குழலி = கூந்தலைக் கொண்டவள்) என்பதைப் பார்ப்போம். இதற்கு இரண்டு அர்த்தங்கள் சொல்லமுடியும்:
1. மலர் போன்ற மென்மையான கூந்தலைக் கொண்ட பெண்
2. மலரைக் கூந்தலில் சூடிய பெண்
முதல் உதாரணத்தில் அந்தப் பெண் தலையில் பூவைச் சூடியிருக்கவேண்டிய அவசியமே இல்லை, அந்த தலை முடி பூப்போல மென்மையானது என்பதுதான் மேட்டர்.
இங்கே பூ + குழலி = ’பூங்குழலி’ என்பது கச்சிதமாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.
இரண்டாவது உதாரணத்தில் வரும் பெண், தலையில் பூவைச் சூடியுள்ளாள். இவளுடைய முடி கரடுமுரடாக இருந்தாலும், அவள் பூ வைத்திருப்பதால், இவளும் பூ + குழலிதான், ஆனால் ‘பூங்குழலி’ அல்ல, ‘பூக்குழலி’.
இதேபோல்,
பூ + கடை = பூக்கடை = (நிஜ) பூக்களை விற்கும் கடை
ஆனால்
பூ + கவிதை = பூங்கவிதை = பூப்போல மென்மையான கவிதை, நிஜமான பூக்களைக் கசக்கிப் பிழிந்து மை தயாரித்து எழுதியது அல்ல
ஆக, the rule is:
1. பூவுடன் வல்லினம் சேரும்போது
1a. அந்தப் பூ நிஜமான பூவாக இருந்தால், அந்த வல்லின எழுத்தின் ஒற்று அங்கே வரும் (பூ + க் + கதவு)
1b. அந்தப் பூ நிஜமாக இல்லாமல், ‘பூப்போன்ற மென்மை’யைக் குறித்தால், அங்கே அந்த வல்லின எழுத்தின் இனமாகிய மெல்லின எழுத்து ஒற்று வரும் (பூ + ங் + கதவு), பூவின் மென்மையைக் குறிக்க எக்ஸ்ட்ராவாக ஒரு மெல்லின எழுத்து
என்ன? ஒருமாதிரி கோவையாக வருகிறதா?
இந்த விளக்கம் எனக்குத் திருப்தி. நண்பர்கள் @sramanaa மற்றும் @BalaramanL இதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒரே பிரச்னை, இது சரியா தவறா என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த விளக்கத்தை Explicit ஆகச் சொல்லும் சூத்திரங்கள் எவையும் எங்களுக்கு அகப்படவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து உறுதிப்படுத்துங்கள்.
அது நிற்க. இந்தக் கட்டுரையை எழுதியபின்னர், கூடுதல் உதாரணங்கள் ஏதேனும் கிடைக்குமா என்று நெட்டில் தேடினேன். அருமையான ஒரு பாட்டு கிடைத்தது.
சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் ஒரு கதாபாத்திரம். அவளுக்குப் ‘பூம்பாவை’ என்று பெயர் சூட்டுகிறார்கள். ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்:
பூவினாள் என வருதலின் பூம்பாவை என்றே
மேவு நாமமும் விளம்பினர்
அதாவது, அவள் பூவைப் போன்ற பாவை, ஆகவே அவளுக்குப் ‘பூம்பாவை’ என்று பெயர் சூட்டினார்கள்.
இதற்கு விளக்கம் எழுதிய திரு சி. கே. சுப்பிரமணிய முதலியார் கூடுதலாக ஒரு வரியைச் சேர்க்கிறார்:
’பூப்பாவை’ என்று வல்லொற்று வரின் இவளின் மெல்லிய பண்புக்கு மேவாது
அடடே!
***
என். சொக்கன் …
09 05 2012
UPDATE:
மேற்சொன்ன இந்த விதி(?)க்குப் பொருந்தாத வார்த்தைகள் சிலவற்றை இங்கேயும் ட்விட்டரிலும் பேசினோம், அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். சரியான இலக்கண சூத்திரம் கிடைத்தால் இந்த மர்மம் விலகிவிடும்:
1. பூஞ்சோலை : (நிஜப்) பூக்கள் உள்ள சோலை, அப்போ ‘பூச்சோலை’ என்று வரணுமோ?
2. பூந்தேன்: இங்கேயும் நிஜப் பூவின் தேன்தானே? அப்போ அது ‘பூத்தேன்’ என்று வரணுமா? (அதன் அர்த்தம் வேறாச்சே 🙂 )
3. பூந்தோட்டம்: Same question, பூத்தோட்டம் என்று எழுதணுமா?
இந்த சினிமாப் பாட்டு வரியைக் கவனியுங்கள்: ‘பூந்தோட்டக் காவல் காரா, பூப்பறிக்க இத்தனை நாளா?’
இதில் பூ + தோட்டம் என்பதும் பூ + பறிக்க என்பவை இரண்டும் ஒன்றுதான், நிஜப் பூ + வல்லினம், ஆனால் முதல் வார்த்தையில் மெல்லின ஒற்று (ந்) வருகிறது (பூந்தோட்டம், not பூத்தோட்டம்), ஆனால் இரண்டாவது வார்த்தையில் வல்லின ஒற்று (ப்) வருகிறது (பூப்பறிக்க, not பூம்பறிக்க) … குழப்பம் continues
அப்புறம் இன்னொரு விஷயம், இந்தப் பதிவின் பின்னூட்டத்திலும் ட்விட்டரிலும் பல நண்பர்கள் இந்தக் கட்டுரையை ‘ஆராய்ச்சி’ என்றார்கள். அது தப்பான வார்த்தை. இது ஆராய்ச்சி என்றால் உண்மையாகவே உழைத்துச் செய்கிற நிஜ ஆராய்ச்சிக்கு மரியாதை போய்விடும், வேண்டுமென்றால் இதை ‘ஆர்வாய்ச்சி’ என்று அழைப்போம் 🙂
மூன்று பரிசுகள்
Posted May 6, 2012
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Bangalore | Books | Change | Characters | Customers | Differing Angles | Expectation | Fun | Humor | Kids | Lazy | Learning | Life | Marketing | Men | People | Perfection | Price | Pulambal | Technology | Time | Time Management | Uncategorized | Value | Waiting | Women
- 9 Comments
நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’
‘அதனால?’
’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’
‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’
என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.
தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.
மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.
என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.
புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.
அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>
இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.
சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.
பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’
‘இல்லை அங்கிள்.’
‘ஏன்? என்னாச்சு?’
’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.
’இப்ப லீவ்தானேடா?’
’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’
அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.
அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’
இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.
ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’
இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’
‘அப்ப நான் எதை எடுக்கறது?’
‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’
உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.
இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.
ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.
‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.
சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.
ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?
நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’
’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:
- நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
- என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
- நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்
கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.
ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.
என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.
ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.
’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’
‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’
போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’
கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.
அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.
இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.
எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.
’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’
‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’
நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.
ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!
அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.
இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’
’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.
நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.
‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’
‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’
நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.
***
என். சொக்கன் …
06 05 2012
comments