மனம் போன போக்கில்

nchokkan.com என்கிற என்னுடைய புதிய தளம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ச்சியாகக் கட்டுரைகள், வலைப்பதிவுகளை எழுதிவருகிறேன்.

இதனால், இந்தப் பழைய வலைப்பதிவு இனி புதுப்பிக்கப்படாது. ஆர்வமுள்ள நண்பர்கள் nchokkan.comக்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். நன்றி.

என். சொக்கன்

குமரகுருபரர் இயற்றிய சிறு நூல் சகலகலாவல்லி மாலை. அதாவது, அனைத்துக் கலைகளுக்கும் அரசியாகிய கலைமகளைப் போற்றும் பாமாலை. இந்நூல் எப்போது எந்தச் சூழ்நிலையில் பாடப்பட்டது என்பதுபற்றி ஒரு சுவையான கதை உண்டு.

அப்போது குமரகுருபரர் காசியில் இருந்திருக்கிறார். காசியை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் தமிழ் தெரியாது. ஆகவே, அவருக்குக் குமரகுருபரரின் பெருமையும் தெரியவில்லை.

ஓரிடத்தில் நல்ல பணிகளைப் பலருக்கும் செய்யவேண்டுமென்றால், அரசருடைய ஆதரவு தேவை. அந்த அரசரிடம் பேசவேண்டுமென்றால், அவருடைய மொழி நமக்குத் தெரியவேண்டும், ஆகவே, குமர குருபரர் கலைமகளை வணங்கி நின்றார். ‘சகலகலாவல்லி மாலை’ பாடினார், இதன்மூலம் வடமொழியில் பேசும் திறமை குமரகுருபரருக்குக் கிடைத்தது, மன்னரிடம் பேசினார். அவருடைய ஞானத்தை உணர்ந்துகொண்ட அரசர் அவருடைய பணிகளுக்கு முழு ஆதரவு தந்தார். அவர் பெயரில் மடம் ஒன்றும் அமைத்துக் கொடுத்தார்.

இதனால், படிப்பிலும் இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட கலைகளிலும் சிறந்துவிளங்க விரும்புகிறவர்கள், அதற்கான அருளை வேண்டிச் சகலகலாவல்லி மாலையைப் படிப்பது வழக்கமாக உள்ளது. குமரகுருபரருடைய தேர்ந்த சொல்லழகுக்காகவும், பொருளினிமைக்காகவும்கூட இந்நூலைப் படிக்கலாம், அதன்மூலமும் வேண்டிய பயன் தானே கிடைத்துவிடும். ஏனெனில், ’சொல், பொருளைப்போல், பயனும் என் பாட்டில் இருக்கவேண்டும்’ என்று அவரே ஓரிடத்தில் சொல்கிறார்.

இவ்வுரை ஆழமானதில்லை; நேரடியான சொற்பொருளை விளக்குவதுதான்; ஆகவே, இதைப் படித்துவிட்டுப் பாடல்களை மீண்டும் ஒருமுறை படிப்பது நல்லது. எவ்வுரையும் மூலப்பாடலுக்கு இணையாகாது, குமரகுருபரருடைய அவ்வரிகளில் தோய்கிற, அவற்றின் ஆழத்தை உணர்ந்துகொள்கிற வல்லமையை உங்களுக்குக் கலைமகள் அருள்வார்!

1

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான், உறங்க, ஒழித்தான் பித்து ஆக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே, சகலகலாவல்லியே.

வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளே, என்னுடைய வெள்ளை உள்ளமாகிய குளிர்ந்த தாமரையில் தாங்கள் எழுந்தருளமாட்டீர்களா!

ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமால், திருப்பாற்கடலில் திருத்துயில் கொள்கிறார். அவ்வுலகங்களை அழிக்கின்ற சிவபெருமான், பித்தராகத் திகழ்கின்றார், இவ்வாறு இவர்கள் காத்து, அழிக்கின்ற அவ்வுலகங்களைப் படைக்கின்ற பிரமரோ கரும்பைப்போல் இனிமையான தங்கள்மீது அன்புகொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட பெருமாட்டியே, அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

2

நாடும் பொருள் சுவை, சொல் சுவை தோய்தர நால் கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய், பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே, கன தனக் குன்றும், ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே, சகலகலாவல்லியே.

தாமரை மலர் இருக்கையில் அமர்ந்திருக்கும் கலைமகளே, பசும்பொன் கொடியைப்போல் திகழ்பவரே, கனத்த, குன்றைப்போன்ற திருமார்பகங்களை உடையவரே, ஐந்தாகப் பகுக்கப்பட்ட, காடுபோல் அடர்ந்த திருக்கூந்தலைச் சுமக்கும் கரும்பைப்போன்றவரே,

அறிஞர்கள் நாடி ஆராயக்கூடியவிதத்தில், பொருள் சுவையும், சொற்சுவையும் தோய்ந்த நான்குவிதமான* பாடல்களைப் பாடுகின்ற பணியை எனக்குத் தந்தருளுங்கள்,

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

* நான்குவிதமான பாக்கள்: ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி அல்லது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

3

அளிக்கும் செழும் தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருள் கடலில்
குளிக்கும்படிக்கு என்று கூடும்கொலோ, உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவி மழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

பல நூல்களையும் வாசித்துத் தெளிந்த புலவர்கள் தங்களைப் போற்றிப் பாடுகிறார்கள், கவிதைகளை மழைபோல் பொழிகிறார்கள். தாங்கள் திருவுள்ளம்கொண்டு அவற்றைக் கேட்டு மகிழ்கிறீர்கள்,

தோகை விரிக்கும் மயிலைப்போன்றவரே, செழுமையான, தெளிய அமுதத்தைப்போன்ற தமிழை அளிப்பவரே, அந்தத் தமிழைச் சுவைத்துத் தங்களுடைய அருளாகிய கடலில் நான் குளிக்கும் நாள் என்றைக்கோ!

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

4

தூக்கும் பனுவல், துறை தோய்ந்த கல்வியும், சொல் சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய், வட நூல் கடலும்
தேக்கும் செழும் தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

கடல்போன்ற வடமொழி நூல்களையும், சிறந்த, செழுமையான தமிழ் நூல்களையும் தொண்டர்களுடைய சிறந்த நாவில் நிலைக்கச்செய்து காப்பவரே, கருணைக் கடலே,

அனைவரும் விரும்புகின்றவகையில் சிறந்த பாடல்களை இயற்றும் திறமையும், பல துறைகளில் தோய்ந்த கல்வியும், சுவையான சொற்களுடன் பேசுகின்ற திறமையும் எங்களுக்குள் பெருகும்படி செய்தருளுங்கள்,

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

5

பஞ்சு அப்பு இதம் தரு செய்ய பொன் பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே, நெடும் தாள் கமலத்(து)
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய், சகலகலாவல்லியே.

கலைமகளே,

நீண்ட தண்டையுடைய தாமரையில் வீற்றிருப்பவர், அன்னக்கொடியை உயர்த்தியவர் பிரமர், அவருடைய சிறந்த திருநாக்கையும், திருவுள்ளத்தையும் வெள்ளைத்தாமரையாகக் கருதி, அவற்றையே தங்களுடைய ஆசனமாக எண்ணித் தாங்கள் வீற்றிருக்கிறீர்கள்,

செம்பஞ்சுக் குழம்பைப் பூசி அழகுடன் திகழ்கின்ற, செம்மையான, அழகிய தங்களுடைய திருவடிகளாகிய தாமரைகள் என்னுடைய நெஞ்சமாகிய நீர்நிலையில் இன்னும் மலரவில்லையே, இது ஏன்?

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

6

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்பொழுது எளிது எய்த நல்காய், எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெம் காலும் அன்பர்
கண்ணும் கருத்து நிறைந்தாய், சகலகலாவல்லியே.

கலைமகளே,

எழுதப்படாத (சொல்லப்படுகிற) வேதங்களிலும் வான், நிலம், நெருப்பு, காற்று, விரைவான காற்று ஆகிய ஐம்பூதங்களிலும் அன்பர்களுடைய கண்களிலும் கருத்திலும் நிறைந்திருப்பவரே,

பண், பரதம், கல்வி, இனிய சொற்களால் ஆன பாடல்கள் ஆகியவற்றையெல்லாம் நான் எண்ணும்போது எளிதாகச் செய்யும்படி அருளுங்கள், (இசையிலும் நடனத்திலும் நல்லறிவிலும் எழுத்துத்திறனிலும் மற்ற கலைகளிலும் நான் சிறந்துவிளங்கும்படி செய்தருளுங்கள்,)

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

7

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய், உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

அடியவர்கள் தங்களை உள்ளத்தில் எண்ணி, இனிய தமிழில் பாடல்களைத் தீட்டுகிறார்கள், அந்தப் பாடல்களுக்குள் இருக்கும் இனிய பாலைப்போன்ற, அமுதத்தைப்போன்ற கருத்துகளைத் தாங்கள் தெளிவாக்குகிறீர்கள், வெண்ணிற அன்னத்தைப்போன்ற பெருமாட்டியே,

பொருளுள்ள, பயனுள்ள பாடல்களை எழுதும் திறன் எனக்குக் கிடைக்கும்படி செய்யுங்கள், தங்களுடைய திருக் கடைக்கண் பார்வையை என்மீது செலுத்தியருளுங்கள்,

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

8

சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

கல்வியாகிய பெரிய செல்வத்தைப் பெற்றவர்கள், மென்மையான தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட திருமகளுடைய அருள் நமக்குக் கிடைக்கவில்லையே என்று ஒருபோதும் வருந்தமாட்டார்கள், (கல்விச் செல்வத்தால் பணச்செல்வம் கிட்டும்), அப்படிப்பட்ட கல்வியாகிய பெருஞ்செல்வத்தை வழங்குகின்ற பெருமாட்டியே,

எனக்குச் சொல் வலிமையையும், அனைத்தையும் கவனித்து நினைவில் கொள்கின்ற ஆற்றலையும், பாடல்களைச் சொல்லவல்ல நல்ல திறனையும் வழங்கி, என்னைத் தங்களுடைய அடிமையாக்கிக்கொள்ளுங்கள்,

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

9

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய் ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார், நிலம் தோய் புழைக் கை
நல் குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை
கற்கும் பத அம்புயத் தாளே, சகலகலாவல்லியே.

கலைமகளே,

நிலத்தைத் தொடும் அளவுக்கு நீண்ட, துளையுள்ள தும்பிக்கையைக் கொண்ட, நல்ல பெண்யானையும், அரச அன்னமும்கூட, தங்களுடைய அழகிய திருநடையைக் கண்டால் நாணி நிற்கும். அப்படிப்பட்ட பெருமாட்டியே, தாமரைபோன்ற திருவடிகளை உடையவரே,

சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகத் திகழ்கின்ற மெய்ஞ்ஞானத்தின் திருவுருவமாகத் திகழ்கின்ற தங்களை முழுமையாக அறிந்தவர்கள் யார்? (யாருமில்லை!)

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

10

மண் கண்ட வெண் குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவில் பணியச்செய்வாய், படைப்போன் முதலாம்
விண் கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ, சகலகலாவல்லியே.

கலைமகளே,

இவ்வுலகைப் படைக்கும் பிரமரில் தொடங்கி விண்ணுலகில் பல கோடி தெய்வங்கள் உண்டு. எனினும், தங்களைப்போன்ற கண்கண்ட தெய்வம் வேறு யார்?

மண்ணுலகம் முழுவதையும் வெண்கொற்றக்குடையின்கீழ் ஆள்கின்ற, சிறப்புடைய மன்னர்கள்கூட, என்னுடைய பண்ணிசைப்பாடலைக் கேட்டதும் என்னைப் பணிந்து வணங்கும்படி செய்தருளுங்கள், (சிறந்த கலைத்திறனை எனக்கு வழங்கியருளுங்கள்,)

அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.

விமலாதித்த மாமல்லனின் மிக முக்கியமான கட்டுரை இது, நூல் எழுதியவர்கள், எழுதிக்கொண்டிருக்கிறவர்கள், எழுதப்போகிறவர்கள் எல்லாரும் கண்டிப்பாக ஒருமுறை வாசித்துவிடுங்கள்:

http://www.maamallan.com/2018/01/ebook.html

அமேசானில் வேலைசெய்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை, தமிழின் வாசகப்”பரப்பை” ஓரளவு அறிந்தவன் என்றமுறையில் சொல்கிறேன், அடுத்த சில ஆண்டுகளில் மின்னூல்கள் மிகப்பெரிய அளவில் பரவப்போகின்றன, கோடிக்கணக்கில் இல்லையென்றாலும் ஆயிரக்கணக்கில் நூல்களை விற்கும் வாய்ப்பு சிலருக்கேனும் அமையப்போகிறது, அந்தப் பெரிய பட்டியலில் இடம்பெறாதவர்களும் நூற்றுக்கணக்கில் தாங்களே விற்கலாம், எந்தத் துறையிலும் Long Tail (Google it!) மிகப்பெரிது.

ஆகவே, மின்னூல் உரிமையை அலட்சியமாகக் கருதாதீர்கள். நீங்களே பிரசுரிப்பதானாலும் சரி, இன்னொரு பதிப்பாளருக்குத் தருவதானாலும் சரி, சிந்தித்துத் தீர்மானியுங்கள்.

மின்னூல்களைப் பிரசுரிப்பதில் 3 வகை உண்டு:

1. நீங்களே (எழுதியவரே) பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, பண விவகாரங்களைக் கவனிப்பது
2. பதிப்பாளர் பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, விற்பனைக்கேற்ப அவர் உங்களுக்கு அறிக்கை வழங்கிப் பணத்தை வழங்குவது
3. இடைத்தரகர் ஒருவர் பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, விற்பனைக்கேற்ப அவர் உங்களுக்கு அறிக்கை வழங்கிப் பணத்தை வழங்குவது

இதில் 2, 3 ஆகியவை கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் பதிப்பாளர் என்பவர் அதே நூலை அச்சிலும் கொண்டுவரக்கூடும். தமிழ் நூல்களைப்பொறுத்தவரை இடைத்தரகருக்கு (இப்போது) அதற்கான வாய்ப்பில்லை, வருங்காலத்தில் அவரும் அதைச் செய்யும்போது 2 & 3 இணைந்துவிடும்.

(புத்தகத்தை எழுதியபின்) உங்கள் உழைப்பு என்று பார்த்தால், #1ல் அது அதிகம் (இதைச் சிரமம் என்று பொருள்கொள்ளவேண்டாம், வேலை எளிதுதான், ஆனால் நீங்கள் அதற்காகச் செலவிடவேண்டிய மூளை, விரல் உழைப்பு ஒப்பீட்டளவில் அதிகம்), அத்துடன் ஒப்பிடுகையில் #2 & #3ல் உங்கள் உழைப்பு மிகக்குறைவு: ஈமெயில் அனுப்பினால் போதும்.

அதேசமயம், உங்களுக்கு வரப்போகும் ராயல்டி என்பது, #1ல் மிக அதிகம், அது அமேசானுடன் நீங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப்பொறுத்தது, #2 & #3ல் குறைவு, அல்லது மிகக்குறைவு, அது தனிப்பட்ட நபர்களுடன் நீங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப்பொறுத்தது.

தனிப்பட்டமுறையில் நான் மூன்றையும் செய்துபார்த்துள்ளேன். எனக்கு #1 ஒத்துவரவில்லை, வருங்காலத்தில் அதையும் நான் செய்யக்கூடும், ஆனால் இப்போதைக்கு #2 & #3 எனக்கு வசதிப்படுகிறது. கிழக்கு, புஸ்தகா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளேன், அவர்கள் என் மின்னூல்களை வெளியிடுகிறார்கள், அதற்காக வருவாயைக் குறைத்துக்கொள்ளத் தயாராக உள்ளேன்.

நீங்களும் #2, #3ஐதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நான் சொல்லமுடியாது, சொல்லவும் கூடாது. உங்களுக்கு #1 வசதியாக இருக்கலாம்.

ஆனால், தீர்மானம் எதுவானாலும் அது சிந்தித்தபின் எடுப்பதாக இருக்கவேண்டும், இதை மாமல்லன் மிகத்தெளிவாகச் சொல்கிறார்: நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போடாதீர்கள், உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் உள்ளன, ஒவ்வொன்றிலும் நன்மை, தீமைகள் உண்டு என்பதை அறியுங்கள், யாரிடமேனும் சென்று “ஒரு வரி ஆலோசனை” கேட்காதீர்கள். நீங்களே சிந்தித்து, தேவைப்பட்டால் முயன்றுபார்த்துத் தீர்மானியுங்கள்.

பிறருடைய டயட் அறிவுரையைப் பின்பற்றுவது எளிதுதான். ஆனால் பரிசோதனைக்குள்ளாகவிருப்பது உங்கள் உடம்பு. அதுபோலதான் இதுவும்.

***

என். சொக்கன் …

09 01 2018

மிகுந்த எரிச்சலோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.

எரிச்சலில் கால்வாசி மனத்தில், மீதியெல்லாம் உதட்டில்.

பெங்களூரில் குளிர்காலம் தொடங்கியதும் ஸ்வெட்டர்கள், கம்பளிகள் தூசு தட்டப்படும், செவிமூடும் மஃப்ளர்கள் தேடியெடுக்கப்படும், அல்லது, புதிதாக வாங்கப்படும், அதிகாலையில் எழுந்து வாக்கிங், ஜாகிங், ரன்னிங், யோகாசனமிங் என்று சுறுசுறுப்பாகிக்கொண்டிருந்தவர்கள் அலாரத்தை ஒருமணிநேரம் தள்ளிவைத்துச் சோம்பேறிகளாவார்கள்.

நெடுங்காலமாக இவ்வூரில் வாழ்கிறவர்கள், ‘பெங்களூரு முன்னைப்போல இல்லை’ என்று எப்பப்பார் புலம்புகிறார்கள். ‘முன்னெல்லாம் எப்படிக் குளிரும் தெரியுமா?’ என்று நினைவுகளில் சிலிர்க்கிறார்கள்.

நான் இவ்வூருக்கு வந்து பதினெட்டு வருடங்களாகிவிட்டன. பதினெட்டு வருடங்களாக இதே வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வருடாவருடம் குளிர்மட்டும் அதிகமாகிறதேயன்றிக் குறைவதில்லை.

அப்படியானால், இவர்கள் ஒப்பிட்டுச் சலித்துக்கொள்ளும் ‘அந்தக்காலப் பெங்களூர் குளிர்’ என்பது உண்மையில் எந்தக்காலம்? ஒருவேளை, இவர்களெல்லாம் பனியுகத்தில் வாழ்ந்தவர்களாயிருப்பார்களோ?

நம்மால் இந்தக்குளிரையே தாங்கமுடிவதில்லை. குறிப்பாக, உதட்டைச்சுற்றிச் சிறு ஊசிகளால் குத்தினாற்போல் அது நிகழ்த்தும் தாக்குதலை.

நல்லவேளையாக, இந்தப் பனித்தாக்குதலைச் சமாளிக்க யாரோ ஒரு புண்ணியவான் ‘பெட்ரோலியம் ஜெல்லி’ என்ற பூச்சைக் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். திகுதிகுவென்று எரிந்துகொண்டிருக்கும் உதட்டுப்பிரதேசங்கள் இந்தப் பூச்சைப் பூசியதும் மந்திரம் போட்டாற்போல் சில விநாடிகளில் குளிர்ந்து இயல்பாகிவிடுகின்றன. அதன்பிறகு, அடுத்த தாக்குதல் வரும்வரை பிரச்னையில்லை.

குளிர்காலம் தொடங்கியதும் எங்கள் வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கிக்குவித்துவிடுவோம். மேசையிலொன்று, குளியலறையிலொன்று, பெண்டிர்தம் கைப்பைகளில் ஒவ்வொன்று, அலுவலகத்திலொன்று, அங்கு செல்வதற்கான முதுகுப்பையிலொன்று என எங்குநோக்கினும் அவ்வெண்ணிற அதிசயம் இருக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்த புண்ணியவானின் சீடர்கள் அதை ஐந்து ரூபாய்க்குச் சிறு டப்பாக்களில் விற்கிறார்கள். ஆகவே, ஒரே நேரத்தில் ஏழெட்டை வாங்கிவைக்கலாம், தொலைந்தாலும் பெரிய இழப்பில்லை, இன்னொன்றை எடுத்துப் பூசலாம்.

இந்த ஐந்து ரூபாய் டப்பாக்கள் சுலபத்தில் தீர்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம். இழுக்க இழுக்க இன்பம் என்று சிகரெட் விளம்பரங்கள் தெரிவிப்பதுபோல் இவை பூசப்பூசப் பொங்கிவருவதுபோலோர் உணர்வு. வற்றாத ஜீவநதிகளைப்போல் அந்த டப்பாவின் அடிப்பகுதியை யாராவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. எப்போதாவது அதிசயமாக ஒரு டப்பா தீர்ந்துபோவதுண்டு, பெரும்பாலும் அதற்குள் அது தொலைந்துவிடும்.

ஐந்து ரூபாய்க்கு இப்படியொரு பொருளைத் தயாரித்துப் பொட்டலம்கட்டிக் கடைகளுக்குக் கொண்டுவந்து விற்கமுடிகிறதென்றால் அதன் அடிப்படை விலை என்னவாக இருக்கும்? அந்த அற்ப விலையில் அது இப்படியோர் அதிசயத் தீர்வைத் தருகிறதென்றால் அதைக் கண்டுபிடித்தவன் எப்பேர்ப்பட்ட மாமேதை!

ஆனால், இப்படி உடனடி, நிச்சயப் பலனைத் தருகிறது என்பதற்காக அதைப் பூசிக்கொண்டே இருத்தல் சரிதானா? ஒருவேளை, இதனால் உடலுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்? உதட்டுப்பூச்சுதானெனினும் உணவுப்பொருட்களோடு உள்ளே சென்றுவிடாதா?

இதைப்பற்றியும் நான் இணையத்தில் தேடியிருக்கிறேன். பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தக் கெடுதலும் வராதாம். அதை ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால்கூட எந்தப் பிரச்னையும் ஆகாதாம். பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்தவர் அப்படிச் சாப்பிட்டு நெடுநாள் வாழ்ந்தாராம்.

வராதாம், ஆகாதாம், வாழ்ந்தாராம் என ‘ஆம்’ விகுதியில் நிறைவடையும் வாக்கியங்களை வாசிப்பதால் எந்த நிரந்தர உறுதியும் கிடைப்பதில்லை. எனினும், அவைதரும் தாற்காலிக ஆசுவாசம் அலாதியானது.

எப்படியோ, பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நம்பத்தான் வேண்டும்; காரணம், குளிர்காலத்து உதட்டெரிச்சலுக்கு அதைவிட்டால் வேறு நம்பகமான தீர்வில்லை.

இயற்கைமுறையில் இதற்கு வெண்ணெய்யைப் பூசலாம், எண்ணெய்யைப் பூசலாம் என்பார்கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் ஐந்து ரூபாய்க்குச் சிறு பிளாஸ்டிக் டப்பாக்களில் சவுகர்யமாகக் கிடைக்குமா?

ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வெண்ணிற ஜெல்லியின் அடிமையாதல் சிறப்பானதல்ல, மோசமானதுமல்ல. ஒரே பிரச்னை, அதை மறந்துவிட்டு எங்கேயாவது வெளியே வந்து சிக்கிக்கொள்ளும்போது உதட்டுத்தாக்குதல் தொடங்கினால்தான்.

இன்றைக்கு மாரத்தஹள்ளியில் ஒரு முக்கியமான கூட்டம். அதற்காக அவசரமாகக் கிளம்பிவந்ததில் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டுவர மறந்துவிட்டேன். அதைத் தெரிந்துகொண்டாற்போல் இந்த உதட்டெரிச்சல் தொடங்கிவிட்டது.

ஒருபக்கம் சூரியன், இன்னொருபக்கம் குளிர் குறையாத காற்று, இரண்டுமே உதட்டெரிச்சலை அதிகப்படுத்தின. அதைத் தொட்டால் இன்னும் எரிந்தது.

பக்கத்தில் மருந்துக்கடை எங்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதைத் தேடுவதற்கு நேரமில்லை. உடனே பேருந்தைப் பிடித்தாகவேண்டும்.

யோசித்துக்கொண்டிருந்தபோதே பேருந்து வந்துவிட்டது. சட்டென்று ஏறிக்கொண்டேன்.

ஒரே நிம்மதி, இன்றைக்கு அவ்வளவாகக் கூட்டமில்லை. இன்னும் ஒன்றரைமணிநேரம் செல்லவேண்டியிருப்பதால், கொஞ்சம் காற்றுவாங்கியபடி உட்காரலாம்.

மெதுவாக ஒரு சன்னலோர இருக்கையை நெருங்கினேன். உட்கார்ந்து எரியும் உதட்டைத் தடவியபடி எதிர் இருக்கையைப் பார்த்தேன், திடுக்கிட்டேன்.

அங்கே காலியாக இருந்த இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு பெட்ரோலியம் ஜெல்லி டப்பா.

நாங்கள் வழக்கமாக வாங்குகிற அதே ஐந்து ரூபாய் டப்பாதான். இருக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியில் கிடந்தது.

அதைக் கிடந்தது என்று சொல்வதுகூடச் சரியில்லை. யாரோ அதை அந்த இடத்தில் வைத்தாற்போல் அழகாக அமர்ந்திருந்தது.

மருந்துக்கடையில் கிடைத்தாலும் பெட்ரோலியம் ஜெல்லியை மருந்தாகக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அநேகமாக FMCG எனப்படும் விரைவாக விற்பனையாகும் பயனாளர் பொருட்களின் பட்டியலில்தான் அது இடம்பெறும் என்பது என் ஊகம்.

இந்தியாவில் பல லட்சம் FMCG பொருட்கள் விற்பனையாகின்றன, அவற்றில் சரியாக இந்த பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கி உதட்டெரிச்சலோடு இருக்கும் என் எதிர் இருக்கையில் கொண்டுவந்து வைத்தது யார்? இதற்கான நிகழ்தகவைக் கணக்கிட்டால் புள்ளிவைத்து எத்தனை பூஜ்ஜியங்களை எழுதவேண்டியிருக்கும்?

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. என்னுடைய சிரமத்தைப் புரிந்துகொண்டு கடவுளே இந்த டப்பாவை அனுப்பினார் என்று நினைத்துக்கொண்டுவிடுவதில் தயக்கமில்லைதான். அதேசமயம் பக்தர்களின் உதட்டெரிச்சலையெல்லாம் கவனிக்குமளவு உம்மாச்சிக்கு நேரமிருக்குமா என்கிற சந்தேகமும் வருகிறது.

நடத்துநர் வந்தார், என்னிடம் சில்லறையைப் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அப்போதும் அந்த இரு இருக்கைகளுக்கு யாரும் வரவில்லை.

நான் உதட்டெரிச்சலோடு அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். இது எனக்குத்தானா? எடுத்துக்கொண்டுவிடலாமா? இதை மறந்துவிட்டுச்சென்றவர் யார்? ஐந்து ரூபாய் டப்பாவைத் தேடி இன்னொருமுறை இங்கே வருவாரா? நான் தொலைத்த ஐந்து ரூபாய் டப்பாக்கள்தான் எத்தனை எத்தனை! ஒன்றையேனும் தேடியிருக்கிறேனா? அவற்றில் ஒன்றுதான் சுற்றி எனக்கே வந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டால் என்ன தவறு?

ஆனால், யாருடைய உதட்டுப்பூச்சையோ நாம் பூசிக்கொள்வது சுகாதாரம்தானா? பெண்கள் லிப்ஸ்டிக்கைப் பகிர்ந்துகொள்வதுண்டா?

போக்குவரத்தில்லாத சாலைகளில் பேருந்து அதிவேகமாக விரைந்தது. எந்த நிறுத்தத்திலும் அதிகப்பேர் ஏறவில்லை. என்னெதிரில் யாரும் வந்து அமரவில்லை.

நேரம் செல்லச்செல்ல, என்னுடைய உதட்டெரிச்சல் அதிகரித்தது. சட்டென்று அந்த டப்பாவை எடுத்துப் பூசிக்கொண்டுவிடவேண்டும்போல் கைகள் பரபரத்தன. நாவால் உதடுகளை ஈரப்படுத்திச் சமாளிக்க முயன்றேன். எரிச்சல் இன்னும் கூடியது.

நான் மறுபடி அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவைப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும்போது அதில் ஏதாவது இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. ஒருவேளை, இது காலி டப்பாவாக இருக்குமோ? குப்பைத்தொட்டிக்குப்போகவேண்டிய ஒரு பொருளை எதிரில் வைத்துக்கொண்டு தத்துவ நியாயங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேனோ?

ரயில் நிலையங்களில் ‘ஆளில்லாத பொருட்களைத் தொடவேண்டாம்’ என்று அறிவிப்பு வைத்திருப்பார்கள். அது பேருந்துகளுக்கும் பொருந்துமா? இந்தச் சிறு டப்பாவுக்குள் வெடிகுண்டொன்றைப் பொருத்துவது சாத்தியமா?

யோசிக்க யோசிக்க எனக்கே என்மீது எரிச்சல் அதிகரித்தது. தேவைப்படும் பொருள் ஏதோ அதிசயத்தால் எதிரில் வந்து உட்கார்ந்திருக்கிறது, குறைந்தபட்சம் அதைத் திறந்துபார்த்தால் என்னவாம்? நெடுஞ்சாலையில் கழிப்பறை தென்படாதபோது சாலையோரமாகச் சிறுநீர் கழிப்பதைப்போல்தானே இதுவும்?

இந்த டப்பாவைத் தொலைத்த ஆள் இங்கேயே உட்கார்ந்திருக்கக்கூடாதோ, அல்லது, இதைத் தேடிக்கொண்டு இங்கே வரக்கூடாதோ!

அப்படி யாராவது வந்தால், ‘இதையா தேடறீங்க?’ என்று அவர்களிடம் எடுத்துத்தந்துவிட்டு ஒரு ‘நன்றி’யை வாங்கிக்கொள்ளலாம். பின்னர் அவர்களிடமே கொஞ்சம் கடன்வாங்கிப் பூசிக்கொள்ளலாம்.

நான் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். எல்லாரும் அவரவர் சிந்தனையில் இருந்தார்கள். சிலர் மொபைல் திரைகளில் மூழ்கியிருந்தார்கள். சிலர் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நடத்துநரும் ஓட்டுநரும் யாரைப்பற்றியோ கிசுகிசுவில் மும்முரம்.

என்னுடைய நிறுத்தம் வரப்போகிறது. இன்னும் சில நிமிடங்கள்தான்.

ஜன்னல்வழியே எட்டிப்பார்த்தேன். சரியாக அந்நிறுத்தத்துக்குப்பின்னே ஒரு மருந்துக்கடை தெரிந்தது. உள்ளே ஆளிருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.

சட்டென்று எழுந்துகொண்டேன். பேருந்து வேகம் குறையும்போதே குதித்து இறங்கி அந்தக் கடையை நோக்கி விரைந்தேன்.

***

என். சொக்கன் …
29 12 2017

தொடர்புடைய பதிவுகள்:

  1. இவ்வலைப்பதிவில் வெளியான என்னுடைய பிற சிறுகதைகள் இங்கே
  2. சமீபத்தில் வெளியான என்னுடைய ‘கார்காலம்’ நாவல் இங்கே

இந்தப் பிரதோஷ நன்னாளில் ‘மாதேவன் மலர்த்தொகை’ என்ற என்னுடைய மின்னூல் வெளியாகிறது. சிவபெருமானைப்பற்றிய நூறு மரபுப்பாக்களின் தொகுப்பு இது. கீழே உள்ள இணைப்பில் இதனை இலவசமாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

இப்பாக்களை ஃபேஸ்புக்கில் எழுதிவந்தபோது மிகச்சில நண்பர்களே வாசித்தார்கள், அது எதிர்பார்க்கக்கூடியதுதான், இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதினாலும் தமிழின் சொல்வளத்தை நாம் தலைமுறைக்குத் தலைமுறை இழந்துகொண்டிருக்கிறோம், எனவே ஒவ்வொரு பாடலிலும் சில சொற்களேனும் புரியாதவையாக இருந்துவிடும், ஆகவே, பாடலை முழுக்க அனுபவிக்க இயலாது.

ஆகவே, சில நண்பர்கள் கோரியபடி அருஞ்சொற்பொருளையும் பாடலுடன் தந்தேன், ஆனால் பல நாட்களில் (குறிப்பாக, வெளியூரிலிருந்து செல்பேசிமூலம் பாடல்களைப் பதிவு செய்யும்போது) அது சாத்தியமில்லாமல் போனது.

இந்நிலையில், இப்பாடல்களைத் தொகுக்கும் எண்ணம் வந்தபோது, உரையையும் சேர்த்துத் தரலாம் என்று யோசித்தேன், இதனால் இன்னும் சிலர் (முன்பு தயங்கி விலகியவர்கள்) வாசிப்பார்கள் என்ற ஆசைதான்.

ஆசைபற்றி அறையலுற்றவர்களெல்லாம் கம்பனாகிவிடமுடியாது, எனினும், ஆசைவிடக் கற்றுத்தருபவரைப்பற்றிப் பாட ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னாலியன்ற சிறு முயற்சி இது. சரியோ, பிழையோ, இனி இது என்னதில்லை.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/maadevan-malarthogai

நேற்றைக்கு ஒரு பெரிய பிரச்னை.

ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மாலை 5:30க்கு என்னை வரச்சொன்னார் ஒருவர். நானும் பேருந்து நெரிசலில் சிரமப்பட்டு அங்கே சென்று சேர்ந்தேன்.

ஆனால், அவர் வரவில்லை.

5:45க்கு அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். ‘என்னாச்சுங்க?’ என்றேன்.

‘மன்னிக்கணும். நான் டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். வந்துடறேன், பொறுங்க’ என்றார்.

பெருநகரத்தில் இதெல்லாம் சகஜம்தானே. ஒப்புக்கொண்டேன். காத்திருந்தேன்.

ஆனால், மணி ஆறானபிறகும் அவர் வரவில்லை. நான் திரும்பத்திரும்ப அவரை அழைக்கிறேன், அவரும் திரும்பத்திரும்ப மன்னிப்புக்கோருகிறார். ‘இதோ வந்துடறேன்’ என்கிறார்.

நான் காத்திருந்த இடம் ஒரு நெடுஞ்சாலை. பக்கத்தில் கடைகள் ஏதுமில்லை. அமரக்கூட வழியில்லை.

அதற்காக, திரும்பிச்செல்லவும் இயலாது. நான் அவரைச் சந்தித்தே தீரவேண்டும்.

ஆகவே, நான் நெடுஞ்சாலையோரமாக நின்றபடி காத்திருந்தேன். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை அவரை அழைத்துக்கொண்டே இருந்தேன். அவரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

இப்படி இரண்டே முக்கால் மணி நேரம் கால்வலிக்கக் காத்திருந்தபிறகு, 8:15க்கு அவர் வந்தார். நேரிலும் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டார். ‘4:30க்கு வீட்டிலிருந்து கிளம்பிவிட்டேன். இப்படியொரு டிராஃபிக்கை நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்றார்.

பொதுவாக என்னுடைய பிழை சகிப்புத்திறன் (tolerance for error) மிகக்குறைவு. குறிப்பாக நேரவிஷயத்தில் நான் பிழைசெய்வதில்லை, ஆகவே, பிறரும் பிழைசெய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பேன்; எனக்கு யாருக்காகவும் காத்திருப்பது பிடிக்காது. இந்தவிஷயத்தில் பிழைசெய்கிறவர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் மதிக்கமாட்டேன், முகத்துக்கெதிராகத் திட்டிவிடுவேன். அதை இனிப்பு தடவிச் சொல்லத்தெரியாது, ஒருவேளை தெரிந்தாலும், பிழைசெய்தவருக்கு என்ன பெரிய மரியாதை? ஏன் இனிப்பு தடவவேண்டும்?

ஆனால் நேற்றைக்கு, நான் அந்த மனிதரைச் சந்தித்தே தீரவேண்டியிருந்தது. அவரிடம் எனக்கு ஓர் உதவி தேவைப்பட்டது. இரண்டே முக்கால் மணிநேரம் நெடுஞ்சாலையோரமாகக் காக்கவைத்ததற்காக நான் அவரைத் திட்டியிருந்தால் இழப்பு எனக்குதான். ஆகவே, சகித்துக்கொண்டு அவரோடு தொடர்ந்து பேசினேன்.

முதல் சில நிமிடங்கள், எங்களுக்கிடையே ஒரு தயக்க இடைவெளி இருந்தது; குறிப்பாக, அவர் பெரும் குற்றவுணர்ச்சியில் இருந்தார்; நானும் ‘உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தேனே’ என்கிற எரிச்சலை ஒருவிதத்தில் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தேன்.

அதன்பிறகு, அடுத்த பதினைந்து நிமிடத்தில், அவர் தன்னுடைய பழகுமுறையால் என்னை முற்றிலுமாகக் கவர்ந்துவிட்டார். என்னவோர் இனிமையான மனிதர், இவருக்காக இரண்டேமுக்கால்மணிநேரம் காத்திருந்ததில் தவறே இல்லை என்று தோன்றிவிட்டது.

முக்கியமாக, நான் இப்போதுதான் அவரை முதன்முறையாக நேரில் சந்திக்கிறேன். அதற்குமுன் அவரோடு பலமுறை தொலைபேசியில், ஸ்கைப் போன்ற இணைய அரட்டைச் சாதனங்களில் பேசியிருக்கிறேன்; ஆனால் அவருடைய இந்த இனிய பழகுமுறை அதிலெல்லாம் துளிகூட வெளிப்படவில்லை. நேரில் பார்க்கும்போது, பேச்சுக்கு முகமொழியும் உடல்மொழியும் கூடுதல் சிறப்பைத் தந்துவிடுகிறது, பிணைப்பை ஆழமாக்கிவிடுகிறது.

இன்றைக்கு நம்மில் பலருக்கும் ‘நேரில் சந்தித்திராத’ மெய்நிகர் (Virtual) நண்பர்கள்தான் அதிகம், தனிப்பட்டமுறையிலும் சரி, அலுவல்ரீதியிலும் சரி. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நாம் பெறுவதைவிட இழப்பது அதிகம் என்று தோன்றுகிறது. ‘அதான் தேவையுள்ளபோது வாட்ஸாப்ல பேசறோமே’ என்று நினைக்காமல், நேருக்கு நேர் உரையாடல்களை இயன்றவரை அதிகப்படுத்திப்பார்க்கவேண்டும்போலிருக்கிறது.

***

என். சொக்கன் …
14 10 2017

பல நூற்றாண்டுகளாக திருக்குறளை வியந்து புகழ்ந்து, மிகையாக அலசி, ஆராய்ந்து அதைக் கொஞ்சம் தொலைவில் நிறுத்திவிட்டோம் என்று நினைக்கிறேன்.

‘மிகையாக’ என்றால், திருக்குறள் இந்தப் புகழ்ச்சிக்குத் தகுதியானது அன்று எனப் பொருளில்லை. இதற்குமேலும் புகழத்தக்க, வியக்கத்தக்க நூல்தான் அது. ஆனால், இந்தப் புகழ்ச்சியால் அதனை வாசிப்போர் இயல்பாக அதனுள் நுழைய இயலுவதில்லை. பக்திப்பரவசத்தோடு உள்ளே வந்து பிரமிப்போடு வெளியே போய்விடுகிறார்கள்.

நல்லவேளையாக, இந்தப் புகழ்ச்சிகளால் திருக்குறளை ஒன்றும் செய்யமுடிவதில்லை. அது எப்போதும் தனக்குரிய எளிமையோடும் ஆழத்தோடும் நாம் வாசிக்கக் காத்திருக்கிறது. ஆனால் நாமோ, உரைகளைதான் அதிகம் வாசிக்கிறோம்.

அகரமுதலியைத் துணைக்கு வைத்துக்கொண்டு, உரையாசிரியர்களைத் தேவைப்படும் நேரத்தில்மட்டும் பயன்படுத்திக்கொண்டு குறள்களை வாசித்தால் மிக எளிமையாக அதன் சாரத்தை உணரமுடிகிறது. ‘இவர் நம்மாளு’ என்கிற நெகிழ்வுணர்ச்சி இயல்பாகவே வருகிறது; இன்னொருவரால் நெகிழ்த்தப்படுவதைவிட இது சிறப்பானது.

1330 என்ற எண்ணைப்பார்த்து அஞ்சவேண்டாம்; அதில் 250 குறள்கள் காமத்துப்பால்; மீதமுள்ள ஆயிரத்துச் சொச்சத்தில் சுமார் நூறு குறள்களை உரையின் துணையின்றி வாசிப்பது என்று நினைத்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் வரிசையாகப் படிக்கவேண்டாம், அதில் சில மனத்தடைகள் எழ வாய்ப்புண்டு. ஆகவே, Randomஆக அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசியுங்கள். ஒவ்வொரு குறளையும் நேரடியாக உணர முற்படுங்கள். இதற்கு நான்கைந்து நிமிடங்கள் போதும்.

பலரும் நினைப்பதுபோல இது கடினமான பணியே இல்லை. இதனை இப்படி அணுகலாம்:

* எந்தக் குறளிலும் 10 சொற்களுக்குமேல் கிடையாது, அவற்றில் ஐந்து சொற்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்; ஒருவேளை பத்துச் சொற்களுமே தெரியாவிட்டால்கூட, அகரமுதலி அல்லது இணையத்தின் துணையோடு அச்சொற்களின் பொருளை அறிய ஓரிரு நிமிடங்கள்தான் ஆகும்

* குறளில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும் பொருள் தெரிந்தபின்னர், அவற்றைத் தொகுத்துப்பாருங்கள், தேவைப்பட்டால் காகிதத்தில் அடுத்தடுத்து எழுதிக்கொள்ளுங்கள், ஒட்டுமொத்தமாக வள்ளுவர் என்ன சொல்லவருகிறார் என்று யோசியுங்கள் (சில நேரங்களில் வாக்கிய அமைப்பை முன்பின்னாக மாற்றிப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும்)

* ஒருவேளை இதைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டால்மட்டும் உரைகளை அணுகலாம், இணையத்தில் திருக்குறளுக்கு 20+ உரைகள் உள்ளன; ஏதேனும் ஒன்றிரண்டைப் பாருங்கள், புரிய ஆரம்பித்துவிடும்

* ம்ஹூம், எவ்வளவு வாசித்தும் புரியவில்லையா, பிரச்னையில்லை; விட்டுவிட்டு அடுத்த குறளைப் பாருங்கள்

* குறளின் பொருள் புரிந்ததும், அதை உங்கள் வாழ்க்கையோடு, நீங்கள் பார்த்தவற்றோடு பொருத்திச் சிந்தியுங்கள். எப்போது என்ன செய்திருக்கவேண்டும், எதைச் செய்தோம் என்று யோசியுங்கள். பிழைகளை எண்ணிச் சிரித்துக்கொண்டு அடுத்த குறளுக்குச் சென்றுவிடுங்கள்

இதை ஒழுக்கத்தோடு செய்தீர்களானால், இருபது குறள்களுக்குள் வள்ளுவரை உங்களுக்குப் பிடித்துப்போய்விடும். அவரைப்போல் எளிமையான மனிதரும் கிடையாது; கடினமாக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டவரும் கிடையாது. பிறர் துணையின்றி அவரை நேரடியாக உணரும் வாய்ப்பு இப்போதும் உண்டு.

***

என். சொக்கன் …
12 07 2017

11 வருடங்களுக்குமுன் நான் எழுதிய ஒரு புத்தகத்தைத் தினமும் ஓர் அத்தியாயம் என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு வேடிக்கையான, பெருந்திகைப்பான அனுபவமாக இருக்கிறது.

தொழில்நிமித்தம், தமிழிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று தினந்தோறும் சில்லாயிரம் சொற்களை மொழிபெயர்த்தாலும், அவற்றோடு எனக்கு உணர்வுபூர்வமான ஒட்டுதல் இல்லை. ’மொழி’பெயர்ப்புதான். எழுத்தை விலகியிருந்து பார்க்கமுடிகிறது. ஆகவே, மொழிபெயர்ப்புத் துல்லியத்தில்மட்டும் கவனம் செலுத்துவது சாத்தியமாகிறது.

ஆனால் இந்தப் புத்தகம் அப்படியில்லை. ஒவ்வொரு வரியும் நானே எழுதியது என்பதால், இயந்திரத்தனமாக மொழிபெயர்க்க இயலுவதில்லை. ‘இந்த வரி ஏன் இப்படி இருக்கு? இதை ஏன் அப்படி எழுதலை? இந்த வாக்கிய அமைப்பு சரிதானா? இதுக்கு என்ன ஆதாரம்? இதை இப்படிச் சொல்லியிருந்தா இன்னும் நல்லாயிருக்குமே’ என்றெல்லாம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவோ முயன்றும் இதை Switch off செய்ய முடியவில்லை.

11 வருடங்களுக்குமுன் எழுதிய புத்தகம் என்பதால், இன்றைய என்னுடைய பார்வையில் அதில் பல போதாமைகள் உள்ளன. அப்போது அவற்றை நான் உணர்ந்திருக்கவில்லை. இப்போது உணரும்போது எரிச்சல் வருகிறது. சரிசெய்யவேண்டும் என்று கை துறுதுறுக்கிறது.

ஒருவேளை சரிசெய்தாலும், இன்னும் 11 வருடம் கழித்து இதைப் படித்தால் இன்னும் பல போதாமைகள் தெரியும். மறுபடி கைவைக்கத்தோன்றும். இதெல்லாம் சாத்தியமா என்ன?

ஒருவிதத்தில் இது எரிச்சல். இன்னொருவிதத்தில் மகிழ்ச்சி. நேற்றைக்கு இன்று கொஞ்சம் வளர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு.

எழுத்து என்றில்லை, ஓவியம், நடனம், சிற்பம், இசை, மென்பொருள் நிரல் என்று எதுவானாலும், எழுதியவருக்கு முழுத் திருப்தியே வராது, வரக்கூடாது என்று தோன்றுகிறது. அன்றைய புரிந்துகொள்ளல்நிலையில், அன்றைய திறமையின் அடிப்படையில் நம் முழு உழைப்பை, அர்ப்பணிப்பைக் கொடுத்தோம் என்பதுதான் சாத்தியமான திருப்தி. உன்னதமான, பிழைகளற்ற, இனி திருத்தக்கூடிய வாய்ப்புகளே அற்ற ஒரு படைப்பை மனிதர்கள் யாராலும் எப்போதும் உருவாக்க இயலாது என்று நினைக்கிறேன்.

ஒருவேளை, பெருமேதைகளுக்கு அது சாத்தியமாகலாம். அதை நம்மால் கற்பனைசெய்யக்கூட முடியாது!

***

என். சொக்கன் …
13 06 2017

பல வருடங்களுக்குமுன்னால், ஒரு மூத்த எழுத்தாளர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

‘மூத்த’ என்றால், வயது முதிர்ந்தவர் அல்ல, எனக்குச் சற்று மூத்தவர், அப்போது நான் இளைஞன், அவர் இளைஞர், அவ்வளவுதான்.

அவர் வீட்டில் நான் வியந்த ஒரு விஷயம், கூடத்திலிருக்கும் ஷோகேஸில் தானெழுதிய புத்தகங்களை வரிசையாக அடுக்கிவைத்திருந்தார்.

அதுவரை நான் ஷோகேஸில் பதக்கங்கள், கோப்பைகளைதான் பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் பார்த்ததில்லை. அவையும் வெற்றிச்சின்னங்கள்தாமே? நாமும் இதுபோல் ஷோகேஸில் நாமெழுதிய புத்தகங்களை அடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரே பிரச்னை, அப்போது எனக்குச் சொந்த வீடு கிடையாது, ஷோகேஸ் கிடையாது, அட, அதெல்லாம் இருந்தாலும், அந்த ஷோகேஸில் வைப்பதற்கு நான் ஒரு புத்தகம்கூட எழுதியிருக்கவில்லை.

இறையருளால் இவையெல்லாம் பின்னர் கிடைத்தன. இப்போது எங்கள் வீட்டு ஷோகேஸில் என் புத்தகங்களை அடுக்கிவைத்திருக்கிறேன்.

இன்று காலை, அந்த எழுத்தாளர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். நான் பார்த்த அதே வீடு, அதே ஷோகேஸ். ஆனால் அதில் இப்போது அவருடைய புத்தகங்கள் ஒன்றுகூட இல்லை, அதற்குப்பதில் அவருடைய மகன் வரைந்த ஓவியங்கள் நிரம்பியிருந்தன.

***
என். சொக்கன் …

17 04 2017

கடந்த சில நாள்களில் தொல்காப்பியத்தின் அகத்திணையியல், புறத்திணையியலை முழுக்க வாசித்தேன். என்னவொரு நுணுக்கமான சித்திரிப்பு. காதல்காட்சிகள்/போர்க்காட்சிகள்/பொதுக்காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் பழந்தமிழர் தேர்வுசெய்திருக்கும் களங்கள், பெயர்கள் பிரமிக்கவைக்கின்றன.

சில சிறு எடுத்துக்காட்டுகள்:

1. காதலனும் காதலியும் தங்கள் ஊரைவிட்டுக் கிளம்புகிறார்கள், வேறு ஊர் சென்று திருமணம் செய்துகொண்டு பிழைக்க நினைக்கிறார்கள், வழியில் அவர்களைச் சந்திக்கும் சிலர், ‘அடடா! இந்தப் பாலைவன வழியில் இந்த இளைஞர்கள் செல்லவேண்டுமே’ என்று இரங்குகிறார்கள், ‘அவர்களுக்கு ஆபத்து வருமோ’ என்று கலங்குகிறார்கள், அவர்களிடம் இப்படிச் சொல்கிறார்கள், ‘நீங்கள் செல்ல நினைக்கும் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது, ஆனால், எங்கள் ஊர் அருகே உள்ளது.’ என்ன அழகான, நாசூக்கான குறிப்பு, வரவேற்பு!

2. ஒரு குறிப்பிட்ட வகைப் போர்ச்சூழலுக்குப் ‘பாசி’ என்று பெயர்வைத்திருக்கிறார்கள். ஏன் அந்தப்பெயர் என்றால், நீர்நிலையினருகே இருதரப்புப் படையினர் மோதுகிறார்களாம். நீரிலே பாசி இருக்கும், அதை ஒதுக்கினால், மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளும், அதுபோல, இந்தப் படையினர் நெருங்கி, மோதி, வீழ்ந்து, விலகி, மீண்டும் நெருங்கி, மோதி…. அந்தக் காட்சிக்குப் பாசி என்பது என்ன அழகான பெயர்!

3. இதேபோல், ஒரு வீரனை ‘எருமை’ என்கிறார். திட்டாக அல்ல, பாராட்டாகதான், யார் வந்து மோதினாலும் அசராமல் நிற்கும் எருமையைப்போல அவன் எதிரியைத் தடுத்துநிற்கிறான்.

4. சில குறிப்பிட்ட விழாக்களை ‘வெள்ளணி’ என்கிறார்கள். வெள்ளை அணி, அந்நாட்களில் விழாநடத்துவோர் வெள்ளை உடை அணிவது வழக்கம், அப்போது வெள்ளையே சிறப்புடையாக இருந்திருக்கிறது, ஆகவே, அந்த விழாக்களுக்கே ‘வெள்ளணி’ என்ற பெயர் அமைந்துவிட்டது

இப்படி நுணுக்கமான பல காட்சிகள், பெயர்கள், விளக்கங்கள் … இத்தனைக்கும் இந்த வேக வாசிப்பில் நான் புரிந்துகொண்டது 20%கூட இருக்காது (அதுவே மிகைமதிப்பீடுதான் என்பேன்). நிறுத்தி நிதானமாக வாசித்து, உதாரணங்களைத் தேடிப் புரிந்துகொண்டால், தொல்காப்பியத்தைமட்டும் குறைந்தது ஐந்தாறு வருடங்கள் வாசிக்கவேண்டியிருக்கும்போல் தோன்றுகிறது.

நல்லவேளையாக, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்றோர் அத்தகைய ஆழமான ஆராய்ச்சிப் பணியை ஏற்கெனவே செய்துவிட்டார்கள். அவர்களுடைய உரைகளுக்கு இன்னோர் உரை தேவைப்படுமளவு தமிழ்ச்சொற்களை, பயன்பாடுகளை நாம் தொலைத்துவிட்டதால், இப்போது திகைத்துநிற்கிறோம். நம் வீட்டின் மூலையிலிருக்கும் பெருஞ்செல்வத்தை நாமே பயன்படுத்திக்கொள்ள இயலாமலிருக்கிறோம்.

இது சற்றே மிகையான புலம்பலாகத் தோன்றலாம். ‘தொல்காப்பியத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பதால் இன்றைக்கு என்ன பயன்?’ என்கிற எதார்த்தக்கேள்வியிலும் ஓரளவு நியாயமுண்டுதான். ஆனால் எதைப் பின்பற்றுவது, எதை விடுவது என்று தெரிந்துகொள்ளவேனும் அதை வாசிக்கவேண்டுமல்லவா? தொல்காப்பியம்போன்ற ஒரு முழுமையான இலக்கணநூலைக்கொண்ட மொழியில் அதை வாசிப்போர், புரிந்துகொள்வோர் அரைக்கால் சதவிகிதம்கூட இலர் என்பது வரலாற்று/கலாசாரத் துயரமே.

Twenty Management Secrets In Tholkaappiyam என்று ஆங்கிலத்தில் யாராவது ஒரு Bestseller எழுதிப் பிரசுரித்தால் நம்மிடையே அதைக் கற்க ஒரு புதிய வேகம் வருமோ?

***

என். சொக்கன் …

04 04 2017

தினமும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். அவ்வழியின் நடுவே ஓரிடத்தில் படிக்கட்டுகள் உள்ளதால், வழிநெடுக எங்கும் வாகனங்கள் வாரா. ஒரு குறிப்பிட்ட இடத்தில்மட்டும் வாகனங்கள் விரைகிற சாலையைக் கடக்கவேண்டியிருக்கும். மற்றபடி பெரிய ஆள்நடமாட்டமே இருக்காது. இருபுறமும் உள்ள செடிகளை, பூக்களைப் பார்த்தபடி நடப்போம்.

இப்படித் தினமும் ஐந்து நிமிடம் நடக்கவேண்டியிருப்பதால், பிள்ளைகளுக்கு ஏதேனும் கதைகளைச் சொல்வேன். அவர்கள் பள்ளியில் நடந்ததைப் பகிர்ந்துகொள்வார்கள்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, ஒரு திடீர் யோசனை. சும்மா ஏதோ ஒரு கதையைச் சொல்வதைவிட, தினமும் ஒரு திருக்குறளைக் குழந்தைகளுக்கு விளக்கினால் என்ன?

சட்டென்று அப்போதைக்கு நினைவுக்கு வந்த ஒரு குறளைச்சொல்லித் தொடங்கினேன். பிறகு தினமும் இதற்காகவே படிக்க ஆரம்பித்தேன், கதைகளை யோசித்து உருவாக்கி, சில சமயங்களில் எங்கோ வாசித்ததைச் ‘சுட்டு’ச் சொன்னேன்.

குழந்தைகளுக்கு இது சட்டென்று பிடித்துவிட்டது. தினமும் நடக்கத்தொடங்கியதும், ‘இன்னிக்குத் திருக்குறள் ரெடியா?’ என்று அவர்களே கேட்டுவிடுவார்கள். சரியாக நான் குறளை விளக்கிமுடித்ததும் பள்ளியின் வாசல் வந்துவிடும், டாட்டா காட்டிவிட்டு ஓடுவார்கள்.

இவை அவர்கள் மனத்தில் எந்த அளவு பதிகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. பதிகிறவரை லாபம்தானே!

இந்த விளக்கங்களை செல்ஃபோனில் பதிவுசெய்து இணையத்திலும் வெளியிடத்தொடங்கினேன். யாருக்காவது பயன்படட்டும் என்ற ஆவல்தான்.

இப்பதிவுகளுக்குப் பெரிய வரவேற்பு/Feedback இல்லைதான். ஓரிரு நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கருத்துகளை எழுதுகிறார்கள், மற்றபடி, எனக்குத் தினமும் (இரு பிள்ளைகளிடமிருந்து) நேரடியாகக் கிடைக்கும் Feedback போதும். குறளை மீண்டும் நிதானமாகப் படிக்க, சொல் பயன்பாடு, இலக்கண நுட்பங்களைத் தெரிந்துகொள்ள, அதைப் பிள்ளைகளுக்குச் சொல்வது எப்படி என்று சிந்திக்க எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே, இதை இயன்றவரை தொடர உத்தேசம், இறையருள் துணைநிற்கட்டும்.

இன்றைக்கு இப்பதிவுகளின் 100வது நாள். இதுவரை வெளியான பதிவுகள் அனைத்தும் (சுமார் ஏழு மணிநேர ஒலிப்பதிவுகள்) இங்கே உள்ளன. இனி வரப்போகும் பதிவுகளும் இதில் தொடர்ந்து சேர்க்கப்படும். ஆர்வமுள்ளோர் கேட்கலாம், அல்லது, பிறருக்கு அறிமுகப்படுத்தலாம்:

***

என். சொக்கன் …

01 03 2017

மகளை நடன வகுப்பிலிருந்து அழைத்துவரச் சென்றிருந்தேன்.

நான் சென்ற நேரம், வகுப்பு இன்னும் நிறைவடைந்திருக்கவில்லை. சிறிதுநேரம் வாசலில் காத்திருந்தேன். என்னைப்போல் இன்னும் சில பெற்றோரும் அங்கே இருந்தார்கள்.

சில நிமிடங்கள் கழித்து, ஒரு பெண் படியேறி வந்தார். அவரைப்பார்த்ததும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று ஒரு சிறுமி ஓடிவந்தாள், கையில் முழநீள நோட்டுப்புத்தகம், ‘ஆன்ட்டி, ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’ என்றாள்.

‘என்ன நகை?’ என்றார் அந்தப் பெண்.

‘ஜனவரி 31ம் தேதி நடன நிகழ்ச்சி இருக்கே, அதுக்கு அலங்காரம் செய்யறதுக்காக நகை, சவுரி முடி, செயற்கைப் பூக்கள், குஞ்சலம் எல்லாம் மேடம் மொத்தமா வாங்கறாங்க, அதான் கேட்கறேன், ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’

அந்தப் பெண் (அதாவது, ஷ்ரேயாவின் அம்மா) சிறிது யோசித்துவிட்டு, ‘ஏற்கெனவே இருக்கு, வேணாம்!’ என்றார்.

‘சவுரிமுடி, செயற்கைப் பூக்கள் வேணுமா?’

‘ம்ஹூம், அதுவும் இருக்கு.’

‘குஞ்சலம்?’

‘அது வேணும்.’

‘ஓகே ஆன்ட்டி’ என்று அந்த நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டாள் அச்சிறுமி, ‘இதுக்கு என்ன விலைன்னு அப்புறமா மேடம் உங்களுக்கு வாட்ஸாப் அனுப்புவாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

உள்ளே ஓர் இளம்பெண் இவள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிச்சென்ற இவள், ‘சரியாப் பேசினேனாக்கா?’ என்றாள்.

‘வெரிகுட்’ என்று தட்டிக்கொடுத்தாள் அவள்.

மறுகணம், அச்சிறுமி முகத்தில் அப்படியொரு பிரகாசம், ‘தேங்க்யூக்கா’ என்றாள் மலர்ந்து.

இப்போது அந்த இளம்பெண், ‘சில பெற்றோருக்குச் சவுரிமுடி, குஞ்சலம்ன்னா என்னன்னு தெரியாது, அதையெல்லாம் நீதான் விளக்கிச்சொல்லணும், சரியா?’ என்றாள்.

‘ஓகேக்கா!’

அதற்குள், வாசலில் ஒரு புதிய தந்தை வந்திருந்தார், மீண்டும் குடுகுடுவென்று ஓடிவந்தாள் இவள், ‘அங்கிள், பூமிகாவுக்கு நகை வாங்கணுமா?’ என்று ஆரம்பித்தாள்.

அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் இப்படி ஏழெட்டுப் பெற்றோரிடம் பேசிவிட்டாள் அச்சிறுமி, அனைவரிடமும் அதே Script, அதே கேள்விகள், பதில்களை அதே நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டு உள்ளே ஓடுதல், அதே இளம்பெண்ணிடம் அதே ‘வெரிகுட்’ வாங்குதல், அதே ‘தேங்க்யூக்கா’ சொல்லுதல்…

வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை இவர்களை நிமிர்ந்துபார்க்கக்கூட இல்லை, அவர் தன்னுடைய வேலையை வெற்றிகரமாக Delegate செய்துவிட்டார், இதுபோன்ற சிறு பணிகளை ஆர்வத்துடனும் விசுவாசத்துடனும் செய்வதற்காகத் தனக்குக்கீழே ஒரு சிறு படையை உருவாக்கிவிட்டார்.

இன்றைக்கு ‘வெரிகுட்’ சொல்லிக்கொண்டிருக்கிற அந்த இளம்பெண், சில ஆண்டுகள்முன்னே இந்தச் சிறுமிபோல் நோட்டுப்புத்தகத்தோடு ஓடியாடி விவரம் சேகரித்திருக்கக்கூடும், இப்போது அவள் ஒரு கண்காணிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிகிறாள், நடனம் கற்பதுடன் கொஞ்சம் மேலாண்மை/நிர்வாகமும் கற்றுக்கொள்கிறாள்.

இந்த ஏணியின் அடிமட்டத்திலிருக்கும் அச்சிறுமி கிட்டத்தட்ட unpaid labourதான். மிஞ்சிப்போனால் அவளுக்கு ஓரிரு சாக்லெட்கள் கிடைக்கலாம், ஆனால், நடனம் கற்கவந்த இடத்தில் தகவல்தொடர்பைக் கற்றுக்கொள்ளவும், கொடுத்த விஷயத்தைப் பொறுப்போடு செய்து சமர்ப்பிக்கும் ஒழுங்கைக் கற்றுக்கொள்ளவும் இதுவொரு வாய்ப்பல்லவா? பல மாணவர்களுக்கு இது கிடைப்பதில்லையே!

அந்தச் சிறிய நடனவகுப்பில் தானே உருவாகியிருந்த சின்னஞ்சிறு ‘சமூக மாதிரி’ மிகவும் சுவையாக இருந்தது.

***

என். சொக்கன் …

26 01 2017

ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூலொன்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய பேராசிரியரின் தயாரிப்பு, ஒரு பெரிய பதிப்பகத்தின் வெளியீடு.

இந்த ஓலைச்சுவடிகளைக் கண்டறியவும் பதிப்பிக்கவும் அந்தப் பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளார், பல ஆண்டுகள் உழைத்துள்ளார். இது அந்நூலின் முன்னுரையில் நன்கு விளங்குகிறது. அவருக்கு என் மரியாதைகள்.

அதேசமயம், நூலினுள் பக்கத்துக்குப் பக்கம் பிழைகள். இவை ஓலைச்சுவடியில் இருந்த பிழைகளாக இருக்கலாம், அவற்றைச் சரிசெய்து பதிப்பித்திருப்பதாகவே பேராசிரியர் சொல்கிறார்.

இந்தப் பிழைகளில் பலவும், அற்பமான எழுத்துப்பிழைகள், ’படித்தான்’ என்பதற்கும் ‘படிந்தான்’ என்பதற்கும் ஓர் எழுத்துதான் மாறுகிறது, ஆனால் பாடலைச் சேர்த்துப் படிக்கும்போது எந்தச் சொல் அங்கே வரவேண்டும் என்று புரியுமல்லவா?

மற்ற சில பிழைகள், கொஞ்சம் நுணுக்கமானவை. ஆனால், தமிழ்ப் பக்தி மரபு, செய்யுள்கள் எழுதப்படும் விதம், மரபிலக்கிய முறைகள் ஆகியவற்றை அறிந்த ஒருவர் இவற்றை மிக எளிதில் கண்டுபிடித்திருப்பார்.

இத்துணை அருமையான பாடல்களுக்கு அச்சில் உள்ள ஒரே பிரதி இதுதான், அது இத்தனைப் பிழைகளுடன் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது, அதேசமயம், அந்தப் பேராசிரியரின் உழைப்பைக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குறைசொல்லத் தயக்கமாகவும் உள்ளது.

அந்தப் பதிப்பகத்துக்கு இதைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். ஆனால், அவர்கள் இதைத் திறந்த மனத்துடன் எடுத்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை.

ஏன் இந்தச் சந்தேகம் என்று யோசிப்பவர்களுக்கு, சில நாள் முன்பு ஒரு நண்பருடன் நடந்த வாட்ஸாப் உரையாடலைப்பற்றிச் சொல்கிறேன்.

அந்த நண்பர் ஒரு சொற்றொடர் தந்து ‘இது இலக்கணப்படி சரியா?’ என்றார், ’தவறு’ என்று சொல்லி அதைத் திருத்தித்தந்தேன்.

அவர் தந்த அந்தச் சொற்றொடர் ஒரு தமிழ்மன்ற விழாவின் அழைப்பிதழில் வருகிறதுபோல. நான் சொன்ன திருத்தத்தை அவர் அங்கே சொல்லியிருக்கிறார்.

அவ்வளவுதான், எல்லாரும் அவர்மீது பாய்ந்துவிட்டார்கள், ‘இதை எழுதியவர் எப்பேர்ப்பட்ட பண்டிதர் தெரியுமா? தமிழில் எப்பேர்ப்பட்ட பட்டங்கள் வாங்கியவர் தெரியுமா? அவர் எழுத்தில் குறை சொல்ல நீ யார்? இதை உனக்குமுன் எத்தனை பேர் படித்தார்கள் தெரியுமா? அவர்களுக்கெல்லாம் தெரியாத பிழைதான் உனக்குத் தெரிந்துவிட்டதா?’

நண்பர் என்னிடம் வந்தார், ‘ஐயா, இப்படிச் சொல்கிறார்கள், நான் என்ன செய்ய?’ என்றார்.

நான் புன்னகையோடு சொன்னேன், ‘அன்பரே, தமிழ்மன்றம் என்று நீங்கள் முன்பே சொல்லியிருந்தால் நான் இந்தச் சொற்றொடரில் கைவைக்கவே துணிந்திருக்கமாட்டேன், அவர் எழுதியதே சரி.’

‘அப்படியானால் நீங்கள் சொன்ன திருத்தம்?’

‘அதுவும் சரி.’

‘அந்தத் திருத்தம் ஏன் என்று எனக்கு விளக்குங்களேன், நான் அவர்களிடம் சென்று சொல்கிறேன்.’

’அட அப்பாவியே’ என்று சிரித்தேன், ’உங்களுக்கு நிச்சயம் விளக்கம் சொல்கிறேன், ஆனால், அதைப்போய் அங்கே சொல்லாதீர்கள், தமிழில் பெரும்பட்டங்களைப் பெற்றோரிடம் வாதாடலாகாது, அதனால் துளியும் பயனிருக்காது, பணிந்துசென்றுவிடுங்கள்.’

***

என். சொக்கன் …

11 01 2017

‘தினமலர்’ பத்திரிகை வெளியிடும் ‘பட்டம்’ மாணவர் இதழில் (கிட்டத்தட்ட) தினமும் தமிழிலக்கணக் கட்டுரைகளை எழுதிவருகிறேன். இக்கட்டுரைகளுக்கு மாணவர்கள்மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக அறிகிறேன். மகிழ்ச்சி!

இதுபோன்ற கட்டுரைகளை நானாக யோசித்து எழுதுவதைவிட, பெரும்பாலானோருக்கு இருக்கும் சந்தேகங்களைப் புரிந்துகொண்டு எழுதினால் இன்னும் நல்ல பலன் இருக்கும். அதற்காக ஒரு சிறு படிவத்தை உருவாக்கியுள்ளேன். தமிழ் எழுத்துகள், சொற்கள், புணர்ச்சி இலக்கணம், ஒற்றுப்பிழைகள், பிற பிழைகள், வாக்கிய அமைப்புகள்பற்றி உங்களுக்கு/உங்கள் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய கேள்விகளை இந்தப் படிவத்தின்வழியே அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் பெயர்/மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடலாம்.

ஒருவேளை நீங்கள் சமர்ப்பித்த கேள்விக்குப் பதிலாக ஒரு கட்டுரை எழுதப்பட்டால், அதனை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கிறேன். வருங்காலத்தில் இக்கட்டுரைகள் நூலானால் அதிலும் உங்கள் பெயர் சேர்க்கப்படும்.

இப்படிவத்தைப் பலருக்குத் தந்து உதவுங்கள். நன்றி!

https://goo.gl/forms/y0ffUUojJQ4WZZ6R2

***

என். சொக்கன் …

10 11 2016

நவம்பர் 5ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலேகுளி, கூரம்பட்டி என்ற கிராமங்களில் இலக்கணப் பட்டறையொன்றை நிகழ்த்தினேன். இதற்கு மிக அருமையானவிதத்தில் ஏற்பாடு செய்திருந்த நண்பர் கார்த்திகேயன் வரதராஜன் அவர்களுக்கு என் நன்றி.

இரண்டு பட்டறைகளும் (ஒரே விஷயம்தான், இருமுறை நடத்தினேன்) சிறப்பாக நடைபெற்றன. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்றார்கள், கற்றுக்கொண்டார்கள்.

இதில் மகிழ்ச்சியான விஷயம், அநேகமாக எல்லா மாணவர்களுமே இலக்கண அடிப்படைகளை நன்கு அறிந்திருந்தார்கள், ஆகவே, நான் சொல்லித்தர முயன்றதைச் சட்டென்று பிடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள்.

ஆனால், எனக்குதான் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாமோ என்றோர் எண்ணம். நேரமெல்லாம் இருந்தது, ஆனால் எனக்குக் கரும்பலகைசார்ந்து வகுப்பெடுக்கும் அனுபவம் போதவில்லை. பதற்றத்தில் முதல் வகுப்பு ரொம்ப unstructured ஆகிவிட்டது.

எந்த அளவு பதற்றம் என்றால், என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளக்கூட மறந்துவிட்டேன்! பின்னர் ஒரு மாணவி வந்து அதைக்கேட்டபிறகுதான் நினைவு வந்தது.

வருடம்முழுக்க வகுப்பெடுக்கிறவனுக்கு இந்தப் பதற்றம் வந்த காரணம், no PowerPoint slides. அந்த அளவு இயந்திரங்களைச் சார்ந்து வாழப்பழகிவிட்டேன்.

முதல் வகுப்புடன் ஒப்பிடும்போது, இரண்டாவது வகுப்பு ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் எனக்கு முழுத்திருப்தி இல்லை, இன்னும் நன்றாகத் திட்டமிட்டுச் செய்திருக்கலாம்.

இவ்வகுப்பில் நான் பதில்சொல்ல முயன்ற கேள்விகள் இவை. என்றேனும் வாய்ப்பு அமையும்போது நான் இவற்றை ஒரு நூலாக எழுதக்கூடும்:

  • மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு சாதனம்தானே, பிழையோடு எழுதினால்/பேசினால் என்ன? அதைக் கேட்கிறவர் புரிந்துகொண்டால் போதாதா?
  • ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தானே வேலை கிடைக்கும், நான் ஏன் தமிழைப் பிழையற எழுதக் கற்கவேண்டும்?
  • ஊடகங்கள் அனைத்திலும் மொழிப்பிழைகள் இருக்கின்றன என்கிறோம். அவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் பள்ளிச்சிறுவர்களைக் கண்டித்து என்ன பயன்?
  • இலக்கணத்தை ஏன் கற்கவேண்டும்?
  • சொல்வளத்தை ஏன் பெருக்கிக்கொள்ளவேண்டும்?
  • தமிழில் பிறமொழிச்சொற்கள் எப்படி, ஏன் நுழைந்தன? அவற்றை எல்லாரும் இயல்பாகப் பயன்படுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது? அவற்றை அறிவது எப்படி? தவிர்ப்பது எப்படி? இன்னும் சேராமல் தடுப்பது எப்படி?
  • வாக்கிய அமைப்பில் பொதுவாகக் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அவற்றால் வாக்கியங்கள் எப்படி மாறும், எப்படிப்பட்ட பிழைகளெல்லாம் வரலாம்? (காலம், இடம், திணை, பால், எண்ணிக்கை, நேர்/எதிர்)
  • வேற்றுமை உருபுகள் என்பவை என்ன? அவற்றை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? அவை காலவோட்டத்தில் எப்படி மாறியுள்ளன?
  • தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தால் வேலை கிடைக்குமா? என்னமாதிரி வேலைகள் கிடைக்கும்?
  • தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள் தமிழை ஏன் தொடர்ந்து வாசிக்க/எழுதவேண்டும்?
  • நாம்மட்டும் ஒழுங்காகத் தமிழ் எழுதினால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?

இந்த வகுப்புகளில் பெரும்பகுதியை (பாலேகுளி வகுப்பை முழுமையாகவும், கூரம்பட்டி வகுப்பில் சுமார் பாதியளவும்) வீடியோ பதிவு செய்துள்ளேன். இவை சுமாரான முயற்சிகளே என்ற முன்னெச்சரிக்கையுடன் அதனை இங்கே வெளியிடுகிறேன். இலக்கணத்தை இன்னும் ஒழுங்குடன் நேர்த்தியாகச் சொல்லித்தர இயலும், இது என்னாலியன்ற இலுப்பைப்பூ.

முதல் வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1

இரண்டாவது வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 2

மூன்றாவது வீடியோ: கூரம்பட்டி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1மட்டும் (பகுதி 2 பதிவாகவில்லை)

***

என். சொக்கன் …

07 11 2016

எழுத்து, வாசிப்பு தொடங்கி எந்தத் துறையிலும் ஒரு சிறு பணியை எடுத்துக்கொண்டு தினமும் செய்வது நல்ல பலன்களைத் தரும். இதை நான் அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கிறேன்.

உதாரணமாக, உங்களுக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் வரவேண்டும் என விரும்புகிறீர்கள். அதற்கு எப்போதாவது கிடைக்கும் புத்தகங்களைப் படிப்பதைவிட, தினமும் 5 பக்கம் என்பதுபோல் வைத்துக்கொண்டால் ஓர் இலக்கு அமையும், உத்வேகம் அதிகரிக்கும். இதனை ஒருவருடம் அர்ப்பணிப்போடு செய்தால், ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் இருந்த நிலையிலிருந்து சிலமடங்கேனும் முன்னேறியிருப்பீர்கள். இதுதான் #365Projects என்பது.

இங்கே “தினமும் 5 பக்கம் வாசிப்பேன்” என்பது ஓர் உதாரணம்தான். இதை நீங்கள் விருப்பம்போல் மாற்றியமைக்கலாம்: “தினமும் 2 பத்தி எழுதுவேன்”, “தினமும் அரை மணிநேரம் நடப்பேன்”, “தினமும் ஒரு புதியவருடன் பேசுவேன்”… இப்படி.

நான் பல #365Projects செய்துள்ளேன், அவை எனக்கு மிக நல்ல பலனைத் தந்துள்ளன. ஆகவே, இதுபற்றிப் பல நண்பர்களுக்கும் சொன்னதுண்டு.

சமீபத்தில் நண்பர் மகேந்திரனைச் சந்தித்தபோது, இரவுணவோடு பல விஷயங்களைப் பேசினோம். அதில் #365Projectsபற்றியும், அதை வெற்றிபெறச்செய்ய எனக்குத் தெரிந்த நுட்பங்களைப்பற்றியும் பேசிய பகுதிமட்டும் இங்கே.

பின்குறிப்பு: உணவகத்து இரைச்சல் அதிகமாக இருக்கும். ஆர்வமுள்ளோர் அதைப் பொறுத்துக்கொண்டு கேட்கலாம் 🙂

 

***

என். சொக்கன் …

29 08 2016

இன்றைக்கு ஓர் அச்சிதழ் கட்டுரையில் வாசித்த ஒரு பத்தி:

*************

இன்று குழந்தைகளுக்காக ஆன்லைனில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிஃப்ட் காம்படிஷன், மதர் சர்ப்ரைஸ் கிஃப்ட் போன்ற அந்தப் போட்டிகளில் ஈர்க்கப்பட்டு பரிசுக்காக விளையாடும் குழந்தைகள் மூலமாகவே, அவர்கள் நண்பர்களையும் அங்கு வரவழைக்கிறார்கள். ‘அப்பா, அம்மா விவரங்கள், தொடர்பு எண்கள், ஸ்கூல், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ டைம் ஹாபி, அவுட்டிங்’ போன்ற தகவல்களை கேட்டுப் பெற்று, அவர்கள் பெற்றோரின் தொழில் சம்பந்தமான பிசினஸ் விளம்பரங்களை அவர்களுக்கு அனுப்புவது தொடங்கி, குழந்தை கடத்தல் வரை திட்டமிடப்படுகிறது என்பது அதிர்ச்சியான உண்மை.

*************

இதில் ஆங்கிலச் சொற்கள்:

ஆன்லைன், கிஃப்ட் (2 முறை), காம்படிஷன், மதர், சர்ப்ரைஸ், ஸ்கூல், க்ளோஸ், ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ, டைம், ஹாபி, அவுட்டிங், பிஸினஸ்

ஆக, 56 சொற்களில் 14 ஆங்கிலச்சொற்கள். இருபத்தைந்து சதவிகிதம்.

எண்ணிக்கையைமட்டும் பார்க்காதீர்கள், அந்தச் சொற்களின் தரத்தையும் பார்க்கவேண்டும்: ஆன்லைன் என்ற ஒரு சொல்லைத்தவிர மற்ற அனைத்துக்கும் எளிய, தினசரிப் பயன்பாட்டில் உள்ள தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அவ்வாறிருக்க, எதற்காக இங்கே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

சிலநாள்முன்பு நண்பர் ஜடாயு ‘ஸ்கூல்’ என்பதைப் ‘பள்ளிக்கூடம்’ என்று எழுதலாமே என்று ஒரு பதிவில் சொல்லப்போக, ‘பள்ளிக்கூடம்ன்னா இன்னிக்கு யாருக்குமே தெரியாது சார்’ என்று பலர் அதிர்ச்சியளித்தார்கள்.

ஒருவேளை தெரியாது என்றே வைத்துக்கொள்வோம், யாருடைய பிழை அது?

நான் தனித்தமிழ் ஆர்வலன் அல்லன். ஹலோ, ஓகே, காஃபி, ஜாலி, சார் போன்ற பிறமொழிச் சொற்களைத் தமிழாகவே எண்ணி எழுத்தில் புழங்குவேன், ஆனால், அவற்றின் சதவிகிதம் அதிகமாகிவிடாதபடி பார்த்துக்கொள்வேன்.

ஆகவே, ஆங்கிலச்சொற்களே கூடாது என்பது என் கட்சி அல்ல. ஆனால் அவற்றின் அதீதப் பயன்பாட்டைக் கவனித்துத் திருத்தவேண்டிய கடமை நமக்கு (குறைந்தபட்சம் எழுதுகிறவர்களுக்கு) இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இப்படி எழுதும் பலர் சொல்கிற சாக்கு, ‘அப்பதான் எதார்த்தமா இருக்கும். இல்லாட்டி பழைய பாணியில யாருக்கும் புரியாது.’

இந்தச் சாக்கும், சினிமாக்காரர்கள் சொல்கிற ‘சமூகத்துல நடக்கறதைதானே நாங்க காட்டறோம்’ என்பதும் ஒன்றேதான். படைக்கிறவனுக்குக் குறைந்தபட்சப் பொறுப்புகூட இல்லாவிட்டால், அவனுக்கும் பிறருக்கும் என்ன வித்தியாசம்? ஊரே கிஃப்ட் என்று பேசுகிறது என்பதற்காக அதைப் பரிசு என்று எழுதக் கூசுதல் சரியா? அப்படி எழுதினால் புரியாது என்பது உண்மையாகவே இருப்பினும், அதை மாற்றுகிற பொறுப்பு நமக்குண்டா, இல்லையா?

இப்போது மேற்கண்ட பத்தியை இன்னொருமுறை வாசியுங்கள், ’க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்’, ‘ஃப்ரீ டைம் ஹாபி’ என்றெல்லாம் எழுதிச்செல்வது எப்பேர்ப்பட்ட சோம்பேறித்தனம், அயோக்கியத்தனம்!

இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பேசும் வசனமாக வந்தால்கூடப் பரவாயில்லை, எதார்த்தம் என்று சப்பைக்கட்டு கட்டலாம், வர்ணனைகளில் ஆங்கிலம் கலப்பதற்கு எழுதுபவரின் அலட்சியம், சோம்பேறித்தனம், அறியாமை இவற்றில் ஒன்றைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும்?

ஊடகங்களின் பொறுப்பின்மையால் நாம் தொடர்ச்சியாகச் சொற்களை இழந்துகொண்டிருக்கிறோம், சொற்களே தடுமாறும்போது இலக்கணம் எங்கே வாழும்?

இந்நிலை இனி மாறாது என்றே தோன்றுகிறது. ‘இட்ஸ் ஓக்கே ய்யார்’ என்று கேஷுவலாக எடுத்துக்கொண்டு லைக் போடவேண்டியதுதான்!

***

என். சொக்கன் …
09 06 2016

எங்கள் வீட்டில் இரண்டு சுழற்பொம்மைகள். பச்சை நிறத்தொரு பொம்மை, இளஞ்சிவப்பு நிறத்தொரு பொம்மை. மின்விசிறிக்கு இருபுறமும் உள்ள விளக்குகளில் அவை தொங்கிக்கொண்டிருக்கின்றன, மின்விசிறி ஓடும்போதெல்லாம் காற்றில் வேகமாகச் சுழலும், மற்றநேரங்களிலும், நன்கு காற்றடித்தால் மெதுவாகச் சுழலும், அருகே சென்று பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும்.

மிகச் சாதாரணமான பொம்மைதான், பொறியியல்ரீதியில் பார்த்தால் ஒரு நீண்ட பிளாஸ்டிக் துண்டு, அவ்வளவுதான், ஆனால், அதன் சுழற்சி அலாதியான அழகைக்கொண்டிருக்கிறது. எத்துணை மனஅழுத்தம் இருந்தாலும் மெல்லக் கரைத்துவிடும், கிறங்கடித்துவிடும்.

இன்று காலை, மங்கை என்னை அழைத்து, ‘அப்பா, நேத்திக்கு இந்த பொம்மையில ஈ ஒண்ணு உட்கார்ந்திருந்ததுப்பா’ என்றாள்.

‘ஈதானே? அது பெரிய அதிசயமா?’ என்றேன்.

‘இல்லைப்பா, அந்த பொம்மை சுத்தும்போது ஈயும் சேர்ந்து சுத்திச்சு, அதுக்கு ஜாலி ரைடா இருந்திருக்கும்ன்னு நினைக்கறேன்!’ என்றாள் அவள்.

அட, ஆமாம். இந்தக் கோணம் நமக்குத் தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன், அவளுடைய கற்பனையைப் பாராட்டினேன்.

மறுவிநாடி, ‘அப்பா’ என்று கத்தினாள் அவள், ‘அதோ பாரு, ஈ, பொம்மையில உட்கார்ந்திருக்கு’ என்றாள்.

சட்டென்று இருவரும் அருகே சென்று பார்த்தோம், ஓர் ஈ அந்தப் பொம்மையோடு சேர்ந்து ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருந்தது.

‘நாமெல்லாம் WonderLaல புது Ride போட்டிருக்கான்னு ஓடறோம்ல? அந்தமாதிரி இந்த ஈ ஓடிவந்திருக்கும்ன்னு நினைக்கறேன்’ என்றேன், ‘இன்னிக்கு மத்தியானம், இந்த ஈ மத்த ஈக்கள்கிட்டே போய் ‘Friends, அந்த வீட்ல ரெண்டு புது Rides சேர்த்திருக்காங்க, வாங்க, எல்லாரும் ஜாலியா விளையாடலாம்’ அப்டீன்னு சொல்லும், அதுங்களையும் கூட்டிகிட்டு வந்து, நீ பிங்க் ரைட் விளையாடு, நான் பச்சை ரைட் விளையாடறேன்னு பங்குபிரிச்சுகிட்டு விளையாடும்.’

‘ஆமாம்ப்பா’ என்று பரவசமாகச் சிரித்தாள் மங்கை. இருவரும் நெடுநேரம் அந்த ஈ சுழல்வதையே வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தோம்.

***

என். சொக்கன் …

08 06 2016

கும்பகோணத்தில் சிலமணிநேரங்கள் கிடைத்தன. சில கோயில்களைப் பார்த்துவர எண்ணினோம்.

அவ்வூரில் திரும்பின திசையெல்லாம் கோயில்கள். ஆகவே, இருக்கிற நேரத்தில் எந்தெந்தக் கோயில்களைப் பார்ப்பது என்று தீர்மானிப்பதற்காக நாங்களே ஒரு வடிகட்டியை அமைத்துக்கொண்டோம்: நால்வர்/ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள்.

இந்த அடிப்படையில் 4 கோயில்களைத் தேர்ந்தெடுத்தோம்: கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில். இவற்றோடு ‘குடந்தைக் காரோணம்’ என்பது காசிவிஸ்வநாதர் கோயிலாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுவதால், ஐந்தாவதாக அக்கோயிலையும் சேர்த்துக்கொண்டோம்.

முதலில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம். இக்கோயில்களின் பெயரைச்சொல்லி, ‘இங்கெல்லாம் அழைத்துச்சென்றுவிட்டு, மீண்டும் இங்கேயே திரும்ப எவ்வளவு கேட்கிறீர்கள்?’ என்றோம். இருநூற்றைம்பது ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்.

கிலோமீட்டர் கணக்குப்பார்த்தால், கோயில்களுக்கிடையே உள்ள தொலைவு குறைவுதான். ஆனால், நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் சென்று திரும்பும்வரை ஆங்காங்கே காத்திருக்கவேண்டுமல்லவா. அதற்குதான் இத்தொகை.

அவர் எங்களிடம் முன்பணம் எதுவும் கேட்கவில்லை. முதல் கோயில் வாசலில் நிறுத்தி, ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டார்.

‘உங்க நம்பர் கொடுங்க’ என்றேன்.

‘அதெல்லாம் வேணாம் இங்கேயேதான் இருப்பேன்!’ என்றார்.

எனக்கு வியப்பு தாங்கவில்லை. என் நம்பரைக்கூட வாங்கிக்கொள்ளாமல் இப்படி அப்பாவியாக இருக்கிறாரே. நான் வேறு வாசல் வழியாகத் தப்பி ஓடிவிட்டால் என்ன செய்வார்? (சிரிக்காதீர்கள், நகரத்தில் பிறந்து வளர்ந்த, நிறைய ஏமாந்தவனுக்கு இப்படிதான் தோன்றும் ;))))

நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் செல்லச்செல்ல, அதாவது, அவருக்கு நாங்கள் தரவேண்டிய தொகையின் விகித அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவருடைய Risk Potential அதிகரிக்க அதிகரிக்க, என்னுடைய ஆச்சர்யமும் அதிகரித்தது.

ஆனால், அவர் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. பொறுமையாக ஒவ்வொரு கோயில் வாசலிலும் எங்களுக்காகக் காத்திருந்தார்.

காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் மகாமகக்குளம். இப்போது மகாமகம் இல்லை என்பதால் அங்கே இறங்க அனுமதிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். அனுமதித்தார்கள். இறங்கிக் கால்நனைத்துத் திரும்பினோம். ‘குளம் திறந்திருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா, குழந்தைகளையும் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே’ என்று வருந்தினோம்.

நிறைவாக, நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தோம். அவருக்குப் பேசிய பணத்தைக் கொடுத்து நன்றிசொன்னோம். ‘சாயந்திரம் 7:10 மணிக்கு பஸ் ஸ்டேண்ட் போகணும், வருவீங்களா?’ என்றோம்.

‘வர்றேன்’ என்றார்.

‘உங்க நம்பர் கொடுங்க, 7 மணிக்குக் கூப்பிடறேன்!’

‘அதெல்லாம் வேண்டாம், கரெக்டா வந்துடுவேன்’ என்று கிளம்பிச்சென்றார்.

சொன்னபடி 7:10க்கு வந்தார். ஏறி உட்கார்ந்தோம், ‘எத்தனை மணிக்கு பஸ்?’ என்றார்.

‘7:40’ என்றேன்.

வண்டியைக் கிளப்பினார். நாங்கள் எங்களுக்குள் அரட்டையடித்துக்கொண்டிருந்ததால், அவர் சென்ற வழியைக் கவனிக்கவில்லை.

திடீரென்று வண்டியை நிறுத்தி, ‘இறங்குங்க’ என்றார்.

அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட்டதா என்று வியப்புடன் வெளியே பார்த்தால், மகாமகக்குளம்.

அவரைக் குழப்பத்துடன் பார்த்தேன், ’குழந்தைங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், ஒருவாட்டி தண்ணியில இறங்கிட்டு வரட்டும்’ என்றார்.

முன்பு நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார், அதனால்தான் இந்தவழியாக வந்திருக்கிறார் என்று புரிந்தது. ‘ஆனா, பஸ்…’

‘அதெல்லாம் பிடிச்சுடலாம், குழந்தைங்களை இறங்கச்சொல்லுங்க!’ என்றார் நம்பிக்கையோடு.

சுமார் ஐந்து நிமிடம்தான் அந்தக் குளக்கரையில் இருந்தோம், நிலா வெளிச்சமும் குழல்விளக்குகளின் ‘சிவசிவா’வும் நீரில் நடனமாட, இந்த 4 நாள் பயணத்தில் எங்கள் குழந்தைகள் மிக அதிகம் ரசித்த விநாடிகள் அவைதாம்.

மனமே இல்லாமல் ஓடிவந்து ஆட்டோவில் அமர்ந்தோம். 7:32க்குப் பேருந்து நிலையம் வந்துவிட்டோம்!

கூடுதல் தொலைவு வந்ததற்காக, அவருக்குப் பேசிய தொகைக்குமேல் கொடுக்க விரும்பினேன், மறுத்துவிட்டார், மீதி சில்லறையைக் கவனமாக எடுத்துக்கொடுத்தார்.

‘குழந்தைங்க குளத்தை ரொம்ப ரசிச்சாங்க, நன்றி’ என்றேன்.

‘எங்க ஊர்லேர்ந்து கிளம்பும்போது எல்லாரும் சந்தோஷமாப் போகணும், அதான் சார் எங்களுக்குப் புண்ணியம்’ என்றார். ‘நான் வரட்டுமா?’

‘இப்பவாச்சும் உங்க நம்பர் கொடுங்களேன்’ என்றேன்.

‘ஃபோன் பாக்கெட்லதான் இருக்கு சார், நீங்க கூப்பிட்டா எடுத்துப் பேசத்தெரியாது’ என்றார். ’பார்ப்போம் சார்!’ என்று கிளம்பிச்சென்றுவிட்டார்!

***

என். சொக்கன் …

25 04 2016

ஐடி நிறுவனங்களின் ‘திடீர் டிஸ்மிஸ்’ கலாசாரத்தால் பாதிக்கப்பட்டோரை எண்ணி வருந்தி இணையத்தில் பல பதிவுகளைப்பார்க்கிறேன். அதுபற்றிச் சில சொற்கள்.

என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவரைத் தோல்வியாளர்களாக நினைத்துப் பரிதாபப்பட்டிருக்கிறேன். அநேகமாக எல்லாருக்கும் இப்படிதான் அமைந்திருக்கும் என்பது என் ஊகம்.

ஆரம்பப்பள்ளியில் என்னோடு படித்த ஒருவனுக்கு (மிக நல்ல நண்பன்!) சுத்தமாகப் படிப்பே வரவில்லை. ஆனா ஆவன்னாகூட எழுதவரவில்லை என்பதால் அவனை வலுக்கட்டாயமாகப் பள்ளியிலிருந்து நிறுத்தினார்கள். பட்டறையொன்றில் சேர்த்துவிட்டார்கள்.

ஆனா ஆவன்னா எழுதவராத ஒருவன் இருக்க இயலுமா என்று ரொம்ப வியந்தேன். நாங்கள் பள்ளிக்குச் செல்லும்போது அழுக்குச்சட்டையோடு வேலைக்குச்செல்கிற அவன் நிலைமை மிக மோசம் என்று நினைத்தேன். (காரணம், எனக்கு ஆனா ஆவன்னா எழுதவந்ததுதான்!)

பள்ளியை முடிக்கும்நேரத்தில் மருத்துவம் சேர விரும்பினேன், என் மதிப்பெண் குறைவு, ஆகவே, இடம் கிடைக்கவில்லை. சுற்றியுள்ள அனைவருடைய பார்வையும் என்னைக் கூசவைத்தது, முடங்கிப்போனேன்.

அதன்பிறகு, மனத்தைத் தேற்றிக்கொண்டு பொறியியல் சேரத் தீர்மானித்தேன். அந்தக் கணமே என் மனநிலை மாறியது, என்னைச்சுற்றி நல்ல மதிப்பெண் எடுக்காதவர்கள், அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்காதவர்களைத் தோல்வியடைந்தவர்கள் என்று கருதினேன், அவர்களுக்காக வருந்தினேன். அந்த வயதுக்குரிய முதிர்ச்சிநிலையில், அதாவது, முதிர்ச்சியற்றநிலையில் கொஞ்சம் கர்வப்பட்டிருக்கவும்கூடும். அப்போது என்னுடன் படித்து MBBS சேர்ந்த சில நண்பர்கள் என்னை அவ்வாறே எண்ணியிருப்பர்.

கல்லூரியிலும் கிட்டத்தட்ட இதேமாதிரி கதை, நான் நினைத்த துறை (வேறென்ன, கணினித்துறைதான்) எனக்குக் கிடைக்கவில்லை. என்னைத் தோல்வியடைந்தவனாகக் கருதிக்கொண்டேன்.

அதன்பிறகு, கிடைத்ததைப் படித்தேன், கேம்பஸ் இன்டர்வ்யூவில் வேலை கிடைத்தது. ஆகவே, அவ்வாறு கிடைக்காதவர்கள், அதனால் சிறு வேலைகளில் சேர்ந்தவர்கள், விருப்பமில்லாமல் மேற்படிப்புக்குச் சென்றவர்கள், கல்லூரியை முடித்தபிறகும் வேலை தேடிக்கொண்டிருந்தவர்களைத் தோல்வியடைந்தவர்களாக நினைத்தேன்.

வேலைக்குச் சேர்ந்தபிறகு, என் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தது. என் நெருங்கிய நண்பனொருவனுக்கு வேலை போனது. அவன் அறையில் உட்கார்ந்து பிழியப்பிழிய அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அப்போது, அவனைத் தோல்வியடைந்தவனாகக் கருதினேன்.

அதன்பிறகு, மூன்று நிறுவனங்களில் என்னுடன் வேலைபார்க்கிற சிலர் (இவர்களில் ஓரிருவர் எனக்குக்கீழேயே வேலைபார்த்தவர்கள்) வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சிலருக்குத் திறமைக்குறைவு, வேறு சிலர் தங்கள் பொறுப்பில் பொருந்தவில்லை, காரணங்கள் பல, ஆனால் திடுமென்று செய்த வேலையிலிருந்து அனுப்பப்பட்டால், பிறர்பார்வையில் அவர்கள் தோல்வியடைந்தவர்களாகதானே கருதப்படுவார்கள்?

இப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் என்னை நேரில் சந்தித்து, ‘என் சம்பளத்தையாவது குறைச்சுக்கோங்க, வெளியே அனுப்பிடாதீங்க’ என்று கெஞ்சிய நிகழ்வுண்டு. என்னைவிட மூத்த ஒருவர் அப்படிக் கேட்கும்போது, அதற்கு நம்மால் எதுவும் செய்ய இயலாது என உணரும்போது உண்டாகும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல.

இப்படி இன்னும் ஏகப்பட்ட அனுபவங்கள், நாம் (சற்றே) உயர்ந்தநிலையில் இருப்பதான பாவனையில் பலரைத் தோல்வியாளர்களாகக் கருதிவிடுகிறோம், நமக்குமேலே இருக்கிறவர்களும் நம்மை அப்படிதான் நினைத்திருப்பார்கள்.

ஆனால் இப்போது, ஆனா ஆவன்னா வராத என் நண்பனில் ஆரம்பித்து, சிறு கல்லூரிகளில் சேர்ந்தவர்கள், சிறு வேலைக்குப் போனவர்கள், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என, நான் (ஒருகணமேனும்) தோல்வியாளர்களாகக் கருதிய பலருடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன், அவர்கள் எல்லாரும் மிக நன்றாக, மிக மகிழ்ச்சியாகதான் இருக்கிறார்கள், அவர்களைத் தோல்வியாளர்களாக நானோ பிறரோ எண்ணுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இதனால், ‘திடீர் டிஸ்மிஸ்’கள் நியாயமாகிவிடாது. அது தனியே பேசவேண்டிய ஒரு விஷயம். நான் சொல்லவருவது, சற்றே விலகி நின்று பார்க்கும்போது, இதுபோன்ற ‘தோல்வி’கள் உண்மையில் சிறு விலகல்களாகமட்டுமே அமைகின்றன, அனைத்தையுமே வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் சறுக்கல்களாக எண்ணிக்கொண்டு வாடியிருப்பது புத்திசாலித்தனமாகாது.

Life is unfair, ஏற்றுக்கொண்டு முன்னே போகவேண்டியதுதான்!

***

என். சொக்கன் …

17 04 2016

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 636,601 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930