மனம் போன போக்கில்

Archive for July 2011

பெங்களூர்த் தெருவோரங்களில் தள்ளுவண்டி பேக்கரிகளில் வேகும் பிஸ்கட்கள். சுடச்சுட வாங்கி ருசிக்கலாம். விலை: 100 கிராம் ரூ 15/-

***

என். சொக்கன் …
31 07 2011

20110731-115653.jpg

20110731-115711.jpg

20110731-115741.jpg

பக்கத்து வீட்டுக்காரர் தன் மகனை மீண்டும் இன்னொரு வருடம் எல்கேஜியிலேயே சேர்க்கிறாராம். ‘ஏன்? மினிமம் ஏஜ் பிரச்னையா?’ என்று கேட்டேன். இல்லையாம். ஆச்சர்யமான தொலைநோக்குடன் ஒரு விநோதமான காரணம் சொன்னார்.

அவரது மூத்த மகன் 2ம் வகுப்பாம், இப்போது இளையவனை (வயதுப்படி) யுகேஜி சேர்த்தால், மூத்தவன் +2 படிக்கையில் இவன் 10ம் வகுப்பு படிப்பானாம். ஒரே நேரத்தில் ரெண்டு பேரையும் கவனித்து(?) பப்ளிக் எக்ஸாம் எழுதவைக்கமுடியாதாம். ஆகவே இளையவனை இன்னொரு வருடம் எல்கேஜி படிக்கவைத்து ‘அட்ஜஸ்ட்’ செய்கிறாராம்.

மூளையில் நிரந்தரமா ரூம் போட்டுவெச்சிருப்பாங்களோ!

***

என். சொக்கன் …
30 07 2011

பெங்களூரில் வசிக்கும் ட்விட்டர் பயனாளிகள் சிலர் (சுமார் 10 பேர்) ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சும்மா ஜாலி கிரிக்கெட் விளையாடி வருகிறோம். ஆர்வம் இருந்தால் நீங்களும் வரலாம் – ட்விட்டர் பயன்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை, கிரிக்கெட் ஆடத் தெரியவேண்டும் என்றுகூட கட்டாயம் இல்லை :>

படம்: நண்பர் சண்முகம் ( http://twitter.com/#!/samugam )

இடம்: Marathahalli, Outer Ring Road, Near JP Morgan Office / CROMA show room
நேரம்: ஞாயிறுதோறும் காலை 7 மணிக்கு ஷார்ப்பாக (நீங்கள் 9:45க்குக்கூட வரலாம் 😉

கூடுதல் தகவல்கள் தேவை என்றால் nchokkan@gmail.comக்கு எழுதுங்கள் – ஜோதியில் ஐக்கியமாகிக்கொள்ளலாம். அனைவரும் வருக – உங்கள் நண்பர்களுக்குச் சொல்லுங்கள்!

கடந்த 3 மாதங்களாக இந்த வலைப்பதிவில் ‘கார்காலம்’ என்ற தொடர்கதையை எழுதிவந்தேன். அதிகப் பேர் படித்திருக்கமாட்டார்கள் – தினமும் 300 பேர் வருகிற ஒரு வலைப்பதிவில் கதை படிக்கிறவர்கள் 30 பேர் இருந்தால் அதிகம் என்பதே உலக எதார்த்தம், அந்தக் கதை ஒன்றிரண்டு page downsல் முடிந்துவிடாமல் பல அத்தியாயங்களுக்குத் தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துவிடும் – கடைசியாக நான் தொடர்கதை படித்துச் சில வருடங்கள் ஆகிவிட்டன எனும்போது, என் தொடர்கதையை அதிகப் பேர் படிக்கவில்லை என்று புலம்புவது நியாயமில்லைதான் :>

ஆனால், அபூர்வமாக (’ன’ இல்லை) இந்தக் கதையைப் படித்த நல்ல உள்ளத்தார் சிலர் வெகுவாகப் பாராட்டினார்கள். பல ட்வீட்கள், உருக்கமான ஈமெயில்கள், ஒரு ப்ளாக் விமர்சனம்கூட வந்தது. குறிப்பாக, ஐடி துறையில் உள்ளவர்கள், அடிக்கடி பயணம் செய்ய நேர்கிறவர்களுக்கு இந்தக் கதை பிடித்திருப்பது புரிந்தது. சொல்லவந்த விஷயத்தை ஒழுங்காகப் பதிவு செய்திருக்கிறேன் என்று புரிந்துகொண்டேன். அதுவே பெருமகிழ்ச்சி!

இந்தக் கதையை ரசித்த நண்பர்கள்கூட ‘ஆரம்பத்துல நல்லா இருந்தது. ஆனா போகப்போகக் கொஞ்சம் இழுவை’ என்றார்கள். உண்மைதான். ஆனால் நான் எழுத நினைத்தது மர்மத் தொடர் அல்ல, இலக்கியத் தொடர் எழுத எனக்குத் தெரியாது. நான் மாதத்தில் 20 நாள்கள்வரை ஆஃபீஸ் டூர் போய்க்கொண்டிருந்த தினங்களைக் கிட்டத்தட்ட டைரி எழுதுவதுமாதிரி பதிவு செய்துவைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆகவே க்ரிஸ்பாகச் செதுக்கி ஒரு வடிவத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று தோன்றாமல் போய்விட்டது. மன்னிக்க.

தவிர, ‘கார்காலம்’ என்ற தலைப்புக்குக் காரணமே அதுதான். சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் சேர்க்கச் செல்லும்போது திரும்பி வருவதாகச் சொல்லும் deadline கார்காலம். ஆனால் பெரும்பாலான காதலன்கள் கார்காலத்தில் திரும்பி வருவது இல்லை, தாமதப்படுத்துகிறார்கள், அதனால் காதலிகள் வாட, பல அருமையான பாக்கள் நமக்குக் கிடைக்கின்றன. இதைக் கொஞ்சம் திருப்பிப்போட்டு, கார்காலத்தில் திரும்பமுடியாத கட்டாயத்தில் உள்ள காதலன்களின் அனுபவத்தை எழுத நினைத்தேன். ரொம்ப நேரம் தொடர்ந்து மழையில் நனைவது எரிச்சலாக இருந்தாலும் அந்த ‘நசநச’ப்பு எல்லா அத்தியாயங்களிலும் இருந்தாகவேண்டும் என்று விரும்பினேன். அச்சுப் பத்திரிகைகள்போல் பக்கக் கட்டாயம் இல்லாமல் வளவளவென்று கதையளக்க முடிந்தது. இணையத்தின் பலங்களில் அது ஒன்று. சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு என் நன்றி.

இந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் வெளியான தினத்தன்று ‘என்னய்யா கதை எழுதறே? கடைசிவரைக்கும் ஹீரோவும் ஹீரோயினும் சந்திச்சுக்கவே இல்லையே’ என்று கூகுள் சாட்டில் அங்கலாய்த்தார் ஒரு நண்பர். ’அது அவசியமா என்ன?’ என்று கேட்டேன். கோபித்துக்கொண்டுவிட்டார். இந்தப் பதிவின்மூலம் அவரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அது நிற்க. நண்பர் ‘வலைமனை’ சுகுமார் கார்காலத்தின் மொத்த அத்தியாயங்களையும் ஒரே கோப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய நன்றி. ஆர்வமுள்ளவர்கள் இந்த நாவலை அமேசான் மற்றும் கூகுள் புக்ஸ் இணையத் தளங்களில் வாங்கிக்கொள்ளலாம்:

http://www.amazon.com/dp/B00OWW3WC0

https://play.google.com/store/books/details?id=0A0VBQAAQBAJ

***

என். சொக்கன் …

28 07 2011

ஃபோனிலிருந்தே நேரடியாகப் பதிவு எழுதும் தொழில்நுட்பம் வந்துவிட்டதாம். ஜாலி! இனி இங்கே ட்வீட்டும் இல்லாத, பதிவும் இல்லாத குறும்பதிவுகளை நிறைய எதிர்பார்க்கலாம், ஜாக்கிரதை :>

***

என். சொக்கன் …
28 07 2011

முன்கதை

1, 2, 3, 4,

5, 6, 7, 8,

9, 10, 11

ஜில்லென்ற அந்த வெண்ணிறத் துண்டை முகத்தில் பரப்பி ஒற்றியெடுத்தபோது கை நிறைய பனிக்கட்டிகளை அள்ளிப் பூசிக்கொண்டாற்போல் இதமாக இருந்தது அரவிந்தனுக்கு.

மும்பையின் ராட்சஸப் போக்குவரத்தில் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்ததில் முகமெல்லாம் எரிந்துகொண்டிருந்தது. ஆகவே இந்தச் செயற்கைப் பனிப்பூச்சை இன்னும் சிறிது நேரம் அனுபவிக்கவேண்டும்போல் ஏக்கமாக இருந்தது அவனுக்கு.

வீட்டுக்குத் திரும்பும் எல்லாப் பயணங்களுமே இன்பமயமானவைதான். இப்படித் தாமதமாகித் திரும்புவதென்றால் இன்னும் விசேஷம்.

ஆனால் விமானத்தினுள் நுழைகிற விநாடிவரை அரவிந்தனுக்கு இந்தப் பயணம் எந்த அளவுக்கு நிச்சயமானது என்பது தெரியவில்லை. கடைசி நேரத்தில் அழைத்து ‘நீ பெங்களூர் போகமுடியாது, உடனடியாக ஆஃபீசுக்குத் திரும்பி வா!’ என்று சொல்லிவிடுவார்களோ என பயந்து விமான நிலையத்திற்கு வந்ததும் செல்பேசியைக்கூட அணைத்துவிட்டான்.

அதன்பிறகு, எல்லாமே அதிவிரைவாக நடப்பதுபோலிருந்தது. ஏற்கெனவே திறந்த டிக்கெட்டை இன்றைய மாலை விமானத்திற்கு மாற்றிக்கொண்டிருந்தான். அதை உறுதி செய்து பாதுகாப்புப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி உட்கார்ந்து மிட்டாய் தின்று காதில் பஞ்சு பொருத்திக்கொண்டு ஜில் துண்டில் முகம் துடைத்துக்கொண்டாகிவிட்டது.

ஆனால் இந்த வேகமெல்லாம் அரவிந்தனுக்குப் போதவில்லை. ஒருவேளை இது கற்பனையாகவோ கனவாகவோ இருந்தாலும்கூட, அது கலைவதற்குள் இந்த விமானம் பெங்களூருக்குச் சென்றுவிடாதா  என்றிருந்தது அவனுக்கு.

இந்தப் பயணம் நேற்றைக்கே அநேகமாக முடிவாகிவிட்டது. நீண்ட விவாதங்களுக்குப்பிறகு இப்போதுள்ள பட்டியலில் எவையெல்லாம் புதிய விஷயங்கள், எவை பழைய பிரச்சனைகள் என்று வகை பிரித்து, எவற்றை எப்போது முடிக்க இயலும் என்று தேதிவாரியாகக் குறிப்பிட்டு உறுதி தந்தபிறகு ‘ஒழிஞ்சு போ’ என்கிற தோரணையில் அரவிந்தனைக் கிளம்ப அனுமதித்தார்கள்.

ஆனால் இதுபோன்ற வாக்குவாதங்கள் எப்போதும் முழுசாக முடிவடைவதில்லை என்பதுதான் அரவிந்தனின் அனுபவம். எந்த விநாடியிலும் எதிர்த்தரப்பில் யாரேனும் ஒருவர் திடீரென்று கோபப்பட்டு ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளையெல்லாம் மொத்தமாகக் கிழித்து வீசிவிட்டு அரவிந்தனை அவனுடைய நாற்காலியிலேயே கட்டிப்போட்டுவிடலாம்.

ஆகவே இதுவரை அவன் செல்விக்கு ஃபோன் செய்யவில்லை. திரும்பி வருவதாகச் சொல்லவில்லை. சுவாமி புண்ணியத்தில் ஒழுங்காக நேரத்தில் ஊர் போய்ச் சேர்ந்தால் ‘உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாமே-ன்னுதான் சொல்லாமலே கிளம்பி வந்துட்டேன்’ என்று சொல்லி அவளைச் சிரிக்கவைக்கலாம்.

விமானம் தனது ஓடுபாதையில் அதிவேகமாக ஓடி ஜிவ்வென்று மேற்கிளம்பியபோது அரவிந்தனுக்கு வயிற்றைப் பிசைகிறாற்போலிருந்தது. வழக்கம்போல் கண்களை இறுக மூடிக்கொண்டான். அந்த இருட்டுக்குள்ளும் ஒரு புன்னகை. ‘இனிமேல் என்னை யாரும் திருப்பி அனுப்பமுடியாது! அட்லீஸ்ட், இப்போதைக்கு.’

ஏனோ ரொம்பக் களைப்பாக இருந்தது. அப்படியே தூங்கிவிடலாம் என்று நினைத்தான் அரவிந்தன். ஆனால் விமானத்தில் சாப்பாடு போடுவார்களே!

அதனால் என்ன? அப்போதைக்கு விழித்துக்கொண்டால் ஆச்சு என்று எண்ணியபடி இருக்கையில் நன்றாகச் சரிந்து அமர்ந்துகொண்டான் அரவிந்தன். கண்கள் மூடியிருந்தாலும் தூங்கமுடியாதபடி காதுகளுக்குள் பிடிவாதமான விமானச் சத்தம் உறுத்தியது.

ஆனால் விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையிலான இந்தத் திரிசங்கு நிலை அவனுக்குப் பிடித்திருந்தது. வானத்தையும் தொடாமல் தரையிலும் இல்லாமல் நடுவே விரைகிற இந்த விமானத்தைப்போல.

சிறிது நேரத்துக்குப்பின் அவனுடைய காதுகளில் மெலிதாக ஒரு சத்தம் கேட்கிறாற்போலிருந்தது. ‘லப் டப்’ என்கிற இதயச் சத்தம்போல் ஏதோ தொடர்ச்சியான இரட்டைக் கிளவிமாதிரி ஒலி.

இன்னும் கூர்ந்து கேட்டபோது, அது ‘லப் டப்’ இல்லை, ‘டொக் டொக்’ … குதிரை ஓடுகிற சத்தம்தான்.

நன்கு அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரில் மொத்தம் நான்கு குதிரைகள் பூட்டியிருக்கிறது. பிரதானமான பகுதியில் அரவிந்தன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறான். அவனுக்குச் சற்று முன்னால் ஒருவன் விரைவாகக் குதிரைகளைச் செலுத்திக்கொண்டிருக்கிறான்.

‘வேகமாகப் போ’ என்கிறான் அரவிந்தன். சாலையின் இருபுறமும் பசுமை அழகு கொஞ்சும் இயற்கைக் காட்சிகள். ஆனால் அவனுக்குதான் எதையும் பார்க்க நேரமில்லை, பொறுமையில்லை. நன்கு சரிந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொள்கிறான். ‘இன்னும் வேகம்’ என்கிறான் சத்தமாக.

‘நம் குதிரைகள் காற்றின் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன’ நான்கு குதிரைகளும் அவற்றின் கால்கள் தரையில் படுவதுகூட தெரியாத வேகத்தில் விரைந்துகொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் அந்த ஓட்டுனர். ‘இதற்குமேல் வேகம் போவது சிரமம்.’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது’ என்கிறான் அரவிந்தன். ‘எனக்குத் தாமதமாகிவிட்டது, வேகமாகப் போ’ என்றபடி இல்லாத சவுக்கைக் காற்றில் முடுக்கிக் காட்டுகிறான்.

‘உங்கள் தாமதத்துக்கு நான் பொறுப்பாகமுடியாது’ என்கிறார் அவர், ‘தயவுசெய்து உங்களுடைய கவலைகளை என்மீது திணிக்கப்பார்க்காதீர்கள். நான் என் குதிரைகளை இதற்குமேல் வதைக்கமாட்டேன்.’

அவர் சொல்வதைக் கேட்டதும் ஆத்திரத்தில் அரவிந்தனுக்குக் கண்கள் சிவக்கின்றன. ‘என்ன தைரியம்?’ என்றபடி இடையிலிருந்து வாளை உருவுகிறான். ஆனால், அவரைக் கொன்றுவிட்டால் ஆளில்லாத ரதத்தில் பயணம் செய்வது எப்படி என்று நினைத்ததும் கோபம் தானாகத் தணிகிறது.

‘தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்’ என்று குழைகிறான் அரவிந்தன். ‘கார்காலத்துக்குள் திரும்பி வருவதாக அவளிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இப்போதே ரொம்பத் தாமதமாகிவிட்டது.’

இப்படி அவன் சொல்லிமுடிப்பதற்குள் சடசடவென்று பெருமழை பெய்யத் தொடங்குகிறது. ‘ஐயோ, கார்காலம்’ என்று அலறுகிறான் அரவிந்தன்.

‘கார்காலம் தொடங்கி ரொம்ப நாளாகிவிட்டது’ என்று சிரிக்கிறார் அவர். ‘ஆனாலும் நீங்கள் ரொம்பத் தாமதம்.’

‘ஆமாம், ஆமாம்’ என்று அவசரமாக ஒப்புக்கொண்டான் அரவிந்தன். ‘எல்லாவற்றிலும் நான் தாமதம்தான். இப்போது நீங்கள் உதவினால்தான் நான் கார்காலம் முடிவதற்குள்ளாவது வீட்டுக்குச் சென்று சேர முடியும்.’

‘பார்க்கலாம்’ என்று ஒட்டாமல் பேசுகிறார் ரத சாரதி. ‘இதெல்லாம் நீங்கள் முன்பே யோசித்திருக்கவேண்டும்.’

‘ரொம்ப யோசித்தாகிவிட்டது’ என்று சலித்துக்கொள்கிறான் அரவிந்தன். ‘ஒரு யுத்தம் தொடங்கிவிட்டால் அது எப்போது முடியும் என்று யார்தான் சொல்லக்கூடும்?’

‘அப்படியானால், அதற்குமுன்பே, கார்காலத்தில் திரும்பி வருகிறேன் என்று சத்தியம் செய்வதற்குமுன்பே யோசித்திருக்கவேண்டும்’ என்று அவர் சொன்னதும், அரவிந்தன் சட்டென்று மௌனமானான்.

‘ஒரு விஷயம் சொல்லுங்கள், இப்போது நீங்கள் வீடு திரும்பத் துடிப்பது உங்கள் காதலியைப் பார்க்கிற ஆசையிலா? அல்லது சொன்ன வாக்கை நிறைவேற்றியாகவேண்டும் என்கிற துடிப்பிலா?’

அவருடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நகம் கடித்துக்கொண்டிருக்கிறான் அரவிந்தன். மழையில் அவனது தேகம் முழுதும் நனைந்துகொண்டிருக்கிறது. இதே மழையைப் பார்த்தபடி செல்வி தனிமையில் புலம்பிக்கொண்டிருப்பாள் என்று நினைக்கையில் உடல்மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினாற்போலிருக்கிறது.

அந்த விநாடியில், பூமி தொடாமல் ஓடிக்கொண்டிருந்த குதிரைகள் திடுமென்று தரையில் மோதுகின்றன. அதிர்ச்சியில் அரவிந்தனுக்குத் தூக்கிவாரிப்போடுகிறது.

‘பெங்களூர் சர்வதேச விமான நிலையம் உங்களை வரவேற்கிறது’ என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அறிவிக்கிறாள் ஒருத்தி, வெளியே என்ன வெப்ப நிலை என்று அவள் தசமத் துல்லியத்துடன் தெரிவித்துக்கொண்டிருக்க, ஜன்னலைத் திறந்து பார்த்த அரவிந்தன் தீவிரமாகப் பெய்துகொண்டிருந்த மழையின் வேகத்தில் திகைத்துப்போனான்.

விமானம் சில நிமிடங்களுக்கு ஓடுபாதையில் விரைவாக ஓடிப் பின்னர் வேகம் குறைந்து நகர்ந்தது. கண்ணாடிமயமான விமான நிலையக் கட்டடத்திற்குப் பாதுகாப்பான தூரத்தில் அது நின்றதும் படிகள் பொருத்தப்பட்டன.

படிகளில் இறங்கி, அங்கே காத்திருந்த சிற்றுந்தில் ஏறிக்கொள்வதற்குள் அரவிந்தன் நன்றாக நனைந்துவிட்டான். ஆனால் இந்த மழை வெந்நீராக இல்லாமல் குளிர்வாகத் தாலாட்டியது.

இரண்டு நிமிடச் சிற்றுந்துப் பயணத்தின் முடிவில் விமான நிலையக் கட்டிட வாசலில் இறங்கிக்கொண்டான் அரவிந்தன். இப்போது ஆட்டோவோ டாக்ஸியோ பிடிப்பதற்காக வெளியே சென்றால் மீண்டும் நனைய நேரிடும்.

‘நனையலாம், என்ன போச்சு?’, என்றபடி வெளியேறி வந்தான் அரவிந்தன். ஆசையாகத் தழுவும் மழைத்துளிகளை அலட்சியப்படுத்தியபடி டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி நடந்தான். ஆனால் இந்த மழையில் அங்கே ஒரு வண்டிகூட இருப்பதாகத் தெரியவில்லை.

ஓரமாக இருந்த சிறு கட்டிடத்தின் மறைவில் ஒதுங்கிக்கொண்டபடி வீடு செல்லும் அடுத்த ரதத்துக்காகக் காத்திருக்கிறான் அரவிந்தன். மழை அடித்துப் பெய்துகொண்டிருக்கிறது.

(முற்றும்)

***

என். சொக்கன் …

18 07 2011

முன்கதை

1, 2, 3, 4, 5

6, 7, 8, 9, 10

ஞாயிற்றுக்கிழமை காலை செல்வியைத் தொலைபேசியில் அழைத்தபோது அவள் ஓரளவு உற்சாகமான மனோநிலையில் இருப்பதாகவே தோன்றியது. ‘ஜுரம் போயே போச்’ என்றாள் சிரித்து.

‘அப்புறம்? ரெண்டு நாளா என்ன செஞ்சே?’ செல்பேசியைத் தோளிடுக்கில் பொருத்திக்கொண்டிருந்த அரவிந்தன் ரொட்டியில் ஜாம் தடவியபடி கேட்டான்.

‘எப்பவும்போல சும்மாதான் இருக்கேன்’ என்றாள் அவள். ‘உனக்குதான் சனி, ஞாயிறு விசேஷம். நீ ஊர்ல இல்லாட்டி எனக்கு எல்லா நாளும் ஒரேமாதிரிதான்.’

‘நானும் எங்கயும் வெளியே போகலை’ என்றான் அரவிந்தன் ‘ரெண்டு நாளாக் கண்டபடி தூங்கறேன்.’

‘நாளைக்கு மறுபடி ஆஃபீஸா?’ என்ற செல்வி, திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் ‘ஹேய், இன்னிக்கு ரொம்ப போரடிக்குது-ன்னு நம்ம கல்யாண வீடியோவை எடுத்துப் பார்த்துகிட்டிருந்தேன்’ என்றாள்.

‘கல்யாண வீடியோவா? மை காட்!’ நெஞ்சைப் பிடித்துக்கொண்டான் அவன். ‘இதுவரைக்கும் நூத்தி எழுபத்தெட்டரை தடவை பார்த்துட்டே. இன்னும் உனக்கு அது சலிக்கலையா?’

‘என்னப்பா  பண்றது? எனக்குச் சோகப் படம்ன்னா ரொம்பப் பிடிக்கும்’ என்று கிண்டலாகச் சொன்னவள் ‘சும்மா சொல்லக்கூடாது. கல்யாணத்தின்போது உனக்குத் தொப்பை இல்லவே இல்லை’ என்றாள்.

இதற்கு அரவிந்தன் பதில் சொல்வதற்குள் ஏதோ கோளாறில் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு ஒன்றிரண்டு முறை முயன்றும் கிடைக்கவே இல்லை.

நேற்று செல்வியுடன் பேசியதை அசைபோட்டுக்கொண்டிருந்த அரவிந்தன் அனிச்சையாகத் தனது தொப்பையைத் தடவியபடியிருந்தான். திருமணமான புதிதில் தன்னுடைய சாப்பாடு எப்படியிருக்குமோ என்று நிச்சயமில்லாத செல்வி எல்லாவற்றிலும் எண்ணெயையும் நெய்யையும் தூக்கலாக ஊற்றி வளர்த்த தொப்பை.

அதன்பிறகு வெண்ணெய்ச் சுவைக்கு நாக்கு நன்றாகப் பழகிக்கொண்டது. பனீரும் பாலாடைக்கட்டியுமாகத் தினந்தோறும் தின்றதில் அரவிந்தனுடைய தனிப்பட்ட அடையாளமாகச் சொல்லுமளவு தொப்பை பெருத்துவிட்டது.

இப்போதுதான் சில நாள்களாக வீட்டினுள் ட்ரெட் மில்லில் நடைப் பயிற்சி செய்கிறான். மிஞ்சிப்போனால் மாதத்துக்குக் கால் கிலோவோ அரைக் கிலோவோ குறைகிறது. அதுவும் ஒழுங்காக வயிற்றைக் கட்டினால்தான்.

ஆனால் வெளியூர்ப் பயணம் என்று இப்படிக் கிளம்பிவிட்டால் அதற்கும் வழியில்லாமல்போய்விடுகிறது. வெளியே எங்கு செல்வதானாலும் டாக்ஸி அல்லது ஆட்டோ. ஆகவே சாதாரணமாக நடப்பதற்குக்கூட வாய்ப்பில்லை. இதற்கு நேரெதிராக, சாப்பிடுவதெல்லாம் கொழுப்பு நிறை உணவுகள் என்பதால் ஒவ்வொரு நிமிடமும் உடம்பு பெருத்தபடியிருக்கிறது.

மேஜைமேலிருந்த பாட்டிலில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தான் அரவிந்தன். அடியில் கொஞ்சூண்டு இருந்தது. லேசாகத் தொண்டையைமட்டும் நனைத்துக்கொண்டு மீண்டும் வேலையில் மூழ்கினான்.

இங்கே வந்த தினத்திலிருந்து புதிதாக இவர்கள் அள்ளிப்போட்டிருக்கிற எல்லாத் தேவைகளையும் பட்டியலிட்டு அவற்றில் எது முக்கியம், எது அவசரம், எது அவசர முக்கியம் என்று வகைப்படுத்தும்படி உத்தரவு. அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு எதை எப்போது செய்வது என்று முடிவெடுப்பார்களாம்.

புண்ணியவான்கள் எதையாவது சீக்கிரம் செய்து தொலைக்கட்டும். இப்படிக் காலத்துக்கும் இங்கேயே தங்கிக்கொண்டிருக்க அவனால் முடியாது.

இதுபோன்ற தனியார் நிறுவனங்களுக்கெல்லாம் பிறக்கும்போதே இரட்டை நாக்குதான். தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஒரு நாக்கு, வெளியாள்களிடம் பேசுகையில் வேறொரு நாக்கு. இவர்களாக ஒரு வேலையைச் செய்யும்போது அதற்குக் கால நேர வர்த்தமானக் கட்டுப்பாடுகளெல்லாம் அவசியப்படாது. புராதனம் படிந்த அரசாங்க அலுவலகங்களைப்போல சின்னச் சின்ன வேலைகளைக்கூட இவர்கள் பல மாதங்களுக்கு இழுத்தடித்துச் செய்துகொண்டிருக்கிற ஆமை வேகத்தைப் பார்க்கிறபோது அவனுக்கு ஆத்திரமாக வரும்.

ஆனால் அதே வேலையை வெளியாள் ஒருவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தால் இத்தனை நாள்களுக்குள் இந்தத் தரத்தில் முடித்தாகவேண்டும் என்று அதட்டுவார்கள். நியாயம்தான். ஆனால், அந்த வேலைக்கு அவர்கள் தருகிற கால அவகாசம்தான் மகா அநியாயமாக இருக்கும் – பத்து நாளில் முடிகிற வேலையை மூன்றாவது நாள் சாயங்காலம் முடித்தாகவேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பார்கள். ‘உன்னால் முடியாதென்றால், நான் வேறு ஆள் பார்த்துக்கொள்கிறேன்’ என்று திமிரோடு மிரட்டுவார்கள்.

வேறு எந்த ஆள் வந்தாலும் அந்த வேலையை மூன்று நாள்களுக்குள் முடிக்கமுடியாது என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தாலும், இதுபோன்ற பெருந்தலை வாடிக்கையாளர்களை வேறொரு கம்பெனியிடம் இழந்துவிடக்கூடாதே, அதற்காக ‘எட்டு நாள்ன்னா கொஞ்சம் முயற்சி பண்ணலாம் சார்’ என்று அசிங்கமாக பேரம் பேசிக் கெஞ்சவேண்டியிருக்கும்.

கடைசியில், பத்து நாள் வேலையை ஆறு நாளில் முடித்தாகவேண்டும் என்று முடிவாகும். அதற்கான காசை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு விற்பனையாளர்கள் பறந்துவிட, கடைசியில் மாட்டிக்கொள்வது அரவிந்தனைப்போன்றவர்கள்தான். இப்படிச் செய்து செய்துதான் இந்தத் துறையில் எட்டு மணி நேர வேலை என்பதே வழக்கொழிந்துவிட்டது.

இத்தனை வருடங்களில் ராத்திரி பகலெல்லாம் அர்த்தமிழந்துவிட்ட இந்த வேலைக்கு அரவிந்தன் நன்றாகவே பழகிக்கொண்டிருந்தான். என்றாலும், இப்படி வாடிக்கையாளர்களின் அலுவலகங்களில் அமர்ந்திருக்கிறபோது, சுற்றியிருக்கிற எல்லோரும் ஐந்து மணிக்கு ஸ்விட்ச் போட்டாற்போல் எழுந்து வீட்டுக்குச் சென்றுவிடுகையில் இவன்மட்டும் தனியே உட்கார்ந்து குப்பை கொட்டிக்கொண்டிருப்பது சலிப்பாக இருந்தது.

தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மேஜையின் அறைகளைத் திறந்து பார்த்தான் அரவிந்தன். ஒன்றில் சில உதிரித் தாள்களும் ஒரு நீல நிற பேப்பர் வெயிட்டும் இருந்தது. இன்னொன்று அழுந்த மூடியிருந்தது. அதை வேகமாகத் திறந்தபோது ஒரு நிழற்படம் விடுபட்டுச் சரிந்துவந்தது.

இனம்புரியாத ஆர்வத்துடன் அதைக் கையிலெடுத்தான் அரவிந்தன். அழகான ஒரு பெண்ணின் புகைப்படம் அது. அவன் எப்போதும் தனது பயணப் பெட்டியில் வைத்திருக்கும் செல்வியின் புகைப்படத்தைப்போலவே கச்சிதமாக லாமினேட் செய்யப்பட்டு மேஜையின்மேல் நிற்கவைக்கும்படியான அமைப்புடன் கம்பீரமாக இருந்தது.

புகைப்படத்திலிருந்த அந்தப் பெண்ணை அவன் கண்டிப்பாக இதற்குமுன் பார்த்ததில்லை. என்றாலும், ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பரிச்சயமானவளாகத் தோன்றினாள் அவள். சிரிக்கும் அந்தக் கண்களும் கூர் மூக்கும் அலைபாயவிட்டிருக்கும் தலைமுடியும் சந்தன நிறச் சேலையும் அவளை இன்னமும் பலமடங்கு அழகாகக் காட்டின. அந்தப் புகைப்படத்தை எடுத்தவன் ஒரு மகா கலைஞனாகதான் இருக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றியது.

யார் இவள்? இதற்குமுன் இந்த இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மனைவியாகவோ, காதலியாகவோ இருப்பாளா? யோசனையுடன் அந்தப் புகைப்படத்தை மேஜைமீது வைத்தான். ‘இது என் இடம்’ என்று அறிவிப்பதுபோன்ற உரிமையுடன் சரியாகப் பொருந்தி நின்றுகொண்டது.

அந்தப் புகைப்படத்தையே சில விநாடிகளுக்குக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். அதிலிருக்கும் பெண் யார் என்கிற ஆரம்பக் குறுகுறுப்பு குறைந்து இப்போது வேறுவிதமான கேள்விகள் அல்லது ஊகங்கள் தோன்றியிருந்தன.

திடீரென்று அந்தத் தாற்காலிக இருக்கைக்கு மிகவும் நெருக்கமானவனாகத் தன்னை உணர்ந்தான் அரவிந்தன். தனக்குமுன் அதில் உட்கார்ந்திருந்தவர் யாராக இருந்தாலும், அவர் அனுபவித்திருக்கக்கூடிய உணர்வுகள் இப்போது கை மாறித் தன்னிடம் வந்துவிட்டதுபோல் தோன்றியது. ஒருவேளை இந்தப் புகைப்படத்தில்தான் அவர் தனது மனத்தைக் கொட்டிவைத்திருந்தாரா? இடம் மாறிச் செல்லும்போது இங்கேயே விட்டுச் சென்றுவிட்டாரா?

உடனடியாக அவரைக் கண்டுபிடித்து இந்த ஃபோட்டோவை அவரிடம் கொடுத்துவிடவேண்டும்போல் துடிப்பாக இருந்தது அரவிந்தனுக்கு. ‘இந்தாய்யா உன் பொருள்’ என்று பாரத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அந்த இடத்தில் செல்வியின் புகைப்படத்தை வைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான் அவன்.

ஆனால், செல்வியின் புகைப்படம் எதற்கு இங்கே இருக்கவேண்டும்? இது என்னுடைய இடம் இல்லை. நான் நாளைக்கோ அதற்கு மறுநாளோ பெங்களூருக்குப் பறந்துவிடப்போகிறேன். அதன்பிறகு என் அலுவலகத்தில் என் சொந்த மேஜையில் செல்வியின் படத்தை வைத்துக்கொண்டால் போதாதா?

அந்தக் காட்சி அரவிந்தனின் நெஞ்சு முழுதும் நிரம்பியது. இப்போதைக்கு அது கற்பனைதான் என்பதை நினைக்கக்கூட விரும்பாதவனாக அதைப் பெரிதாக்கி, விரிவாக்கி, பின்னர் அதனுள் தாவிக் குதித்துவிடவேண்டும் என்று ஆவலோடு எண்ணத் தொடங்கிவிட்டான். லேசாக மூச்சுத் திணறலானது அவனுக்கு.

சட்டென்று மேஜைமேலிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்து இருந்த இடத்திலேயே திரும்ப வைத்துவிட்டான் அரவிந்தன். இந்த விநாடியே ஊருக்குத் திரும்பிவிடவேண்டும்போல் ஒரு படபடப்பு தொடங்கியது.

கணினியை மூடிப் பைக்குள் வைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தபடி செல்பேசியில் வீட்டு எண்ணை முயன்றான் அரவிந்தன். நினைத்த மாத்திரத்தில் இப்படித் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதுபோல மனிதர்களும் நொடிக்கு நொடி ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் பறந்து சென்று திரும்ப முடிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தபோது அந்தச் சிந்தனையின் அபத்தப் பின்னணி புரிந்தும் ஆனந்தமாக இருந்தது.

‘இந்தத் தடத்தில் எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் உள்ளன!’ என்றது அவனுடைய செல்பேசி.

(தொடரும்)

***

என். சொக்கன் …

11 07 2011

வேர்ட்ப்ரெஸ்ஸில் ஒரு புது வூடு கட்டியிருக்கிறேன். ஒருமுறை எட்டிப்பார்த்தால் சந்தோஷப்படுவேன்.

வீட்டைப்பற்றி ஓர் அறிமுகம்: http://365paa.wordpress.com/about/

முகவரி: http://365paa.wordpress.com/

***
என். சொக்கன் …
08 07 2011

முன்கதை

அத்தியாயங்கள்:

1, 2, 3

4, 5, 6

7, 8, 9

அரவிந்தன் அறைக்குத் திரும்பும்போது நள்ளிரவு தாண்டியிருந்தது. படுக்கைக்கு அருகிலிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு திகைத்தவன் பிறகு தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். ‘நாளைக்குச் சனிக்கிழமைதானே? விருப்பப்படி தூங்கலாம், லேட்டா எழுந்திருக்கலாம். எந்தப் பயலும் கேள்வி கேட்கமுடியாது!’

உடை மாற்றக்கூடத் தோன்றாமல் படுக்கையில் விழுந்தான். கைக்கடிகாரத்தைக் கழற்றிக் குறு மேஜைமீது வைத்தபோது அங்கிருந்த செல்வியின் புகைப்படம் கீழே விழுந்தது. நிமிர்த்திவைத்தான்.

அந்த நிழற்படத்தில் புகைப் பின்னணியில் செல்வி மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு ரொம்பப் பிடித்த புகைப்படம் அது. தேனிலவுக்குக் கொடைக்கானல் சென்றபோது எடுத்தது.

செல்விக்கு இந்தப் புகைப்படம் அவ்வளவாகப் பிடிக்காது. ‘பல்லெல்லாம் தெரியுது. வெவ்வெவ்வே’ என்பாள் கிண்டலாக.

இதே பயணத்தின்போது எடுத்த வேறொரு படம்தான் அவளுக்குப் பிடித்தமானது. ஆளரவமில்லாத ஓர் ஒற்றையடிப் பாதையில் புகைப்படக் கருவியின் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கொண்டு அவர்கள் தங்களைத் தாங்களே எடுத்துக்கொண்ட படம் அது.

இத்தனைக்கும் அதில் விசேஷமாக எதுவுமே இல்லை. ஒருவரையொருவர் அணைத்துக்கொள்வதுகூட இல்லை, பிரமாதமான சிரிப்பு இல்லை, இருவர் முகத்திலும் லேசான புன்னகை, துணையின் அருகே நெருக்கமாக நிற்கிற புதுப் பெருமிதம், அவ்வளவுதான்.

ஆனால் எதனாலோ செல்விக்கு அந்தப் படம் விருப்பமானது. கொடைக்கானலில் அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட மற்ற படங்கள் எல்லாம் அவ்வப்போது அந்தந்த இடங்களில் இருந்த மூன்றாம் நபர்கள் யார் யாரோ எடுத்துக்கொடுத்தவை. அப்படியின்றித் தனிமையின் ருசியும் இந்தப் படத்தில் கலந்திருக்கிறது என்பாள் அவள்.

மேஜைமேலிருந்த செல்வியின் படத்தைக் கையிலெடுத்துப் பார்த்தான் அரவிந்தன். சென்ற விநாடியில்தான் பிடித்ததைப்போன்ற ஒரு புத்துணர்ச்சி அதில் தெரிந்தது.

இடையே ஒன்றிரண்டு வருடங்கள் கழிந்திருந்தாலும் இந்தப் படத்திலிருக்கும் செல்விக்கும் இப்போதைய செல்விக்கும் பெரிதாக வித்தியாசங்கள் எதுவும் இல்லை. அந்தச் சிரிப்புதான் அவளை எப்போதும் புதிதாக வைத்திருக்கிறதுபோல என்று நினைத்துக்கொண்டான் அரவிந்தன்.

அந்தப் படத்தைப் பார்க்கப் பார்க்க அதன் பின்னணியிலிருக்கிற புகை நிஜமாகவே அவனைச் சுற்றிப் படர்வதுபோல் தோன்றியது. கொஞ்சம் முயன்றால் அந்தப் பயணத்தின் ஒவ்வொரு விநாடியையும் தெள்ளத்தெளிவாக நினைவுக்குக் கொண்டுவந்துவிடமுடியும் என்று நினைத்தான் அவன்.

ஏனெனில், அதன்பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து எங்கும் பயணம் சென்றதில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவனுக்கு வாய்ப்பதெல்லாம் இதுபோன்ற தனிமைப் பயணங்கள்தான். இந்தமுறை பெங்களூர் திரும்பியதும் கண்டிப்பாகச் செல்வியுடன் எங்காவது தொலைந்துபோய்விடவேண்டும் என்று உறுதியாக நினைத்துக்கொண்டான் அரவிந்தன்.

ஆனால் அப்படியொரு பயணம் இதுவரையிலான இழப்புகளை ஈடுகட்டுமா என்றுதான் தெரியவில்லை.

ஃபோட்டோவை அதனிடத்தில் வைத்துவிட்டுக் கைகளைத் தலைக்குப் பின்னே கோர்த்தபடி படுத்துக்கொண்டான் அரவிந்தன். வேலை, வேலை என்று நான் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கையில், வேறு வழியில்லாமல் கூடவே ஓடுகிறவள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாளோ? அவளுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்று கொஞ்சம் நின்று விசாரித்திருக்கலாம்.

இன்று மதியம் ஞானேஷ்வர் திடுதிப்பென்று விவாகரத்தைப்பற்றிப் பேசியது அவனுக்குள் தாளாத ஓர் அதிர்வை உண்டாக்கியிருந்தது. ஆரம்பத்தில் பலமாக இருந்த அதிர்வுகள் இப்போது ஓரளவு தணிந்திருக்கின்றன. என்றாலும் உள்ளுக்குள் அடிபட்ட பறவைபோல் ஏதோ படபடத்தபடியிருந்தது.

தன்னுடன் பணிபுரிகிற மற்றவர்கள் இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கிறார்களோ தெரியவில்லை என்று வியந்துகொண்டான் அரவிந்தன். அலுவல் வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் சரிவிகிதத்தில் பிரித்து இரண்டுக்கும் உரிய முக்கியத்துவம் தருவது எப்படி? முதலில், அப்படியொரு சமநிலை சாத்தியம்தானா?

திருமணமானதிலிருந்து, இப்படிப் பிரச்சனை வந்தபோதெல்லாம் (சில சமயங்களில் பிரச்சனையே வராதபோதும்கூட) தான் தொடர்ந்து ஒரே பக்கம்தான் சாய்ந்துவந்திருக்கிறோம் என்று கசப்புடன் நினைத்துக்கொண்டான் அரவிந்தன். வேறுவிதமாக இதைக் கையாளமுடியுமா என்றுகூட யோசித்ததில்லை. ‘வேலைதான் முக்கியம்’  என்கிற போர்வையில், செல்வியின் பெருந்தன்மையைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்திவந்திருக்கிறேன்.

இதைப்பற்றியெல்லாம் செல்வி யோசித்திருப்பாளா என்று தெரியவில்லை. அடக்கிவைக்கப்பட்டவர்களின் கோணம் தங்களையறியாமல் அடக்குமுறை செய்கிறவர்களுக்குக்கூடப் புரியாதுதான்.

அரவிந்தனுக்குச் சிறுவயதில் படித்த கதையொன்று நினைவுக்கு வந்தது.

ஒரு பெரிய கடலுக்கு நடுவே சில சின்னத் தீவுகள், அல்லது மண் திட்டுகள். அந்தச் சிறு நிலப்பகுதி தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டிருந்தது. கூடவே கடல் நீரும் குறைய, ஒருகட்டத்தில் கடலுக்கு நடுவே தீவுகள் என்பதுபோய் தீவுகளுக்கு நடுவேதான் அங்கும் இங்கும் கடல் என்கிற நிலைமை உலகமெங்கும் உருவாகிவிட்டதாம்.

இப்படியே போனால் உலகத்தில் கடலே இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள் தனது மந்திரக் கோலை உயர்த்தினாராம். உடனே நிலப்பகுதி வளர்வதும் கடல் பகுதி தேய்வதும் குறைந்துவிட்டதாம். நாம் இப்போது பார்க்கிற நாடுகளெல்லாம், அப்படி உருவானவைதானாம்.

மூன்றாம் வகுப்பிலோ அல்லது அதற்குமுன்போ கேட்ட கதை. விதவிதமான முக பாவனைகளுடன் நீட்டி முழக்கிக் கதை சொன்ன டீச்சரைக்கூட இன்னும் பளிச்சென்று நினைவிருக்கிறது.

கடல் தேய்ந்து நிலம் வளர்ந்து எல்லாமே தனது விருப்பத்திற்கு எதிராகச் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கும் கடவுளின் மனோநிலையில்தான் இப்போது அவன் இருந்தான். உடனடியாக ஏதாவது செய்யவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகிவிடும்.

தனக்கான மந்திரக்கோலை எங்கே தேடுவது என்று எண்ணுவதற்குள், அரவிந்தனுக்குத் தூக்கம் வந்துவிட்டது.

(தொடரும்)

***

என். சொக்கன் …

06 07 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,575 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

July 2011
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031