மனம் போன போக்கில்

Archive for July 2009

ஏ. ஆர். ரஹ்மானின் ‘ரோஜா’ படம் வெளியானபோது, நான் பத்தாங்கிளாஸ் முடித்திருந்தேன்.

அன்றைய சுதந்தர தின விடுமுறையை (அல்லது விடுமுறை தினச் சுதந்தரத்தை) ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடிக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். திடீரென்று சில பையன்கள் விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுப் புறப்பட்டார்கள்.

‘என்னாச்சுடா? எல்லாரும் எங்கே கிளம்பிட்டீங்க?’

’டிவியில புதுப்பாடல் ப்ரொக்ராமுக்கு லேட்டாச்சு’

அப்போது சாடிலைட் சானல்கள் இந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்காத நேரம். புதுப்படப் பாடல்களைப் பார்க்கவேண்டுமென்றால் எப்போதாவது தூர்தர்ஷன் ஒளிபரப்புகிற நிகழ்ச்சிகள்தான் ஒரே கதி.

ஆனால், சுவாரஸ்யமான கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு யாராவது சினிமாப் பாட்டுப் பார்க்கப் போவார்களா? அதில் அப்படி என்ன விசேஷம்?

’ரோஜான்னு ஒரு புதுப்படம் வந்திருக்கு, அதில ஒரு பாட்டு தூள் கிளப்புது, தெரியுமா?’

அது எந்தப் பாட்டு, முதல் வரி என்ன, ஆண் குரலா, பெண் குரலா, டூயட்டா, யார் பாடியது, யார் எழுதியது, யார் நடித்தது என்பதுபோன்ற விவரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பாட்டையும்கூட அவர்கள் கேட்டிருக்கவில்லை, ஆனால் அது பிரமாதமாக இருக்கிறது என்பதைமட்டும் எப்படியோ கேள்விப்பட்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில், மைதானம் காலியாகிவிட்டது. நானும் வேறு வழியில்லாமல் வீடு போய்ச் சேர்ந்தேன், டிவி முன்னால் உட்கார்ந்தேன்.

அன்றைய ‘சிறப்புப் புதுப்பாடல்’ நிகழ்ச்சியில் கடைசிப் பாடலாக, ‘சின்னச் சின்ன ஆசை’ ஒளிபரப்பானது என்று ஞாபகம். இருள் சூழ்ந்த காட்சியமைப்பில் லேசாக ஒளி பரவ, அதற்குமுன்னால் வெள்ளித்திரையிலோ, சின்னத்திரையிலோ எப்போதும் கேட்டிருக்காத ஒரு பின்னணி இசை மயக்கியது.

அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெயர் ஏ. ஆர். ரஹ்மான் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த மெட்டும், இசைக் கோர்ப்பும், பாடல் பதிவு செய்யப்பட்டிருந்த விதமும், இடையில் வந்த ‘ஏலேலோ’ ஹம்மிங்கூட ரொம்ப வித்தியாசமாக இருந்தது.

பாடலின் முடிவில், ‘நல்லாதான் இருக்கு. ஆனா, …’ என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த ‘நல்லாதான் இருக்கு’க்குக் காரணம், ஏ. ஆர். ரஹ்மானின் திறமை. ‘ஆனா, …’வுக்குக் காரணம் என்னுடைய இளையராஜா பித்து, அதற்குக் காரணம் கமலஹாசன்.

அப்போது நானும் என் நண்பர் குழாமும் கமலஹாசனின் மிகப் பெரிய ரசிகர்களாக இருந்தோம். அவருடைய படங்கள் ஒவ்வொன்றையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவதுதான் எங்களுடைய முக்கியமான வாழ்க்கை லட்சியமாகத் தோன்றியது.

அந்தக் காலகட்டத்தில், கமலஹாசன் நடிக்கும் படங்களுக்கெல்லாம் கண்டிப்பாக இளையராஜாதான் இசையமைப்பார். இதனால், சீக்கிரத்தில் அவரும் எங்களுக்கு நெருக்கமாகிவிட்டார். கமல் நடிக்காத ராஜா படங்களின் பாடல்களையும் விரும்பி ரசிக்க ஆரம்பித்திருந்தோம். ‘நம்ம மொட்டை’ என்கிற இயல்பான நெருக்கம் வந்திருந்தது.

அப்போதைய சூழ்நிலையில், தமிழ்த் திரையுலகில் இளையராஜாவை மிஞ்சக்கூடிய, அவருடைய தனித்துவமான ஆதிக்கத்தை வீழ்த்தக்கூடிய இன்னோர் இசையமைப்பாளர் வரமுடியும் என்றுகூட யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகளில் பலர் அதற்கு முயற்சி செய்து தோற்றுப்போயிருந்தார்கள்.

அதனால்தான், ரஹ்மானின் அந்த முதல் பாடல் எப்பேர்ப்பட்டதாக இருந்தபோதும், ‘ஆனா, …’ என்று இழுக்கத் தோன்றியது. ராஜாவின் கோட்டையில் குண்டு வீச எத்தனையோ பேர் வந்துபோய்விட்டார்கள், அதுபோல் இவரும் இன்னொருவர் என்றுதான் நினைத்துக்கொண்டோம்.

எங்களுடைய கருத்தை உறுதிப்படுத்துவதுபோல, எங்கள் ‘தலைவர்’ கமலஹாசன் ஏ. ஆர். ரஹ்மானைச் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. ‘ரோஜா’ பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற அதே நேரத்தில் ’தேவர் மகன்’ல் இளையராஜா அசத்தினார், ‘நம்ம ஆளை யாராலயும் எதுவும் செய்யமுடியாது’ என்று நாங்கள் நிம்மதியடைந்தோம்.

இதற்குள், எங்களுடைய பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் தொடங்கியிருந்தன. அனைத்து ப்ளஸ்டூ புத்தகங்களையும் ஒன்றரை வருடம் முன்பாகவே உருப்போட ஆரம்பித்திருந்தோம். இந்தப் பரபரப்பில், கமலஹாசன், இளையராஜா, ரஹ்மான் எல்லோரும் மறந்துபோனார்கள்.

நாங்கள் புத்தகங்களுக்குள் மூழ்கியிருந்த நேரத்தில், ஏ. ஆர். ரஹ்மானின் கிராஃப் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. ’ரோஜா’வின் வெற்றியைத் தொடர்ந்து அவசரகதியில் படங்களை ஒப்புக்கொள்ளாமல் மிக நிதானமாகச் செயல்பட்டுத் தனது புதுமையான ஒலிக்குத் தமிழகத்தைப் பழக்கப்படுத்தியிருந்தார் அவர். பெரும்பாலான பிரபல டைரக்டர்கள் அவரோடு வேலை செய்யவேண்டும் என்று ரஹ்மான் வீட்டு வாசலில் க்யூ நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.

பின்னர் நான் கல்லூரிக்குச் சென்றபோது, அங்கே வகுப்புகளிலும் சரி, விடுதி அறைகளிலும் சரி, ராஜா கட்சி, ரஹ்மான் கட்சி என்று இரண்டு பெரிய பிரிவுகள் உருவாகியிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.

ராஜா கோஷ்டியினர், அவருடைய நூற்றுக்கணக்கான இசைத் தொகுதிகளைத் தேடிப் பிடித்து வாங்கிவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இந்தச் சேகரிப்பிலிருந்து வித்தியாசமான ஒரு பாடலைக் கேட்டுச் சிலாகிப்பது அவர்களுடைய பாணி.

ரஹ்மான் கோஷ்டி, இதற்கு நேர் எதிராக இருந்தது. அவர்களுக்குக் ‘கடந்த காலம்’ முக்கியமாகத் தோன்றவில்லை. இதோ, ரஹ்மான் அடுத்து என்ன செய்கிறார், யார் படத்துக்கு இசையமைக்கிறார், போன வாரம் வெளியான ரஹ்மான் பாடல்கள் எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் விற்று சாதனை படைத்திருக்கின்றன, எத்தனை டீக்கடைகளில் ராஜாவை ரஹ்மான் Replace செய்திருக்கிறார் என்பதுபோன்ற சமீபத்திய புள்ளிவிவரங்களில் அவர்களுடைய ஆர்வம் இருந்தது.

தர்க்கப்படி பார்த்தால், அந்தப் பதினேழு வயதில் ராஜாவைவிட ரஹ்மானின் துள்ளல் இசைதான் என்னை அதிகம் கவர்ந்திருக்கவேண்டும், அதுதான் எதார்த்தம். ஆனால் எப்படியோ, எனக்கு ராஜாவின் இசைதான் நெஞ்சுக்கு நெருக்கமாகத் தோன்றியது (இன்றுவரை).

ஆகவே, நான் கல்லூரி ராஜா கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். அதனாலேயே, ’இயந்திர இசை’ என்றெல்லாம் ரஹ்மானை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தேன்.

இப்போது யோசித்தால், பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஆனால் அன்றைக்கு, ராஜாவின் இடத்தைப் பிடிக்க இன்னொருவர் முயற்சி செய்கிறார், அதில் கணிசமான அளவு வெற்றியும் அடைந்துவிட்டார் என்பதே எங்களுக்குப் பெரிய Blasphemyயாகத் தோன்றியது. இதுபோன்ற வெற்றுக் கிண்டல்கள், கேலிகள், அவமானப்படுத்துதல்களின்மூலம் ரஹ்மானின் அந்த முயற்சியை முறியடித்துவிடமுடியும் என்று அசட்டுத்தனமாக நம்பினோம்.

ஒருவிதத்தில், இவை எல்லாமே இயலாமையின் வெளிப்பாடுகள்தான். தமிழ் சினிமாவில் ராஜாவின் காலம் (அப்போதே) முடிந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டு, அவர் ‘செய்த’ விஷயங்களை நினைத்துமட்டும் சந்தோஷப்படுகிற மன முதிர்ச்சி எங்களுக்கு இல்லை.

அப்போதுமட்டுமில்லை, அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு ரஹ்மானின் பிரம்மாண்ட வெற்றிகளையோ, சாதனைகளையோ என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இத்தனைக்கும் அவருடைய வளர்ச்சி மொத்தத்தையும் ஒருவிதமான பொறாமை கலந்த பிரம்மிப்புடன் பார்த்துவந்திருக்கிறேன், பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கல்லூரிக் காலத்திலேயே, என்னுடைய கமலஹாசன் பித்து கரைந்து மறைந்துபோனது, அதன்பிறகு சினிமா நடிகர்களுக்கு ரசிகனாக இருப்பது பெரிய முட்டாள்தனம் என்றும் புரிந்துகொண்டேன், ஒருகட்டத்தில் சினிமா பார்ப்பதையே மொத்தமாக நிறுத்திவிட்டேன். ஆனால் அப்போதும், ராஜாவைமட்டும் மற(று)க்கமுடியவில்லை.

இன்றைக்கும், நான் ஜீனியஸ் என்று இரண்டே பேரைதான் சொல்வேன். ஒன்று, சச்சின் டெண்டுல்கர், இன்னொன்று, இளையராஜா, இந்த இருவரும் இல்லாவிட்டால் என்னுடைய இத்தனை வருட வாழ்க்கை படுமோசமாகப் போரடித்திருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

ஆனால் அதற்காக, சச்சின் என்றென்றும் விளையாடிக்கொண்டிருக்கமுடியுமா? இளையராஜா எல்லாப் படங்களுக்கும் இசையமைத்துக்கொண்டிருக்கமுடியுமா? ஒருகட்டத்தில் ராஜாவும்கூடப் பதவி விலகவேண்டியிருக்கும் என்பது புரிந்தது.

அதற்குமுன் ராஜாவை வீழ்த்த முயன்ற மற்ற இசையமைப்பாளர்களுக்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான வித்தியாசம், இவரிடம் ஒரு தனித்துவமான பாணி இருந்தது, அதேசமயம் நான் இன்னமாதிரி இசையைமட்டும்தான் உருவாக்குவேன் என்கிற பிடிவாதம் இல்லாமல், தனது ஞானத்தை விரிவுபடுத்திக்கொள்கிற ஆர்வம், சட்டென்று தோன்றுகிற Creative Spark-ஐமட்டும் நம்பாமல், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழைத்து இன்னும் மேம்படுத்தமுடியும் என்கிற (இந்திய சினிமாவுக்கே புதுசான) School of thought, தனது இசை மேதைமையுடன், மற்றவர்களுடைய கருத்துகள், சிந்தனைகள், யோசனைகளையும் சேர்த்து மெருகேற்றிக்கொண்டு, அதற்கு உரிய Credit-ஐ அவர்களுக்கே தருகிற பெருந்தன்மை, இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தான் இருந்த இடத்திலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்காமல் மேலே மேலே போகவேண்டும் என்கிற முனைப்பு.

இன்னொருபக்கம், இந்தியச் சூழலில் ரஹ்மானின் வெற்றிக் கதை மிக முக்கியமானது. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர், சூழ்நிலை காரணமாக ஏழைமையில் தள்ளப்பட்டவர், மிக இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பைத் தலையில் சுமக்க நேர்ந்தவர், படிப்பைப் பாதியில் நிறுத்தியவர், உழைப்பு ஒன்றைமட்டும் தனது முதலீடாக நினைத்தவர், மதம் மாறியவர், அதுவும் பெரும்பான்மை மதத்திலிருந்து சிறுபான்மை மதத்துக்கு மாறியவர், நல்ல சம்பளத்தில் செழிப்பாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, அதைவிடக் குறைந்த வருமானம் கொண்ட, ஆனால் நல்ல முன்னேற்றச் சாத்தியம் உள்ள இன்னொரு துறைக்குத் தைரியமாகத் தாவியவர், சேணம் கட்டிய குதிரைபோலத் தனது தொழில்தவிர வேறெதிலும் கவனம் செலுத்தாமல் முழு முனைப்போடு பணிபுரிந்தவர், தனது துறையில் மற்ற எல்லோரையும்விட வித்தியாசமாகச் சிந்தித்து முன்னேறியவர் … இப்படிப் பலவிதங்களில் ரஹ்மான் புதிய தலைமுறை இந்தியர்களின் பிரதிநிதியாகவே தோன்றுகிறார்.

இதனால், இந்த வருடத் தொடக்கத்தில் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றபோது, (ஒரு ராஜா ரசிகனாக) எனக்கு எந்த ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இப்பேர்ப்பட்ட ஒரு திறமைசாலி, கடின உழைப்பாளி அத்தனை உயரங்களுக்குப் போகாவிட்டால்தான் அதிசயம் என்று பெருமையாகவே உணர்ந்தேன்.

அப்படி ஓர் உலக கௌரவம், அங்கீகாரம் எங்கள் செல்ல ‘மொட்டை’க்குக் கிடைக்கவில்லையே என்கிற ஏமாற்றம், அல்லது வருத்தம் இப்பவும் இருக்கிறதுதான். ஆனால், அதற்கான குறைந்தபட்ச முயற்சிகளில்கூட அவரோ, அவரைச் சுற்றியிருந்தவர்களோ ஈடுபடவில்லை எனும்போது, அந்த ஏமாற்றம் நியாயமற்றதாகிறது.

ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று சில வாரங்களுக்குப்பின், அவருடைய வெற்றிக் கதையைப் புத்தகமாக எழுதுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகம் இன்று வெளியாகியிருக்கிறது.

ARR_Wrapper

நான் ரஹ்மானைப்பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன் என்று பத்து, பதினைந்து வருடங்களுக்குமுன்னால் யாராவது சொல்லியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருப்பேன். அல்லது, கோபத்தில் அவர்கள்மீது பூட்டை எடுத்து வீசியிருப்பேன். (பூட்டு விஷயம் புரியாதவர்கள் இங்கே க்ளிக்கவும்)

ஆனால், எழுதுவது என்று உட்கார்ந்தபிறகு, நான் என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகள் புத்தகத்தில் குறுக்கிட அனுமதிக்கவில்லை. எந்த முன்முடிவுகளும் இல்லாமல், ரஹ்மான் என்கிற இசைக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை அணுகி, அந்தச் சரித்திரத்தினூடே அவருடைய வெற்றிக்கான காரணங்களைப் பதிவு செய்வதுதான் நோக்கம்.

இந்தப் புத்தகத்துக்காக ரஹ்மானைப்பற்றி ஏகப்பட்ட விஷயங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக்கொண்டிருந்தபோதுதான், நான் எதைத் தவறவிட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போதும், ரஹ்மானின் இசை பாணியை என்னால் முழுசாக ரசிக்கமுடியவில்லை, ஆனால் அவர் வேலை செய்கிற தன்மையும், அவரது பண்புகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக ’ரோஜா’வில் அறிமுகமாவதற்குமுன்னால் அவர் என்னென்ன செய்திருக்கிறார், அதன்பிறகு தனது திரை இசை வாழ்க்கையை எப்படித் திட்டமிட்டுக்கொண்டார், தன்னுடைய குழு உறுப்பினர்களை எப்படி வேலை வாங்குகிறார், சீனியர்களிடமிருந்து எவற்றை, எப்படிப் பயின்றுகொள்கிறார், தன்னிடம் பாடல் கேட்டு வரும் இயக்குனர்களிடம் பதிலுக்கு அவர் எதிர்பார்ப்பது என்ன, அது கிடைக்காதபோது எப்படி நாசூக்காக விலகிக்கொள்கிறார், தான் விரும்புவதைச் செய்து தருகிற இயக்குனர்களிடம் அவருடைய ஒன்றுதல் எப்படிச் சிறந்த பாடல்களாக வெளிப்படுகிறது, நவீன தொழில்நுட்பத்தை அவர் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார், அபூர்வமாக வரும் தோல்வியைக்கூட அவர் எப்படி அணுகுகிறார், அநாவசிய வம்புகளில் சிக்கிக்கொள்ளாமல் எப்படித் தவிர்க்கிறார், புதிய திறமைகளை எப்படித் தேடிப் பிடிக்கிறார்,  எப்படி எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்குகிறார் என்று பல விஷயங்கள், இந்த எளிய மனிதரின் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டேன், அவற்றை என்னால் இயன்றவரை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று, இதை எழுதி முடித்தபிறகும், என்னுடைய ‘ஜீனியஸ்’ பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் எனது வாழ்க்கை தொடர்பான எந்தச் சம்பவத்தை யோசித்தாலும் கூடவே இளையராஜாவின் பாடல் ஒன்றுதான் ஒட்டிக்கொண்டு பின்னிசையாக வரும். அது எப்போதும் மாறாது, மாறமுடியாது.

அதேசமயம், ரஹ்மானின் திறமையை, அதற்குப் பின்னால் இருக்கிற கடின உழைப்பைப் புரிந்துகொள்ளாமல் ஒருகாலத்தில் நண்பர்கள் மத்தியில் அவரை அலட்சியப்படுத்திப் பேசியிருக்கிறேன். அதற்கு இந்தப் புத்தகத்தின்மூலம் என்னாலான பிராயச்சித்தம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

வாய்ப்பிருந்தால், இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள், என்னைப்போன்ற ஒரு ராஜா வெறியனின் ரஹ்மான் புத்தகம் எப்படி வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்!

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

***

என். சொக்கன் …

27 07 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அபூர்வமாக, சென்ற வார இறுதியில் எழுத்து வேலைகள் எவையும் இல்லை. சரி, சும்மா ஒரு சுற்றுலா சென்று வரலாமே என்று கிளம்பினோம்.

சுற்றுலா என்று கிளம்பிவிட்டால், அடுத்து, அடுத்து என்று ஒரே நாளில் இருபது, முப்பது இடங்களைப் பார்க்கிற பரபரப்பு எனக்கு ஆகாது. இப்படி ஆளாளுக்கு மற்றவரை அவசரப்படுத்தி, எரிச்சல்படுத்திக் கோபப்படுத்தி முறைத்துக்கொண்டு ‘உல்லாசப் பயணம்’ போவதற்குப் பதில், கொஞ்சம் நிதானமாக இரண்டு இடங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பினால்கூடப் போதுமே.

அதனால்தான், மைசூர் போகலாமா என்று யோசித்ததை மாற்றி, அதிகக் கூட்டமில்லாத ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு போவதாக முடிவெடுத்தோம். இன்னொரு காரணம், ஏற்கெனவே சில மாதங்களுக்குமுன்பு மைசூர் போய் வந்தபோது ஸ்ரீரங்கப்பட்டினத்தை எட்டிப்பார்க்கக்கூட முடியவில்லை.

காலை ஆறரை – ஏழு மணிவாக்கில் கிளம்பினோம். கதவைப் பூட்டுவதற்குமுன்னால் நங்கையை அழைத்து, ‘உனக்கு வழியில விளையாட ஏதாவது பொம்மை வேணும்ன்னா, கார்ல கொண்டு போய்ப் போடு’ என்றேன்.

சில நிமிடங்கள் கழித்து நான் படியில் இறங்கி வந்தபோது, சல்யூட் வைத்துக் கேட்டைத் திறந்துவிட்ட காவல்காரர், ’குட் மார்னிங் சார், வீடு காலி பண்றீங்களா?’ என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, ‘இல்லையே, ஏன்?’ என்றேன்.

அவர் காரின் பின் சீட்டைச் சுட்டிக்காட்டினார், அங்கே முழுக்க முழுக்க பொம்மைகள், மனிதர் உட்கார இடமே இல்லை. நங்கையின் பொம்மை இடமாற்றத் திட்டத்தைப் பார்த்துவிட்டு, நாங்கள் வீட்டைக் காலி செய்துகொண்டு கிளம்புகிறோம் என்று முடிவுகட்டிவிட்டார் காவல்காரர்.

கிளம்புகிற நேரத்தில் குழந்தையைக் கோபித்துக்கொள்ளவாமுடியும்? பொம்மைகளை வாரிச் சுருட்டிப் பின்னால் போட்டு மூடினோம், சற்றே தாமதமாகப் பயணம் புறப்பட்டது.

ஏற்கெனவே ஓட்டுனர் விஷயத்தில் ‘நிறைய’ அனுபவித்திருந்ததால், இந்தமுறை வெளி நபர் ஒருவரை முன்பதிவு செய்து வரவழைத்திருந்தோம். எந்த இடத்திலும் அதீத வேகம் பிடிக்காமல் நிதானமாக ஓட்டினார்.

பெங்களூர் எல்லை தாண்டியதும், மைசூர் பயணம் செய்கிறவர்களின் உடனடி ஃபேவரிட், காமத் உணவகம். எழுபது ரூபாய்க்கு இட்லி, தோசை, பொங்கல், வடை, கேசரி, பழரசம், நறுக்கிய பழத் துண்டுகள், காபி, டீ என்று எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். இலவச இணைப்பாக, பக்கத்து மூங்கில் மரத்தில் தாவித் தாவி விளையாடுகிற குரங்குக் குட்டிகளை ரசிக்கலாம்.

பெரும்பாலான குழந்தைகள், சாப்பிடுவதைத் தவிர்த்து, குரங்குகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதனால், பெரியவர்கள் நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டு, பிறகு அவர்களுக்கு நிதானமாக ஊட்டமுடிந்தது. காமத் நிர்வாகத்தார் இன்னும் அந்தக் குரங்குகளை விரட்டாமல் விட்டுவைத்திருக்கிற ரகசியம் புரிந்தது.

SDC13619

சாப்பாடு, வேடிக்கை, ஊட்டல், கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல் எல்லாம் முடிந்ததும், பக்கத்தில் இருக்கிற ‘ஜனபத லோகா’வுக்குள் நுழைந்தோம்.

’ஜனபத லோகா’ என்பது, கர்நாடக மாநிலத்தின் பழமையான வாழ்க்கைமுறையைப் பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கண்காட்சி. வெளியிலிருந்து பார்ப்பதற்குப் பச்சைப்பசேலென்ற ஒரு பெரிய பூங்காவைப்போல் இருக்கும். ஆங்காங்கே சிறு குடில்கள் அமைத்துப் பலவிதமான பொருள்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

முதல் குடிலில் பழங்காலச் சுவர் ஓவியங்கள், அலங்காரப் பொருள்கள், மண் அடுப்புகள், உலோக (குமுட்டி) அடுப்புகள், பெட்டிகள், கூடைகள், கைத்தடிகள், குடைகள், தொட்டில்கள், விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள், விளக்கின் உயரத்தை அதிகரித்து, குறைப்பதற்கான வசதிகள், பல்லாங்குழி, விலை உயர்ந்த பொருள்களைக் கூரையில் ஒளித்துவைப்பதற்கான ரகசியக் குடுவைகள், விதவிதமான பெல்ட்கள், மூங்கில் மழைக்கோட்டுகள், முறங்கள், அரிவாள்மனைகள், தேங்காய்த்துருவிகள், பாக்குவெட்டிகள், நான்கைந்து வகை எலிப் பொறிகள், பன்றிப் பொறிகள், மாடுகளுக்கு மருந்து ஊற்றுவதற்கான மூங்கில் குழாய்கள், மருத்துவர்கள் அவற்றின் வாயில் கை விட்டுப் பரிசோதிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மாட்டின் கழுத்தில் கட்டுகிற மணிகள் (ஏழெட்டு விதமானவை, சிலது மரத்தால் ஆனவை, மற்றவை உலோக மணிகள், ஒவ்வொன்றும் எழுப்புகிற சத்தம் பல அடி தூரம்வரை கேட்கிறது – இப்போதும்), செம்மறி ஆட்டுக்கு முடி வெட்டும் கத்தரி, தராசுகள், பலவிதமான (ஆழாக்கு, சேர், படி) அளவைப் பாத்திரங்கள், அரிசி, ராகி போன்றவற்றைச் சேமித்துவைக்கும் விதவிதமான ஏற்பாடுகள், அரைக்கும் எந்திரங்கள், ஊறுகாய், தயிர் ஜாடிகள், மத்துகள், சேமியா / சேவை பிழியும் கருவி, பணியாரச் சட்டி, தோசைக் கல், கிணற்றில் பொருள்கள் விழுந்துவிட்டால் அவற்றை எடுப்பதற்கான (இவற்றின் பெயர் ‘பாதாளக் கரண்டி’ என்று ஞாபகம்) விதவிதக் கொக்கிகள், கைத்தறி இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் இடம்பெற்றிருந்தன.

இவற்றில் பெரும்பாலான பொருள்களை நான் என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் குமிட்டி அடுப்பு, அளவைப் படி, மண் ஜாடிகள் போன்றவை தினசரி உபயோகத்தில் இருந்ததால், நன்கு மனத்தில் பதிந்திருக்கிறது. ஆனால் திடுதிப்பென்று அவை எப்படிக் காணாமலே போய்விட்டன என்பதை இப்போது யோசித்தால் திகைப்பாக இருக்கிறது.

இன்றைக்கு யாரும் குமுட்டி அடுப்பில் சமைக்கமுடியாதுதான். ஆனால், பழைய சரித்திரம், வாழ்க்கைமுறைகளை நகரத்தில் வசிப்பவர்கள், முக்கியமாகக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறவிதத்தில் ’ஜனபத லோகா’ ஓர் அவசியமான முயற்சியாக எனக்குத் தோன்றியது. (பெங்களூரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர்கள், ராமநகரம் அருகே, காலை 9 மணிமுதல் மாலை 5:30வரை, செவ்வாய்க்கிழமை விடுமுறை, அனுமதிக் கட்டணம்: ரூ 10/- குழந்தைகளுக்கு ரூ 5/-)

’ஜனபத லோகா’வின் மற்ற குடில்களும் சுவாரஸ்யமானவைதான். கர்நாடகத்தில் வசிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியினரின் உடைகள், வாழ்க்கை முறைகள், நடனங்கள், கதை சொல்லும் பாணிகள், திருமணச் சடங்குகள், மற்ற விழாக்கள், பொம்மலாட்டம், தோல் பாவை ஆட்டம், யக்‌ஷகானம், அந்தக் காலக் கோவில்கள், சிலைகள், நகைகள் அனைத்தையும் மிக அழகாகக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக, ‘மாதிரி கிராமம்’ என்கிற பெயரில் ஒரு குட்டி வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே மாட்டுக் கொட்டகைகள், எண்ணெய்ச் செக்கு, வெல்லம் காய்ச்சும் ஏற்பாடுகள், பழங்காலத்து வீடு, கோவில், சட்டி, பானை செய்கிற மண், சக்கரம், ஆலமரத்தடிப் பஞ்சாயத்தைக்கூடச் சுற்றிப் பார்க்கமுடிகிறது.

மாதிரி கிராமத்தை நங்கையுடன் சுற்றிவந்தேன். எனக்குத் தெரிந்த பொருள்களை அவளுக்கு விளக்கிச் சொன்னேன். வெளியே வரும்போது அவளிடம் கேட்டேன், ‘உனக்கு என்னம்மா புரிஞ்சது?’

‘கிராமம்ன்னா அங்கே யாருமே இருக்கமாட்டாங்க, எல்லா வீடுகளும் எப்பவும் காலியாவே இருக்கும்ன்னு புரிஞ்சது’ என்றாள்.

***

’ஜன பத லோகா’விலிருந்து சுமார் பதினைந்து நிமிடப் பயண தூரத்தில் சென்னப்பட்னா தாண்டி, ‘மல்லூர்’ என்ற ஒரு கிராமம். அங்கே அப்ரமேய ஸ்வாமி கோவில் பிரபலம் என்றார்கள்.

சின்னக் கோவில். அப்ரமேய ஸ்வாமியைவிட, அங்குள்ள ‘தவழும் குழந்தை கிருஷ்ணன்’ சன்னிதியில்தான் கூட்டம் அதிகம். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கே வருகிறவர்கள் அதிகமாம்.

குழந்தை கிருஷ்ணனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால், மணக்க மணக்கப் புளியோதரையும், தயிர் சாதமும் கொடுத்தார்கள். பாஸ்மதி அரிசிப் புளியோதரை பேஷ் பேஷ், ரொம்ப நன்னாயிருந்தது!

***

ஒருவழியாக, ஸ்ரீரங்கப்பட்டினத்தை நாங்கள் நெருங்கியபோது மணி பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது.

திப்பு சுல்தான் புகழ் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ரங்கநாதஸ்வாமி கோவில் அவசியம் பார்க்கவேண்டியது. வரலாற்றுப் பிரியர்களுக்கும் சரி, பக்திமான்களுக்கும் சரி.

ஆனால், பன்னிரண்டரை மணிக்குக் கோவில் திறந்திருப்பார்களோ? சந்தேகத்துடன் அணுகியபோது, ‘ஒன்னரைவரைக்கும் சன்னிதி திறந்திருக்கும்’ என்று வயிற்றில் பால் வார்த்தார்கள்.

லேசான சாரல் மழையை அனுபவித்தபடி கோவிலினுள் நுழைந்தோம். பெருமாளைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.

’இவ்ளோ பெரிய க்யூவா?’ என்று நான் மலைத்தபோது, பின்னாலிருந்து ஒருவர், ‘இதெல்லாம் கூட்டமே இல்லை சார்’ என்றார், ‘தசரா டைம்ல பார்க்கணும், அதோ, அந்தத் தெருமுனை தாண்டியும் க்யூ நிக்கும்’

‘ஓஹோ’

‘சிவனைச் சுலபமாப் பார்த்துடலாம், பெருமாளைப் பார்க்கக் க்யூவிலே நின்னாகணும், அதுதான் சம்பிரதாயம்’ என்றபடி அவர் கதையளக்க ஆரம்பித்தார். நான் சிற்பங்களை ரசிப்பதுபோல் நழுவ முயன்றேன்.

நல்லவேளையாக, க்யூ நான் நினைத்ததைவிட விரைவாக நகர்ந்தது. ஐந்து நிமிடத்தில் ஸ்வாமி தரிசனம். வெளியே வந்தால், ‘பாத தரிசனம் ஆச்சா?’ என்றார் பின்னால் இருந்தவர்.

‘இல்லையே, அதென்ன?’

’ஏன்ப்பா, இவ்ளோ தூரம் வந்துட்டு, பெருமாள் பதத்தைப் பார்க்கலைன்னா எப்படி?’ அவர் உச்சுக்கொட்டினார், ‘திரும்பப் போய்ப் பார்த்துட்டு வந்துடுங்க, கோடி புண்ணியம்’

நான் ஒரு மார்க்கமாகத் தலையசைத்துவிட்டுத் தாயார் சன்னிதிப்பக்கம் ஓடி ஒளிந்துகொண்டேன். அவர் கொஞ்ச நேரம் தேடிப் பார்த்துவிட்டு, அரட்டையடிக்க வேறு யாரையோ பிடித்துக்கொண்டபிறகுதான், கொஞ்சம் தைரியம் பெற்று வெளியே வரமுடிந்தது.

ஆஞ்சனேயர் சன்னிதிக்குமுன்னாலிருந்த குருக்கள் உறக்கக் கலக்கத்தில் சொக்கி விழுந்துகொண்டிருந்தார். அந்தத் தூக்கத்திலும், ’ஹனுமாரைச் சேவிச்சுக்கோங்கோ’ என்று தமிழில், கன்னடத்தில், ஹிந்தியில் சொல்லத் தவறவில்லை.

கோவிலைச் சுற்றிலும் ஏகப்பட்ட புல் தரை. நங்கை உற்சாகமாக ஓடி விளையாட, நான் ஸ்தல புராணத்தைத் தேடி வாங்கினேன். லட்டுப் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால், கதவு மூடியிருந்தார்கள், ‘எப்போ திறப்பீங்க?’

‘இனிமே நாலு மணிக்குதான்’

‘அச்சச்சோ, நாங்க எப்படி வெளியே போறது?’

பெரிய கதவுக்குள் இருந்த ஒரு குட்டிக் கதவைத் திறந்துவிட்டார்கள். ’இதுதான் திட்டிவாசலா’ என்று கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை.

வெளியே வந்ததும் மறுபடி லேசான மழை. நங்கைக்குக் குதிரைச் சவாரி ஏற்பாடு செய்துவிட்டு, திப்பு சுல்தான் மாளிகைக்குப் புறப்பட்டோம்.

‘அது யாரு சுப்பு சுல்தான்?’ என்றாள் நங்கை.

‘சுப்பு இல்லைடீ, திப்பு’

‘திப்புவோ, துப்புவோ, எனக்கு அதெல்லாம் எனக்கு வேணாம், குதிரையில இன்னொரு ரவுண்ட் போலாம் வா’

அவளைக் கஷ்டப்பட்டுச் சமாதானப்படுத்தித் திப்பு சுல்தான் அரண்மனையின் இடிபாடுகளைப் பார்த்தோம், அப்புறம் திப்பு சுல்தான் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம், அவருடைய ஆயுதக் கிடங்கு, மசூதி, கடைசியாக, ’தரியா தௌலத்’ எனப்படும் அவரது கோடைக்கால மாளிகை.

SDC13673

தரியா தௌலத்தில் முதல் ஆச்சர்யம், சக்கர நாற்காலிகள் சென்று வருவதற்காகச் சாய்வுத் தளம் அமைத்திருக்கிறார்கள், நம் ஊரில் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் இந்த வசதி இருப்பதில்லை.

SDC13708

மற்றபடி, வழக்கமான மொகலாயர் கட்டட அமைப்புதான். நீஈஈஈஈஈளமான நடைபாதையின் இருபுறமும் பூங்கா அல்லது புல்வெளி. செவ்வகக் கட்டடம், அதன்முன்னே சின்னதாக ஒரு நீரூற்று, ப்ளஸ் குளம், அப்புறம், திப்பு சுல்தான் ஆச்சே என்று பயமுறுத்துவதற்காக மூன்று பீரங்கிகளைச் சும்மா நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

SDC13713

SDC13698

தரியா தௌலத்தினுள் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது அற்புதமான சுவர் ஓவியங்கள். அநேகமாக திப்புவின் முக்கியப் போர்கள் அனைத்தும் அட்டகாசமாக அந்தக் கால பாணியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால் ஒன்று, போர்க்களத்தில் திப்பு சுல்தான் ஏன் கையில் ரோஜாப் பூவுடன் இருக்கிறார். அதுதான் புரியவில்லை.

தரியா தௌலத் சுவர் ஓவியங்களைப்பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அப்புறம் இன்னொரு நாள் சொல்கிறேன்.

ஓவியங்களை ரசித்து முடித்து உள்ளே நுழைந்தால், சிறு அருங்காட்சியகம். திப்பு சுல்தான், ஹைதர் அலி காலத்து அமைச்சர்களும் இயற்கை, போர்க் காட்சிகள், நாணயங்கள், இன்னபிற.

சுவரில் முறைத்துக்கொண்டிருந்தவர்களைக் காட்டி, ‘இவங்கல்லாம் யாருப்பா?’ என்றாள் நங்கை.

‘மந்திரிங்க’ என்றேன்.

அவளுக்குப் புரியவில்லை. ‘அப்படீன்னா? மந்திரவாதிங்களா?’ என்றாள்.

’அப்படியும் சொல்லலாம்’

முன்பு தரியா தௌலத்தினுள் திப்பு சுல்தானின் உடைகளையெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இப்போது அவற்றைக் காணவில்லை. ஐந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டோம்.

மூலையில் ஒரு புத்தகக் கடை இருந்தது. அங்கே ஸ்ரீரங்கப்பட்டினம்தவிர, மற்ற எல்லா சுற்றுலாத் தலங்களைப்பற்றிய புத்தகங்களும் கிடைத்தன. ஒரே பிரச்னை, புத்தகங்களை விற்பனை செய்ய அங்கே ஆள் யாரும் இல்லை. அக்கம்பக்கத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்தபோது, ‘எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார்கள்.

நம் ஊரில் அநேகமாக எல்லா இடங்களிலும் இதே பிரச்னைதான். கலைப் பொருள்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், புகைப்படங்கள், தின்பண்டங்கள் விற்பதற்கு முட்டிமோதுகிறார்கள். ஆனால், அந்தந்த இடங்களைப்பற்றிய புத்தகங்கள் கிடைப்பதே இல்லை. ’சார், கைட் வேணுமா கைட்’ என்று சுற்றிச் சுற்றி வருகிற அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டிகள் சொல்கிற சரித்திர உண்மைகளை எவ்வளவு தூரம் நம்பமுடியும்?

இங்கே ஓர் இடைச்செருகல். ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் மூலக்கதையான ‘Q & A’ (ஆசிரியர்: விகாஸ் ஸ்வரூப், சமீபத்தில் தமிழிலும் வெளிவந்துள்ளது, விகடன் பிரசுரம், தமிழ் மொழிபெயர்ப்பு: ஐஷ்வர்யன்) நாவலில்  ஒரு மிகப் பிரமாதமான காமெடி காட்சி இருக்கிறது. தாஜ் மஹாலுக்கு முதன்முறை வருகிற கதாநாயகன், அங்கே யாரோ ஒரு கைட் சொல்லும் கதையை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, இன்னொரு பயணியிடம் அதை இஷ்டப்படி அளந்துவிட்டுக் காசு பெறுகிற காட்சி அது. நாவல் வாசிக்காதவர்கள்கூட அந்த ஒரு நீண்ட வசனத்தைமட்டுமாவது தேடிப் பிடித்துப் படித்துவிடுங்கள், பல நிமிடங்களுக்கு நிறுத்தாமல் சிரித்துக்கொண்டிருப்பீர்கள்.

தரியா தௌலத்திலிருந்து சற்றுத் தொலைவில் வலது பக்கம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் சென்றால், காவிரி ஆறு. தார் பூசிய பரிசல்களில் அபத்திரமாகப் பயணம் செய்தோம். பரிசல்காரர் நங்கைக்கு ஆகாயத்தாமரைப் பூக்களைப் பறித்துக் கொடுத்துவிட்டு என்னிடம், ‘டிப்ஸ் எதுனா கொடுங்க சார், வீட்ல ரொம்பக் கஷ்டம்’ என்றார்.

’கரைக்கு வந்தப்புறம் தர்றேனே’ என்றேன் திகைத்து.

‘அங்க கொடுத்தா அதையும் எங்க முதலாளி பிடுங்கிக்குவார் சார், இங்கேயே கொடுங்க’

நடு ஆற்றில் இப்படிக் கேட்டால், மாட்டேன் என்று சொல்லமுடியுமா? மறுத்தால் தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடுவாரோ என்று பயமாக இருந்தது. இருபது ரூபாய் கொடுத்தேன்.

அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. அதிவேகமாகப் பரிசலைச் சுழற்றிவிட்டுக் காண்பித்தார். ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறையில் எங்களை ஏற்றிவிட்டு ஃபோட்டோ எடுத்தார்.

SDC13730

கரையேறியதும், சற்றுத் தொலைவிலிருந்த ‘சங்கம்’ என்ற இடத்துக்குச் சென்றோம். இங்கே காவிரி, லோக்பவானி, ஹேமாவதி என்கிற மூன்று ஆறுகள் சங்கமிக்கிறதாம்.

SDC13768

சங்கமத்திலிருந்து திரும்பும் வழியில் ஹைதர் அலியின் சமாதியைப் பார்த்தோம். தன் அப்பா, அம்மாவுக்காக திப்பு சுல்தான் கட்டிய நினைவுச் சின்னம் இது. பின்னர் திப்பு சுல்தான் இறந்தபிறகு, அவரையும் இங்கேயே புதைத்திருக்கிறார்கள்.

SDC13747

இங்கேயும் ஓர் அரைகுறை வழிகாட்டியிடம் மாட்டிக்கொண்டோம், இஸ்லாமிய ஆண், பெண் சமாதிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம், இந்தச் சமாதியில் 36 கறுப்பு கிரானைட் தூண்கள் உள்ள காரணம் (ஹைதர் அலியின் ஆட்சிக் காலம் 36 ஆண்டுகள்), இங்கிருந்து ஆங்கிலேயர்கள் திருடிச் சென்ற சமாசாரங்கள், இங்கே புதைக்கப்பட்டிருக்கும் திப்பு சுல்தான் உறவினர்களின் பெயர்களையெல்லாம் அதிவேகமாகச் சொல்லிவிட்டு, அவை சரியா, தப்பா என்று நாங்கள் யோசித்து முடிப்பதற்குள் காசு கேட்டார். இவர் எங்களைத் தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிட வாய்ப்பு இல்லை என்பதால், பத்து ரூபாய்மட்டும் கொடுத்தேன்.

கடைசியாக, காவிரிக்கரையிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்றோம். ரொம்ப மாடர்னாகத் தோன்றிய அந்தக் கோவிலின் பெயர், நிமிஷாம்பா ஆலயம்.

கோவிலைவிட, அதற்கு வெளியே பரவியிருந்த மினி சந்தைதான் என்னை மிகவும் கவர்ந்தது. கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கீரைக்கட்டு, பலாச்சுளை, மல்லிகைப்பூ என்று சகலத்தையும் கூடைகளில் நிரப்பிவைத்து, ‘ஒரு கூடை பத்து ரூபாய்’ என்று விற்கிறார்கள். சுற்றுலாத்தலத்தை இந்த அளவு உள்ளூர்ப் பொருள்களின் Retail வணிகத்துக்குப் பயன்படுத்திக்கொள்வது சாமர்த்தியம்தான்.

பெங்களூர் திரும்பும் வழியில், சென்னபட்னாவில் சில பொம்மைகள் வாங்கினோம். மொத்தத் தொகை ரூ 850/- வந்தது.

நான் பர்ஸைத் திறக்கையில், ‘கொஞ்சம் பொறு’ என்றார் என் மனைவி.

‘ஏன்?’

‘அவங்க கேட்கிற காசைக் கொடுத்துடறதா? பேரம் பேசவேணாமா?’

’இதெல்லாம் ஹை க்ளாஸ் கடை, இங்கல்லாம் பேரம் பேசமுடியாது, பேசக்கூடாது’

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் மனைவி அந்தக் கடைக்காரரிடம் பேரம் பேசத் தொடங்கிவிட்டார். அவர் பிடிவாதமாகத் தலையசைத்து மறுக்க, எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது.

சில நிமிடங்களுக்குப்பிறகு, அவர் கொஞ்சம் இறங்கிவருவதுபோல் தோன்றியது. சரி, 850க்குப் பதில் 800 ரூபாய் கேட்பாராக இருக்கும் என்று நினைத்தேன்.

கடைசியில், அவர் பில் எழுதியபோது அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை என்னால் நம்பவேமுடியவில்லை: ரூ 350/-.

அடுத்தமுறை அலுவலகத்தில் என்னுடைய Performance Appraisal / சம்பள உயர்வுபற்றிப் பேச்சு வருகிற நேரத்தில், எனக்குப் பதிலாக என் மனைவியை விவாதத்துக்கு அனுப்பலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

***

என். சொக்கன் …

20 07 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

July 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031