மூலைப் பெருஞ்செல்வம்
Posted April 4, 2017
on:- In: Grammar | Learning | Tamil | Teaching
- 3 Comments
கடந்த சில நாள்களில் தொல்காப்பியத்தின் அகத்திணையியல், புறத்திணையியலை முழுக்க வாசித்தேன். என்னவொரு நுணுக்கமான சித்திரிப்பு. காதல்காட்சிகள்/போர்க்காட்சிகள்/பொதுக்காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் பழந்தமிழர் தேர்வுசெய்திருக்கும் களங்கள், பெயர்கள் பிரமிக்கவைக்கின்றன.
சில சிறு எடுத்துக்காட்டுகள்:
1. காதலனும் காதலியும் தங்கள் ஊரைவிட்டுக் கிளம்புகிறார்கள், வேறு ஊர் சென்று திருமணம் செய்துகொண்டு பிழைக்க நினைக்கிறார்கள், வழியில் அவர்களைச் சந்திக்கும் சிலர், ‘அடடா! இந்தப் பாலைவன வழியில் இந்த இளைஞர்கள் செல்லவேண்டுமே’ என்று இரங்குகிறார்கள், ‘அவர்களுக்கு ஆபத்து வருமோ’ என்று கலங்குகிறார்கள், அவர்களிடம் இப்படிச் சொல்கிறார்கள், ‘நீங்கள் செல்ல நினைக்கும் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது, ஆனால், எங்கள் ஊர் அருகே உள்ளது.’ என்ன அழகான, நாசூக்கான குறிப்பு, வரவேற்பு!
2. ஒரு குறிப்பிட்ட வகைப் போர்ச்சூழலுக்குப் ‘பாசி’ என்று பெயர்வைத்திருக்கிறார்கள். ஏன் அந்தப்பெயர் என்றால், நீர்நிலையினருகே இருதரப்புப் படையினர் மோதுகிறார்களாம். நீரிலே பாசி இருக்கும், அதை ஒதுக்கினால், மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளும், அதுபோல, இந்தப் படையினர் நெருங்கி, மோதி, வீழ்ந்து, விலகி, மீண்டும் நெருங்கி, மோதி…. அந்தக் காட்சிக்குப் பாசி என்பது என்ன அழகான பெயர்!
3. இதேபோல், ஒரு வீரனை ‘எருமை’ என்கிறார். திட்டாக அல்ல, பாராட்டாகதான், யார் வந்து மோதினாலும் அசராமல் நிற்கும் எருமையைப்போல அவன் எதிரியைத் தடுத்துநிற்கிறான்.
4. சில குறிப்பிட்ட விழாக்களை ‘வெள்ளணி’ என்கிறார்கள். வெள்ளை அணி, அந்நாட்களில் விழாநடத்துவோர் வெள்ளை உடை அணிவது வழக்கம், அப்போது வெள்ளையே சிறப்புடையாக இருந்திருக்கிறது, ஆகவே, அந்த விழாக்களுக்கே ‘வெள்ளணி’ என்ற பெயர் அமைந்துவிட்டது
இப்படி நுணுக்கமான பல காட்சிகள், பெயர்கள், விளக்கங்கள் … இத்தனைக்கும் இந்த வேக வாசிப்பில் நான் புரிந்துகொண்டது 20%கூட இருக்காது (அதுவே மிகைமதிப்பீடுதான் என்பேன்). நிறுத்தி நிதானமாக வாசித்து, உதாரணங்களைத் தேடிப் புரிந்துகொண்டால், தொல்காப்பியத்தைமட்டும் குறைந்தது ஐந்தாறு வருடங்கள் வாசிக்கவேண்டியிருக்கும்போல் தோன்றுகிறது.
நல்லவேளையாக, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்றோர் அத்தகைய ஆழமான ஆராய்ச்சிப் பணியை ஏற்கெனவே செய்துவிட்டார்கள். அவர்களுடைய உரைகளுக்கு இன்னோர் உரை தேவைப்படுமளவு தமிழ்ச்சொற்களை, பயன்பாடுகளை நாம் தொலைத்துவிட்டதால், இப்போது திகைத்துநிற்கிறோம். நம் வீட்டின் மூலையிலிருக்கும் பெருஞ்செல்வத்தை நாமே பயன்படுத்திக்கொள்ள இயலாமலிருக்கிறோம்.
இது சற்றே மிகையான புலம்பலாகத் தோன்றலாம். ‘தொல்காப்பியத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பதால் இன்றைக்கு என்ன பயன்?’ என்கிற எதார்த்தக்கேள்வியிலும் ஓரளவு நியாயமுண்டுதான். ஆனால் எதைப் பின்பற்றுவது, எதை விடுவது என்று தெரிந்துகொள்ளவேனும் அதை வாசிக்கவேண்டுமல்லவா? தொல்காப்பியம்போன்ற ஒரு முழுமையான இலக்கணநூலைக்கொண்ட மொழியில் அதை வாசிப்போர், புரிந்துகொள்வோர் அரைக்கால் சதவிகிதம்கூட இலர் என்பது வரலாற்று/கலாசாரத் துயரமே.
Twenty Management Secrets In Tholkaappiyam என்று ஆங்கிலத்தில் யாராவது ஒரு Bestseller எழுதிப் பிரசுரித்தால் நம்மிடையே அதைக் கற்க ஒரு புதிய வேகம் வருமோ?
***
என். சொக்கன் …
04 04 2017
3 Responses to "மூலைப் பெருஞ்செல்வம்"

Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News

1 | அவினாசி அதிபர்
April 10, 2017 at 1:39 pm
மூலைப் பெருஞ்செல்வம் என்ற தலைப்பின் அர்த்தம் என்ன?