மனம் போன போக்கில்

Archive for February 2012

சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.

(Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&)

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.

ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா  மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).

கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.

அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்

நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.

கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.

1. அஞ்சு ஸ்பூன் உப்பு

கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.

அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.

ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.

கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.

ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.

‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’

‘அடுத்த வெள்ளிக்கிழமை!’

’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’

கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.

வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’

கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’

’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’

‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’

’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’

‘சரிம்மா!’

அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.

இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.

இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.

இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.

அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’

மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.

‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.

‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.

’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.

‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’

இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.

அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!

2. காவேரியும் திருடனும்

ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.

அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.

இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.

ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.

இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.

அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.

‘ம்ஹூம், முடியாது!’

‘அஞ்சாயிரம்?’

‘ம்ஹூம்!’

’பத்தாயிரம்?’

’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’

திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.

அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.

உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.

சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’

அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’

‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.

‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’

அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.

இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.

3. எனக்கு என்ன தருவே?

மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.

ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.

அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.

இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’

‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’

‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.

‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’

‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’

அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.

‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.

வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய  மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’

‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’

‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’

’அட, நெஜமாவா சொல்றே?’

‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’

‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’

‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.

விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.

இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’

‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’

‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.

‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.

சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.

’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’

‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’

‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’

’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.

உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.

இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.

மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.

அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.

‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’

‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’

அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.

மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.

கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’

‘என்னது?’

‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’

‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’

சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.

‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.

‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’

‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.

மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.

மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.

அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.

***

என். சொக்கன் …

16 02 2012

‘ஆனந்த விகடன்’ சென்ற வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம் இங்கே. இந்தக் கதை / சம்பவத்தைப் பற்றி ஒரு முழுப் பதிவு எழுதும் அளவுக்குக் கூடுதல் விஷயங்கள் இருக்கின்றன, ஏற்கெனவே கதை நீளமாகிவிட்டதால் அவையெல்லாம் பிறிதொரு நாள் சொல்கிறேன். இப்போதைக்கு ஒரு விஷயம், கதையில் திருப்பி அனுப்பப்படுகிற அந்தப் பொம்மை நிஜத்தில் சரியாகிவிட்டது, அந்தச் சோம்பேறிக் கணவனால் அல்ல, விடாப்பிடி மனைவியால் :))

மதிப்பிற்குரிய ‘பவார் அண்ட் கோ’ நிறுவனத்தாருக்கு,

வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

என் பெயர் விமலா. கோயம்பத்தூரில் வசிக்கிறேன். சில தினங்களுக்குமுன் உங்களுடைய வெப் சைட்வழியாக ஒரு பொம்மை வாங்கியிருக்கிறேன். இதற்குமேல் என்னை எப்படி உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சரியாகத் தெரியவில்லை.

உண்மையில், வெப் சைட் என்று அட்சர சுத்தமாக எழுதிவிட்டேனேதவிர, அப்படியென்றால் என்ன அர்த்தம் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. டபிள்யூ டபிள்யூ டபிள்யூ பவார் டாய்ஸ் டாட் காம் என்று நீங்கள் தொலைக்காட்சியில் அடிக்கடி விளம்பரம் செய்வதைப் பார்த்துவிட்டு, ‘இது என்ன புதுசா இருக்கு?’ என்று என் கணவரிடம் விசாரித்தேன்.

அப்போது அவர் உங்களுடைய வெப் சைட்பற்றி நீளமாக ஏதோ சொன்னார். அதன்பிறகும் அவர் சொல்லவருகிற அடிப்படை விஷயம் என்னவென்று எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. இன்டர்நெட் என்கிற தொழில்நுட்பச் சிக்கலான இடத்தில் உட்கார்ந்துகொண்டு நீங்கள் பொம்மை விற்கிறீர்கள் என்பதுமட்டும் ஓரளவு விளங்கியது. இதற்குமேல் விளக்கம் கேட்டால், திட்டு விழுமோ என்று பயந்துகொண்டு, ‘அந்தக் கடையில நம்ம ப்ரியாவுக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுங்களேன்’, என்றுமட்டும் சொன்னேன்.

‘ஓ’, என்று பெரிதாகத் தலையாட்டியவர், மறுநாள் நீளமாக அச்சிட்ட ஒரு வால் கொண்டுவந்தார். அதில் நீங்கள் விற்கிற பொம்மைகளின் பட்டியலும், சிற்சில விளக்கக் குறிப்புகளும் இருந்தன. அதைக் காண்பித்து, ‘உனக்கு என்ன பொம்மை வேணும் ப்ரியா?’, என்று எங்கள் மகளிடம் விசாரித்தபோது, ‘வவ்வா’ என்று சொல்லிக்கொண்டு, பக்கத்து வீட்டு நாயைக் கொஞ்சப் போய்விட்டாள்.

ஆகவே, வழக்கம்போல அவளுக்காக பொம்மை தேர்ந்தெடுக்கவேண்டியது என்னுடைய பொறுப்பாயிற்று. நெடுநேரம் பொடி எழுத்து ஆங்கிலத்தைச் சிரமப்பட்டு எழுத்துக் கூட்டிப் படித்து, ஒவ்வொன்றாக நிராகரித்து, கடைசியில் ஒரு பொம்மையைத் தேர்ந்தெடுத்தேன்.

அதை பொம்மை என்று சொல்வதுகூட தவறுதான், அறிவுப்பூர்வமான விளையாட்டு சாதனம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்த அளவுக்கு உங்களுக்குத் தமிழ் புரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, நம் இருவரின் வசதிக்காக, அதை பொம்மை என்றே சொல்கிறேன்.

அந்த பொம்மையின் திரையில், ஏ, பி, சி, டி முதலான ஆங்கில எழுத்துகள் வரிசையாகத் தோன்றும். பின்னர், அதுவே ஒவ்வொரு எழுத்தாக இசையோடு வாசித்துக்காட்டும். சில சமயங்களில் வரிசை ஒழுங்கில்லாமலும் எழுத்துகள் காண்பிக்கப்படலாம். அப்போது திரையில் தோன்றும் எழுத்துக்கேற்ற பொத்தானைக் குழந்தை அழுத்தவேண்டும். சரியாக அழுத்தினால், பொம்மை அதனைக் கை தட்டிப் பாராட்டும். தவறாக அழுத்தினால், ‘அச்சச்சோ’ என்று பரிதாபம் காண்பிக்கும்.

இதெல்லாம் நான் உங்களுடைய விளக்கக் குறிப்பேட்டில் படித்துத் தெரிந்துகொண்டதுதான். அந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது என்னுடைய ஆரம்பப் பள்ளிக் காலம்தான் நினைவுக்கு வந்தது.

எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தந்த சரஸ்வதி டீச்சருக்கு, பிள்ளைகள் என்றால் ரொம்பப் பிரியம். ஆனால், அவர்கள் பிடிவாதமாக ஆங்கிலம் கற்க மறுக்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வார் அவர்.

இப்போது யோசிக்கையில் சிரிப்புதான் வருகிறது. பச்சைப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தெரியுமா, தமிழ்தான் தெரியுமா? முனைப்போடு கற்றுத்தராமல், அதுபற்றிய ஒரு பயத்தைப் பிள்ளைகள் மனதில் உருவாக்கியது யாருடைய தவறு?

இதற்குமேல் சரஸ்வதி டீச்சரை விமர்சிப்பது சரியில்லை, தேவையும் இல்லை. குருவைப்பற்றித் தவறாகப் பேசுகிறவர்களுக்கு ஏதோ ஒரு பிறவியில் நரகம்தான் சம்பவிக்கும் என்று இலக்கியங்களிலோ, புராணங்களிலோ சொல்லப்பட்டிருக்கலாம். எதற்கு வம்பு?

நான் சொல்லவந்தது, உங்களுடைய பொம்மைபற்றி. சரஸ்வதி டீச்சர்போல் சலிப்படையாமல், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லித்தருவதற்குத் தயாராக இருக்கும் இந்த பொம்மை டீச்சர், இப்போதுதான் ‘ஏபிசிடி’ என்று ஏதோ மழலையில் உளறிப் பழகிக்கொண்டிருக்கிற எங்கள் மகளுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான், கிட்டத்தட்ட நானூறு ரூபாய் விலை குறிப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை என்று, அதனை வாங்கித் தரும்படி என் கணவரிடம் சொன்னேன்.

அவருக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் போதாது, ஞானமும் போதாது. குழந்தைக்காகவோ, எனக்காகவோ, வீட்டுக்காகவோ எதைக் கேட்டாலும் மறுபேச்சில்லாமல் வாங்கிக் கொண்டுவந்து தந்துவிடுவார். இதற்காக சந்தோஷப்படுவதா, அல்லது ‘என்ன அலட்சியம்!’ என்று கோபம் கொள்வதா என்று இன்றுவரை எனக்குப் புரிந்ததில்லை.

இந்த பொம்மை விஷயத்திலும் அதுவேதான் நடந்தது. நான் பொம்மையைத் தேர்ந்தெடுத்த தினத்தன்று மாலையே, ‘ஆர்டர் பண்ணிட்டேன் விமலா’, என்றார் பேச்சுவாக்கில்.

‘எப்போ வரும்?’, என்று ஆர்வத்துடன் கேட்டேன் நான்.

‘சரியாத் தெரியலை’, என்றார் அவர், ‘இதெல்லாம் கொஞ்சம் லேட் ஆவும். அநேகமா பதினஞ்சு நாள்ல வந்துடும்-ன்னு நினைக்கறேன்’

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். பொம்மையைத் தேர்ந்தெடுத்து, அதற்குண்டான காசையும் கடன் அட்டை வழியே நயா பைசா மிச்சமில்லாமல் எண்ணிக் கொடுத்துவிட்டபிறகு, என்னத்துக்குப் பதினைந்து நாள் காத்திருக்கவேண்டும்?

இப்படிக் கோபப்பட்டாலும், நான் தேர்ந்தெடுத்திருந்த பொம்மையின் கவர்ச்சி என்னைக் கொஞ்சம் சமாதானப்படுத்திவிட்டது. எங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு ‘ஹைடெக்’ பொம்மையை, அதுவும் இன்டர்நெட்மூலம் வாங்கித்தந்து ஏ பி சி டி கற்பிப்பதன்மூலம், மற்ற பெற்றோரைவிட நாங்கள் ஒரு படி மேலே உயர்ந்துவிட்டதுபோல் பெருமிதமாகக்கூட உணர்ந்தேன்.

கேட்டால் சிரிப்பீர்கள். தபால் அல்லது கொரியரில் மேற்சொன்ன பொம்மை வரும்வரை, அதுபற்றிய குறிப்புகளைத் திரும்பத் திரும்பப் பலமுறை படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படத்தைப்போலின்றி, வேறு வண்ணத்தில், வேறு வடிவத்தில் பொம்மை இருக்கக்கூடும் என்று நீங்கள் எழுதியிருந்தது என் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

எங்கள் மகளுக்கு இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாததால், அவள்பாட்டுக்கு வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்தாள். வருகிற பொம்மை உருப்படியாகவும், அவளுக்குப் பயன்படும்விதமாகவும் இருக்கவேண்டுமே என்கிற கவலையெல்லாம் எனக்குதான். அந்தத் தவிப்பைத் தீர்ப்பதற்காகவேனும் உங்கள் பொம்மை சீக்கிரத்தில் வந்து தொலைந்துவிட்டால் நல்லது என்று தோன்றியது.

இன்டர்நெட்டில் ஆர்டர் செய்து ஒன்பது தினங்களுக்குப்பிறகு, டொப் டொப் என்று வெடித்து விளையாட ஏற்ற சிறு பிளாஸ்டிக் குமிழ்கள் நிரம்பிய காகிதத்தால் பத்திரமாகச் சுற்றப்பட்டுக் கிடைத்தது உங்கள் பொம்மை. நீல நிறத்தில், அழகான கைப்பிடியுடன் பார்க்க ஜோராக இருந்தது.

ஆனால், அதைத் திறந்து, பிரதானமான சிவப்புப் பொத்தானை அமுக்கியபோது, திரையில் எதுவும் காணோம். திகைத்துப்போய் பொம்மையைத் தலைகீழாகத் திருப்பிப் பார்த்தால், அதன் பொக்கை வாய்த் திறப்பில் மூன்று பாட்டரிகள் பொருத்தவேண்டும் என்று தெரிந்தது.

கடந்த சில நிமிடங்களில் எனக்குள் பொங்கியிருந்த உற்சாகமெல்லாம், சடாரென்று சரிந்துவிட்டது. பொம்மை விற்ற மகராசன் கூடவே அதற்கான பாட்டரியும் தரமாட்டானோ என்று ஆதங்கமாக இருந்தது.

இதே பொம்மையை எங்கள் தெருமுனைக் கடையில் வாங்கியிருந்தால், பாட்டரிகளும் இலவசமாகத் தந்தால்தான் ஆச்சு என்று சண்டை போட்டு பேரம் பேசியிருப்பேன். இன்டர்நெட்டில் அதெல்லாம் முடியாதோ என்னவோ.

அப்படியே முடிந்தாலும், பேரம் பேசச் செலவழிக்கும் நேரத்தில் மூன்று பாட்டரிகள் காசு போட்டு வாங்கிவிடலாம் என்று வாதிடுவார் என் கணவர். அவருக்குப் பணத்தைவிட, நேரத்தை வீணடிக்காமல் இருப்பதும் சுயகௌரவமும்தான் முக்கியம் என்று ஒரு வேஷம், அதன் பின்னணியில் இருப்பதெல்லாம் சுத்தமான சோம்பேறித்தனம் ஒன்றுதான்.

ஆக, தேவையான பாட்டரிகளைத் தராமல் பொம்மையை உயிரின்றி அனுப்பிவைத்ததற்காக உங்கள்மேல் எழுந்த கோபம், அவர்மீது திரும்பி, கடைசியில் அம்பு முறிந்து விழுந்தது. உடனடியாக, வீட்டிலிருக்கிற சிறு கடிகாரங்களையெல்லாம் நோண்டி, எப்படியோ மூன்று பாட்டரிகளைத் தேற்றிவிட்டேன்.

ஆனால், அவற்றில் ஒரு பாட்டரி மிக மிகச் சிறியதாக, ஒன்றரை வயது ப்ரியாவின் சுண்டு விரல் தடிமன்தான் இருந்தது. ஆகவே, உங்கள் பொம்மை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகுதான், அஞ்சறைப் பெட்டியில் சில்லறை தேடி எடுத்துக்கொண்டு, குழந்தையையும் தூக்கிக்கொண்டு பாட்டரி வாங்கக் கிளம்பினேன்.

அடுத்த கால் மணி நேரத்துக்குள், புத்தம்புதுசாக மூன்று பாட்டரிகள் வாங்கி வந்து, உங்கள் பொம்மைக்குத் தின்னக் கொடுத்தேன். ஆனால், அதன்பிறகும் சிவப்புப் பொத்தான் மௌனம் சாதித்தது. அதன் பக்கத்திலிருக்கிற சிறு விளக்கும் எரிகிற வழியைக் காணோம்.

பொம்மையில் ஏதோ பிரச்னை என்று முதன்முறையாகத் தோன்றியது அப்போதுதான். அட்டைப்பெட்டியை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு, பாட்டரிகள் சரியான திசையில்தான் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று சோதித்தேன், கைப்பிடியை இறுகப் பிடித்துக்கொண்டு, அதை ஒருமுறை உலுக்கிப்பார்த்தேன். ம்ஹும், பயனில்லை.

ஐயோ, நானூற்றுச் சொச்ச ரூபாய் போச்சே என்று பதைபதைப்பாகிவிட்டது. அவருக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால், கண்டிப்பாகத் திட்டுதான் விழும், ‘எப்பப்பார் நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கும்போதுதான் ஃபோன் பண்றே நீ. அறிவில்லை?’

இவர் எப்போது மீட்டிங்கில் இருப்பார், எப்போது வெட்டியாக உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருப்பார் என்று எனக்கென்ன ஜோசியமா தெரியும்? இப்போது இந்த பொம்மையை என்ன செய்வது?

வேறுவழியில்லாமல், மாலைவரை காத்திருந்தேன். புத்தக அலமாரிமேல் உபயோகமின்றிக் கிடந்த அந்த பொம்மையைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் என்னென்னவோ யோசனைகள், நானூறு ரூபாய் வீணாகிவிட்டது என்பதை ஏற்பதற்குமுடியாமல் தவித்தேன். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம், காரணமில்லாமல் அப்படிப் போய்விடாது என்று ஒரு நம்பிக்கை இருந்தது.

ஆகவே, இந்த பொம்மைக்கு உயிரூட்டுவதில் எனக்குத் தெரியாத ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது என்று நிச்சயமாக எண்ணினேன் நான். அவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், என்னால் கண்டறியமுடியாத அந்த ரகசியத்தைக் கண்டுகொள்வார், பொம்மை இயங்கத்தொடங்கியதும், என்னைப் பார்த்து ‘மக்கு, மக்கு’ என்று கேலியாகச் சிரிப்பார். நானூறு ரூபாய் வீணாவதைவிட, அந்தக் கிண்டல் பேச்சைத் தாங்கிக்கொள்வது உத்தமம் என்று தோன்றியது.

என் வேண்டுதல் பலிக்கவில்லை. அவராலும் உங்கள் பொம்மையை இயக்கமுடியவில்லை. என்னைக் காட்டிலும் சற்று அதிக நேரம் அந்த பொம்மையை மேலும் கீழுமாகப் புரட்டிச் சோதித்தவர், தன்னுடைய எஞ்சினியர்ப் பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, ஸ்க்ரூ டிரைவர் கொண்டு சில திருகாணிகளைக் கழற்றிப் பிரித்துக்கூட பார்த்தார். ஆனால், அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

‘ம்ஹும்’, என்று பெரிதாக உதட்டைப் பிதுக்கியவர், ‘வேற வாங்கிக்கலாம் விடு’, என்றார் சாதாரணமாக.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நானூறு ரூபாய் சமாசாரத்தை இப்படியா விட்டேத்தியாகத் தூக்கி எறிவார்கள் என்று பதட்டத்துடன் கேட்டேன்.

‘அதுக்கு என்னப்பா செய்யமுடியும்?’, என்று அலுத்துக்கொண்டவர், ‘இன்டர்நெட்ல வாங்கினா இப்படிதான்’, என்றார்.

‘இதை நீங்க முன்னாடி சொல்லலையே’, என்று நான் கோபமாகக் கேட்டதற்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை, ‘வேற நல்ல பொம்மையாப் பார்த்து கொழந்தைக்கு வாங்கிக்கலாம், டோன்ட் வொர்ரி’, என்றுமட்டும் சொல்லிவிட்டு, டிவியைப் பார்க்கத் திரும்பிக்கொண்டார்.

அவர் பிரித்துப் போட்டிருந்த பொம்மையைப் பல நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். கண்முன்னே எங்களுடைய காசுக்கு இப்படி ஓர் அநியாயம் நடந்திருப்பதைப் பார்க்க மனதாகவில்லை. அதை இவர் கண்டுகொள்ளாமல் பொழுதுபோக்கிக்கொண்டிருப்பது இன்னும் ஆத்திரமாக இருந்தது.

அன்று இரவு தொடங்கி, அடுத்த மூன்று நாள்கள் எங்களிடையே தொடர் சண்டை. எப்படியாவது இதைச் சரி செய்தால்தான் ஆச்சு என்கிற என்னுடைய பிடிவாதமும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிற அவருடைய சோம்பேறித்தனமும் கடுமையாக முட்டி மோதிக்கொண்டன.

‘உனக்கு ஒண்ணுமே புரியலை’, என்று என்னைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ள முயன்றார் அவர், ‘இந்தமாதிரி இன்டர்நெட்ல வாங்கற பொருளுக்கெல்லாம் எந்த கேரண்டியும் கிடையாது. இந்தக் கையில வாங்கி, அந்தக் கையில நமக்குக் கொடுக்கறதுக்காக அவனுக்குக் காசு. அவ்ளோதான், மத்தபடி இது பொம்மையா, பொட்டலம் கட்டின களிமண்ணான்னுகூட அவனுக்குத் தெரியாது’

‘அதை நீங்களா ஏன் முடிவு பண்றீங்க?’, என்று ஆவேசமாகத் திருப்பி வாதிட்டேன் நான், ‘இந்தமாதிரி ஒரு பொருள் டேமேஜ் ஆயிடுச்சு-ன்னு நீங்க இன்டர்நெட்ல சொன்னா, அவன் பதில் சொல்லமாட்டானா?’

‘மாட்டான்’, முடிவாகச் சொன்னார் அவர், ‘நீ நினைக்கிறமாதிரி இன்டர்நெட்ங்கறது உங்க ஊர்க் கடைத்தெரு இல்லை. அங்கே போய் அநாவசியமாக் கத்திகிட்டிருக்கிறது வேஸ்ட். நான் என்னோட நேரத்தை அப்படி வீணடிக்கத் தயாரில்லை’

அவ்வளவுதான். அதன்பிறகு பல மணி நேரங்களுக்கு நான் அவரைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதெப்படி ஒரு மனிதருக்கு இப்படி நானூறு ரூபாயை வீணடிக்க மனசு வருகிறது? இதுபோல் அநியாயமாக ஒருவன் காசைப் பிடுங்கிக்கொண்டு ஓட்டைப் பொருளை விற்கும்போது, யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாது என்றால், அதென்ன மண்ணாங்கட்டி இன்டர்நெட்டு?

நினைக்க நினைக்க எனக்குத் தாங்கவில்லை. இந்தப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்க ஏதோ ஒரு வழி நிச்சயமாக இருக்கவேண்டும், அதை ஒழுங்காக விசாரித்துக் கண்டுபிடிக்கத் துப்பில்லாமல்தான் இவர் இப்படி வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று உறுதியாகத் தோன்றியது.

மறுநாள் காலை, ‘நான் இந்த பொம்மையை அதே அட்ரஸுக்குத் திருப்பி அனுப்பப்போறேன்’, என்றேன் அவரிடம்.

‘வேஸ்ட்’, என்றார் அவர் ஒரே வார்த்தையில், ‘நான் வேணும்ன்னா காசு தர்றேன். பத்து கடை ஏறி, இறங்கி, இதேமாதிரி நல்ல பொம்மையைத் தேடி வாங்கிக்கோ. மத்தபடி இதைத் திருப்பி அனுப்பறது, அது ஒழுங்கா மறுபடி திரும்பி வரும்-ன்னு எதிர்பார்க்கறதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்!’

நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. பொம்மையைப் பழைய பெட்டிக்குள் இட்டு ஒட்டிவிட்டு, இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நான் நினைப்பது சரியா, அல்லது அவர் சொல்வதுதான் யதார்த்தமா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், இந்தக் கடிதத்தை நீங்கள் பிரித்துப் படிக்கக்கூட மாட்டீர்கள் என்று அவர் சொல்கிறார். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், என் மனதுக்குப் பட்டதைக் கொஞ்சமாவது சொல்லிவிட்டால்தான் எனக்கு நிம்மதி.

நீங்கள் அனுப்பிய பொம்மை இயங்காததைக் கண்டதும், நான் தவித்தது எனக்குதான் தெரியும். எத்தனை முயன்றாலும், அந்த மன வருத்தத்துக்கெல்லாம் சமமான ஓர் இழப்பீட்டை உங்களால் தரவேமுடியாது.

மேற்படி பொம்மைமீது ஆசை கொண்டவள் நான்தான். என் மகள் அல்ல. ஆகவே, இந்த பொம்மை இயங்காததுகுறித்து அவளுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆசைப்பட்டதைக் குழந்தைக்கு விளையாடத் தரமுடியவில்லையே என்கிற ஏக்கம்தான் எனக்கு. அதற்காகச் செலவழித்த பணம் இப்படி வீணாகிவிட்டதே என்கிற ஆதங்கமும்.

இதே பொம்மையை நான் கடைத்தெருவில் எங்கேயாவது வாங்கியிருந்தால், நிச்சயமாக இப்படி ஓர் ஓட்டைப் பொருளை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன். எந்தக் கொம்பாதிகொம்பனும் என்னை இப்படி ஏமாற்றியிருக்கமுடியாது.

கடைத்தெருவும், இன்டர்நெட்டும் ஒன்றில்லை என்று என் கணவர் வாதிடுகிறார். ஆனால், பிரபஞ்ச நியாயங்கள் அப்படியெல்லாம் இடம், பொருள், ஏவல் பார்த்து மாறாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நீங்கள் உங்கள் கடையை எங்கே விரித்திருந்தாலும், எங்களைப்போன்ற வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் உண்மையாக இயங்குவதுதான் ஒழுங்கு, அதுதான் முறையும்கூட.

உங்களைப்பொறுத்தவரை, இந்த பொம்மைக்கான முழு விலையையும் நாங்கள் பைசா மீதமின்றிச் செலுத்திவிட்டோம். அதற்கேற்ப, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்குத் தரவேண்டியது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் அதில் தவறிவிட்டீர்கள்.

இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, நீங்கள் இந்த ஓட்டை பொம்மையை ஏற்றுக்கொண்டு, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்கும்படி வேண்டுகிறேன்.

ஆண்டவன் எங்களை நன்றாகவே வைத்திருக்கிறான். இன்னொரு நானூறு ரூபாய் செலவழித்து, இதேபோன்ற பொம்மை ஒன்றைத் தேடி வாங்குவது எந்தவிதத்திலும் எங்களுக்குச் சிரமமான விஷயம் இல்லை. ஆனால், வாழ்வில் எல்லாம் நியாயத்துக்குக் கட்டுப்பட்ட ஓர் ஒழுங்கைப் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிற என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கை, உங்களுடைய நேர்மையற்றதன்மையால் குலைவதை நான் விரும்பவில்லை, நீங்களும் விரும்பமாட்டீர்கள் என நம்புகிறேன்.

ஒருவேளை, நீங்கள் இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமலேபோய்விடலாம். அப்படியாயின், இந்த பொம்மையை நான் வாங்கவே இல்லை என்று நினைத்துக்கொண்டுவிடுகிறேன். ஓர் அநீதியின் சாட்சியாக இந்த பொம்மை என்னை வாழ்நாள்முழுதும் உறுத்திக்கொண்டே இருக்கவேண்டாம். அந்தவிதத்திலும், இதைத் திருப்பியனுப்பிவிடுவதுதான் நல்லது என நினைக்கிறேன்.

நன்றிகள்.

என்றும் அன்புடன்,
விமலா.

***

என். சொக்கன்

முன்குறிப்பு: இவை வெண்பாக்கள் அல்ல, வெண்பாம்கள், அதாவது, வெண்பாவின் ஒலி, எதுகை, மோனை, இயைபு போன்றவை இருக்கும், இலக்கணம் அங்கங்கே குறைபடலாம், அது தெரிந்தே செய்யும் பிழை என்பதறிக

1. இலவசமாய் ட்விட்டரில் இன்றே புகுந்திடுநீ
வளவளன்னு பேசலாம் வம்பு

 

2. ஒன்ஃபார்ட்டி எழுத்துகளில் உலகத்தை வலம்வரலாம்
மண்டைக்குள் சரக்கிருந்தா மஜா

 

3. நண்பர்கள் இங்குஉண்டு, நச்சரிப்பும் மிகஉண்டு,
பண்பாளர் பலர்உண்டு, பழகு

 

4. புத்தியில் தோன்றியதைப் பட்டுன்னு எழுதிவைக்கச்
சத்தியமா ட்விட்டர்தான் சிறப்பு

 

5. சுருக்கமா எழுதுதற்கு ஜோரான நெட்ப்ராக்டீஸ்,
வருத்தம்ஏன்? உன்கருத்தை விளம்பு

 

6. இணையத்தில் தென்படும் இனிப்பான மேட்டரெல்லாம்
அனைவர்க்கும் லிங்காக்கித் தா

 

link = URL

 

7. ஆரேனும் ஒருகருத்தை அழகாகச் சொல்லிவிட்டால்,
ஆர்டிசெய் வாழ்த்துவார் அவர்

 

RT = ReTweet

 

8. பேச்சுமட்டும் போதாதா? படங்களும் காட்டிடலாம்
கூச்சமின்றி ட்விட்பிக்கில் குதி

 

Twitpic = Image service for Twitter

 

9. ட்ரெண்டில் வரணுமா, ட்விட்டரில் உன்னுடைய
ஃப்ரெண்ட்ஸை அனுசரித்துப் பரவு

 

Trend = Twitter’s popular topics / people

 

10. அளவாக ட்வீட்டினால் அமுதேதான், அனுபவி,
வளமாகும் நாள்தோறும், வாழ்த்து!

(நன்றி: ‘பண்புடன்’ இணைய இதழ் : http://panbudan.com/story/twittathikaram )

‘கோகுலம்’ சிறுவர் இதழுக்கு இந்த மாதத்துடன் முப்பது வயது தொடங்குகிறது!

இந்த ஆண்டு மலரில் நானும் ஒரு புதிய தொடரை எழுதத் தொடங்குகிறேன். ‘இயங்குவது எப்படி?’ என்ற தலைப்பில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் செயல்படும் விதத்தை எளிமையாக விளக்கும் முயற்சி இது. இந்த மாதம் செல்பேசி, அடுத்த மாதம் தொலைக்காட்சி.

வாய்ப்பிருந்தால் வாசியுங்கள், முக்கியமாக உங்கள் ஜூனியர்களை வாசிக்கச் சொல்லுங்கள், நன்றி 🙂

***

என். சொக்கன் …
01 02 2012

20120201-020235.jpg


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2012
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
272829