நார்வேக் குழந்தைகள்
Posted March 22, 2012
on:- In: Guest Post | Kids | Learning | Life | Uncategorized
- 7 Comments
கடந்த சில மாதங்களாகவே இந்தியச் செய்தி ஊடகங்களில் அதிகம் அடிபட்ட ஒரு நாடு, நார்வே. அங்கு வாழும் இந்தியக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த குழந்தைகள் அதன் பெற்றோரிடமிருந்து பறிக்கப்பட்டதும், அதற்குச் சொல்லப்பட்ட காரணங்களும் இங்கே பரவலான விவாதங்களைக் கிளப்பின. குறிப்பாக, ‘எங்க குழந்தைகளை வளர்க்க எங்களுக்குத் தெரியாதா? அதைச் சொல்ல நார்வேக்காரன் யாரு?’ என்கிற கோபம்.
இந்த விஷயத்தில் உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்த்து ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையிலிருந்து பார்த்தால், நிஜமாகவே நார்வேக் குழந்தைகள் வளர்க்கப்படும் முறையில் ஏதேனும் விசேஷத் தன்மைகள் உண்டா என்கிற கேள்வி எழுகிறது. ஒருவேளை அப்படி ஏதாவது இருந்தால் தெரிந்துகொள்ளலாமே என்று யோசித்தேன். நார்வேயில் வாழும் தமிழ்க் குடும்பங்களைப் பற்றி ட்விட்டரில் விசாரித்தேன். தோழி ரம்யா வாயிலாக சுசி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் மின்னஞ்சலில் இதுபற்றிக் கேட்டிருந்தேன்.
சில நாள் கழித்து, எனக்கு ஒரு விரிவான மெயில் வந்தது, சில மணி நேரம் கழித்து, இன்னொரு விரிவான மெயில், அப்புறம் இன்னொன்று, நார்வேயின் சூழல், அங்கே குழந்தைகள் வளரும் விதம் என்று சகலத்தையும் நுணுக்கமான தகவல்கள், தன்னுடைய சொந்தக் கருத்துகள், அனுபவங்களுடன் தெளிவாகப் புட்டுப்புட்டு வைத்துவிட்டார் சுசி. ஒரு casual enquiryக்கு இத்தனை அக்கறையான பதில் மொழியா என்று அசந்துபோனேன்.
இந்த விஷயங்கள் எல்லாருக்கும் பயன்படும் என்கிற நம்பிக்கையில், அவரது அனுமதியுடன் அந்தக் கடிதங்களை (அவரது மொழியிலேயே, நான் எந்த மாற்றங்களும் செய்யவில்லை) தொகுத்து ஒரு கட்டுரை வடிவில் இங்கே பிரசுரிக்கிறேன். சுசி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய வலைப்பதிவு இங்கே : http://yaavatumnalam.blogspot.com/
இதுபோல் நீங்கள் வாழும் நாட்டில் கவனித்த / கவர்ந்த குழந்தை வளர்ப்பு முறைகள் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். நன்றி.
***
என். சொக்கன் …
22 03 2012
****************************
குழந்தை வளர்ப்பு @ நார்வே
****************************
சுசி
****************************
முன்குறிப்பு:
சட்டதிட்டங்களை முன் வைத்தோ/அதன் அடிப்படையிலோ நான் இதை எழுதவில்லை. நான் பார்த்த/கேட்ட விஷயங்களை வைத்துக்கொண்டு மீண்டும் என் கலீக்ஸ் சிலரோடு அவற்றை சரி பார்த்துக் கொண்டு எழுதுகிறேன். இவர்கள் வளர்ப்பு முறையில் நன்மைகளே அதிகம். எனக்குத் தெரிந்தவரை தீமை என்பது தேடித்தான் பார்க்க வேண்டும். அப்படி எதுவாவது எழுதும்போது வந்தால் குறிப்பிடுகிறேன். அல்லது எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் குறிப்பிடுகிறேன். முழுவதும் என் கண்ணோட்டத்தில் எழுதுகிறேன். எங்கள் குடும்பத்திலும் பெரும்பாலும் இதே முறைகளை நானும் கணவரும் கடைப்பிடிக்கிறோம்.
1.
– குழந்தை பிறந்து வீட்டுக்கு வந்ததும் பெற்றோர் கட்டிலை ஒட்டி தனியான கட்டிலில் (crib) தூங்க வைக்கிறார்கள். இங்கே மூடிய வீடுகள், அதிலும் குளிர்காலம் வந்தால் ஹீட்டர் வெப்பமும் இருக்கும். எனவே குழந்தைக்கு சுத்தமான சுவாசம் கிடைப்பதற்கான ஏற்பாடு இது. கூடவே குளிருக்குப் போர்த்தும் தடித்த போர்வைகளால் (duvet) குழந்தை மூடப்படும் அபாயம் இருப்பதும் ஒரு காரணம்.
– பெண்கள் பேறுகால விடுப்பு முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்ததும் குழந்தைக்குத் தனி அறை கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் ஒரு வயதுக்கு மேல். வீட்டு வசதிக்கேற்ப சகோதரங்களோடு அறை பகிர்ந்துகொள்ளவும்படுகிறது. தனியே விடப்படும் குழந்தை தூங்கும் வரை கதை சொல்லல், புத்தகம் வாசித்தல், பாடல் கேட்டல், பாடுதல் எனக் கூடவே இருக்கிறார்கள். இரவில் விழித்தாலோ, விடுமுறை நாட்களிலோ குழந்தை பெற்றோரின் அறையில் தூங்குகிறது. இந்த வழக்கம் வளர்ந்தாலும் பிள்ளை விரும்பும்வரை தொடரும்.
– தனி அறைக்குக் குழந்தை பழக்கப்பட நாளானால் பொறுமையோடு முயற்சி செய்கிறார்கள். ஆனால் அழுது அடம்பிடிக்கும் குழந்தையை மீண்டும் பெற்றோர் அறையில் தூங்க வைப்பதில்லை.
– இந்தத் தனி அறையால் வளர வளர நிறைய விஷயங்களை குழந்தை கற்றுக் கொள்கிறது. துப்பரவு, விரும்பியபடி அறைக்கானவற்றை தேர்வு செய்தல், தன் பொருட்களில் கவனம் போன்ற சுயமுடிவுகள் எடுக்கக் கற்றுக் கொள்கிறது.
– வளர்ந்ததும் பெற்றோரின் சரியான கண்காணிப்பு இல்லாவிட்டால் இந்தத் தனிமை தவறான முறையில் போக வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே பெற்றோர் பிள்ளைகளுக்கும் தமக்கும் இடையில் இடைவெளி வந்துவிடாமல் நண்பர்கள் போல பழகுகிறார்கள்.
2.
– குழந்தை தானாக உணவை உண்ண முயற்சிக்கும்போது அதை அனுமதிக்கிறார்கள். பக்கத்தில் இருந்து உண்ணும் அளவை கவனிக்கிறார்கள். உணவு என்பது சாப்பாட்டு மேசையில்தான் என்பதை குழந்தையில் இருந்தே அது அறிந்து கொள்கிறது. அதனால் ஆரம்பத்தில் கொட்டிச் சிந்தும் குழந்தை நாளாகப் பழகிக் கொள்கிறது. குடிப்பது கூட இப்படித்தான். தானே பழக வழிவகுத்து அதே நேரம் சரியான அளவில் குடிக்கிறதா என்றும் பார்த்துக் கொள்கிறார்கள்.
– பிள்ளைக்குப் பிடிக்காத உணவை அது சத்துணவாக இருந்தால் முழுவதும் ஒதுக்காத வகையில் பார்த்துக் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு மீட் பாலோடு குடுக்கப்படும் சாலட் குழந்தை முதல் தடவை முழுவதும் சாப்பிட்டால் அடுத்த மீட் பால் தனியே சாப்பிடலாம்.
– வளர வளர காலை, மாலை உணவை பிள்ளை விரும்பினால் இடையிடையே தன் அறையிலோ, ஹாலிலோ இருந்து சாப்பிடலாம். ஆனால் டின்னர் குடும்பம் ஒன்றாக இருந்து சாப்பாட்டு மேசையில் சாப்பிடுவார்கள் (இங்கே டின்னர் மாலை 4 மணி போல் சாப்பிடுவோம்)
– எல்லோரும் சாப்பிட்டு முடியும் வரை காத்திருத்தல், பிடிக்காத உணவை விருந்தினர் முன் சத்தமாக சொல்லாதிருத்தல் போன்ற table manners குழந்தை இங்கே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.
3.
– வீட்டு வேலைகளில் குழந்தையும் ஈடுபடுத்தப்படுகிறது. தன் விளையாட்டுப் பொருட்களை எடுத்த இடத்தில் அடுக்கி வைத்தலில் ஆரம்பித்து வயதுக்கேற்ப பங்களிப்பைச் செய்கிறது.
4.
– சாக்லெட், கேண்டி, சிப்ஸ், ஐஸ்க்ரீமுக்கு வார இறுதியில் மட்டுமே அனுமதி. எப்போதாவது வாரநாட்களில் பிறந்தநாள்,விருந்தினர் போன்றவற்றுக்காக அனுமதி உண்டு. குழந்தையே அதற்குரிய இடத்தில் வைக்கவும், பின்னர் வார இறுதியில் எடுத்து உண்ணவும் பழக்கப்படுத்துகிறார்கள்.
– கோடைகாலத்தில் தினமும் ஐஸ்க்ரீம் உண்டு 🙂
5.
– மொபைல், கம்பியூட்டர், டீவி, எக்ஸ்பாக்ஸ் போன்ற கேம்ஸ் பாவனை பெற்றோருக்கு பெற்றோர் வேறுபடுகிறது. சிலர் நேரக்கட்டுப்பாடோடு எல்லாவற்றையும் கொடுக்கிறார்கள். சிலர் கட்டுப்பாடில்லாமல் அதே நேரம் அதிக நேரம் பாவிக்காமல் பார்த்து கவனித்துக் கொள்கிறார்கள் (நாங்கள் இப்படித்தான்)
– சிலர் இத்தனை வயதுக்கு மேல்தான் இது என்பது போல் வைத்திருக்கிறார்கள். அதே நேரம் யாரிடமிருந்தாவது பரிசாகக் கிடைத்தாலோ அல்லது பிள்ளையாகப் பணத்தை சேமித்து வாங்கினாலோ தடை சொல்வதில்லை. ஆனால் பாவனை நேரம் மட்டுப்படுத்தப்படுகிறது.
– சிலர் இவற்றை பிள்ளைகளின் அறைக்குள் வைத்திருக்காமல் பொதுவான இடத்தில் வைத்திருக்கிறார்கள்.
6.
– குழந்தையில் இருந்தே நண்பர்களோடு சேர்வதை ஊக்கப்படுத்துகிறார்கள்.
– பிள்ளை நண்பர் வீட்டுக்கு போனாலோ, நண்பர்கள் பிள்ளை வீட்டுக்கு வந்தாலோ அந்தந்த இடத்தில் இருக்கும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக விளையாடி முடிய அடுக்கி வைத்தல், சோஃபா கட்டிலில் குதித்தல் போல அத்தனையும் வயதுக்கேற்ப.
– வளர்ந்த பிள்ளைகளின் நண்பர்களுக்கு குடி, புகைத்தல் பழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படும்பட்சத்தில் அவர்களின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் சொல்லப்படும். பிள்ளையின் நட்பை முறித்துக்கொள்ளச் சொல்லப்படுவதில்லை. ஆனால் கவனமாக இருக்கும்படி சொல்லப்படும்.
– நண்பர்களோடு வெளியே, நண்பர்கள் வீட்டுக்கு, பார்ட்டிகளுக்குச் செல்லும்போது சொன்ன நேரத்துக்கு வரவேண்டும். அல்லது தாமதமாகும் என்பதை அறியத்தர வேண்டும். இல்லையென்றால் பெற்றோர் சென்று அழைத்து வருவர்.
7.
– பிள்ளைகளுக்குக் காதல் இருப்பதில் தடை இல்லை. காதலன்/காதலி எப்படிப்பட்டவராக இருந்தாலும் தடை இல்லை. ஆனால் உனக்கு பொருத்தம் இல்லை அல்லது குணம், பழக்கவழக்கம் சரி இல்லை போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் மட்டும்.
8.
– குழந்தையில் இருந்தே காரணம் எதுவாக இருந்தாலும் அடம்பிடித்தலுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. உதாரணத்துக்கு தேவை இல்லாத ஒன்றை வாங்க குழந்தை அழுமானால் சொல்லுவார்கள். அழுகையை நிறுத்தும் வரை காத்திருப்பார்கள். முடியாத போது உடனேயே வீட்டுக்கு போய்விடுவார்கள்.
9.
– பிள்ளைகளுக்குப் பிடித்த ஆக்டிவிட்டீஸில் சேர்த்துவிடுகிறார்கள். football, handball, skating, gymnastics, etc..
– பிடித்த இசைக்கருவி, சங்கீதம் கற்றுக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.
– பள்ளியில் ஆசிரியர்களோடு நல்ல தொடர்பில் இருக்கிறார்கள்.
– பள்ளியானாலும், மற்றவையானாலும் போட்டிகளிலும், விழாக்களிலும் தவறாது கலந்துகொள்கிறார்கள்.
10.
– விவாகரத்தான பெற்றோரிடம் பிள்ளை தீர்மானித்துக் கொண்டதுக்கேற்ப போய் வருகிறது.
– மறுமண விஷயத்தில் பிள்ளையின் விருப்பமும் கவனத்தில் எடுக்கப்படுகிறது.
11.
– விடுமுறை, சுற்றுலா நேரங்களில் பிள்ளையின் விருப்பங்களை கவனத்தில் எடுக்கிறார்கள்.
– பிள்ளையின் சந்தோஷம் கருதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறார்கள்.
12.
– ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பிள்ளைக்காக ஒதுக்கப்படுகிறது.
– ஷாப்பிங்கில் பிள்ளைகளும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
13.
– பிள்ளைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டங்கள்/விழாக்கள் முக்கியப்படுத்தப்படுகின்றன. அவர்களால் முடியாதபோது மற்றவர் உதவியோடு பிள்ளையை கலந்து கொள்ள வைக்கின்றனர். உதாரணத்துக்கு என் மகன் ஃபுட்பால் மேச்சுக்கு எங்களால் போக முடியாவிட்டால் அவர் ஃப்ரெண்டின் பெற்றோரிடம் கேட்டு அனுப்பி வைப்போம். அல்லது போகும்போது ஃப்ரெண்டையும் சேர்த்து நாங்கள் கூட்டிச் சென்றால் அழைத்து வருவது அவர்களாக இருக்கும்.
14.
– பிள்ளைகள் இருக்கும் பார்ட்டிகளில் மதுபானம் பாவிப்பதில்லை. வீட்டில் பிள்ளைகளின் முன் குடிப்பதும் இல்லை.
– விருந்துகளின்போது வைன் மட்டும் குடிக்கிறார்கள்.
15.
– பிள்ளை அடம்பிடிக்கும்போது, தவறு செய்யும்போது முதலில் இப்படி செய்யக் கூடாது என்று சொல்லப்படும்.
– பின்னர் பிள்ளையின் வயதுக்கேற்ப சாக்லெட் தடை, time out, பாக்கெட் மணி குடுக்காமல் விடுதல் எனத் தொடங்கி அதிகபட்சம் house arrest குடுக்கப்படுகிறது.
– அவர்கள் செய்யும் சின்னச் சின்ன வீட்டு வேலைகளுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. அதை பாக்கெட் மணியாகவோ சேமிப்பாகவோ வைக்கலாம்.
16.
பொதுவான சில விஷயங்கள்.
– பிள்ளைகள் மரியாதை தெரிந்தவர்களாக வளர வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார்கள்.
– எதிர்காலத்தில் பிள்ளை நல்ல வழியில் போக/வாழ எப்போதும் வழிகாட்டியாக இருக்கிறார்கள்.
– குழந்தையில் இருந்து பதினெட்டு வயதுவரை வீட்டில் முடிவெடுப்பது பெற்றோர்தான்.
– பதின்ம வயது வந்ததும் பிள்ளையிடம் இருந்து எதையும் ஒளிப்பதில்லை. மனம்விட்டுப் பேசுகிறார்கள்.
– பதினெட்டு வயதின் பின் பிள்ளை படிப்பை விடுத்து வேலை தேடிக்கொள்ளுமாயின் பெற்றோரோடு தங்கும்பட்சத்தில் தானும் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும். அல்லது வெளியே போய் தன் காலில் வாழலாம்.
– ஈஸ்டர், கிறிஸ்மஸ், வீட்டு விசேசங்கள் போன்றவற்றில் எல்லோரும் ஒன்றாகச் சேர்கிறார்கள். குறிப்பாக கிறிஸ்மஸ்.
– அன்றாடம் நடக்கும் எல்லா விஷயங்களிலும் பிள்ளைகள் குழந்தையிலிருந்தே ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
17.
நேரம்.. குழந்தையில் இருந்தே நேரத்தோட அவசியத்தை புரிய வைக்கிறாங்க.. உதாரணமா ஏழு மணிக்கு பெட் டைம்னா குழந்தைக்கு தூக்கம் வரலைன்னாலும் அதனோட பெட்ல இரவு ஆடையோட இருக்கும்.. தூங்கும் வரை விளையாட்டும் பாட்டும் கதையுமாக போனாலும் அது அதனோட பெட்ல தான் இருக்கும்..
18.
எதையும் அது யாருடையதாக இருந்தாலும் அனுமதியோடு செய்யும் பழக்கம்.
அதே போலவே சின்ன விஷயமாக இருந்தாலும் முடிவு எடுப்பது அப்பாவும் அம்மாவும் சேர்ந்தே என்பதைக் குழந்தை தானாகவே புரிந்து கொள்கிறது. பெற்றார் எனக்கு பிரச்சனை இல்லை அப்பா/அம்மாவிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று சொல்லத் தவறுவதில்லை. அதே சமயம் ஒருவருக்கு உடன்பாடில்லையென்றால், காரணமும் சரியாக அமைந்தால் அவர் கருத்துக்கு/முடிவுக்கு ஏற்ப முடிவை மாற்றிக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் குழந்தை பழகிக்கொள்கிறது.
7 Responses to "நார்வேக் குழந்தைகள்"

நல்ல பகிர்வு…தல அவர்களுக்கும் சுசி அக்கா அவர்களுக்கும் நன்றிகள் 😉


its pretty much same here in USA too. when parents deny some activity for kid, they do say so with an explanation as to why the kid can not do that. Parents do have to agree on date/ BF or GF.


மிக அருமையாக எழுதியிருக்கிறார் சுசி.
இப்படியொரு அற்புதமான அவசியமான கட்டுரையை பலருக்கும் பயனாகும் வகையில் வெளிவரக் காரணமாக இருந்த தங்களுக்கும் நன்றி.


ஏனோ எனக்கு உடன்பாடில்லை. நம் கலாச்சாரம் வேறு. நம் குழந்தை வளர்ப்பில் என்ன குறை? நாம வளர்த்த குழந்தைகள் வளர்ந்து சாதனை படைக்கவில்லையா? நன்றி


அண்ணா, ஸ்வீடன்லையும் வெளி இடங்களில், குட்டி குழந்தைங்க கிட்ட இவங்க negotiate செய்றது பார்க்க நல்லா இருக்கும். பெரியவங்க கிட்ட எப்டி பேசுவோமா, அப்படியே பேசி புரிய வைப்பாங்க..

1 | rathnavelnatarajan
March 23, 2012 at 7:42 am
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.