மனம் போன போக்கில்

Archive for the ‘Awards’ Category

இன்று காலை ஒரு வித்தியாசமான தொலைபேசி அழைப்பு.

வலங்கைமான் என்ற ஊரில் இருந்து ஒரு முதியவர் பேசினார். அவர் தனது பெயரைச் சொல்லவில்லை. எப்படி என்னுடைய தொலைபேசி எண் கிடைத்தது என்பதையும் சொல்லவில்லை. பரபரவென்று தன்னுடைய சொந்தக் கதையை விவரித்துச் சென்றார்.

அந்தக் காலத்தில் அவருடைய தந்தை யாரிடமோ நூற்றைம்பது ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அதை ஒழுங்காகத் திரும்பச் செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவன் போலிஸில் புகார் தந்துவிட்டான். அவர்கள் இவரைப் பிடித்துச் சிறையில் போட்டார்கள்.

அப்போது நூற்றைம்பது ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. இவர்கள் நடுத்தரவர்க்கத்துக்கும் கீழே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். எந்தவிதத்திலும் அதை உடனடியாகப் புரட்டமுடியாத சூழ்நிலை.

இதனால், இவருடைய தந்தை மூன்று நாள்கள் சிறையிலேயே இருந்திருக்கிறார். ’பணத்தை வட்டியோடு திரும்பச் செலுத்தாவிட்டால் விடுதலை செய்யமுடியாது’ என்று போலிஸ் கண்டிப்பாகச் சொல்லிவிட்டது.

மூன்றாவது நாள் மதியம், இவருடைய ஏழு வயதுத் தம்பி தெருவில் சில தோழர்களோடு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். ’கண்ணாமூச்சி’ ஆட்டத்தில் ஒளிந்துகொள்வதற்காக ஒரு மரத்தின்மேல் ஏறப் பார்த்திருக்கிறார். அங்கே இருந்த ஒரு பொந்தில் மஞ்சள் பை ஒன்று கிடைத்தது. திறந்து பார்த்தால் ஏகப்பட்ட காசு.

அவர் பதற்றத்தோடு வீட்டுக்கு ஓடி வந்து பையைக் கொடுக்க, இவர்கள் அதை எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். சரியாக ரூ 200/- இருந்ததாம். நேராகக் காவல்நிலையத்துக்குச் சென்று பணத்தைக் கட்டி அவரது தந்தையை விடுவித்துவிட்டார்கள்.

வலங்கைமான் பெரியவர் இந்தக் கதையை ஆர்வமாக விவரித்துக்கொண்டிருக்க, எனக்குத் தலை கிறுகிறுத்தது. ‘இதையெல்லாம் என்கிட்ட ஏன் சார் சொல்றீங்க? எனக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால் அவர் என்னைப் பேசவிடவே இல்லை. கதையைத் தொடர்ந்தார்.

வீட்டுக்கு வந்த தந்தை ‘அந்தப் பணம் எப்படிக் கிடைத்தது?’ என்று கேட்டாராம். இவர்கள் கதையைச் சொன்னதும் கன்னாபின்னா என்று திட்டினாராம். ‘யாருடைய காசையோ திருடி என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நான் ஜெயிலிலேயே கிடப்பேன்’ என்று ஆவேசப்பட்டவர் மீண்டும் காவல்நிலையத்துக்குச் சென்று உண்மையைச் சொல்ல முடிவெடுத்திருக்கிறார்.

அதற்குள், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அவரைச் சமாதானப்படுத்தி உட்காரவைத்திருக்கிறார்கள். ‘நீங்க மறுபடி ஜெயிலுக்குப் போனா கடனைத் திரும்பச் செலுத்தாத குற்றத்துக்காக உங்களுக்குத் தீவாந்திர சிட்சைதான் கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அவ்வளவுதான். அவர் ஸ்விட்ச் அணைத்தமாதிரி ஆஃப் ஆகிவிட்டார். போலிஸ் ஸ்டேஷனுக்குச் செல்லும் முடிவையும் உடனே கைவிட்டார்!

இந்த மேட்டரெல்லாம் நடந்தபோது (என்னிடம் பேசிய) பெரியவருக்கு வயது பன்னிரண்டு. ‘தீவாந்திர சிட்சை’ என்றால் என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அப்பாவிடம் கேட்கப் பயம்.

’அப்புறம் அந்த விஷயமே எனக்கு மறந்துபோச்சு’ என்றார் அவர். ’அன்னிக்கு 150 ரூபாயைத் திரும்பச் செலுத்தமுடியாம ஜெயிலுக்குப் போன எங்கப்பா அப்புறம் கடன் எதுவும் வாங்காம கௌரவமா வாழ்ந்தார். அவரோட பிள்ளைங்க எல்லாம் நல்லாப் படிச்சுப் பெரிய வேலைக்குப் போனோம். இன்னிக்கு எங்க வாரிசுங்க லட்சத்தில சம்பாதிச்சுகிட்டு வசதியா இருக்காங்க!’

‘ஆனா, ஒருவேளை அன்னிக்கு அந்த மஞ்சள் பை கிடைக்காம இருந்திருந்தா, எங்கப்பாவை அந்தமானுக்கு நாடு கடத்தியிருப்பாங்க. ’தீவாந்திர சிட்சை’ன்னா எப்படிப்பட்ட விஷயம்ன்னு எனக்கு அப்போ புரியலை. ரொம்ப நாள் கழிச்சு நேத்து உங்க புக் படிச்சபோது விளக்கமாத் தெரிஞ்சுகிட்டேன். எப்பேர்ப்பட்ட அவஸ்தையிலிருந்து எங்கப்பாவும் எங்க குடும்பமும் தப்பிச்சிருக்கோம்ன்னு புரிஞ்சுகிட்டேன். அதான் உங்ககிட்ட பேசணும்ன்னு தோணிச்சு. கிழக்கு பதிப்பக ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி உங்க நம்பர் வாங்கினேன்!’

ஒருவழியாக, புதிர் அவிழ்ந்தது. பெரியவருக்கு நன்றி!

***

என். சொக்கன் …

09 03 2011

பின்குறிப்பு 1: இந்த மேட்டரை ப்ளாகில் எழுதலாமா, அல்லது ‘அண்ணல்’போல ஆகிவிடுமா என்று ரொம்ப யோசித்தேன். பெரியவர் என் புத்தகத்தை ஒரு வரிகூடப் பாராட்டவில்லை. ஆகவே, சுவாரஸ்யமான கதை என்ற அடிப்படையில் எழுதலாம் என முடிவெடுத்தேன். வெட்டி பந்தாவாகத் தோன்றினால் என்னை மன்னித்துக் கடைசி இரண்டு பத்திகளை எச்சில் தொட்டு அழித்துவிடவும் Winking smile

பின்குறிப்பு 2: இப்போது யோசிக்கும்போது, அவர் சொன்ன கதையில் ஏதோ உதைக்கிறது. இந்தப் பெரியவருக்கு வயது 70 என்று வைத்துக்கொண்டால்கூட, அவர் பிறந்தது 1941ல். சம்பவம் நடந்தபோது அவருக்குப் பன்னிரண்டு வயது என்றால் 1950+. அப்போது இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்துவிட்டது. அந்தமான் சிறை பயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தாத்தாவின் கதையை அப்பா என்று மாற்றிச் சொல்லிவிட்டாரோ?

அண்ணாந்து பார்!

திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய அண்ணா நூற்றாண்டு இலக்கியப் போட்டிகளில் நான் எழுதிய   ‘அண்ணாந்து பார்’ (அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு) நூல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

’அண்ணா’ந்துபார் உள்பட, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஏழு நூல்கள் இந்தப் பரிசுக்குத் தேர்வாகியுள்ளன. முழுப் பட்டியல் இங்கே: http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_17.html

கூடுதல் விவரங்கள், புத்தகம் வாங்க:

http://nhm.in/shop/978-81-8368-006-6.html

http://www.amazon.com/Annandhu-Paar-Tamil-Mr-Chokkan/dp/8183680062/ref=sr_1_5?ie=UTF8&s=books&qid=1234843714&sr=1-5

***

என். சொக்கன் …

17 02 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 638,057 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930