சொல்டிங்
Posted on: May 3, 2013
- In: இலக்கணம் | Learning | Poetry | Tamil | Uncategorized
- 11 Comments
இன்று காலை ’யாப்பருங்கலக் காரிகை’யைப் புரட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ ஒரு பக்கத்தில் ‘இரண்டு உலோகங்களை இணைத்துப் பற்றவைக்கும்போது…’ என்று ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன்.
இதென்ன இலக்கணப் புத்தகமா, அல்லது எஞ்சினியரிங் புத்தகமா? மரபுக் கவிதை எழுதச் சொல்லித்தரும் நூலில் வெல்டிங் மேட்டரெல்லாம் எப்படி நுழைந்தது.
குறுகுறுப்பில் அந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தேன். அந்த வெல்டிங் சமாசாரம் எத்துணை பொருத்தமாக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று வியந்துபோனேன்.
அதைச் சொல்வதற்குமுன்னால், வெண்பாபற்றிய சில அடிப்படை விஷயங்களைப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் ‘வெல்டிங்’குக்கும் இலக்கணத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாது.
வெண்பாவில் மிகச் சிறியது, குறள், அதாவது இரண்டே வரிகள், ஏழே வார்த்தை(சீர்)களில் விஷயத்தைச் சொல்லி முடித்துவிடவேண்டும். அதற்குள் எதுகை வேண்டும், மோனை வேண்டும், வெண்பாவுக்கு உரிய மற்ற இலக்கண வரையறைகளுக்கும் கட்டுப்படவேண்டும்.
இதற்கு உதாரணம் தேடி அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. திருக்குறள்முழுவதுமே குறள் வெண்பாக்களால் ஆனதுதான்.
ஒரு விஷயம், ‘ஏழு வார்த்தை’ என்று ஒரு வசதிக்காகச் சொல்கிறோமேதவிர, உண்மையில் குறள் வெண்பாவில் ஏழைவிடக் குறைவாகவோ அதிகமாகவோ வார்த்தைகள் இருக்கலாம், அவற்றை ஏழு சீர்களாகப் பகுத்துவைப்பார்கள். அவ்வளவுதான்.
உதாரணமாக, ‘கசடற’ என்று திருக்குறளில் வருவது ஒரு சீர், ஆனால் உண்மையில் அது ‘கசடு அற’ என்று இரு வார்த்தைகளாகப் பிரியும்.
இதற்கு நேர் எதிராக, ‘வந்தனையோ’ என்பது ஒரே வார்த்தைதான், ஆனால், மரபுக்கவிதை விதிமுறைகளுக்கேற்ப அது ‘வந்த னையோ’ என்று இரு சீர்களாகப் பிரியக்கூடும்.
ஆக, வார்த்தையும் சீரும் ஒன்றல்ல. அதை இங்கே இன்னும் விரிவாக விளக்க முற்பட்டால், இந்தக் கட்டுரையின் நோக்கம் சிதறிவிடும். ஆகவே, இப்போதைக்கு இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இதற்குமேல் நான் ‘வார்த்தை’ என்று எங்கே குறிப்பிட்டாலும், அதைச் ‘சீர்’ என்றே எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக, 3 வரி வெண்பா, நாம் அதை சாய்ஸில் விட்டுவிட்டு, நேரடியாக 4 வரிக்குத் தாவுவோம்.
நான்கு வரி வெண்பாக்களில் இரண்டு வகை, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா.
இதில் இன்னிசை வெண்பாவும் குறள் வெண்பாவும் look alike அண்ணன், தம்பிமாதிரி, அங்கே ஏழு வார்த்தை, இங்கே பதினைந்து வார்த்தை, அது ஒன்றுமட்டும்தான் வித்தியாசம், மற்றபடி எல்லா இலக்கண வழிமுறைகளும் அச்சு அசல் அப்படியே.
உதாரணமாக, நள வெண்பாவிலிருந்து இந்தப் பாடல்:
ஈர மதியே, இளநிலவே, இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன் மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று
ஒரு பெண் நிலவைப் பார்த்துப் பாடும் இந்தப் பாட்டின் சுருக்கமான பொருள், ’ஏய் நிலாவே, நான்பாட்டுக்கு கெடக்கேன், நீ ஏன் திடீர்ன்னு வந்து என்னைத் தாக்கறே? எனக்குத் தெரியும், அந்த மன்மதன்தான் உன்னை இங்கே அனுப்பிவெச்சிருக்கான்!’
நேரிசை வெண்பாவிலும் அதே பதினைந்து வார்த்தைகள்தான், ஆனால் ஒரு வித்தியாசம், இன்னிசை வெண்பாவைப்போல் அவை ஒரே தொடராக வராது, பதினைந்து வார்த்தைகளும் 7 + 1 + 7 என்று பிரியும்.
அதாவது, முதல் ஏழு, ஒரு குறள் வெண்பா, அப்புறம் ஒரு தனிச்சொல், பின்னர் வரும் அடுத்த ஏழு, இன்னொரு குறள் வெண்பா.
உதாரணமாக, ஔவையாரின் மிகப் பிரபலமான இந்தப் பாடல்:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
இதில் முதல் 7 வார்த்தைகள்மட்டும் (பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை / நாலும் கலந்துனக்கு நான்தருவேன்) தனியே ஒரு குறள்மாதிரி இருக்கும், அடுத்த 7 வார்த்தைகள் (துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்/ சங்கத் தமிழ்மூன்றும் தா) தனியே இன்னொரு குறள்.
இந்த இரண்டுக்கும் நடுவே, இரட்டைக் கதாநாயகி சப்ஜெக்டில் மாட்டிய பாக்யராஜ்மாதிரி திருதிருவென்று விழித்துக்கொண்டு ‘கோலஞ்செய்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறதல்லவா? அதைத் ’தனிச்சொல்’ என்பார்கள், இந்தப் பக்கமும் சேராது, அந்தப் பக்கமும் சேராது, ஆனால் இரண்டையும் இணைப்பது அதுதான் (ச்சே, அந்த பாக்யராஜ் உதாரணம் செல்லாது, எச்சில் தொட்டு அழித்துவிடுங்கள்!)
இப்போது, செய்யுள் இலக்கணத்தில் ‘வெல்டிங்’ எப்படி வந்தது என்று புரிந்திருக்கும், முதல் 7 வார்த்தைகள் ஓர் உலோகப் பட்டை, அடுத்த 7 வார்த்தைகள் ஓர் உலோகப்பட்டை, இரண்டையும் சேர்த்துப் பற்றவைக்கிறபோது அதற்கு இன்னோர் உலோகம் தேவைப்படும், அது அந்த இடத்தில் (Welding point) சிறு புடைப்புமாதிரி தெரியும், அதுதான் தனிச்சொல்.
‘வெல்டிங்’குக்கு இணையாக வேண்டுமானால், இதற்குச் ‘சொல்டிங்’ என்று பெயர் சூட்டிக்கொள்ளலாம், இதைப் பயன்படுத்தி எந்த இரு குறள் வெண்பாக்களையும் இணைத்து நேரிசை வெண்பாவாக்கிவிடலாம்.
உதாரணமாக, இந்த இரு குறள்களைப் பாருங்கள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
அதாவது, வானத்திலிருந்து மழைத்துளிமட்டும் விழாவிட்டால் போச்சு, பூமியில் ஒரு பசும்புல்லைக்கூடப் பார்ப்பது சிரமம்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
அதாவது, மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை, மனிதர்களிடையே ஒழுக்கமும் இல்லை.
இந்த ஒரு குறள்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதானே, சும்மா சொல்டிங் செய்து நேரிசை வெண்பாவாக்கிப் பார்ப்போமா?
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது, பசும்பொன்னே
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
அவ்வளவுதான், வெண்பா இலக்கணத்துக்குப் பொருத்தமாகவும், ‘விசும்பு’, ‘பசும்புல்’க்கு எதுகையாகவும் ’பசும்பொன்னே’ என்கிற ஒரு சொல்லைச் சேர்த்ததும், திருவள்ளுவர் எழுதிய இந்த இரு குறள் பாக்களும் நேரிசை வெண்பாவாகிவிட்டன.
ஆனால், எல்லாக் குறள் வெண்பாக்களையும் இப்படி நேரிசை வெண்பாவாக்கமுடியாது. உதாரணமாக, இந்தக் குறளைப் பாருங்கள்:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
இந்தக் குறளின் 7வது சொல், ‘தலை’ என்று வருகிறது, இதை ‘ஓரசைச் சீர்’ என்பார்கள், அது வெண்பாவின் நிறைவுச் சொல்லாக வரலாம், நடுவில் வரக்கூடாது.
ஆகவே, நாம் இந்தக் குறளை நேரிசை வெண்பாவின் இரண்டாவது பகுதியாக வைத்தால் பிரச்னையில்லை, அது 15வது சொல்லாக (அதாவது, நிறைவுச் சொல்லாக) சென்று உட்கார்ந்துவிடும்.
ஒருவேளை, நாம் இதை ஆரம்பத்தில்தான் வைப்போம் என்று அடம் பிடித்தால்? ‘தலை’ என்பது நேரிசை வெண்பாவின் நடுவில் (அதாவது 15 சொல் உள்ள வெண்பாவில் 7வது சொல்லாக) வராதே!
அதற்கு, அந்தத் ’தலை’யோடு நாம் வேறெதையாவது சேர்த்து கொஞ்சம்போல் அட்ஜஸ்ட் செய்யவேண்டும். இதோ, இந்தமாதிரி:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலையாகும், நல்லவனே,
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
இங்கே ‘தலை’ வெண்பாவுக்கு மத்தியில் வராது என்பதால், அதற்குப் பக்கத்தில் ‘ஆகும்’ என்று ஒரு எக்ஸ்ட்ரா சொல்லைச் சேர்த்து, அதை வெண்பாவுக்கு மத்தியில் வரச் செய்திருக்கிறோம், கூடவே ‘நல்லவனே’ என்ற சொல்லைச் சேர்த்து சொல்டிங் செய்திருக்கிறோம்.
இந்த ‘ஆகும்’ என்ற எக்ஸ்ட்ரா சொல்லுக்கு, ‘ஆசு’ என்று பெயர்.
தமிழில் ‘ஆசு’ என்றால் குற்றம் என்று அர்த்தம். அதாவது, அந்த இரு உலோகத் துண்டுகள் (குறள்கள்) ஒன்று சேர்வதற்காக, அவற்றினிடையே தேவையில்லாத ஒரு ‘ஆசு’ சேர்க்கப்படுகிறது. ஆகவே, இந்த வெண்பாவுக்கு ‘ஆசிடை நேரிசை வெண்பா’ என்று பெயர்.
இதுபோல, உங்களுக்குப் பிடித்த ஏதேனும் இரண்டு குறள்களைச் சும்மா சேர்த்து விளையாடிப் பாருங்கள், செம ஜாலியாக இருக்கும்!
***
என். சொக்கன் …
03 05 2013
பாஷைகள், மொழிகள்
Posted on: May 1, 2013
- In: இலக்கணம் | ஓசிப் பதிவு | Grammar | Poetry | Puzzle | Tamil
- 6 Comments
’தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற அற்புதமான பாட்டு. கேட்டிருப்பீர்கள். இல்லாவிட்டால், உடனே கேட்டுவிடுங்கள்.
இந்தப் பாடல்குறித்து இன்று ட்விட்டரில் சிறு விளையாட்டு. காரணம், அதில் வரும் ஒரு வரி:
இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
இந்த வரியைக் குறிப்பிட்ட நண்பர் அரவிந்தன் இப்படி எழுதினார்:
இதில் ’பாஷைகள்’ என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதில் தமிழில் ”மொழிகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் என்ன கெட்டுப்போயிருக்கும்?
திரைப் பாடல்களின் தூய தமிழ்மட்டும்தான் எழுதப்படவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் முடிந்தவரை அந்நியச் சொற்களைத் தவிர்ககவேண்டும் என்பதை ஏற்கிறேன்.
ஆகவே, ‘பாஷைகள்’க்குப் பதில் அங்கே ‘மொழிகள்’ வருமா என்று கொஞ்சம் யோசித்தேன்.
பொதுவாக பாஷைகள் என்பது பா . ஷை . கள் என்று அசை பிரியும், அதில் ‘ஷை’ என்பது ஐகாரக் குறுக்கமாகி பா . ஷைகள் என்று மாறும். இதற்கான வாய்பாடு ‘கூ விளம்’.
மொழிகள் என்பது மொழி . கள் என்று அசை பிரியும். இதற்கான வாய்பாடு புளிமா.
ஆக, இந்தப் படத்தில் வரும் மெட்டு, ‘கூ விளம்’, அதற்கு ‘பாஷைகள்’ என்று எழுதியிருக்கிறார் பாடலாசிரியர். அங்கே ‘மொழிகள்’ என்ற சொல், அதாவது ‘புளிமா’ வாய்பாட்டில் வரும் சொல் இயல்பாகப் பொருந்தாது.
இப்போது, இசையமைப்பாளர் தன்னுடைய மெட்டைக் கொஞ்சம் மாற்றி ’மொழிகள்’ என்ற வார்த்தையைப் பொருத்தலாம். ஒருவேளை அவர் அப்படி மாற்ற விரும்பாவிட்டால், பாடலாசிரியர் ‘மொழிகள்’ என்று எழுத முடியாது. அது முறையல்ல.
ஆனால், எப்படியாவது ‘பாஷைகள்’ஐத் தூக்கிவிட்டு அதைத் தமிழாக்கவேண்டும், என்ன செய்யலாம்?
’பாஷைகள்’க்கு இணையாக, அதே பொருள் கொண்ட, அதே (கூவிளம்) மீட்டரில் பொருந்தக்கூடிய வேறு தமிழ்ச் சொல் உள்ளதா? யோசித்தேன், எனக்கு எதுவும் அகப்படவில்லை. (Means, என் வார்த்தை வளம் போதவில்லை, நன்கு பயிற்சி பெற்ற ஒரு மரபுக் கவிஞர் / திரைப் பாடலாசிரியர் சட்டென்று இதே பொருளில் கூவிளம் மீட்டரில் பொருந்தும் ஒரு சொல்லைக் கண்டுகொண்டிருப்பார்)
அடுத்த வழி, அந்தச் சொல்லுக்குப் பக்கத்தில் உள்ள வேறு சொல்லையோ, அல்லது மொத்த வாக்கியத்தையோ மாற்றி அமைக்கவேண்டும். இப்படி:
இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
வேறெதும் மொழிகள் தேவையில்லை
இங்கே நான் ‘பாஷைகள்’க்குப் பதில் ‘வேறெதும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இதுவும் ‘கூவிளம்’ வாய்பாட்டில் அமைகிறது.
அடுத்து, ‘எதுவும்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘மொழிகள்’ என்ற சொல்லைப் புகுத்திவிட்டேன். இவை இரண்டும் ‘புளிமா’ என்பதால் பிரச்னையே இல்லை.
Of Course, இதுதான் மிகச் சரியான வாக்கியம் என்பதல்ல. நீங்கள் இதை வேறுவிதமாக இன்னும் சிறப்பாகவும் எழுதிப் பார்க்கலாம், ஒரு மரபுக்கவிதை சார்ந்த ஜாலியான விளையாட்டாக / பயிற்சியாக இதைச் செய்து பார்த்தேன், அவ்வளவே!
***
என். சொக்கன் …
01 05 2013
மான் குட்டியே!
Posted on: April 27, 2013
ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தோம், கூடலூர், முதுமலை, மைசூரு வழியாக பெங்களூரு.
முதுமலை சரணாலயச் சாலையுள் நுழைந்தவுடன், ‘புலிகள் உலவும் பாதை, வண்டியை மெதுவாக ஓட்டுங்கள், ஆனால் நிறுத்திவிடாதீர்கள்’ என்று நிறைய அறிவிப்புகள்.
நாங்களும் ஆர்வத்துடன் வண்டியை மெதுவாக ஓட்டினோம். இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேடிப் பார்த்தோம், கொல்லும் புலி இல்லை, சாதாரண கொடுக்காப்புளிகூட இல்லை.
சிறிது தூரத்தில், ‘யானைகள் சாலை கடக்கும் இடம்’ என்று எழுதியிருந்தது. அங்கே ஒரே ஒரு யானைமட்டும் எதையோ அசை போட்டுக்கொண்டு நின்றது.
அந்த யானையை ஆர்வமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம், அதற்குச் சாலை கடக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வண்டியை விரட்டினோம்.
திடீரென்று, டிரைவர் வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினார், ‘சார், ஜிங்கே’ என்றார்.
முதலில் நானும் ஆர்வத்தோடு, ‘ஜிங்கேயா? எங்கே?’ என்றேன் ரைமிங்காக. பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘ஜிங்கேன்னா என்ன?’ என்று கேட்டேன்.
என் மனைவி அலட்சியமாகத் தலையில் குட்டி, ‘மக்கு, ஜிங்கேன்னா கன்னடத்துல மான், தெரியாதா?’ என்றார்.
‘தெரியாதே, உனக்கு எப்படித் தெரியும்?’
அவர் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ‘ஜிங்கெ மரினா’ன்னு ஒரு சூப்பர் ஹிட் கன்னடப் பாட்டு இருக்கு, FM ரேடியோல கேட்டிருக்கேன்’ என்றார், ‘அப்புறம் பக்கத்து வீட்டு ஆன்ட்டியைக் கேட்டு அதுக்கு அர்த்தம் தெரிஞ்சுகிட்டேன், ஜிங்கென்னா மான், மரின்னா குட்டி, ஆக, ஜிங்கெ மரின்னா மான் குட்டின்னு அர்த்தம்.’
ஆகவே பாடலாசிரியர்காள், இதுபோல் சினிமாப் பாட்டுகளைக் கேட்டு ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருப்பார்கள், ட்யூனுக்குப் பொருந்துகிறது என்பதற்காக ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்’ என்றெல்லாம் தப்புத்தப்பாக எழுதி மானத்தை வாங்காதீர்கள்!
***
என். சொக்கன் …
27 04 2013
பெங்களூருவில் கம்ப ராமாயண வாசிப்பு
Posted on: April 12, 2013
- In: Announcements | கம்ப ராமாயணம் | கம்பர் | Events
- 12 Comments
நாளை தொடங்கி, பெங்களூருவில் ஒரு கம்ப ராமாயண வாசிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த வாசிப்புக் குழு, முழுவதும் தன்னார்வத்தின்பேரில் அமைக்கப்படுகிறது. இதில் சேரக் கட்டணம் ஏதும் இல்லை. வாரம் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் கம்பனை வாசிக்கும் ஆர்வம் இருந்தால்மட்டும் போதுமானது.
இதனை வழிநடத்திச் செல்ல அன்போடு இசைந்திருப்பவர், திரு. ஹரி கிருஷ்ணன் அவர்கள் (இணையக் குழுக்களில் ‘ஹரியண்ணா’ என்றால் எல்லாருக்கும் தெரியும்!)
கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழில் மரபுக் கவிதைகள் இயற்றியும் பல கவியரங்குகளிலும் பங்கேற்று வந்துள்ள ஹரி கிருஷ்ணன், தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 2500 கட்டுரைகள் எழுதியுள்ளார், அனைத்தும் தமிழ் இலக்கியங்களை மிக எளிய முறையில் அறிமுகப்படுத்தி நம் ரசனையை மேம்படுத்தும்விதமாக அமைந்தவை.
’வள்ளுவர், கம்பர், பாரதி மூவரும் என் அடித்தளங்கள்’ என்று குறிப்பிடும் ஹரி கிருஷ்ணன் இதழியல் சார்ந்து பல முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருப்பினும், அவரது மிகப் பெரிய சாதனை, கம்ப, வால்மீகி ராமாயணங்களின் அடிப்படையில் பாத்திரப் படைப்பு ஆய்வுகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினசரிக் கட்டுரைகளாக எழுதியதுதான்.
இந்தக் கட்டுரைகளின் ஒரு பகுதி ‘அனுமன்: வார்ப்பும், வனப்பும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து மிகப் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இதுபோல் இன்னமும் பதினைந்து பாத்திரங்களை விளக்கி நூல்வடிவாக்கவுள்ளார்.
ஹரி கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற எவரும், அவரது பழகும்விதத்தை, வாசிப்பின் வீச்சை, தமிழ், பிற மொழி இலக்கியங்களின்மீது அவருக்கிருக்கும் அளவற்ற ஆர்வத்தை, அதை எவருக்கும் புரியும்வண்ணம் விவரித்துச் சொல்லும் அக்கறையை, ஒருவரையும் அவமதித்துப் பேச விரும்பாத பண்பான வார்த்தைத் தேர்வுகளையெல்லாம் வியக்காமல் இருக்கமுடியாது. அவர் இந்த வகுப்புகளை வழிநடத்த இசைந்திருப்பது நம்முடைய வாழ்நாள் பாக்கியம்.
இப்போது, இந்த வாசிப்பு வகுப்புகளைப்பற்றிக் கொஞ்சம், ஹரி கிருஷ்ணன் அவர்கள் தொலைபேசிவழியே குறிப்பிட்ட அடிப்படை விஷயங்கள் இவை:
- பால காண்டத்தின் முதல் பாடலில் தொடங்கி, யுத்த காண்டத்தின் நிறைவுப் பாடல்வரை முழுமையாக வாசிக்கவிருக்கிறோம், இடையில் எந்தப் பாட்டும் / பகுதியும் விடுபடாமல்
- கம்ப ராமாயணம் 10000 பாடல்களுக்குமேல் கொண்டது, ஆகவே, வாரம் நூறு பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால்கூட, இதனைப் பூர்த்தி செய்ய இரண்டு வருடங்கள் ஆகும்
- ஆகவே, ஒவ்வொரு வகுப்பிலும் நூறு பாடல்கள்வரை வாசிக்க முயற்சி செய்வோம். ஒவ்வொரு பாடலையும் சத்தமாகப் படிப்பது, அதற்கு விளக்கம் சொல்வது, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியமான சொற்களின் பொருளை விவரிப்பது, தேவைப்பட்டால் வேற்று நூல்களில் இருந்து தொடர்புபடுத்திப் பேசுவது என்ற விதத்தில் இது அமையும்
- வாசிப்பில் பங்கேற்கும் அனைவரும் பாடல்களை உரக்கப் படித்துப் பழகவேண்டும் என எதிர்பார்க்கிறோம், அது ஓர் அற்புதமான தனி அனுபவம்!
- பாடல்களை வாசித்து முடித்தபின் அதன் விளக்கம், கூடுதல் விவரங்கள், கவி நயம் போன்றவற்றைப் பற்றி எல்லாரும் பேசலாம், இது வகுப்பு என்பதைவிட, குழு வாசிப்பு என்றவகையில் அமைந்தால் நன்றாக இருக்கும்
- அதேசமயம், கம்ப ராமாயணம் / அது தொடர்பான தலைப்புகளைத்தவிர மற்ற அரட்டைப் பொருள்களைத் தவிர்த்துவிடுவோம். இல்லாவிடில் வாரம் நூறு பாடல்களைப் படிக்க இயலாதபடி கவனம் சிதறும். அன்றைய வாசிப்பு முடிந்தபின் தனி அரட்டைகளை வைத்துக்கொள்வோம்
- பாடல்களை வாசிக்கும்போது, கவிதை அழகு, மொழி நயம், அதன்மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள், பாத்திரப் படைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும், பக்தி / வைணவ சம்பிரதாயம் சார்ந்த விளக்கங்கள், விவாதங்களுக்கு இடமிருக்காது, தவறாக எண்ணவேண்டாம்
- ஒவ்வொரு வார வாசிப்பையும் முழுமையாக ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு செய்து இணையத்தில் வைக்க எண்ணியுள்ளோம், அது எப்படிச் சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்
அடுத்து, வாசிப்பு நடைபெறும் நேரம், வழக்கமான இடம் ஆகியவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நாளைய முதல் வகுப்பின் விவரங்களைமட்டும் இங்கே தந்துள்ளேன், அங்கே வருகிறவர்கள்மத்தியில் பேசி, பெரும்பாலானோருக்கு வசதியானவண்ணம் அடுத்தடுத்த வகுப்புகள் எங்கே, எப்போது நடைபெறும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளலாம்:
நாள் : 13 ஏப்ரல்
நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்:
CRMIT Solutions Private Limited,
NR Towers, 2nd Floor,
#14, Hundred Feet Ring Road,
BTM Layout First Stage,
Bangalore 68
Map : Click Here
இந்த அலுவலகம் நெடுஞ்சாலையிலேயே உள்ளது. இடத்தைக் கண்டறிவதில் ஏதேனும் குழப்பம் எனில் (0)9900160925 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
அனைவரும் வருக!
***
என். சொக்கன் …
12 04 2013
உம்
Posted on: April 4, 2013
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Poetry | Power Of Words | Tamil
- 5 Comments
அமெரிக்காவில் புலவர் கீரன் நிகழ்த்திய கம்ப ராமாயணச் சொற்பொழிவு ஒன்று ஃபேஸ்புக் நண்பர் ஒருவருடைய தயவில் கிடைத்தது. கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வழக்கம்போல் உணர்ச்சிமயமான குரல் + தொனியில் மிக அருமையான பேச்சு. ஏழு நாள்களில் கம்பனை முழுமையாக விவரிப்பது சாத்தியமில்லை என்பதால், சில முக்கியமான பாடல்களைமட்டும் எடுத்துக்கொண்டு விளக்குகிறார், அவற்றினூடே கதையைச் சொல்கிறார்.
இப்படி அவர் எடுத்துக்கொண்ட ஒரு பாடல், நம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’, மிதிலையில் கன்னிமாடத்தில் சீதையும், கீழே சாலையில் நடந்து செல்லும் ராமனும் எதேச்சையாகக் கண்கள் கலந்து காதல் வயப்படும் காட்சி.
‘சீதையும் ராமனும் வேண்டுமென்றே சைட் அடிக்கவில்லை, தற்செயலாக(Accidentally)தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன், ‘இதற்குச் சாட்சி கம்பனுடைய பாட்டிலேயே உள்ளது!’
இப்படி அவர் சொன்னதும், என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. காரணம், எனக்குத் தெரிந்து அந்தப் பாட்டில் ‘தற்செயல்’ என்கிற வார்த்தையோ அதற்கான குறிப்போ இல்லை, சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் கம்பர் சொல்கிறாரேதவிர, எது எதேச்சையாக நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிடவில்லை.
ஆனால், கீரன் அடித்துச் சொல்கிறார், ‘அது தற்செயலான நிகழ்வுதான், அதற்கான குறிப்பு அந்தப் பாட்டிலேயே இருக்கிறது, கொஞ்சம் பிரித்து மேயவேண்டும், அவ்வளவுதான்!’
முதலில் அந்தப் பாட்டைத் தருகிறேன், அதன்பிறகு, கீரன் தரும் அட்டகாசமான (அதேசமயம் ரொம்ப Practicalலான) விளக்கத்தைச் சொல்கிறேன்:
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!
இதற்கு என்ன அர்த்தம்?
எண்ணுவதற்கே அரிய நலன்களைக் கொண்டவள் (சீதை) இப்படி (முந்தின பாட்டில் சொன்னபடி) நின்றிருக்க, அண்ணலும் (ராமனும்) அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன.
அவ்ளோதான். நோ விபத்து, நோ தற்செயல், கம்பர் அப்படிச் சொல்லவில்லை!
பொறுங்கள், கீரன் அவர்களுடைய விளக்கத்தைப் பார்ப்போம்.
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ : இந்த வாசகம் முதலில் சரியா?
ஒரு கடை வாசலில் போர்ட், ‘ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்று எழுதியிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? ’மற்ற ஆறு நாள்களும் கடை உண்டு, கூடவே ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்பதுதானே? ‘திங்கள்கிழமையும் கடை உண்டு, செவ்வாய்க்கிழமையும் கடை உண்டு, புதன்கிழமையும் கடை உண்டு’ என்று யாராவது நீட்டிமுழக்குவார்களா?
ஒருவர் ‘தயிர் சாதமும் சாப்பிட்டேன்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? குழம்பு, ரசம் எல்லாம் சாப்பிட்டிருக்கிறார், அதோடு தயிர் சாதமும் சாப்பிட்டார் என்பதுதானே?
’இந்த வருஷமும் அவன் பரீட்சையில ஃபெயில்’ என்றால் என்ன அர்த்தம்? இதற்குமுன் பல வருஷங்கள் ஃபெயிலாகியிருக்கிறான் என்பதுதானே?’
இதே வழக்கத்தின்படி, கம்பர் ‘அண்ணலும் நோக்கினான்’ என்று சொல்லியிருந்தாலே போதும், அந்த ‘உம்’மில் ‘அவளும் நோக்கினாள்’ என்பதும் விளங்கிவிடும், அதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.
ஆக, கம்பர் ‘அண்ணல் நோக்கினான். அவள் நோக்கினாள்’ என்று எழுதியிருக்கவேண்டும், அல்லது ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கவேண்டும். இரண்டு ‘உம்’கள் இந்த வாக்கியத்தில் அவசியமே இல்லை.
ஆனால், கம்பர் வேண்டுமென்றே இரட்டை ‘உம்’ போடுகிறார். ஏன்?
இதைதான் கீரன் பிடித்துக்கொள்கிறார். ‘தமிழில் ஒரே ஒரு சூழ்நிலையில்மட்டும் இரண்டு ‘உம்’கள் தேவைப்படும்’ என்கிறார். எப்போது?
சாலையில் ஒரு விபத்து நடக்கிறது, இரு வாகனங்கள் எதிரெதிரே வந்து மோதிக்கொள்கின்றன. அதை நேரில் பார்த்த ஒருவரிடம் ‘எப்படிய்யா விபத்து நடந்துச்சு?’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்வார்?
‘இவனும் இடதுபக்கமா வந்தான், அவனும் அதேபக்கமா வந்தான், மோதிகிட்டாங்க.’
இந்த இடத்தில் ‘இவனும் இடதுபக்கமா வந்தான்’ என்பதோடு நிறுத்தினால் செய்தி முழுமையடையாது, ‘அவனும் அதேபக்கமா வந்தான்’ என்பதை வலியச் சேர்த்தால்மட்டுமே விபத்து நேர்ந்தது புரியும். அது திட்டமிட்டு நடந்தது அல்ல, தற்செயலானது என்பதும் புரியும்.
அந்தப் ‘பத்திரிகையாளர் உத்தி’யைதான் கம்பர் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார். ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்தாமல், ’அவளும் நோக்கினாள்’ என்பதைச் சட்டென்று அடுத்த வாக்கியத்தில் கோப்பதன்மூலம் ஒரு சிறிய பரபரப்பை உண்டாக்குகிறார், தற்செயலாக இரு பார்வைகளும் சந்தித்துக்கொண்டுவிட்டன, ஜோடி சேர்ந்துவிட்டன என்று வாசிக்கிற நமக்குப் புரியவைக்கிறார்.
அப்புறம் என்ன நடந்தது? இங்கே படிக்கலாம்: http://nchokkan.wordpress.com/2012/08/06/kv01/
***
என். சொக்கன் …
04 04 2013
விக்ரமன்
Posted on: March 21, 2013
- In: Books | Reviews
- 5 Comments
ஒரு நல்ல புத்தகம் எப்படி இருக்கவேண்டும்?
‘இதை ஏண்டா வார நாளில் படிக்க ஆரம்பித்தோம்’ என்று வாசகனை நொந்துகொள்ளச் செய்யவேண்டும், ‘சனி, ஞாயிறு என்றால் ஒரே மூச்சில் படித்து முடித்திருக்கலாமே’ என்று ஆதங்கப்படச் செய்யவேண்டும், மற்ற வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துவிட்டு, ஆஃபீசிலும் வெளியிலும் ’எப்போ வீடு திரும்புவோம், எப்போ மறுபடி வாசிப்போம்’ என்று ஏங்கச் செய்யவேண்டும், ராத்திரி கண் சொக்கத் தூங்கச் சென்றாலும், ’நாலு பக்கம் படித்துவிட்டுத் தூங்கலாமே’ என்று நப்பாசைப்படச் செய்யவேண்டும்.
திரைப்பட இயக்குநர் விக்ரமனின் சுயசரிதை ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ இவை அனைத்தையும் செய்கிறது, அதற்குமேலும் செய்கிறது.
விக்ரமன் இயக்கிய படங்களில் இரண்டைமட்டுமே நான் பார்த்துள்ளேன், ஆனால் மற்ற எல்லாப் படங்களின் பாடல்களையும் கேட்டு, சின்னத்திரையில் வந்த ’ஓவர் பாசிட்டிவ்’ காட்சிகள், ஹைதர் அலியையே தும்மல் போடவைக்கும் காமெடி(?)களையெல்லாம் நோட்டமிட்டு, அவரது முழு நீள நகல்களாக வந்த பல அஸிஸ்டெண்ட்கள் எடுத்த படங்களையெல்லாம் பார்த்து அவர்மீது ஒரு நக்கலான பிம்பம்தான் வந்திருக்கிறது.
இப்படிப் பெயரைக் கேட்டவுடன் காதுக்குள் ‘லாலாலா’ ஒலிக்கும் ஓர் இயக்குநரின் சுயசரிதையை நான் ஏன் வாங்கினேன், ஏன் வாசிக்க ஆரம்பித்தேன், சுத்தமாகத் தெரியவில்லை. ஒருவேளை, இதைப் படித்துவிட்டு இன்னும் கிண்டலடிக்கலாம் என்று நினைத்திருப்பேனோ என்னவோ.
ஆனால், விக்ரமன்மீது நான் வைத்திருந்த எண்ணங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. இதனை எழுதியது அவரேதானா, அல்லது நிருபர் ஒருவர் எழுதினாரா (’சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தொடராக வந்தது) என்பது தெரியவில்லை, ஆனால் பேச்சுத் தமிழில் தன் கதையைச் சுவாரஸ்யமாக அவர் சொல்லியிருக்கும் விதம், ‘அபாரம்’கூட இல்லை, ’அற்புதம்’தான் சரியான வார்த்தை.
விக்ரமன் படங்களைப்போலவே, இந்தப் புத்தகத்திலும் சஸ்பென்ஸ் உண்டு, நிறைய நெகிழ்ச்சி உண்டு, தன்னம்பிக்கை உண்டு, அவமானங்கள் (அநேகமாக இதில் வரும் எல்லாரும் விக்ரமனை ஏதோ ஒருவிதத்தில் அவமானப்படுத்தியிருக்கிறார்கள், அல்லது, அவர் அப்படி நம்புகிறார்), அவற்றைத் துடைத்துப்போட்டுவிட்டு மேலெழல், தோல்விகள், வெற்றிகள், மறுபடி தோல்விகள் (ஐந்து படம் எடுத்து மூன்று ஹிட் கொடுத்தபிறகும், கையில் இரண்டாயிரம் ரூபாய்கூட இல்லாமல் பட்டினிகூடக் கிடந்திருக்கிறார்), மறுபடி வெற்றிகள், சுய அலசல், திடீர் துரோகங்கள், நட்புகள் என எல்லாமே சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. கையில் எடுத்தால் கீழே வைக்க மனமே வராது, அப்படி ஒரு விறுவிறுப்பான நடை. இப்படி ஒரு சுவாரஸ்யமான சுயசரிதையைச் சமீபத்தில் படித்த நினைவில்லை.
இத்தனைக்கும் விக்ரமனின் இளமைப் பருவம், பள்ளி, கல்லூரி, பெற்றோர், நண்பர்களைப்பற்றிக்கூட இதில் அதிகம் இல்லை, அவர் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதுகூட இல்லை, அவர் எடுத்த படங்களில் முதல் ஏழோ எட்டோ விவரிக்கப்படுகிறது, அவ்வளவுதான், அதை மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார்.
இந்தக் கதையினூடே, சினிமா உருவாவதுபற்றிய டெக்னிகல் விஷயங்கள் அனைத்தும் உறுத்தலில்லாமல் நுழைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ‘டபுள் பாஸிட்டிவ்’ என்றால் என்ன என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றுவிடுகிறார், அதன்பிறகு எங்கே ‘டபுள் பாஸிட்டிவ்’ வந்தாலும் நமக்கு அந்த விளக்கம் சட்டென்று நினைவில் வரும், அந்த அளவுக்கு எளிமையான விளக்கங்கள், கச்சிதமான உதாரணங்கள்.
சினிமா ஆசை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் நிறைய நம்பிக்கை தரும், அதே அளவு அவநம்பிக்கையையும் தரும், ஒருவிதத்தில் அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி என்று சொல்வேன்.
அது சரி, இத்தனை எழுதிய விக்ரமன், தமிழில் மிகப் பெரிய வசூல் சம்பாதித்த படங்கள் சிலவற்றை இயக்கிய விக்ரமன் ஏன் தொடர்ந்து ஜெயிக்கமுடியவில்லை?
இந்தப் புத்தகத்தில் அதற்கும் பதில் இருக்கிறது. நேரடியாக அல்ல, மறைமுகமாக விக்ரமனே அதைச் சொல்லியிருக்கிறார், வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பார்த்துக் கண்டுபிடியுங்கள்
***
என். சொக்கன் …
21 03 2013
பின்குறிப்புகள்:
1. விக்ரமன் அளவுக்கு அவருடைய அஸிஸ்டென்ட் கே. எஸ். ரவிக்குமாரின் கதையும் சுவாரஸ்யமாக இருக்கும்போல, ஆரேனும் ஆவன செய்தால் நல்லது
2. இந்தப் புத்தகம் ‘போதி பதிப்பகம்’ வெளியீடு, விலை ரூ 100, ஆனால் இப்போது அச்சில் இல்லை என அறிகிறேன். ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் இங்கே (இதனை வழங்கிய நண்பர் ரவிகாந்த்க்கு நன்றி)
3. புத்தகத்திலிருந்து சில பகுதிகள் : Part 1 , Part 2 & Part 3
இளையராஜா : சில கேள்விகள்
Posted on: March 20, 2013
- In: Ilayaraja | Music | Open Question
- 16 Comments
இளையராஜா தரும் பாடல்களைதான் இயக்குநர்கள் வாங்கிக்கொள்ளவேண்டும், எதிர்த்துப் பேசக்கூடாது என்கிற கருத்து குறையாகவும் பெருமையாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து எனக்குப் பல கேள்விகள் உள்ளன.
1. இதைக் குறையாகச் சொல்கிறவர்களில் பெரும்பாலானோர் ராஜாவுடன் ஒரு படம்கூடப் பணியாற்றாதவர்கள், அல்லது சில படங்களில்மட்டும் பணியாற்றியவர்கள். அவர்கள் யாரோ சொல்ல நம்பியதைச் சொல்கிறார்களா, அனுபவித்ததைச் சொல்கிறார்களா?
2. ஒருவேளை இது (’நான் தரும் பாடல்களைதான் வாங்கிக்கொள்ளவேண்டும், மாற்றித் தரமாட்டேன்’) உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அது தனது திறமையில், ரசிகர்களின் நாடித்துடிப்பைப் புரிந்துவைத்திருப்பதில் அவருக்கிருக்கும் தீவிர நம்பிக்கையைக் காட்டுகிறது, அவரது Hit Rate + Quality வைத்துப் பார்க்கும்போது, இதில் என்ன தவறு?
3. சும்மா ‘இங்கே டெம்போ குறையுது, அங்கே ஏறுது’ என்று சொல்லாமல், நிஜமாகவே இசை பற்றிக் கருத்துச் சொல்லத் தெரிந்த இயக்குநர்கள் எத்தனை பேர்? அலுவலகத்தில் நம்முடைய வேலைபற்றி Value Adding Comments வராதபோது நாம் எரிச்சலடைவதில்லையா? இயக்குநர் என்பதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் இசையமைப்பாளர் கேட்டே தீரவேண்டுமா?
4. ‘அதெல்லாம் இல்லை, என்ன திறமை இருந்தாலும் அவர் இயக்குநரை மதிக்கவேண்டும்’ என்று நீங்கள் வாதிட்டாலும்கூட, அவரோடு பணியாற்றியவர்கள் திரும்பத் திரும்ப அவரிடம்தான் சென்றிருக்கிறார்கள், பல காரணங்களால் (May or May not be இசை related) எரிச்சலடைந்து விலகியவர்களும் மறுபடி வந்திருக்கிறார்கள், இது ஏன்? அவரது (In Media’s words, முரட்டுத்தனமான / சர்வாதிகாரமான) கணிப்பில் அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதைதானே இது காட்டுகிறது?
5. பல இயக்குநர்கள் ‘எனக்கு அவர் பலமுறை ட்யூன்களை மாற்றித் தந்தார்’ என்று பேட்டி தந்திருக்கிறார்கள், அவை மறைக்கப்பட்டு, ‘அவர் முசுடு, தாகம் என்று வந்தவருக்குக் குடிக்கத் தண்ணீர்கூடத் தரமாட்டார்’ என்பதுபோன்ற செய்திகளைமட்டும் தீவிரமாகப் பரப்புவது யார்? இதனால் இன்றைக்கும் புதிய / இளைய / அதிபுத்திசாலி இயக்குநர்கள் அவரை அணுகத் தயங்குகிறார்கள், இவர்களில் யாரேனும் மேற்சொன்ன ’நம்பிக்கை’கள் எந்த அளவு உண்மை என்று ஆராயத் துணிவரா?
6. ஒருவேளை இது உண்மை என்றால், அவருடன் பணியாற்றி, அவரது பிடிவாதத்தால் படுமோசமான பாடல்களைப் பெற்று, அதனால் தோல்வி அடைந்து, வெறுப்படைந்து வெளியேறி, தன் கருத்துகளை மதிக்கக்கூடிய வேறு இசையமைப்பாளருடன் இணைந்து சிறந்த பாடல்களைப் பெற்று மிகப் பிரமாதமாக வெற்றி அடைந்த இயக்குநர்கள் பலர் இருக்கவேண்டும். அப்படி ஒரே ஒருவராவது உண்டா?
பின்குறிப்பு: இந்தக் கேள்விக்கான பதில்களில் தயவுசெய்து மற்ற இசையமைப்பாளர்களைப்பற்றிப் பேசவேண்டாம். My intention is NOT to start a new Raja Vs Rahman Fight
***
என். சொக்கன் …
20 03 2013



1










eKalappai