மனம் போன போக்கில்

Archive for the ‘Money’ Category

பதிப்பாளர்களைப்பற்றிய புலம்பல்கள் பலவற்றை எழுதியாயிற்று. ஒரு மாற்றத்துக்கு, இது பாராட்டுப்பதிவு.

 

நண்பர் ரவிசங்கர் மூலமாக, டெல்லியைச் சேர்ந்த ஸ்டார் பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தினரின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் எனக்கு இரண்டு நூல்களை மொழிபெயர்க்கத் தந்திருந்தார்கள். அதற்காக நான் முன்வைத்த கட்டணத்தையும் ஏற்றுக்கொண்டார்கள், உடனே மொழிபெயர்த்துத் தந்துவிட்டேன்.

 

 

அந்த நேரத்தில், எனக்கு வேறு சில வேலைகள் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு Invoice அனுப்பவில்லை. நண்பர் சிபாரிசு செய்த நிறுவனம் என்பதால், என்ன அவசரம், அப்புறம் அனுப்பிக்கொள்ளலாம் என்று வாளாவிருந்துவிட்டேன்.

 

 

பத்து நாள் கழித்து, அந்நிறுவனத்தின் தலைவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘ஐயா, நீங்க இன்வாய்ஸ் அனுப்பலை’ என்றார்.

 

 

‘அனுப்பிடறேன் சார், கொஞ்சம் வேலை ஜாஸ்தி, மன்னிக்கணும்’ என்றேன்.

 

 

‘நன்றி’ என்று வைத்துவிட்டார்.

 

 

ஒரு வாரம் கழித்து, மீண்டும் அழைத்தார், ‘ஐயா, இன்வாய்ஸ் இன்னும் வரலையே’ என்றார்.

 

 

கூச்சத்துடன் மறுபடி மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். விரைவில் அனுப்பிவிடுவதாக உறுதியளித்தேன்.

 

 

இரண்டுநாள் கழித்து, மீண்டும் அழைத்தார், ‘ஐயா, நீங்க இன்வாய்ஸை மெதுவா அனுப்புங்க, அந்தத் தொகையைமட்டும் சரியாச் சொல்லுங்க, அடுத்தவாரம் என் மகன் பெங்களூரு வர்றான், அவன்கிட்ட காசைக் கொடுத்து அனுப்பிடறேன்’ என்றார்.

 

 

இந்தமுறை எனக்கு மிகவும் வெட்கமாகிவிட்டது. சட்டென்று அவருக்கு இன்வாய்ஸ் தயாரித்து அனுப்பினேன்.

 

 

மறுநாள், பைசா சுத்தமாக என் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது.

 

 

தொகை சிறியதுதான், ஆனால், எழுதியவனைத் துரத்திப்பிடித்துக் காசு தரும்வரை ஓயாத மனம் பெரியதல்லவா? அப்பெருமானார் வாழ்க!

 

***

என். சொக்கன் …

06 04 2016

மகள்கள் இருவருக்கும் பள்ளிப் புத்தகங்களின் விலைப்பட்டியல் வந்திருந்தது. இருவருக்கும் சேர்த்து ரூ 7200.

அநேகமாக ஒவ்வோராண்டும் நடக்கிற விஷயம்தான், ஆனால் இந்தமுறை கொஞ்சம் யோசிக்கவைத்தது, ஏழாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள், நோட்டுகளா? அதிகமில்லையோ?

இதை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டபோது, பலரும் ‘இது ரொம்ப மலிவு’ என்றார்கள். பலர் ஒரு குழந்தைக்கே ஐயாயிரத்துக்குமேல் செலவழிப்பதாகச் சொன்னது மேலும் அதிர்ச்சியளித்தது.

ஒரு வகுப்புக்கு, மிஞ்சிப்போனால் ஐந்து பெரிய புத்தகங்கள், ஐந்தாறு சிறிய புத்தகங்கள், அனைத்தும் வண்ணமயமாக அச்சிட்டாலும் இவற்றின் மொத்த விலை ஆயிரத்தைநூறைத் தாண்டாது.

அடுத்து, நோட்டுகள், பலவிதங்களில் சுமார் இருபது நோட்டுகள், ஒவ்வொன்றும் ஐம்பது ரூபாய் என்று வைத்தால் ஆயிரம் ரூபாய்.

மீதமுள்ளவை (அட்டைபோடும் காகிதம், ஸ்டிக்கர் லேபிள், எழுதுபொருள்கள், அனைத்தையும் வைக்கிற பை) ஓர் ஐநூறு. மொத்தம் மூவாயிரம் வருகிறது.

இங்கே நான் சொல்லியிருக்கும் கணக்கு அத்தனையும் ‘அதிகபட்சக்’கணக்குதான், வெளியே சந்தையில் இவற்றை வாங்கினால் நிச்சயம் இரண்டாயிரம் அல்லது அதற்குள் வாங்கிவிடலாம்.

ஆனால், பள்ளிகள் அதை அனுமதிப்பதில்லை. இதற்காகச் சில MBAக்களை வைத்து என்னென்னவோ திட்டம் தயாரிக்கிறார்கள் என்று ஊகிக்கிறேன்.

காரணம், இந்த ஆண்டு 7200 ரூபாய் செலவழிப்பதற்குப் பதில், இந்தப் புத்தகங்களை வெளியே வாங்கிப்பார்த்தால் என்ன என்று நாங்கள் முயன்றபோதுதான் இதற்காகச் செய்யப்படும் தில்லுமுல்லுகள் எனக்குப் புரிந்தன:

1. அனைத்துப் புத்தகங்களையும் ஒரே பதிப்பாளரிடம் வாங்குவதில்லை, வெவ்வேறு பதிப்பாளர்களிடம் வாங்கினால், பெற்றோர் நாலு இடத்தில் தேடமாட்டார்கள்

2. சரி, எல்லாப் பதிப்பாளர் புத்தகங்களையும் விற்கிற கடைகளில் வாங்கினால்? அந்தக் கடைகளில் ஏப்ரல், மே மாதங்களில் இப்புத்தகங்கள் ‘ஸ்டாக் இல்லை’ என்று சொல்லவைத்துவிடுகிறார்கள், இதையும் அனுபவப்பூர்வமாகப் பார்த்தோம்

3. இதை மீறி ஒருவன் போராடுகிறான் என்றால், புத்தகங்களின் பெயர்களைக் கடைசி விநாடிவரை சொல்வதில்லை, அப்புறம் எப்படித் தேடுவீங்க!

4. சரி, புத்தகம் தருகிற அன்று காலை பள்ளிக்குச் சென்று, புத்தகப் பெயர்களைப் பார்த்துக்கொண்டு, வேறு கடைகளில் ஆன்லைனிலோ நேரிலோ சென்று வாங்கினால்? அங்கேயும் ஓர் ‘இக்கு’ வைத்துவிடுகிறார்கள், புத்தகங்கள் ஒரே ஒரு நாள்தான் விநியோகிக்கப்படும், அவற்றை வெளியே வாங்க முயன்று தோற்றால், வருடம்முழுக்க உங்கள் குழந்தை புத்தகங்கள் இன்றிப் படிக்கவேண்டும், அந்த ஆபத்து சாத்தியத்துக்குப் பயந்து பெரும்பாலான பெற்றோர் பணிந்துவிடுவார்கள்

நாங்களும் அப்படிதான் பணிந்தோம், புத்தகங்களை வாங்கிவந்துவிட்டோம், மேலோட்டமாகப் புரட்டியபோது, அதிர்ச்சிகள் இன்னும் பெரிதாக இருந்தன.

ஒவ்வொரு புத்தகத்துக்கும் யானை விலை, அல்லது, டைனோசர் விலை. அவற்றின் அச்சுத்தரத்துக்கு இந்த விலையில் பாதிகூட ஆகாது, அநேகமாக 300% லாபத்தில் விற்பார்கள் என்று ஊகிக்கிறேன், அதில் 100% பள்ளிக்குச் செல்லுமாக இருக்கும்!

சில புத்தகங்கள் ‘சாணித்தாள்’ எனப்படும் மட்டமான காகிதத்தில் இருந்தன, அவற்றைப் பத்துமுறை புரட்டிப்பார்த்தால் கிழிந்துவிடும், விலைமட்டும் நூற்றைம்பது, இருநூறு.

எங்கள் இளைய மகளுக்கு ‘Wizard Of Oz’ பாடமாக உள்ளது, அதற்காக அவர்கள் தந்திருக்கும் புத்தகம் (சுருங்கிய வடிவம்) எண்பது ரூபாய், அதே புத்தகம் வெளியே இன்னும் நல்ல தரமான காகிதத்தில், முழு வடிவத்தில், அழகழகான படங்களுடன் கிட்டத்தட்ட இதே விலைக்குக் கிடைக்கிறது.

இவர்கள் தருகிற (அதாவது, ‘விற்கிற’) நோட்டுப்புத்தகங்களில் விலை குறிப்பிடப்படுவதில்லை, புத்தகங்களின் விலையைக்கூட்டியபின், அதை மொத்த விலையிலிருந்து கழித்துக் கணக்கிட்டால், ஒரு நோட்டுப்புத்தகம் சுமார் 90 ரூபாய் ஆகிறது. சந்தனமரத்தைக் கூழாக்கி அச்சிடுகிறார்களோ என்னவோ!

’படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஐயோன்னு போவான்’ என்பது பாரதி வாக்கு. படிப்பிப்பவன் பண்ணினால்?

***

என். சொக்கன் …

04 04 2016

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் ஒரு சிறு புத்தகக்கடை இருக்கிறது. அங்கே சில நூல்கள் வாங்கினேன்.

அந்நூல்களின் மொத்த விலை ரூ 750. ஆகவே, ‘ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.

பொதுவாக நூல்விலையில் தள்ளுபடி கேட்டால் பலர் கோபிப்பார்கள். சேலத்தில் ஒரு புத்தகக்கடை முதலாளி ‘தள்ளுபடிக்காகப் புத்தகம் வாங்கறதுன்னா வெளியே போங்க’ என்று கோபமாகச் சொன்னார்.

அப்போது அவரிடம் நிதானமாக விளக்கினேன், ‘நீங்கள் தரும் 10% தள்ளுபடியை வைத்து நான் கோட்டை கட்டப்போவதில்லை, அந்தத் தொகையில் இன்னும் சில நூல்களைதான் வாங்குவேன். அது உங்களுக்குத் தெரியாதா?’

‘இருந்தாலும்…’

‘ஐயா, உங்களுக்கு ஒரு புத்தகத்துக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியும், அதில் ஒரு பகுதியை வாசகனுடைய உரிமையாக எண்ணிக் கேட்கிறேன். உங்களால் அதைத் தர இயலாது என்றால் மறுத்துவிடுங்கள், கேட்கிறவர்கள்மீது கோபப்படாதீர்கள்’ என்று சொல்லிவிட்டு, அவரிடம் நூல் வாங்கிக்கொண்டு முழு விலையையும் தந்துவிட்டு வெளியேறினேன்.

நூல் தள்ளுபடிபற்றி என் நண்பர்கள் பலருக்கும் கோபமான கருத்துகள் உண்டு, ‘இப்படி சூப்பர் மார்க்கெட்டில் கேட்பீர்களா? அரிசிக்கடையில் கேட்பீர்களா?’ என்பார்கள்.

கேட்போம், சூப்பர் மார்க்கெட்டில் அநேகமாகத் தள்ளுபடி இல்லாத பொருளே இல்லை! அது வாடிக்கையாளரின் உரிமை, நல்ல லாப சதவிகிதம் உள்ள பதிப்பகத்துறையில் தமிழ் நூல்களுக்குமட்டும் தள்ளுபடி தரப்படாமலிருப்பது, வாசகர்களுக்கு எந்தச் சலுகையும் இல்லாமலிருப்பது சரியான முறை அல்ல என்பது என் கருத்து.

சொல்லப்போனால், ஒரு நூலின் மதிப்பு அதிலுள்ள காகிதம், அச்சுக்கூலி, வடிவமைப்புச்செலவுகள் போன்றவற்றை விஞ்சியது. அது தரும் அனுபவம், அறிவுக்கு விலைமதிப்பு கிடையாது. அதேசமயம், நூலை அச்சிட்டு விற்கிற ஒருவர் அதன் லாபத்தில் பயனாளருக்கும் பங்களிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தப் பிழையும் இல்லை. உலகம்முழுக்க இதுதான் நடைமுறை, ஆங்கில நூல்கள் குறைந்தபட்சம் 10%ல் தொடங்கி, 50%, அதற்குமேலும் தள்ளுபடி தந்து விற்பனையாகின்றன. தமிழில்மட்டும்தான் 10%க்கே ‘எப்போ புத்தகத் திருவிழா வரும்’ என்று காத்திருக்கவேண்டியுள்ளது.

இதைச் சொன்னவுடன், பல பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கோபித்துக்கொள்வார்கள். வாசகர் எண்ணிக்கை குறைவு என்பதால் வாசகர்களுக்கு எப்போதும் 10% தள்ளுபடி தருவது தங்களுக்குச் சிரமம் என்பார்கள். அதனை நான் ஏற்கிறேன், அதேசமயம், அது வாசகனின் பிரச்னை அல்ல, எதிர்பார்ப்பது அவன் உரிமை.

அது நிற்க, விவேகானந்தர் இல்லத்தில் (அதாவது, ராமகிருஷ்ணமடத்தின் நூல் விற்பனைக் கடைகளில்) பொதுவாக நூல்களுக்கு எந்தத் தள்ளுபடியும் இராது. ஆனாலும் நான் அவரிடம் தள்ளுபடி கேட்கக் காரணம், மறுநாள் அங்கே ஒரு கண்காட்சி தொடங்கவிருந்தது. அங்கே 20%வரை நூல்களுக்குத் தள்ளுபடி தருவதாக அறிவித்திருந்தார்கள்.

ஆகவே, ஒருநாள் முன்பாக வாங்கும் எனக்கும் அந்தப் பலனைத் தர இயலுமா என்று அவரிடம் கேட்டேன். சட்டப்படி இந்த வாதம் செல்லாது, எனினும், கேட்பதில் பிழையில்லையே.

அந்த நூல் விற்பனையாளர் கோபப்படவில்லை. ‘நாளை இந்த நூல்களுக்குத் தள்ளுபடி உண்டு. ஆனால் இன்றைக்குத் தர இயலாது, எனக்கு அதற்கு உரிமை இல்லை’ என்று அமைதியாக விளக்கினார். நான் ஏற்றுக்கொண்டேன்.

பில் போடுமுன், ‘750 ரூபாய்க்கு நூல் வாங்கிய ஒருவருக்கு எந்தச் சலுகையும் தர இயலாமலிருப்பது எனக்கு உறுத்துகிறது, இந்த நூல்களை நீங்கள் நாளைக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்களேன்’ என்றார்.

‘இல்லை, நான் வெளியூர், இன்று இரவு ரயிலில் பெங்களூரு செல்கிறேன்’ என்றேன்.

அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘வேறு வழியில்லை, நீங்கள் முழுத்தொகையையும் செலுத்தவேண்டும்’ என்றார் வருத்தத்துடன்.

‘புரிகிறது, பரவாயில்லை’ என்றேன். ‘நீங்கள் முழுத்தொகைக்கும் பில் போடுங்கள்.’

அவர் பில் எழுதினார், ஆனால் அவரது கைகள் நடுங்கியவண்ணம் இருந்தன. எழுந்து நின்றார். அங்குமிங்கும் ஏதோ தேடினார். அவரது தவிப்பு எனக்கு விநோதமாகத் தோன்றியது.

நிறைவாக அவர், ‘என்னால் இயன்றது, இந்தப் பழைய பத்திரிகைகள் சிலவற்றை உங்களுக்கு இலவசமாகத் தருகிறேன்’ என்றார்.

அந்தப் பழைய பத்திரிகைகளின் மொத்த விலைமதிப்பு இருபது ரூபாய்தான். ஆனால், அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த மாலைப்பொழுதை நிரம்ப இனிமையாக்கிவிட்டது!

***

என். சொக்கன் …

07 02 2016

பதிப்பகங்கள்/ எழுத்தாளர்கள்/ ராயல்டி பிரச்னைகள்பற்றி பா. ராகவன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை மிகவும் முக்கியமானது: http://www.writerpara.com/paper/?p=10673

பொதுவாக இந்தப் பிரச்னையை அதிகப்பேர் பேசுவதில்லை. காரணம், எழுத்தாளன் என்கிறவன் சமூகத்துக்காகப் பணியாற்றவேண்டியவன், அவன் தனது பணியை உழைப்பாகக் கருதுவதோ அதற்கு நியாயமான கூலி எதிர்பார்ப்பதோ சரியல்ல என்பதே பரவலான எண்ணம். இதோ இந்தப் பதிவுக்குக்கூட, பலர் ‘நீங்கள் எல்லாரும் உங்கள் புத்தகங்களைப் பொதுவில் வைத்துவிடவேண்டும். அறிவைப் பரப்புவதுதானே உங்கள் பணி?’ என்கிற தொனியில்தான் பதில் எழுதுவார்கள்.

ஒரு பேச்சுக்கு, அது சரி என்றே வைத்துக்கொள்வோம். சமூகப்பணி செய்கிற ஒருவனுடைய உழைப்பை (சரி, தவத்தை என்று வைத்துக்கொள்வோம்!) இன்னொருவர் பயன்படுத்திப் பொருளீட்டுவதற்குமட்டும் அனுமதி உண்டா? இந்தத் துறைசார்ந்து என்னுடைய மிகப்பெரிய பிரச்னையே இதுதான்.

என்னுடைய அலுவலகப்பணி மற்றும் தனிப்பட்டமுறையில் நான் எத்தனையோ துறைகளில் பல்வேறு காரணங்களுக்காகப் பணியாற்றியிருக்கிறேன், தமிழ்ப் பதிப்பகத்துறைபோல் Unorganized, Unprofessional தொழில்துறையொன்றை வேறு எங்கும் கண்டதில்லை: நூல்களுக்கான யோசனைகள் எங்கிருந்து வருகின்றன, அவற்றை யார் எழுதுவது என்று எப்படித் தீர்மானிக்கப்படுகிறது, எப்படி எழுதுகிறார்கள் என்பது எப்படிச் சரிபார்க்கப்படுகிறது, எதன் அடிப்படையில் நூல்கள் ஏற்கப்படுகின்றன, மறுக்கப்படுகின்றன, எப்போது அச்சிடப்படுகின்றன, என்ன விலை வைக்கப்படுகிறது, எங்கே விற்கப்படுகிறது, அதற்கான கணக்குகள் எங்கே, வரவு என்ன, செலவு என்ன… சகலமும் பூடகமாகவே நடக்கிறது.

ஆங்கிலத்திலும் இப்படிதானா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழில் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எட்டு வெவ்வேறு பதிப்பகங்களில் எழுதிய அனுபவத்தில் சொல்கிறேன்: ஓரிரு பதிப்பகங்களைத்தவிர மற்ற யாரும் இதற்கு விதிவிலக்கல்ல, அந்த ஓரிருவரும் தனிப்பட்டமுறையில் நேர்மையாளர்களாக இருக்கிறார்கள், ஆகவே, அதைத் தொழிலில் பின்பற்றுகிறார்கள், அவ்வளவுதான். ஒரு தொழில்துறை என்றமுறையில், தமிழ்ப் பதிப்பகத்துறை எந்தவிதமான Transparencyக்கும் இடமளிப்பதில்லை. அதைக் கோருகிற எவரையும் ஆவேசமாகவே அணுகுகிறது, அல்லது, புறக்கணிக்கிறது.

இதனால்தான் ‘நூல்கள் விற்பதில்லை, பெருநஷ்டம்’ என்ற பிம்பத்தை எளிதில் இவர்களால் உருவாக்க இயலுகிறது. அது பொய் என்று நான் சொல்லவில்லை, ஆனால், அது உண்மை என்பதற்கான எந்தச் சான்றும் இல்லை, அதை வழங்கும் நிலையில் இந்தத் தொழில்துறை இல்லை.

ஆகவே, சந்தேகத்தின் பலனை எழுத்தாளர்களுக்கே நான் வழங்குவேன், தான் எழுதிய நூல்களுக்கு ராயல்டி கோரும் முழு உரிமை எழுத்தாளர்களுக்கு இருப்பதாகவே எண்ணுகிறேன்.

தற்போது என்னுடைய ஐம்பது நூல்களாவது அச்சில் இருக்கின்றன, (ஓரளவு) நன்றாக விற்றுக்கொண்டும் இருக்கின்றன. ஆனால், இந்த வருடம் எனக்கு ராயல்டியாகக் கிடைத்த தொகை மிகச் சொற்பம். அதுவும் மேற்சொன்ன நேர்மையாளரான நண்பர்கள் மனமுவந்து தந்தது. அவர்கள் வாழ்க!

மற்ற பதிப்பகங்கள் ஒவ்வொருவரிடமும் மின்னஞ்சலில், SMSல், ஃபோனில் கெஞ்சிக்கெஞ்சித் தன்மானம் கெடுகிறது. எப்போது கேட்டாலும் பதில் இல்லை, அல்லது, ‘அடுத்த வாரம்’ என்கிற நீர்மேல் எழுத்து. இதையே கேட்டுக்கொண்டிருக்க நாமென்ன சவலைப்பிள்ளைகளா? அந்த நேரத்தில் வேறெதையாவது மனத்துக்குப் பிடித்ததை எழுதித்தொலைக்கலாமே!

பதிப்பகங்களில் இருவகைத் தொடர்புகள் நமக்கு அமையும்: உள்ளடக்கத்தைக் கவனிப்போர், நிறுவனத்தை நிர்வகிப்போர். இதில் முதல் வகையினர் நமக்கு நல்ல நண்பர்களாவார்கள், நிர்வகிப்போர் பின்னால் இருந்தபடி அதனை அங்கீகரிப்பர். நூல்கள் வெளிவரும், அதன்பிறகு, அந்த முதல்வகையினரின் கைகள் கட்டப்பட்டுவிடும், அவர்களும் சம்பளத்துக்கு வேலை செய்கிறவர்கள்தானே.

ஆகவே, நாம் அந்த நிர்வாகிகளுடன் நேரடியாகப் பேசத் தொடங்குவோம். அவர்கள் முரட்டுச்சுவர்களாகவே இருப்பர். முட்டிமுட்டித் தலை வலிக்கும்.

கோபத்தில் நாம் முதல்வகையினரிடம் கத்துவோம். அந்த நட்பு கெட்டுப்போகும். பணத்துக்காக எத்தனையை இழப்பது?

இதனால்தான், ஓரிரு ஆண்டுகளுக்குமுன் நூலெழுதுவதை நிறுத்தத் தீர்மானித்தேன். வேறு பணிகளில் (எழுத்து/ மொழிபெயர்ப்பு) ஈடுபடத் தீர்மானித்தேன். அங்கேயும் தொல்லைகள் உண்டு. ஆனால், அவை பதிப்பகங்களைவிட மிகவும் Organized/ Professionalஆக இருக்கின்றன. இனி ஒருபோதும் நானே பதிப்பகங்களை நாடிச்செல்வதாக இல்லை.

இன்னொரு கோணம்:

நேற்று காலை, பா. ராகவனிடம் WhatsAppமூலம் பேசியபோது, ‘நாமே நம் நூல்களைப் பதிப்பிக்கலாமே’ என்றேன். மறுநிமிடம் தெளிந்து, ‘ம்ஹூம், அது சரிப்படாது சார்’ என்றும் சொல்லிவிட்டேன்.

நானும் ஓராண்டு பதிப்பகம் நடத்தினேன், பாராவுக்கு இதில் இன்னும் பலமடங்கு அதிக அனுபவம் உண்டு. நாங்கள் தெரிந்துகொண்டது: விற்றல் வேறொரு கலை, எழுதுபவன் விற்பவனாக ஒரு மனமாற்றம் தேவை, அது சாதாரணமல்ல.

ஒரு பதிப்பகம் நடத்துவதில் ஆயிரம் சிக்கல்கள், தலைவலிகள் உண்டு, அவைதான் அவர்களை Unprofessionalஆக இயங்கச்செய்கிறதோ என்னவோ.

ஆகவே, பதிப்பாளர்களை நான் மதிக்கிறேன், அவர்களது நிலைமையைப் புரிந்துகொள்கிறேன், அதேசமயம் அவர்களது வெளித்தன்மையற்ற நடத்தையால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற மறுக்கிறேன்.

இனி, நான் எழுதும் நூல்கள் எவையும் மின்னூல்களாக (இலவசமாகவும் விலைக்கும்) வரும். அல்லது, தனிப்பட்டமுறையில் நேர்மையாளர்களாக இருக்கும் நண்பர்களின் பதிப்பகங்களில் அச்சுநூல்களாக வரும், அவர்களது நேர்மை தொடரும் என்ற நம்பிக்கையுடன்தான்.

துறை எதுவானாலும், அதுதானே அடித்தளம்!

***

என். சொக்கன் …

26 01 2016

இன்று ஒரு மொழிபெயர்ப்புப்பணி வந்தது.

வழக்கமான என்னுடைய கட்டணத்தைச்சொன்னேன். ஒப்புக்கொண்டார். ஆவணத்தை அனுப்பினார். மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கினேன்.

பொதுவாக இதுமாதிரி பணிகளில் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தவுடன், Invoice எனப்படும் பணக்கோரல் கடிதத்தை அனுப்பவேண்டும், அதன்பிறகு 30 நாள், 45 நாளில் பணம் வரும், பெரும்பாலானோர் ஒழுங்காகத் தந்துவிடுவார்கள், சிலர் பல மாதங்கள் இழுத்தடிப்பார்கள், நினைவுபடுத்தி நினைவுபடுத்தி நமக்கே வாய் வலித்தபிறகும் காசு தரமாட்டார்கள்.

கிடக்கட்டும், இன்றைய மொழிபெயர்ப்புக்கு வருகிறேன்.

தினமும் எத்தனையோ மொழிபெயர்க்கிறோம், அவற்றில் இதுவும் ஒன்று என்ற நினைப்புடன்தான் இந்த ஆவணத்தை மொழிபெயர்க்கத்தொடங்கினேன். இரண்டே நிமிடத்தில் திகைத்துப்போய், முழு ஆவணத்தையும் ஒருமுறை விறுவிறுவென்று படித்தேன்.

அதனை எழுதியவர் ஒரு புகைப்படக்கலைஞர், காந்தியப் போராளி. தனது காந்தியப் போராட்டம் ஒன்றுக்கு மக்களிடம் ஆதரவுகேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை மொழிபெயர்க்க என்னை அணுகியிருக்கிறார். இது தெரியாமல் நான் மடப்பயல்போல் மொழிபெயர்ப்புக்கு ரேட் பேசியிருக்கிறேன். ரொம்பக் கூச்சமாக இருந்தது.

அந்த ஆவணத்தை மீண்டும் படித்தேன், அவரது பண்பும் அன்பும் அந்த எழுத்துகளில் தெரிந்தன. அதனை என்னால் இயன்றவரை சிறப்பாக மொழிபெயர்த்தேன்.

அவரது போராட்டத்தில் பங்கேற்க என் புவியியல்சூழ்நிலை ஒத்துழைக்காது, ஆகவே, என்னுடைய சிறிய பங்களிப்பாக, இந்த மொழிபெயர்ப்புக்குக் காசு வாங்கவேண்டாம் (அதாவது, Invoice அனுப்பவேண்டாம்) என்று தீர்மானித்துக்கொண்டு ‘Send’ பொத்தானை அழுத்தினேன்.

அதே விநாடியில், அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. ‘நாம் பேசியபடி பணத்தை உங்கள் வங்கிக்கு அனுப்பிவிட்டேன், அதற்கான இணையவங்கி ரசீது இதோ, இனி நீங்கள் மொழிபெயர்ப்பைத் தொடங்கலாம்!’

யோவ் காந்தி! என்ன ஆளுய்யா நீ!

***

என். சொக்கன் …

06 01 2016

சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்குச் சில நாள் முன்பாக எழுதிய ஒரு பதிவில் ‘இனி நேரடி நூல்கள் எழுதுவதில்லை’ என்று ஒரு வரி குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள் அது ஏன் என்று பொதுவிலும் தனி அஞ்சலிலும் கேட்டிருந்தார்கள். புக்ஃபேர் நேரத்தில் வேண்டாம் என்று காத்திருந்து இப்போது எழுதுகிறேன்.

முதலில், இந்தப் பதிவின் நோக்கம் புலம்புவதோ குற்றம் சாட்டுவதோ அல்ல. அப்படி ஒரு தொனி தென்பட்டால் அது நிச்சயம் எதேச்சையானதே.

கடந்த பத்தாண்டுகளில் நான் பல நேரடி நூல்களை எழுதியுள்ளேன். அவை அனைத்தும் பதிப்பகத்தார் கேட்டு, அதன்படி எழுதப்பட்டவை. கொஞ்சம் MBA பாஷையில் சொல்வதென்றால், Made to Order.

’என்னது? Order, Make போன்ற பொருளியல் பதங்களைப் புத்தகங்களுக்குப் பயன்படுத்துவதா?’ என்று பொங்கியெழவேண்டாம். Nonfiction வகை நூல்கள் தமிழில் இவ்வாறுதான் எழுதப்பட்டுவந்திருக்கின்றன, எழுதப்படுகின்றன. Fiction நூல்கள்மட்டுமே எழுத்தாளர் தன் ஆர்வத்தின் அடிப்படையில் எழுதிப் பின் பதிப்பகத்தைத் தேடுகிறார். மற்ற நூல்கள் பெரும்பாலும் பதிப்பகத்தால் கோரப்படும், ஒருவர் எழுதுவார், இதுவே முறை.

சில நேரங்களில் நிபுணர்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்களைத் தாங்களே ஆர்வமாக எழுதுவதுண்டு. அல்லது, சொந்த விருப்பத்தின் பேரில் சில Nonfiction விஷயங்கள் எழுதப்படுவதுண்டு. மற்றபடி, பதிப்பகம் கேட்பதும், பின் ஒருவர் Made to Order முறையில் எழுதுவதும் வழக்கம்.

ஆக, கோரிப் பெறப்பட்ட நூல்கள் என்றமுறையில், அது மிக மோசமாக அமைந்து பிரசுரமாகாவிட்டாலன்றி அந்நூலை எழுதியவர் இவற்றுக்கு உரிய ஊதியம் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. காரணம், அவர் பதிப்பகத்தின் கோரிக்கையின்பேரில் அந்நூலுக்காக நேரம் செலவிட்டிருக்கிறார். அவர்கள் கேட்காவிட்டால் அவர் அந்நேரத்தைச் செலவிட்டிருக்கப்போவதில்லை.

இந்த ‘ஊதியம்’ இருவிதமாக வழங்கப்படலாம்:

1. ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிக் கணக்கைத் தீர்த்துவிடலாம், அதன்பிறகு நூலுக்கும் ஆசிரியருக்கும் சம்பந்தமில்லை, அவர் பெயர் வரும், ஆனால் நூல் எவ்வளவு விற்றாலும் கூடுதல் பணம் எதுவும் அவருக்கு வழங்கப்படாது

2. விற்கும் நூல்களுக்கு ஏற்றபடி ஒரு ராயல்டி தொகை 7.5% அல்லது 10% தரப்படலாம்

ஒருவிதத்தில் முதல் வகை நல்லது, எழுதியதற்கு உடனே பணம் வருகிறது. வேறு வேலையைப் பார்க்கலாம்.

இன்னொருவிதத்தில் இரண்டாவது வகை நல்லது, புத்தகம் நன்கு விற்றால் நன்கு சம்பாதிக்கலாம்.

ஆனால், இரண்டாவது வகையில் ஓர் அபாயம் உண்டு. புத்தகம் ஒருவேளை நூறு பிரதிகள்மட்டுமே விற்றால், அதற்கான ராயல்டி சொற்பமாகவே இருக்கும். எழுதியவரின் மைக்கூலி(அல்லது கம்ப்யூட்டருக்கான மின்சாரக்கூலி)கூட திரும்பக் கிடைக்காது.

ஆகவே, இந்த இரண்டாம் வகையில் ஓர் உப பிரிவாக, முதல் அச்சு செய்த நூல்களுக்கான ராயல்டியை முன்பணமாகத் தந்துவிடுவது வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக, 500 பிரதிகள் அச்சிட்டால், அதில் 10%, அதாவது 500 பிரதிகளும் விற்றால் என்ன தொகை வரக்கூடுமோ, அதில் பத்து சதவிகிதம் பணம் உடனே தரப்படும். இதை First Print Royalty என்பார்கள்.

ஒரு சின்ன கணக்கு:

160 பக்க நூல் ஒன்று, விலை 120 ரூபாய் என்று வைப்போம். ஆக, 500 பிரதிகளின் விலை 500 * 120 = அறுபதாயிரம் ரூபாய். அதில் 10% ஆறாயிரம் ரூபாய்.

இந்தத் தொகை புத்தகம் அச்சானதும் எழுத்தாளருக்குத் தரப்படும். செய்த வேலைக்கு உடனே ஒரு பணம் வந்தது என்று அவர் மகிழ்வார்.

பின்னர் அந்நூல் பத்தாயிரம் பிரதிகள் விற்றால், அதற்கான கூடுதல் ராயல்டி அடுத்த ஆண்டோ அதன்பிறகோ அவருக்குக் கிடைக்கும். ஆனால் அதற்குப் பல மாதங்கள் ஆகும். புத்தகம் சரியாக விற்காவிட்டால் இந்த ஆறாயிரம் ரூபாயோடு அவர் திருப்தியடையவேண்டியதுதான்.

இதுவரை நான் சொன்னது, 2004ல் என் முதல் நூல் வெளியானதிலிருந்து பல பதிப்பகங்களில் நான் கண்ட நடைமுறை. First Print Royalty உடனே கிடைப்பது தொடர்ந்து எழுத ஓர் ஊக்கமாக இருந்தது. என்னைப்போல் வேறு வேலை செய்துகொண்டு எழுதுகிறவர்களுக்கு இது அவசியம் தேவை, காரணம், நாங்கள் வீட்டாருடன் செலவழிக்கவேண்டிய நேரத்தை நூலுக்குத் தருகிறோம். அதற்குப் பதிலாக இப்படி ஏதாவது கிடைத்தால்தான் மனைவி முணுமுணுக்காமலிருப்பார்.

கடந்த சில ஆண்டுகளாக, மேற்சொன்ன நடைமுறையில் சிறு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. First Print Royalty என்பதை நான் எழுதும் பதிப்பாளர்களில் பெரும்பாலானோர் தருவதில்லை. 2012லிருந்து நான் எழுதிய நூல்களில் இரண்டு நூல்களுக்குதான் First Print Royalty பெற்றிருக்கிறேன். அதில் ஒன்று சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டது, இன்னொன்று கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.

ஆக, கடந்த இரண்டரைச் சொச்ச ஆண்டுகளாக நான் எழுதிய நூல்களில் பெரும்பாலானவற்றுக்கு இதுவரை ஒரு பைசாவும் எனக்கு வரவில்லை. மின்சாரக்கூலிகூட வரவில்லை, எழுத்துக்கூலியெல்லாம் அப்புறம்.

இதுபற்றிப் பதிப்பக நண்பர்களுடன் நிறைய பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு ப்ராக்டிகல் பிரச்னைகள் இருப்பது புரிகிறது. அதேசமயம் ஒரு Made To Order Productஐச் செய்து தந்துவிட்டு அதற்கான ஊதியத்தை எதிர்பார்த்து வருடக்கணக்கில் காத்திருப்பது நியாயமாகப் படவில்லை.

ஆகவே, பதிப்பகங்களுக்கான நேரடி நூல்கள் எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். இனிமேலும் பத்திரிகைகளில் வரும் என் தொடர்கள், இணையத்தில் எழுதுபவை போன்றவற்றைமட்டும் கேட்பவர்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். அவற்றுக்கான ராயல்டி தாமதமாக வந்தாலும் எனக்குப் பெரிய வருத்தமில்லை. காரணம், அவற்றில் இன்னொருவர் என் நேரத்தைத் தீர்மானிப்பதில்லை, அந்தச் சுதந்தரம் எனக்குள்ளது.

இந்தத் தீர்மானத்தை எடுத்தபின் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், உணர்கிறேன். நிறைய நேரம் கிடைக்கிறது, அதை வேறு பணிகளுக்குச் செலவிடுகிறேன், இணையத்தில் நினைத்ததை எழுத இயலுகிறது. அவை அச்சில் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.

***

என். சொக்கன் …

23 01 2015

என் இளைய மகள் மங்கையுடன் பஸ் பயணம். ஜன்னல் வழியே ரோட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவள் திடீரென்று, ‘அப்பா ஒரு கார் எத்தனை ருபீஸ்?’ என்றாள்.

‘என்னது?’

’அந்த அங்கிள் ஒரு கார் ஓட்டறாரே, அவர் எவ்ளோ ருபீஸ் கொடுத்து அதை வாங்கினார்?’

மங்கைக்கு லட்சக் கணக்கு தெரியாது. அவளுக்குத் தெரிந்த மிகப் பெரிய தொகை, ‘ஹண்ட்ரட் ருப்பீஸ்’தான். ஆகவே, ‘அந்தக் கார் ஃபைவ் ஹண்ட்ரட் ருபீஸ்’ என்றேன்.

‘ஓ!’ என்றவள், ‘அப்போ அந்த பைக்?’ என்றாள்.

நான் கொஞ்சம் Relativeஆக ஒரு தொகையைச் சொல்ல நினைத்து, ‘ட்டூ ஹண்ட்ரட் ருபீஸ்’ என்றேன்.

’அப்போ சைக்கிள்?’

‘ஃபிஃப்டி ருபீஸ்.’

‘அப்டீன்னா?’

‘ஹாஃப் ஹண்ட்ரட் ருபீஸ்!’

‘ஓ!… இந்த பஸ்?’

கொஞ்சம் தயங்கி, ‘டென் ஹண்ட்ரட் ருபீஸ்’ என்றேன்.

‘லாரி?’

‘நைன் ஹண்ட்ரட் ருபீஸ்.’

‘ட்ராக்டர்?’

‘எய்ட் ஹண்ட்ரட் ருபீஸ்.’

திடீரென்று, ‘லாலி பாப் எவ்ளோ ருபீஸ்?’ என்றாள்.

ஒரு ஃப்ளோவில் ‘செவன் ஹண்ட்ரட் ருபீஸ்’ என்று சொல்லியிருப்பேன், சுதாரித்து, ‘ட்டூ ருபீஸ்’ என்றேன்.

‘ஹாஹா!’ என்று சிரித்துவிட்டு கேள்விகளை நிறுத்திக்கொண்டாள்.

சுமார் பதினைந்து நிமிடம் கழித்து, ‘அப்பா, இருக்கறதிலயே biggest vehicle எது?’ என்றாள்.

‘கப்பல்’ என்றேன்.

‘ப்ச், ரோட்ல ஓடற வெஹிக்கிள்ஸ்ல எது பெரிசுன்னு சொல்லுப்பா.’

‘லாரி’ என்றேன் சற்றும் யோசிக்காமல்.

’அப்போ லாரி பஸ்ஸைவிடப் பெரிசுதானே, அப்புறம் ஏன் லாரி நைன் ஹண்ட்ரட் ருபீஸ், பஸ்மட்டும் டென் ஹண்ட்ரட் ருபீஸ்?’

ஆகவே மக்கழே, குத்துமதிப்பாகச் சொன்னாலும் பொருந்தும்படி சொல்லுங்கள். குறிப்பாகப் பெண்களிடம். எப்போதோ சொன்னதை இப்போது சொல்வதுடன் connect செய்யும் குணம் அவர்கள் ஜீன்களிலேயே இருக்கிறதுபோல!

***

என். சொக்கன் …
06 04 2014

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் காபி முடித்த கையோடு, என் முன்னே ஒரு தட்டு நிறைய பனங்கிழங்கு நீட்டப்பட்டது.

கொஞ்சம் பொறுங்கள். அது பனங்கிழங்கு இல்லை. கேரட்.

நம்ம ஊர் ஆரஞ்சு நிறக் கேரட் அல்ல இது. டெல்லியில் கிடைக்கும் ஒரு விசேஷ வகை, சிவப்பு நிறத்தில் ஒல்லியாகவும் நீளமாகவும் கிட்டத்தட்ட பனங்கிழங்குமாதிரியே இருக்கும். கேரட் அல்வாவுக்கு உகந்தது.

அது சரி, இப்போ எதுக்கு இவ்ளோ கேரட்? கேட்பதற்குமுன்னால் மனைவியின் பதில் வந்தது, ‘இதைத் தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர்றியா?’

’எதுக்கு?’

‘அல்வா செய்யப்போறேன்’ என்றார், ‘தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர டைம் இருக்குமா?’

தட்டை நோட்டமிட்டேன். குறைந்தது அரை மணி நேர வேலை. ‘எனக்கு ஒரு ட்ரான்ஸ்லேஷன் இருக்கே’ என்றேன் மையமாக.

‘ட்ரான்ஸ்லேஷன் இப்போ செஞ்சா 15 நாள் கழிச்சுப் பணம் வரும், இல்லாட்டி, பணம் தராம ஏமாத்தி அல்வா கொடுப்பான், எனக்குக் கேரட்டைத் தோல் உரிச்சு வெட்டித் தந்தா நான் ஒரு மணி நேரத்துல நிஜமான அல்வா கொடுப்பேன், எப்படி வசதி?’

யோசிக்காமல் கேரட்களை வாங்கிக்கொண்டேன். ஒவ்வொன்றாக முனை நறுக்கிவிட்டு, அவற்றை ஊழல் அரசியல்வாதிகளாக நினைத்துக்கொண்டு தோலுரிக்க ஆரம்பித்தேன்.

என் மனைவி காய்கறிகளைத் தோலுரிக்க ஒரு கருவி வைத்திருக்கிறார். அதை உள்ளங்கையில் பிடித்துக் காயின்மீது சொய்ங் சொய்ங் என்று இழுத்தால் லகுவாகத் தோல் வெட்டுப்பட்டு வந்துவிடும்.

ஆனால், கேரட்டுக்குத் தோலுரிப்பதில் ஒரு பிரச்னை, எப்போது தோல் தீர்ந்தது என்று எனக்குத் தெரியாது. சுவாரஸ்யமாக உள்ளே உள்ள (சமைத்தற்கு உகந்த) கேரட்டை சரக் சரக்கென்று வெட்டி எறிந்துகொண்டிருப்பேன்.

இது எப்படியோ என் மகளுக்குத் தெரிந்துவிடும். நேராகச் சென்று அம்மாவிடம் வத்திவைத்துவிடுவாள். எனக்குத் திட்டு விழும். ‘ஆறு வயசுப் பொண்ணுக்குத் தெரியுது, உனக்குத் தெரியாதா?’

இப்படியாக இரண்டு கேரட்களைக் கூர் சீவியபிறகு, கை வலித்தது. ‘ஐலேசா’வுக்குப் பதிலாக, அடுப்பில் கவனமாக இருந்த மனைவியிடம், ‘என்ன திடீர்ன்னு கேரட் அல்வா?’ என்றேன், ‘திங்கள்கிழமை ஹோலி வருதே, அதுக்கு ஸ்பெஷல் ஸ்வீட்டா?’

‘அதெல்லாம் இல்லை’ என்றார் அவர். ‘அது ஒரு பெரிய கதை!’

ஃப்ளாஷ்பேக் தொடங்கியது.

எங்கள் தெருவில் தள்ளுவண்டியில் காய்கறி விற்கிற பெண்ணின் பெயர் சரளா. வீட்டில் சமையலுக்குத் தேவையான காய்கள், கீரை, பழங்கள் எல்லாம் அவரிடம்தான் தினசரிக் கொள்முதல்.

இந்தச் சரளாவிடம் இன்றைக்கு என் மனைவி காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய வண்டியின் மூலையில் இந்தக் கேரட்கள் வாடிக் கிடந்தனவாம். ‘இதைப்போய் யார் வாங்குவாங்க?’ என்று முகம் சுளித்திருக்கிறார் என் மனைவி.

‘அதை ஏன்க்கா கேட்கறே’ என்று சரளா இன்னொரு ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்திருக்கிறார். ‘இந்தக் கேரட் நான் வாங்கி வர்ற வழக்கமே இல்லை, இதை அதிகப் பேர் வாங்கமாட்டாங்க. நாலு நாள் முன்னாடி அங்க ஒரு வீட்ல ரெண்டு கிலோ டெல்லி கேரட் வேணும்ன்னு சொன்னாங்க, அவங்களுக்காக வாங்கிட்டு வந்தேன், அப்புறம் பார்த்தா ஒரு கிலோமட்டும் போதும்ன்னு சொல்லிட்டாங்க, அதனால இன்னொரு கிலோ வேஸ்ட்டாக் கிடக்குது, யாரும் சீண்டமாட்டேங்கறாங்க.’

‘அப்போ இதை என்ன செய்யப்போறே?’

‘தூக்கிதான் எறியணும்.’

‘இதுல அல்வா செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் சரளா, செஞ்சு கொடு, உன் பிள்ளைங்க விரும்பிச் சாப்பிடுவாங்க.’

‘அதுக்கெல்லாம் யாருக்குக்கா நேரம் இருக்கு?’ என்றார் சரளா. ‘வேணும்ன்னா நீ செஞ்சு சாப்பிடு’ என்று எடுத்துக் கூடையில் போட்டுவிட்டார்.

ஃப்ளாஷ்பேக் நிறைந்தது.

’அப்போ இதுக்குக் காசு?’

‘தூக்கிப்போடற பொருள்தானே, காசு வேணாம்ன்னு சொல்லிட்டா!’

‘அடிப்பாவி, ஓசிக் கேரட்டா?’ என்றேன், ‘எண்ணிப் பார்த்தா இருபத்து நாலு கேரட் இருக்கும்போல, இன்னிக்குத் தேதிக்குப் பவுன் என்ன விலை விக்குது தெரியுமா?’

‘எப்படியும் தூக்கி வீசப்போறா? எனக்குத் தந்தா என்னவாம்? இவ்ளோ வருஷமாக் காய் வாங்கறேன், ஒரு லாயல்டி போனஸ் கிடையாதா?’

‘அது சரி!’ என்றபடி கேரட் தட்டை அவரிடம் நீட்டினேன், ’இது போதுமா?’

‘இன்னும் கொஞ்சம் சின்னதா வெட்டணும்!’

முணுமுணுத்தபடி வெட்டினேன். மகள்கள் என் அருகே உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் சின்னதா வெட்டுப்பா’ என்று அதட்டி மகிழ்ந்தார்கள்.

ஆக, நேற்றிரவு உணவோடு கேரட் அல்வா அமர்க்களப்பட்டது. டெல்லி கேரட்டுக்கே உரிய அமர்க்கள சுவை.

***

இன்று மதியம் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சாப்பிடச் சென்ற நேரம், கேட் எதிரே சரளா நின்றிருந்தார். படிகளில் ஏறும்போது, காய்கறிக் கூடையோடு என் மனைவி இறங்கிவந்தார், இன்னொரு கையில் உள்ளங்கை அகல டப்பா ஒன்று.

‘அதென்ன டப்பா?’

‘கேரட் அல்வா, சரளா பிள்ளைங்களுக்கு!’

இங்கே யார் யாருக்கு லாயல்டி போனஸ் தருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

***

என். சொக்கன் …

14 03 2014

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தொலைபேசி அழைப்பு. நண்பர் ஒருவர், ட்விட்டரில் பழக்கம், ஓரிருமுறை சந்தித்துள்ளேன், பெங்களூர்க்காரர்தான்.

ஃபோனை எடுத்தவுடன், ’அரவிந்தன் (பொது நண்பர்) ஊர்ல இல்லைங்களா?’ என்றார்.

‘ஆமாங்க, அவர் இப்போ வெளிநாட்டுல இருக்கார்’ என்றேன்.

கொஞ்சம் தயங்கி, ‘ஒரு விஷயம் கேட்டாத் தப்பா நினைக்கமாட்டீங்களே’ என்றார்.

‘சொல்லுங்க.’

‘அவசரமா பத்தாயிரம் ரூபாய் பணம் வேணும்.’

நான் பேசுவதற்குள் அவரே, ‘எனக்கில்லை, என் மனைவிக்கு’ என்றார். ‘இப்ப நான் ஊர்ல இல்லை, அவங்களுக்குப் பணம் Withdraw செஞ்சு தரமுடியலை,அதான்.’

’நீங்க அவங்க அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சா, அவங்க எடுத்துக்குவாங்க, நான் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்ததும் உங்களுக்குப் பணம் தந்துடறேன்.’

’அதை நீங்களே ட்ரான்ஸ்ஃபர் செய்யலாமே’ என்று கேட்டிருக்கலாம். கணவன் ஊரில் இல்லாதபோது மனைவிக்குப் பணத்தேவை என்ற செண்டிமெண்ட், விழுந்தேன்.

தவிர, நண்பர் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், ஃபாரினில் வேலை பார்த்துத் திரும்பியவர், வெற்றுப் பத்தாயிரமா ஏமாற்றப்போகிறார்?

ஆகவே, அவரிடம் அக்கவுண்ட் நம்பர் வாங்கிக்கொண்டேன். அனுப்ப முயன்றபோது மறுபடி ஃபோன், ‘சார், பதினஞ்சாயிரமா அனுப்பமுடியுமா?’

அப்போதாவது சுதாரித்திருக்கலாம். நாந்தான் வள்ளலாச்சே, சரி என்று ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தார். ‘பணம் வந்துடுச்சு சார், ரொம்ப தேங்க்ஸ், நாலு நாள்ல உங்க பணத்தை நேர்ல பார்த்துக் கொடுத்துடறேன்.’

அவ்வளவுதான். அதோடு அவர் என்னை அழைப்பது நின்றது. நானும் அதை மறந்துவிட்டேன். சில நாள் கழித்து ஏதோ சமயத்தில் ஞாபகம் வர, ஃபோன் செய்தேன்.

’பிஸியா இருக்கேன் சார், அப்புறம் கூப்பிடறேன்’ என்று வைத்தார். அதுதான் அவர் குரலைக் கேட்ட கடைசித் தருணம்.

அதன்பிறகு இன்றுவரை குறைந்தது 50 முறை அவருடைய எண்ணை அழைத்திருப்பேன். பதில் இல்லை, எடுக்கமாட்டார்.

’வேறு எண்ணிலிருந்து அழைக்கலாமே’ என்றார் மனைவி.

லாம்.ஆனால் அவர் இப்படி மௌனமாக இருக்க வேறு நியாயமான காரணம் இருக்கும் என்று நான் நம்பினேன்.

அது ஆச்சு மூன்று மாதங்கள், பலமுறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை, நானும் வேறு எண்ணிலிருந்து (பிடிவாதமாக) அழைக்கவில்லை.

இதுபற்றி ஒருநாள் நண்பர் நாகராஜனிடம் புலம்பினேன். ‘நீங்க லூஸா?’ என்றார். ‘லட்டுமாதிரி அக்கவுண்ட் நம்பர் இருக்கு, அதை வெச்சு அட்ரஸைப் பிடிங்க. நடவடிக்கை எடுங்க!’

செய்யலாம். ஆனால் இப்போதும் நான் கிறுக்கன்மாதிரி அவர் என் ஃபோன் காலை எடுத்துவிடுவார் என்றே நம்பினேன்.

ஆகவே, நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுவரை.

என் கட்டுரை ஒன்றுக்குத் தரவேண்டிய ரூ 4000ஐ ஏமாற்றினார் ஒருவர். அவருக்கு (நீண்ட காத்திருப்புக்குப்பின்) இன்று ஒரு சூடான மெயில் எழுதினேன்.

அப்போது, அவர் ஞாபகம் வந்தது. ஃபாரினில் வேலை செய்தவர், இங்கேயும் நல்ல நிறுவனத்தில் வேலை. 15000 ரூபாய்க்காக ஓடி ஒளியும்படி என்ன பிரச்னையோ!

பதினைந்தாயிரம் ரூ எனக்கு அற்பக் காசு இல்லை, மூலையில் உட்கார்ந்து அழும் அளவு காசும் இல்லை.

நண்பர் என்று நம்பிக் கொடுத்தேன். நடவடிக்கை ஏதுமின்றி அவரே திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன், அது அசட்டுத்தனம் என்றாலும் நியாயம் அதுதானே?

ஆகவே, இதுகுறித்து எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. (என் மனைவிக்குதான் ஏக டென்ஷன்).

இக்கட்டுரைமூலம் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்துவிடுகிறேன். இனி யாருக்கும் கடன் தரக்கூடாது என்ற பாடத்துக்கான கட்டணம் ரூ 15000!

***

என். சொக்கன் …

03 02 2014

டிவியில் ’பொம்மீஸ் நைட்டி’ என்ற ஒரு விளம்பரம் அடிக்கடி வரும். பார்த்திருக்கிறீர்களா?

அந்த விளம்பரத்தில் ஒரு விநோதமான வசனம், தேவயானியின் டப்பிங் கலைஞர் அதை உணர்ச்சிமயமாக இழுத்துப் பேசியிருப்பார், ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்கு மனைவிங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்.’

’மனைவி’ என்பது கௌரவப் பதவியா? அப்படியே எடுத்துக்கொண்டாலும்கூட, அதை ஒருவர் மெனக்கெட்டுத் தட்டில் வைத்துத் தரவேண்டுமா? கல்யாணம் முடிந்த மறுகணம் அந்தப் பதவி கிடைத்துவிடுமல்லவா?

சரி, தாலி கட்டுவதன்மூலம் கணவர்தான் மனைவிக்கு அந்தப் பதவியைத் தருகிறார் என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அதேபோல் அந்தப் பெண்ணும் அந்த ஆணுக்குக் ‘கணவர்’ என்கிற ஒரு கௌரவப் பதவியைத் தருகிறார் அல்லவா? பொம்மீஸ் நிறுவனம் நாளைக்கே லுங்கிகளைத் தயாரித்தால் ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்குக் கணவன்ங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்’ என்கிற வசனத்துடன் விளம்பரம் வெளியிடுமா?

நிற்க. இது சத்தியமாகப் பெண்ணியப் பதிவு அல்ல. மேட்டர் வேறு.

பொம்மீஸ் நைட்டீஸ் விளம்பரத்தைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு இந்த வசனம்பற்றிய லேசான குழப்பம் இருக்கும், அதைத் தெளிவாக்குவதற்காக, இன்று ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

என்னுடைய நண்பர் ஒருவர், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர், அவருடைய Boss உடன் சேர்ந்து ஒரு பைப் உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தார், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள்.

அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்தால், என் நண்பர், அவருடைய Boss, இருவர் பெயரும் புகைப்படமும் இருக்கும், மேலே உச்சியில் ‘CoFounders’ என்று போட்டிருக்கும்.

இப்போது ஒரு கேள்வி, CoFounder என்றால் என்ன? பத்து வரிகளுக்கு மிகாமல் விளக்குக.

ஒரு நிறுவனத்தை ஒரே நபர் தொடங்கினால், அவர் Founder, நிறுவனர். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தொடங்கினால், ஒவ்வொருவரும் CoFounder எனப்படுவர். தமிழில் ‘சக நிறுவனர்’, ‘இணை நிறுவனர்’?

ஆக, நிறுவனத்தைத் தொடங்கிய அந்தக் கணத்தில் என்னுடைய நண்பர், அவருடைய Boss இருவருமே CoFounders ஆகிவிட்டார்கள். இல்லையா?

ஆனால் ஒரு வித்தியாசம், என் நண்பர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது 5%மட்டும்தான், மீதமுள்ள 95% அவருடைய Boss முதலீடு செய்திருக்கிறார்.

ஆக, அவர்கள் இருவருமே CoFounders என இருப்பினும், ஒருவர் ஆங்கில CoFounder, இன்னொருவர் தமிழ் ‘கோ’Founder, அதாவது, ராஜா!

இந்த வித்தியாசம் நண்பருக்கு நேற்றுவரை தெரியவில்லை. இன்று காலை தெரிந்துகொண்டார்.

வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் சிலர் அவர்களுடைய தொழிற்சாலையைப் பார்வையிட வந்திருக்கிறார்கள். நண்பருடைய பாஸ் அவர்களுக்கு எல்லா இயந்திரங்களையும் சுற்றிக் காட்டிவிட்டு, இவருடைய அறைக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தியிருக்கிறார், ‘This is Mr. _____, I used to work with him, later when I started this company, I decided to make him my CoFounder.’

ஆக, ’கம்பெனி ஆரம்பித்த கணத்தில் அவர்கள் இருவரும் CoFounders ஆகிவிடுகிறார்கள், ஒருவர் இன்னொருவருக்கு CoFounder பட்டத்தைத் தரமுடியாது’ என்பதெல்லாம் வெறும் Dictionary Definitions. எதார்த்தத்தில், இது இன்னும் முதலாளி : தொழிலாளி உறவுதான், அதனால்தான் CoFounder என்ற கௌரவம்(?) ஒருவரால் இன்னொருவருக்குத் ‘தரப்படுகிறது’.

இந்தக் கதையைக் கேட்டபிறகு, பொம்மீஸ் நைட்டி விளம்பர வசனம் எனக்குப் ‘புரிகிறது’.

***

என். சொக்கன் …

11 02 2013

அலுவலக நண்பர் ஒருவர். எப்போதும் உற்சாகமாக இருக்கிறவர்தான். நேற்று அவர் முகத்தில் அதீத குழப்பம் தெரிந்தது. ‘என்னாச்சுங்க?’ என்று விசாரித்தேன். ‘இது Performance Appraisal சீஸனாச்சே, அந்த டென்ஷனா?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்றார் அவர். ‘நாளைக்கு என் பொண்ணு ஸ்கூல்ல Parents : Teacher Meeting.’

‘ஸோ?’

‘என் பொண்ணைப்பத்தி உங்களுக்குத் தெரியாது. சரியான வாலு. எப்பப்பார் குறும்பு, எதையாவது போட்டு உடைக்கறது, டெய்லி யார்கூடயாவது சண்டை போட்டு சட்டையைக் கிழிச்சு முகத்தைப் பிராண்டிவெக்காம வீட்டுக்கு வரமாட்டா, போதாக்குறைக்கு, எந்தப் பாடத்துலயும் உருப்படியா மார்க் வாங்கறதும் கிடையாது. அதனால, ஒவ்வொரு பேரன்ட்ஸ் மீட்டிங்லயும் இதே கதைதான், டீச்சர் எங்களை வண்டைவண்டையாத் திட்டுவாங்க, முகத்தைக் கொண்டுபோய் எங்கே வெச்சுக்கறதுன்னு தெரியாது.’

‘ஏங்க, யுகேஜி படிக்கற பொண்ணு இப்படி இருக்கறது சகஜம்தானே.’

‘அதெல்லாம் இல்லைங்க, அதே க்ளாஸ்ல மத்த பொண்ணுங்க, பசங்கல்லாம் ஒழுங்காப் படிக்கலியா, இவளால எங்களுக்குதான் கெட்ட பேரு’ என்றார் அவர். ‘நாளைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங்ன்னு போன வாரம் லெட்டர் வந்ததுலேர்ந்தே இந்த டென்ஷன்தான். பேசாம இந்தவாட்டி ஆஃபீஸ்ல அர்ஜென்ட் மீட்டிங்ன்னு பொய் சொல்லி நைஸா எஸ்கேப் ஆகிடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்.’

****

அதே நாள் மாலை, இன்னொரு நண்பரை ஒரு விழாவில் சந்தித்தேன். சம்பிரதாய அரட்டையின் நடுவே, ‘உங்க பையனை ஸ்கூல்ல சேர்த்தாச்சா?’ என்று கேட்டேன்.

‘அடுத்த வருஷம்தான்’ என்றார் அவர். ‘சீட் வாங்கியாச்சு.’

‘எங்கே?’

ஒரு மிகப் பிரபலமான பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். ‘அங்கே அவனுக்கு சீட் கிடைச்சது, டொனேஷன் எவ்ளோ தெரியுமா? நாலே கால் லட்சம்.’

‘யம்மாடி!’ நிஜமான அதிர்ச்சியுடன் கேட்டேன். ‘நிஜமா அவ்ளோ பணம் கொடுத்தா சீட் வாங்கியிருக்கீங்க?’

’சேச்சே’ என்று அவர் பெரிதாகத் தலையாட்டினார். ‘I can afford it, But not interested. வேற ஒரு ஆவரேஜ் ஸ்கூல்லதான் சீட் வாங்கியிருக்கேன்.’

‘அப்படியா? ஆச்சர்யமா இருக்கே, அந்த ஸ்கூல்ல சீட் கிடைக்கணும்ன்னு பலர் ஆணிப் படுக்கையில தலைகீழா நின்னு தவம் இருக்கறதாக் கேள்விப்பட்டிருக்கேன், அப்பேர்ப்பட்ட இடத்துல சீட் கிடைச்சும், கைல பணம் இருந்தும் வேணாம்ன்னு விட்டுட்டீங்களே, ஏன்?’

அவர் சற்றும் யோசிக்காமல் சொன்னார், ‘அவ்ளோ பணம் கொடுத்து, கடைசியில பய படிக்காம விட்டுட்டான்னா? Waste of money’, அரை விநாடி இடைவெளிவிட்டு, ‘என் புள்ள என்னைமாதிரிதானே இருப்பான்?’

***

என். சொக்கன் …

10 11 2012

சில வாரங்களுக்குமுன்னால், லாண்ட்மார்க் புத்தகக் கடை க்யூவில் காத்திருந்தேன். எனக்குப் பக்கத்து க்யூவில் ஒருவர், கை நிறைய சாக்லெட்களுடன் நின்றிருந்தார்.

அநேகமாக அன்று அவருடைய குழந்தைக்குப் பிறந்த நாளாகவோ, வீட்டில் வேறு விசேஷமாகவோ இருக்கவேண்டும், அதற்கு வருகிற பிள்ளைகளுக்குத் தருவதற்காக அந்த விசேஷ சாக்லெட்களைப் பெரும் எண்ணிக்கையில் வாங்கியிருந்தார்.

அந்த சாக்லெட்கள் எனக்கும் நன்கு பழக்கமானவைதான். டிவியில் அடிக்கடி விளம்பரங்களாக வரும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். முப்பது ரூபாய் விலை. முட்டை சைஸ். உடைத்தால் இந்தப் பாதியில் கொஞ்சூண்டு சாக்லெட், அதைச் சாப்பிட அமீபா அளவிலும் வடிவத்திலும் ஒரு ஸ்பூன், மற்ற பாதியில் சுண்டைக்காய் சைஸுக்கு ஒரு சின்ன பொம்மை, அதை Assemble செய்வது எப்படி என்கிற குறிப்புப் புத்தகம், அதில் உள்ள பொடி எழுத்துகளை லென்ஸ் கொண்டு படித்துப் புரிந்துகொண்டு அந்த பொம்மையைச் ‘செய்து’ விளையாட ஆரம்பிப்பதற்குள் அது விரல் இடுக்கில் நழுவிக் காணாமல் போய்விடும்.

மற்றதெல்லாம் இருக்கட்டும், தக்கனூண்டு சாக்லெட்டை இப்படி Package செய்து முப்பது ரூபாய்க்கு விற்கிற புண்ணியவான் இருக்கிறானே, அவன் வீட்டில் மாதம் தவறாமல் மும்மாரி பொழியட்டும் என்று நான் எப்போதும் வேண்டிக்கொள்வேன்.

முப்பது ரூபாய் என்பதற்காக யாராவது யோசிக்கிறார்களா? அதுவும் பெங்களூரில்? இதோ, கை நிறைய சாக்லெட் முட்டைகளை அள்ளிவைத்திருக்கும் இவரே சாட்சி.

ரொம்ப நேரமாக க்யூவில் நின்று எனக்குப் போரடித்தது. அவர் கையில் உள்ள சாக்லெட்களை எண்ண ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு டப்பாவிலும் 3 முட்டைகள். மொத்தம் 20 டப்பாக்கள். அப்படியானால் 60 முட்டைகள். 60 * 30 = 1800 ரூபாய்கள்.

யம்மாடி. என் மனைவியிடம் இதைச் சொன்னால், ‘இந்தக் காசுக்கு எங்க ஊர்ல ஒரு மாசம் சமையலே செஞ்சுடுவோம்’ என்பார்.

அதற்குள் முட்டைக்காரர் அவருடைய கவுன்டரை நெருங்கியிருந்தார். இருபது டப்பாக்களையும் பொத்தென்று வைத்துவிட்டுப் பர்ஸைத் திறந்து க்ரெடிட் கார்டை எடுத்தார்.

கவுன்டரில் இருந்தவர் ரொம்ப நல்லவர்போலிருக்கிறது, ‘எக்ஸ்க்யூஸ் மீ சார், நான் ஒரு சின்ன ஆலோசனை சொல்லலாமா?’ என்றார்.

‘வாட்?’

‘இதே சாக்லெட் 4 உள்ள பேக்ஸ் கிடைக்குது சார், அதுல இப்போ 20% டிஸ்கவுன்ட் இருக்கு’ என்றார் கவுன்டர்மணி, ‘நீங்க இதுல 20 டப்பா வாங்கறதுக்குப் பதிலா அதுல 15 டப்பா வாங்கினாப் போதும், யு வில் சேவ் அரவுண்ட் 350 ருப்பீஸ்.’

முட்டைக்காரர் முகத்தில் எரிச்சல், ‘ஃபர்கெட் இட்’ என்றார் சத்தமாக, ‘யு மைண்ட் யுவர் பிஸினஸ், ப்ளீஸ்!’

அப்புறமென்ன? எல்லா முட்டைகளுக்கும் பில் போடப்பட்டது. 1800 ரூபாய்க்கு க்ரெடிட் கார்டைத் தேய்த்துக் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர் போய்க்கொண்டே இருந்தார்.

எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ’பில் கேட்ஸ் கீழே விழுந்த ரூபாயைப் பொறுக்கமாட்டார், ஏனெனில் அதைப் பொறுக்கும் நேரத்தில் அவர் அதைவிட அதிகத் தொகையைச் சம்பாதித்துவிடுவார்’ என்று ஒரு பொன்மொழி(?) சொல்வார்கள், இவர் அதுமாதிரி நபராக இருப்பாரோ?

இவரைப் போன்ற நபர்களை நான் நிறைய சூப்பர் மார்க்கெட்களில் பார்த்திருக்கிறேன். பொருள்களை அள்ளிப் போடுவார்கள். எதையும் விலை பார்க்கமாட்டார்கள். ஒப்பிடமாட்டார்கள். பில் போட்டபின் பட்டத்தின் சற்றே நீண்ட வாலைப் போல் அச்சிட்டு வரும் ரசீதைச் சரிபார்க்கமாட்டார்கள். பணத்தைக் கட்டு, காருக்கு நட, அவ்ளோதான்!

இதெல்லாம் பார்த்தால்தான் ஆச்சு என்று நான் சொல்லவில்லை. அதன்மூலம் சில நூறு ரூபாய்கள் பணம் மிச்சமாவது அவர்களுக்கு அவசியப்படாமல் இருக்கலாம். அதைக் கவனிக்கும் நேரத்தில் வேறு உருப்படியான வேலைகளைச் செய்யவேண்டியிருக்கலாம்.

அது நிற்க. இந்த க்யூ சமாசாரம் நடந்து பல நாள்கள் கழித்து, இன்றைக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.

எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு சிறிய குழுவினர் ப்ராஜெக்ட் ஒன்றைப் பிரமாதமாகச் செய்து முடித்தோம். அதைக் கொண்டாடுவதற்காக எல்லாரும் ஒன்றாக மதிய உணவுண்டோம்.

அது ஓர் ஆந்திர உணவகம். வாசல் கதவு திறந்துவிடுகிறவரில் ஆரம்பித்து, காத்திருக்கும் அறையின் செய்தித் தாள்கள்வரை எங்கு நோக்கினும் சுந்தரத் தெலுங்கின் பாட்டிசைப்பு.

போதாக்குறைக்கு, என்னுடன் வந்தவர்கள் அறுவர், எல்லாரும் தெலுங்கர்கள். அவர்கள் தங்களுக்குள் செப்போ செப்பென்று செப்பித் தள்ள எனக்குக் காது புளித்துவிட்டது.

தெலுங்கு தெரியாத ஒருத்தன் பக்கத்தில் இருக்கிறானே என்கிற அடிப்படை நாகரிகமும் அவர்களுக்கு இல்லை, ஆந்திராவில் (ஹைதராபாதில்) மூன்று வருடம் வசித்தபோதும், உள்ளூர் மொழியான தெலுங்கைப் பேசக் கற்றுக்கொள்கிற சமர்த்தும் எனக்கு இல்லை. தானிக்குத் தீனி, சரியாப் போச்சு.

தீனி. அதுதான் மேட்டர். என்னோடு வந்திருந்த அறுவரும் ஆளுக்கு ஒரு சிக்கன் பிரியாணி சொன்னார்கள். அதுவும் ஒரு சிறிய குண்டான் சைஸுக்கு வந்து சேர்ந்தது.

ஒரு குண்டான் இல்லை, ஆளுக்கு ஒரு குண்டான். அது நிறையச் சோறு, ஆங்காங்கே சிக்கன் துண்டுகள்.

‘இவர்கள் இதை மொத்தமும் எப்படிச் சாப்பிட்டு முடிப்பார்கள்?’ என்று நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் உற்சாகமாக ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, அந்த பிரியாணி நிஜமாகவே ரொம்ப ருசியாக இருந்திருக்கவேண்டும். மகிழ்ச்சியில் அவர்களுக்குத் தெலுங்கு பேசக்கூட மறந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

அப்படி முழுத் தீவிரத்துடன் சாப்பிட்டும்கூட, ஆளுக்குக் கொஞ்சம் பாக்கி வைத்துவிட்டார்கள். சுமார் ஒரு குண்டான் பிரியாணி மிஞ்சிவிட்டது.

பொதுவாக இதுமாதிரி ஹை க்ளாஸ் உணவகங்களில் இப்படி மிஞ்சும் உணவை அப்படியே விட்டுவிட்டு வருவதுதான் ‘நாகரிகம்’. ஒரு குண்டான் சிக்கன் பிரியாணி 200 ரூபாயோ என்னவோ விலை, போகட்டுமே, அதனால் என்ன?

நல்லவேளையாக, இந்தக் குழுவின் தலைவர் அப்படி நினைக்கவில்லை. ‘இதை பார்ஸல் செஞ்சு கொடுங்க’ என்று வெயிட்டரைக் கேட்டுக்கொண்டார். வீட்டுக்குக் கொண்டுபோய் சூடு செய்து சாப்பிடுவாராக இருக்கும்.

பில் வந்தது. காசைக் கொடுத்தோம். கிளம்பினோம். அலுவலகத்துக்குத் திரும்பினோம். உள்ளே நுழையுமுன், அங்கே இருந்த காவலாளியிடம் பிரியாணிப் பொட்டலத்தைக் கொடுத்தார் தலைவர். ‘சிக்கன் பிரியாணி’ என்றார் சுருக்கமாக.

’நன்றி சார்’ என்று அவர் வாயெல்லாம் பல்லாக வாங்கிவைத்துக்கொண்டார். விறைப்பாக ஒரு சல்யூட்டும் அடித்தார்.

’அடடே, அடிமட்ட ஊழியருக்குச் சிக்கன் பிரியாணி வாங்கித் தருவதற்கு மனம் இல்லாவிட்டாலும், மிஞ்சியதையாவது வீணடிக்காமல் ஞாபகமாக அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கத் தோன்றுகிறதே, நல்ல மனிதர்தான்’ என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து, வேறொரு வேலைக்காக அலுவலகத்துக்கு வெளியே வந்தேன். அதே செக்யூரிட்டி, அதே சல்யூட். பதிலுக்குப் புன்னகை செய்து, ‘என்னங்க, பிரியாணி சாப்டாச்சா?’ என்றேன்.

‘இல்லை சார், வீட்லேர்ந்து சாப்பாடு கொண்டாந்திருந்தேனே, அதைதான் சாப்பிட்டேன்’ என்றார் அவர்.

’ஏன்? என்னாச்சு? பிரியாணி நல்லால்லயா?’

‘வீட்ல பிள்ளைங்களுக்காக எடுத்துவெச்சிருக்கேன் சார்’ என்றார் அவர்.

***

என். சொக்கன் …

22 08 2012

தூதனாகச் சென்ற அனுமன் வாலில் ராவணன் நெருப்பை வைக்க, அதனால் மொத்த இலங்கையும் எரிந்துபோனது எல்லாருக்கும் தெரியும். அதன்பிறகு என்னாச்சு?

இலங்கை எரிந்தபோது, ராவணனும் அவனுடைய குடும்பத்தினர், மந்திரிமார்களும் ஒரு புஷ்பக விமானத்தில் ஏறித் தப்பிவிட்டார்கள். சூடெல்லாம் தணிந்தபின் இலங்கைக்குத் திரும்பினார்கள். விசுவகர்மா / தெய்வதச்சனை அழைத்து இலங்கையைப் பழையபடி மீண்டும் கட்டச் செய்தார்கள்.

இப்படி உருவாக்கப்பட்ட ‘புது இலங்கை’யை ராவணன் மிகவும் ரசித்தான். ‘முன்னையின் அழகு உடைத்து’ என்று கோபம் தணிகிறான்.

இலங்கையை மறுபடிக் கட்டியாச்சு, ஆனால், ஒரு குரங்கினால் அசுரர்கள் நகரம் அழிந்தது என்கிற அவப்பெயரை எப்படித் துடைப்பது? ராவணன் தன் மந்திரிகளையும் நெருக்கமானோரையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறான்.

அப்போது சேனைகாவலன், மகோதரன், வச்சிரதந்தன், துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்துரு (இவர் பெயரை ‘சூரியன் பகைஞன்’ என்று மொழிபெயர்க்கிறார் கம்பர்), யஜ்ஞஹா (இந்தப் பெயர் ‘வேள்வியின் பகைஞன்’ ஆகிறது), தூமிராட்சன் (புகைநிறக் கண்ணன்) என்று பலர் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாரும் சொல்லும் விஷயங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்:

அசுரர்களின் திறமைக்கு முன்னால் மனிதர்கள் மிகச் சிறியவர்கள். வானரர்கள் அவர்களைவிடச் சிறியவர்கள். ஆகவே, நாம் இதைப்பற்றி ஆலோசித்துக்கொண்டிருப்பதே தப்பு, உடனே புறப்பட்டுச் சென்று அவர்களை நசுக்கி அழித்துவிட்டு வரலாம்

இப்படி எல்லாரும் சொல்லும்போது, ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் பேச ஆரம்பிக்கிறான். அவன் சொல்லும் கருத்துகள் கொஞ்சம் மாறுபட்டுள்ளன:

1. ராவணா, பிரம்மன் குலத்தில் வந்தவன் நீ, வேதத்தின் பொருள் அறிந்தவன் (’ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்’), ஆனாலும், நெருப்பை விரும்பிவிட்டாய் (’தீயினை நயப்புறுதல்’), அதனால் வந்த வினைதான் இது

2. சித்திரம்போல் அழகான இலங்கை நகரம் எரிந்துவிட்டதே என்று வருந்துகிறாய், அரசியல் (இதற்குக் ‘கோவியல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர் : ‘கோ இயல்’) கெட்டுப்ப்பொனது என்று புலம்புகிறாய். இன்னொருவன் மனைவிமேல் ஆசைப்பட்டு அவளைச் சிறை வைத்த பாவத்துக்கு வேறு என்ன பரிசு கிடைக்கும்? (’வேறொரு குலத்தான் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?’)

3. உன்னுடைய நல்ல நகரம் அழிந்துவிட்டது என்று இத்தனை தூரம் வெட்கப்படுகிறாயே (’நல் நகர் அழித்தது என நாணினை’), இதற்கு முன்னால், உன்னுடைய மனைவிமார்களெல்லாம் அழகான புன்சிரிப்போடு காத்திருக்கையில் யாரோ ஒருவனுடைய மனைவியின் காலில் விழுந்து விழுந்து எழுந்தாயே (’ஒருத்தன் மனை உற்றாள் பொன் அடி தொழத் தொழ’), அது ரொம்பப் பெருமையான செயலோ?

4. இலங்கை நேற்றைக்குதான் எரிந்தது. ஆனால் என்றைக்கு நீ சீதையைக் கதறக் கதறத் தூக்கி வந்து, இரக்கமில்லாமல் சிறை வைத்தாயோ, அன்றைக்கே அரக்கர் புகழ் அழிய ஆரம்பித்துவிட்டது. பின்னே? அற்பத் தொழில் செய்தவர்களுக்குப் புகழா கிடைக்கும்? (’புன் தொழிலினார் இசை பொறுத்தல் புலமைத்தோ?’)

5. எந்தத் தவறும் செய்யாத ஒருத்தியைச் சிறையில் அடைப்போம், ஆனால் அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது, நம்மைப் புகழவேண்டும், வாயைத் திறந்தால் ‘மானம் பெரிது’ என்று பேசுவோம், ஆனால் உள்ளுக்குள் காமத்தை வளர்த்துக்கொண்டு நிற்போம் (’பேசுவது மானம், இடை பேணுவது காமம்’), கடைசியில் மனிதர்களைச் ‘சிறியவர்கள்’ என்று கேலி பேசுவோம், நல்லாயிருக்குய்யா  நம்ம நியாயம்!

6. ராவணா, நீ பெரியவர்களுக்கான முறைப்படி நடந்துகொள்ளவில்லை, சிறுமையான ஒரு செயலைச் செய்தாய், அந்தப் பழி மறையவேண்டுமானால், உடனே சீதையை விடுவித்துவிடு (’மட்டவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா விட்டிடுது’), அதனால் நமக்குப் பெருமைதான் அதிகரிக்கும்,

7. ஒருவேளை நீ அவளை விடுவிக்காவிட்டால், அந்த மனிதர்கள் போருக்கு வருவார்கள், நம்மை வெல்வார்கள், இப்போது நீ சேகரித்துக்கொண்டிருக்கிற பழியோடு ஒப்பிடும்போது, ‘மனிதர்களிடம் போரில் தோற்றோம்’ என்கிற பழி சிறியதுதான்

8. மரங்கள் நிறைந்த காட்டில், தன்னுடைய வில் திறமையினால் கரன் என்ற அரக்கனை ஜெயித்தான் ராமன். அங்கே அவன் தொடங்கிவைத்த ‘அரக்கர் ஒழிப்புப் பணி’ இன்னும் முடியவில்லை. நம்மை அழித்தால்தான் அது முடியும். இப்போது நடப்பதெல்லாம் அதற்கான முன்னோட்டங்கள்தான்

9. ஒருவேளை அவர்கள் நம்மீது படையெடுத்துவந்தால், அந்த ராமன் தனியாக நிற்கப்போவதில்லை, அவனோடு சகல தேவர்களும், ஏழு உலகங்களும் சேர்ந்துவிடும், அதனால் நமக்குதான் அவஸ்தை

10. நான் இத்தனை சொல்லியும் நீ கேட்கப்போவதில்லை. சீதையை விடுவிக்கப்போவதில்லை. குறைந்தபட்சம், இந்த ஒரு விஷயத்தையாவது கேள். போர் என்று வந்தபின், ராமன் இங்கே வரும்வரை காத்திருக்கவேண்டாம், இப்போதே கடலைக் கடந்து சென்று அந்த மனிதர்களையும் குரங்குகளையும் மடக்கி மொத்தமாக அழித்துவிடுவோம்

இந்த நீண்ட பகுதியில், கும்பகர்ணனின் மனத்தில் என்ன உள்ளது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. மற்றவர்களெல்லாம் ராஜாவுக்குச் சோப்புப் போட்டுக்கொண்டிருக்கையில், இவன்மட்டும் நேரடியாக அவன் செய்த குற்றத்தைச் சொல்கிறான், அதைத் திருத்திக்கொள்வதற்கான வழியைச் சொல்கிறான், ‘ஆனா, நீ இதையெல்லாம் கேட்கமாட்டே’ என்றும் சொல்கிறான்.

ஆகவே, முத்தாய்ப்பாக ‘சரி, எப்படியும் அவங்களோட சண்டை போடறதுன்னு ஆகிடுச்சு, அந்தச் சண்டையில நாம ஜெயிக்கறதுக்கு வாய்ப்புகள் ரொம்பக் குறைவு, இருந்தாலும், போர் நிச்சயம்ங்கறதால, இப்பவே போய் அவங்களை அழிக்க முயற்சி செய்யறதுதான் புத்திசாலித்தனம்’ என்கிறான் கும்பகர்ணன்.

இதற்கு ராவணன் சொல்லும் பதில் என்ன?

நாம் கேட்பது வேறு, கேட்க விரும்புவது வேறு. ராவணனுக்குக் கும்பகர்ணன் சொன்ன எந்த அறிவுரையும் காதில் விழவில்லை, அவன் தன்மீது சாட்டும் குற்றங்களையும் கேட்டும் கேட்காததுபோல் அலட்சியப்படுத்துகிறான், நிறைவாக அவன் சொன்ன ‘இப்பவே சண்டைக்குப் போகலாம்’ என்ற பகுதியைமட்டும் பிடித்துக்கொள்கிறான்:

’நன்று உரை செய்தாய் குமர, நான் இது நினைத்தேன்,

ஒன்றும் இனி ஆய்தல் பழுது, ஒன்னலரை எல்லாம்

கொன்று பெயர்வோம், நமர் கொடிப்படையை எல்லாம்

இன்று எழுத, நன்று’ என இராவணன் இசைத்தான்

எப்படி இருக்கிறது கதை? ‘நீ சொன்னது ரொம்பக் கரெக்ட் தம்பி, நானும் அதேதான் நினைச்சேன், இனிமே எதுவும் தப்பு நடக்காது, உடனே கிளம்பு, எல்லாரையும் அழிச்சுட்டு வந்துடுவோம்’ என்கிறான் ராவணன். கும்பகர்ணன் அத்தனை நீளமாகச் சொன்ன அறிவுரைகளைப் பற்றியோ, சீதையை விடுவிப்பதுபற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை, அதில் தனக்கு வேண்டியதைமட்டும் எடுத்துக்கொண்டு ’இப்பவே சண்டைக்குப் போகலாம், வா’ என்கிறான்.

கேட்க விரும்புவதைமட்டுமே கேட்கிற இந்த மனோபாவம் ராவணனுக்குமட்டும் சொந்தமானது அல்ல. இன்றைக்கும் இதனைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

சில வாரங்களுக்கு முன்னால் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரச்னை. பணிநிமித்தம் செய்கிற பயணங்களுக்குத் தரும் தினசரி Allowance போதவில்லை என்று சிலர் குரல் எழுப்பினார்கள். அந்தத் தொகையை உயர்த்துவதுபற்றி ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். பலர் தங்களுடைய கருத்துகளைப் புள்ளி விவரங்களுடன் சொன்னார்கள். நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாகத் தங்களுடைய மறுப்புகளை முன்வைத்தார்கள்.

இதனால் கடுப்பான என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிக் கேலி செய்தார்: ‘நாங்க இவ்ளோ சொல்லியும் நீங்க கேட்கமாட்டேங்கறீங்க, ட்ராவல் பண்றவங்களோட ப்ராக்டிகல் கஷ்டங்களைப் புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க, பேசாம அலவன்ஸே கிடையாதுன்னு அறிவிச்சுடுங்க, நாங்க எங்க சொந்தக் காசுலயே பயணம் செய்யறோம்.’

அதற்கு அந்த Admin Manager சொன்ன பதில், ‘நல்ல ஐடியா. இதையே Final Decisionனா எடுத்துக்கலாமா?’

அட, ராவணா!

***

என். சொக்கன் …

10 07 2012

சென்ற வாரத்தில் ஒருநாள், பணி நிமித்தம் மும்பை சென்றிருந்தோம்.

சம்மரில் மும்பை கொதிக்கிறது. என் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப் அரை மணி நேரத்துக்குள் வியர்வையில் நனைந்து சொதசொதவென்று ஆகிவிட்டது. அதற்கு ஏன் கைக்’குட்டை’ என்று பெயர் வைத்தார்கள் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!

ஆக, ஒருவேளை நீங்கள் இந்த நேரத்தில் மும்பைப் பக்கம் செல்வதென்றால், சட்டை, பேன்ட்கூட இரண்டாம்பட்சம்தான். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு கர்ச்சீப்கள் என்ற விகிதத்தில் Pack செய்வீர்களாக.

மும்பையில்  நாங்கள் சந்தித்த நபர், பெரும் பணக்காரர். பெரிய ரியல் எஸ்டேட் காந்தம் (அதாங்க ’பிஸினஸ் மேக்னெட்டு’ம்பாங்களே!). அவருடைய நிறுவனத்துக்குத் தேவையான சில மென்பொருள்களைப் பற்றி நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்த நேரம், அருமையான காபி வந்தது.

காபியை உறிஞ்சும்போது ஏதாவது பொதுவாகப் பேசவேண்டுமில்லையா, வெய்யிலின் கொடுமையைப் பற்றி ஏஸி ரூமில் கொஞ்சம் அலசினோம், அதன்பிறகு, என்னுடைய அலுவலகத் தோழர் ஒருவர் எதார்த்தமாக அவரிடம் கேட்டார், ‘நீங்க கட்டற ஃப்ளாட்ல்லாம் பொதுவா என்ன விலை வரும் சார்?’

அவர் மர்மமாகப் புன்னகைத்தார். ’எவ்ளோ இருக்கும்? சும்மா கெஸ் பண்ணுங்களேன்!’

என் நண்பர் பெங்களூர்க்காரர். ஆகவே அந்த ரேஞ்சில் யோசித்து, ‘டூ பெட்ரூம் ஃப்ளாட் ஒரு அம்பது, அறுபது லட்சம் இருக்குமா?’ என்றார்.

ரியல் எஸ்டேட் காந்தம் சிரித்தது. ’கொஞ்சம் இப்படி வாங்க’ என்று எங்களை ஜன்னல் அருகே அழைத்துச் சென்றது. சற்றுத் தொலைவில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘அது எங்க ப்ராஜெக்ட்தான்’ என்றது, ‘அங்கே ஒரு ஃப்ளாட்டோட விலை பதினஞ்சு கோடியில ஆரம்பிக்குது!’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பெங்களூருவில் சில அபார்ட்மென்ட் விளம்பரங்களில் ‘1.5 Crores Onwards’ என்று படித்திருக்கிறேன். அதுவே எனக்குத் திகைப்பாக இருக்கும், ‘செங்கல்லுக்குப் பதில் தங்க பிஸ்கோத்துகளை அடுக்கிவைத்துக் கட்டுவார்களோ?’ என்று கிண்டலடிப்பேன்.

ஆனால் இங்கே, பதினைந்து கோடிக்கு அபார்ட்மென்ட். உற்றுப்பார்த்தேன், அந்தக் காலப் பாட்டுகளில் வருவதுபோல் நவரத்தினங்களெல்லாம் பதிக்கப்படவில்லை, சாதாரண சிமென்ட், காங்க்ரீட்தான்.

எங்களுடைய குழப்பத்தை அவர் நிதானமாக ரசித்தார். பிறகு விளக்க ஆரம்பித்தார். ‘எங்களோட க்ளையன்ட்ஸ் எல்லாம் பெரிய பணக்காரங்க. பேங்க் லோன் போட்டு வீடு வாங்கி மாசாமாசம் EMI கட்டறவங்க இல்லை, பதினஞ்சு கோடின்னா ஒரே செக்ல செட்டில் செய்வாங்க.’

‘இவங்கள்ல பெரும்பாலானோர் இதை முதலீடாதான் செய்யறாங்க. இப்ப பதினஞ்சுக்கு வாங்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு இருபதுக்கு வித்துடுவாங்க, அவ்ளோதான் மேட்டர்.’

‘இருந்தாலும், பதினஞ்சு கோடிக்கு இங்கே அப்படி என்ன இருக்கும்?’

’நிறைய இருக்கும், மொதல்ல ஏரியா, அப்புறம் நிறைய எக்ஸ்க்ளூஸிவ் வசதிகள்.’

‘அப்படி என்ன பெரிய எக்ஸ்க்ளூசிவ்?’

‘ஏகப்பட்டது உண்டு. உதாரணமாச் சிலது சொல்றேன், இந்த அபார்ட்மென்ட்ல எல்லா ஃப்ளோர்லயும் கார் பார்க்கிங் உண்டு. நேராப் பத்தாவது மாடியில காரை நிறுத்திட்டு வீட்டுக்குள்ளே போகலாம். நோ லிஃப்ட் பிஸினஸ்!’

‘இதே ஏரியால இன்னொரு ப்ராஜெக்ட். அங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லிஃப்ட் கொடுத்துடறோம். கார்டைக் காட்டினா நேரா உங்க ஹால்ல போய்த் திறக்கும்.’

‘இன்னொரு அபார்ட்மென்ட்ல, கார் லிஃப்ட் உண்டு. அதுல நீங்க காரை நிறுத்தி உங்க கார்டைக் காட்டிட்டா, அதுவே கொண்டு போய் எங்கேயாவது பார்க் பண்ணிடும். திரும்ப வெளியே வந்து கார்டைக் காட்டினா கரெக்டா காரைக் கொண்டுவந்து உங்க முன்னாடி நிறுத்தும், எல்லாமே ஆட்டோமேட்டிக்.’

‘அப்புறம், நாங்க கட்டற வீடுகள் எல்லாமே ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு கதவு, ஜன்னலும் மிகப் பெரிய டிசைனர்களால வடிவமைக்கப்பட்டது. நாங்க பயன்படுத்தற மெட்டீரியல்ஸும் பெஸ்ட், நூறு வருஷமானாலும் அப்படியே நிக்கும். கேரன்ட்டி!’

‘அதுமட்டுமில்லை, இந்த வீடுகளை மெயின்டைன் பண்றதும் ஈஸி, உதாரணமா, நாங்க பயன்படுத்தற  பெயின்ட்னால, சுவத்துல கறை பட்டா அப்படியே துடைச்சாப் போதும், பழையபடி பளபளக்கும், ஏதாவது ரிப்பேர்ன்னா நாங்களே செஞ்சு கொடுத்துடுவோம்.’

‘அதுக்குன்னு தனியா maintenance charge உண்டுதானே?’

‘அஃப்கோர்ஸ், அது வருஷத்துக்குச் சில லட்சங்கள் போகும்’ என்று கண் சிமிட்டினார் அவர். அவரது நக்கல் சிரிப்பு ‘உங்களைமாதிரி மிடில் க்ளாஸ் பேர்வழிங்களால இதையெல்லாம் புரிஞ்சுக்கவேமுடியாதுடா டேய்’ என்பதுபோல் இருந்தது.

‘அபார்ட்மென்ட்ஸுக்கே இப்படிச் சொல்றீங்களே, நாங்க கட்டற தனி வீடெல்லாம் நூறு கோடியைத் தொடும், ஒவ்வொண்ணும் Unique Design.’

‘உதாரணமா, ஹைதராபாத்ல ஒரு வீடு, சின்ன மலையோட உச்சியில நிலம், ஏழெட்டு ஃப்ளோர் ப்ளான் பண்ணோம், ஆனா உயரம் ஜாஸ்தின்னு சொல்லி ரெண்டு ஃப்ளோருக்குதான் அனுமதி கிடைச்சது.’

‘சரிதான் போடான்னு அந்த கஸ்டமர் என்ன செஞ்சான் தெரியுமா? மொத்த வீட்டையும் தலைகீழாக் கட்டுன்னுட்டான். அதாவது, மலை உச்சியில ஆரம்பிச்சு அண்டர்க்ரவுண்ட்ல 7 ஃப்ளோர். ஹால்ல நுழைஞ்சு படியில இறங்கி பெட்ரூமுக்குப் போகணும்.’

‘இன்னொரு வீட்ல, மாஸ்டர் பெட்ரூம்லேர்ந்து நீச்சல் குளத்துல குதிக்கறதுக்கு ஒரு சறுக்குப் பலகை உண்டு. ஸ்விம் சூட்டைப் போட்டுகிட்டுக் குட்டிக் கதவைத் திறந்து அப்படியே சறுக்கிப் போய்க் குளத்துல விழவேண்டியதுதான்.’

‘இப்படிச் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்’ என்று முடித்தார் அவர். ‘கைல பணம் இருந்தாமட்டும் போதாதுங்க, அதை அனுபவிக்கவும் தெரியணும், அந்தமாதிரி ஆட்கள்தான் எங்க க்ளையன்ட்ஸ்.’

காபி தீர்ந்தது. நாங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தோம்.

***

என். சொக்கன் …

15 06 2012

  1. nchokkan
    இன்று ஒரு கலீக் என்னுடன் பர்ஸனலாகப் பேச வந்தார்.கல்லூரி முடித்து சுமார் இரண்டு வருடங்களாகிறவர்,அவரை Team Leader ஆக்கப் பார்க்கிறார்கள் |1
    Tue, May 29 2012 11:30:58
  2. nchokkan
    இவருக்குத் தலைமை தாங்குவதில் ஆர்வம் இல்லை, என்னை ப்ரொக்ராமராகவே நிரந்தரமாக இருக்கவிடமாட்டீர்களா? என்றார் கெஞ்சலாக |2
    Tue, May 29 2012 11:31:30
  3. nchokkan
    ’பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன் |3
    Tue, May 29 2012 11:32:07
  4. nchokkan
    ‘நான் ப்ரொக்ராம் எழுதப் படித்திருக்கிறேன், தலைமை தாங்கப் படிக்கவில்லை, வேணும்னா 2வருஷம் லீவ் தாங்க,MBA படிச்சுட்டு வர்றேன்’ என்கிறார் |4
    Tue, May 29 2012 11:33:22
  5. nchokkan
    ’எம்பிஏவுக்கும் தலைமை தாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை தம்பி, இது உனக்குப் பிடிக்காட்டி உன் மேனேஜர்கிட்ட சொல்லு’ என்றேன், பயப்படுகிறார் |5
    Tue, May 29 2012 11:33:59
  6. nchokkan
    ’காலமெல்லாம் ப்ரொக்ராம் எழுதிகிட்டே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்,Just because I am senior to someone, doesn’t mean I have to lead them’ |6
    Tue, May 29 2012 11:34:58
  7. nchokkan
    ’நான் எதிர்பார்க்கறது தப்பா? இங்கே நாலஞ்சு வருஷம் குப்பை கொட்டின எல்லாரும், பிடிக்காட்டியும், திறமை இல்லாட்டியும் மேனேஜராகியே தீரணுமா?’|7
    Tue, May 29 2012 11:36:11
  8. nchokkan
    அப்புறம், ப்ராக்டிகல் பிரச்னைக்கு வருகிறார், ’ஒருவேளை நான் இப்போ இதை மறுத்துட்டா, என் சம்பளம் குறைஞ்சுடுமோ? காசுக்காக மேனேஜணுமா?’ |8
    Tue, May 29 2012 11:37:10
  9. nchokkan
    இப்படி வரிசையாகப் பல கவலைகளைச் சொன்னார், 24 வயதில் 60 வயதுவரை கற்பனை செய்துவைத்திருக்கிறார், அதுசார்ந்த பல குழப்பங்கள் |9
    Tue, May 29 2012 11:38:29
  10. nchokkan
    நான் எல்லாம் கேட்டுக்கொண்டேன். அவர் கேள்விகளில் நியாயம் உண்டு, அதேசமயம், தன் உரிமைகளை அறியாமலிருக்கிறார், கொஞ்சம் வழிகாட்டினேன் |10
    Tue, May 29 2012 11:40:34
  11. nchokkan
    அதற்குமேல் நான் பேசுவது தகாது. அவர் மேனேஜருக்கும் எனக்கும் அரசியலாகும். ‘மகனே, உன் சமர்த்து, போய் HRரிடம் பேசு’ என்று அனுப்பிவிட்டேன் |11
    Tue, May 29 2012 11:41:19
  12. nchokkan
    ஆனால் அப்போதிலிருந்து அவர் கேட்ட கேள்விகளின் நினைப்பாகவே இருக்கிறது.இந்த IT துறை உருவாக்கிய விருப்பற்ற, அரைகுறை மேனேஜர்கள்தான் எத்தனை!|12
    Tue, May 29 2012 11:42:08
  13. nchokkan
    எனக்குத் தெரிந்து பலர் இதை மறுப்பதில்லை, பயம் காரணமில்லை, எல்லாரும் இதையே செய்வதால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் |13
    Tue, May 29 2012 11:43:44
  14. nchokkan
    எனக்கு யாரையும் மேய்க்கத் தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கம்? தன்னை ஒழுங்காக மேய்க்கத் தெரிந்தாலே அது பெரும்திறமை அல்லவா? |14
    Tue, May 29 2012 11:44:56
  15. nchokkan
    ஐடி துறையில் இணைந்து 18 மாதம் கடந்த அனைவருக்கும் இதுகுறித்து ஒரு தெளிவான Counseling நடத்தினால் நன்றாயிருக்கும், யார் செய்வார்கள்? |15/15

நேற்று இரவு அலுவல் நிமித்தம் ஓர் ஆஸ்திரேலியரைச் சந்தித்தோம். இந்திய வம்சாவளிக் குடும்பம்தான். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். இப்போது தொழில்முறைப் பயணமாக இங்கே வந்திருக்கிறார்.

அவர் தங்கியிருந்தது பெங்களூரின் மிகப் பழமையான நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்று. அங்கே எங்களுக்குப் பிரமாண்டமான விருந்து அளித்தார். ஒரு ப்ளேட் வெஜிடபிள் பிரியாணி: ரூ 1500/- தொட்டுக்கொள்ளத் தயிர்ப் பச்சடி ரூ 350/- என்று மெனுவைப் பார்த்தாலே எனக்குப் பசி தீர்ந்துவிட்டது.

ஆனால், அவருக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கமுடியாது. போன வருடம்தான் அவர் தனது சொந்த நிறுவனத்தை இன்னொரு மிகப் பெரிய நிறுவனத்திடம் விற்று ஐநூற்றுச் சொச்ச கோடிகளை அள்ளியிருந்தார். இப்போது அந்தப் பெரிய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

ஆஃபீஸ் விஷயம் என்பதால், இந்த ஐநூறு கோடீஸ்வரருடைய பெயரையோ வேறு விவரங்களையோ தெரிவிக்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் பிரச்னையில்லை, அவர் சொன்ன விஷயங்கள்தான் முக்கியம். சும்மா அவருடைய பெயர் மிஸ்டர் கோயிஞ்சாமி என்று வைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

உண்மையில் எனக்கு இதுபோன்ற பெரும்புள்ளிகளுடன் ஒப்பந்தம் பேசிப் பழக்கமும் இல்லை, அதற்கான நெளிவுசுளிவுகளும் எனக்குத் தெரியாது. என்னுடைய boss அதில் பெரிய விற்பன்னர். எதற்காகவோ இந்தமுறை என்னையும் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டு போயிருந்தார். நானும் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரியாணியில் என்ன விசேஷம் என்று பரிசோதித்தபடி அவர்கள் இருவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் அலுவலக விஷயங்களைப் பேசியவர்கள் ஒருகட்டத்தில் (ஒயின் தாக்கத்தில்?) பர்ஸனல் சமாசாரங்களுக்கு நகர்ந்தார்கள். குறிப்பாக, மிஸ்டர் கோயிஞ்சாமி தன்னுடைய தனிப்பட்ட தொழில்முனைவோர் (Entrepreneur) அனுபவங்களை மிகச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

அதாகப்பட்டது, நீங்கள் ஒரு தொழில் தொடங்கி நடத்துகிறீர்கள், அடிமட்டத்திலிருந்து அதனை வளர்த்து ஆளாக்கி ஒரு பெரிய நிறுவனத்துக்கு விற்க நினைக்கிறீர்கள், அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும்? மிஸ்டர் கோயிஞ்சாமி கொடுத்த டிப்ஸ் இவை:

முன்குறிப்புகள்:

1. ஓர் ஒழுங்கில் இல்லாமல் என் நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன் (Unstructured Notesபோல) தவறுகளோ, அபத்தங்களோ இருந்தால் நானே முழுப் பொறுப்பு

2. இந்த சீரியஸான மேட்டரை இப்படி dilute செய்து விளையாட்டாக எழுதியிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம், நான் சொந்தத் தொழில் தொடங்கியவன் அல்லன், அப்படி ஒரு யோசனையும் இல்லை, ஆகவே எனக்கு இது சும்மா ஜாலியாகக் கவனித்த விஷயம்தான், இப்படிதான் என்னால் எழுதமுடியும்

3. இவை முழுமையான குறிப்புகள் அல்ல, அவர் சொன்னதில் என் நினைவில் தங்கியவைமட்டுமே, அவர் சொல்ல மறந்தவை இன்னும் நிறைய இருக்கலாம்

4. இந்த பலவீனங்களையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்புகள் யாருக்காவது பயன்படும் என்று நம்புகிறேன்

  • தொழில் நடத்துவதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பொருளை (அல்லது சேவையை) தயாரிப்பது, அதனை விற்பது. Production, Sales எனப்படும் இந்த இரண்டு பகுதிகளில் நீங்கள் எதில் கில்லாடி?
  • பெரும்பாலான புதிய தொழில்முனைவோர் தங்களுடைய துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் பெரிய ஆள்களாக இருப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து ஒரு பிரமாதமான தயாரிப்பை உருவாக்கிவிடுவார்கள், அப்புறம் அதை எப்படி விற்பது, எப்படிச் சந்தைப்படுத்துவது (மார்க்கெட்டிங்) என்று தெரியாமல் விழி பிதுங்குவார்கள்
  • நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மேற்சொன்ன இரண்டையுமே நீங்கள் செய்யவேண்டியிருக்கும், பழகிக்கொள்ளுங்கள், அல்லது, உங்களுக்கு எதில் திறமை போதாதோ அந்த விஷயத்தில் கில்லாடியான ஒரு நபரைப் பார்த்துப் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்
  • A : ஓரளவு நல்ல Product, அருமையான Sales Team
  • B : அற்புதமான Product, சுமாரான Sales Team
  • மேற்சொன்ன இரண்டில் Aதான் பெரும்பாலும் ஜெயிக்கும். Its unfair, ஆனால் அதுதான் எதார்த்தம்
  • உங்களுடைய பொருளை (உதாரணமாக: சாஃப்ட்வேர் அல்லது சலவை சோப்பு) விற்பது ஒரு கலை என்றால், உங்களுடைய கம்பெனியை விற்பது வேறுவிதமான கலை, அதற்கு நீங்கள் தனியே பல நுட்பங்களைப் பழகவேண்டும்
  • பெரிய கம்பெனிகள் உங்களுடைய கம்பெனியை எதற்காக வாங்கவேண்டும்? உங்களிடம் என்ன ஸ்பெஷல்?
  • பெரும்பாலான பெரிய கம்பெனிகள் சேவை சார்ந்த நிறுவனங்களை (Service Based Companies) சீண்டுவதே இல்லை, Product Based Companies, அதிலும் குறிப்பாக IP எனப்படும் Intellectual property, அதாவது நீங்களே உருவாக்கிய தனித்துவமான தயாரிப்புகள் இருந்தால் எக்ஸ்ட்ரா மரியாதை
  • ஒருவேளை நீங்கள் Service Based Company என்றாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை / உழைப்பை ஒதுக்கி உங்களுக்கான IP ஐடியாக்களைத் தேடுங்கள், அவற்றுக்கு ஒழுங்காகக் காப்புரிமை (Patent) வாங்கிவைத்துக்கொள்ளுங்கள், உங்கள் நாட்டில்மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா என்று எங்கெல்லாம் இந்தத் தயாரிப்பு காப்பியடிக்கப்படக்கூடுமோ அங்கெல்லாம் பேடன்ட் வாங்கிவிடுங்கள்
  • பேடன்ட் வாங்குவது வேறு, பொருளை உண்மையில் தயாரிப்பது வேறு, முதல் விஷயம்(ஐடியா)தான் ரொம்ப முக்கியம், அதை வைத்தே பெரிய ஆளானவர்கள் இங்கே உண்டு
  • சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் எப்படிச் சிறிய நிறுவனங்களை ‘வாங்கு’ கின்றன?
  • இதில் இரண்டு வகைகள் உண்டு: Horizontal Acquisitions, Vertical Acquisitions
  • Horizontal என்றால், ஒரே சாஃப்ட்வேர் (அல்லது அடிப்படைக் கட்டமைப்பு) எல்லாத் துறைகளிலும் (உதாரணமாக: வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மீடியா, விமான சேவை நிறுவனங்கள் etc.,) பயன்படும், நீங்கள் அதுமாதிரி சாஃப்ட்வேர்களை எழுதி, ஓரளவு பிரபலமாகியிருந்தால் போதும், பெரிய நிறுவனங்கள் உங்களை வாங்குவதற்காகக் காசுக் கணக்கே பார்க்காமல் அள்ளித் தரத் தயாராக இருப்பார்கள். ஆனால் இதுமாதிரி Acquisitions மிகக் குறைவு, மிக அபூர்வம்
  • ஆகவே, Vertical Acquistionsதான் நமக்கு வசதி. ஏதாவது ஒரு துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் துறைக்கு என்று இருக்கும் பிரச்னைகளைக் கவனியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், அதில் அனுபவம் மிக்க நபர்களை உங்கள் குழுவில் இணைத்துக்கொள்ளுங்கள், உங்களது வாடிக்கையாளர்களுடன் பேசுங்கள், அந்தத் துறையில் உள்ள எல்லாருக்கும் பயன்படக்கூடியவிதமாக ஒரு சாஃப்ட்வேரை எழுதுங்கள். அதை ஒன்று, ஐந்து, பத்து, இருபது நிறுவனங்களில் செயல்படுத்திப் பரீட்சித்துப் பாருங்கள்
  • இப்படி நீங்கள் எழுதும் ‘அபூர்வ’ சாஃப்ட்வேரை, மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். பரவாயில்லை, அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல் என்று தீர்மானித்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் வேலையைத் தொடருங்கள், அந்தத் துறை சார்ந்த புதுப்புது விஷயங்களைக் கவனித்துச் சேர்த்துக்கொண்டே இருங்கள்
  • இதனால், ஒருகட்டத்தில் அந்தக் குறிப்பிட்ட துறையில் பெரிய நிறுவனங்களைவிட உங்களுடைய தயாரிப்பு ஒரு படி மேலே போய்விடும், ஆனால் இப்போதும், அவர்கள் உங்களை அலட்சியமாகதான் பார்ப்பார்கள். ‘நேத்து வந்த பொடிப்பய, இவனால என்னை என்ன செய்யமுடியும்?’
  • அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்து பல இடங்களில் அவர்களுடைய சாஃப்ட்வேரை வாங்கப்போகிற கஸ்டமர்கள் உங்களைப் பற்றிப் பேசி ஒப்பிட ஆரம்பித்தால், அப்போது அவர்களுக்குப் புரியும், ‘இந்தப் பயலுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்’ என்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள்
  • இப்போது, அந்தப் பெரிய நிறுவனம் தன்னுடைய பெருந்தலைகளைக் கூப்பிட்டு விவாதிக்கும் ‘எது பெட்டர்? நம்ம சாஃப்ட்வேரை இன்னும் சிறப்பாக்கறதா? அல்லது அந்தக் கம்பெனியை மொத்தமா வாங்கிப் போடறதா?’
  • நீங்கள்தான் ஏற்கெனவே அந்த Verticalலில் பிஸ்தாவாச்சே, உங்கள் சாஃட்வேரை (அதாவது கம்பெனியை) வாங்கிவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று அவர்களே முடிவு செய்வார்கள். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது எதுவுமே இல்லை (உங்களது Productஐத் தொடர்ந்து Improve செய்துகொண்டிருப்பதைத்தவிர)
  • அடுத்த விஷயம், என்னதான் நீங்கள் உங்கள் கம்பெனியைப் பெரிய நிறுவனம் ஒன்றிடம் விற்க விரும்பினாலும், நீங்களே அவர்களிடம் சென்று பேசாதீர்கள், விலை பாதியாகக் குறைந்துவிடும், அவர்களே வரும்வரை காத்திருங்கள்
  • வந்தார்களா? வாழ்த்துகள், பாதி வேலை முடிந்தது, மிச்சத்தைக் கவனியுங்கள்
  • ஏற்கெனவே சொன்னதுபோல், உங்கள் சாஃப்ட்வேரை விற்பது வேறு, உங்கள் கம்பெனியை விற்பது வேறு, அதற்கு நீங்கள் உங்களுடைய கம்பெனியைப் பலவிதமாகப் பொட்டலம் கட்டிக் காட்டவேண்டியிருக்கும் (IP, Employees’ Skills, Balance Sheet, Profit, Market Potential என்று வரிசையாக ஏதேதோ சொன்னார், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இங்கே உங்களுக்குத் தெரிந்தபடி மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கொள்ளவும்)
  • பெரிய கம்பெனிகளுடன் பேரம் பேசும்போது, ஆரம்பத்தில் அவர்கள் அதிரடியாகதான் இறங்குவார்கள், ‘நீயெல்லாம் ஒரு கம்பெனியா? உன்னைக் காசு கொடுத்து வாங்கணும்ன்னு எனக்குத் தலையெழுத்தா? உன்னைவிட பக்கத்து கம்பெனிக்காரன் பலமடங்கு பெட்டர், தெரியுமா?’
  • இப்படி யாராவது பேசினால் சளைக்காதீர்கள். ‘ஆமா சார், நீங்க அவன்கிட்டயே பேசிக்கோங்க, குட் பை’ என்று எழுந்து வந்துவிடுங்கள் (கத்தரிக்காய் பேரம் பேசும் அதே டெக்னிக்?)
  • அப்புறம், அந்தப் பேரம்பேசிகள் தங்களது பெருந்தலைகளோடு உரையாடுவார்கள், உங்களது ‘வொர்த்து’ தெரிந்து அவர்கள் இறங்கிவருவார்கள், ‘சரி, என்ன விலை  எதிர்பார்க்கறீங்க?’ என்று கேட்பார்கள்
  • உடனடியாக, உங்கள் வாயை ஃபெவிகால் போட்டு மூடிக்கொண்டுவிடுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைச் சொல்லாதீர்கள், அவர்கள் முதலில் பேசட்டும்
  • அவர்கள் பேசியதும் ‘This is too low’ என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக்கொள்ளுங்கள். எந்தப் பெரிய கம்பெனியும் உங்களிடம் ஆரம்பத்தில் சொல்லும் விலையைப்போல் இரண்டு முதல் மூன்று மடங்குவரை தரத் தயாராக இருப்பார்கள்
  • அப்புறம், பேரங்கள் தொடங்கும், முடிந்தவரை இந்த விஷயத்தில் அனுபவம் உள்ள ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள், பெரும்பாலான Entrepreneurs அடி வாங்குவது இந்த இடத்தில்தான், இந்த அனுபவம் கிடைத்தபிறகு, நீங்கள் இன்னொரு பிஸினஸ் நடத்தினால் அதைச் சரியான விலைக்கு விற்பீர்கள்
  • நமக்கு அந்த Trial and Error எல்லாம் சரிப்படாது. அனுபவம் உள்ள ஒருவர் உங்களுடன் இருந்தால் அடிமாட்டு விலையைத் தவிர்க்கலாம்
  • உங்கள் கம்பெனியை விற்றபின்னர், நீங்களும் அந்தப் பெரிய நிறுவனத்தில் (சில மாதங்களாவது) வேலை செய்யவேண்டியிருக்கும். அப்போது ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராக இருங்கள், சொந்தமாகத் தொழில் நடத்துவதன் சவால்கள் வேறு, பெரிய கம்பெனியில் வேலை செய்வதன் சவால்கள் வேறு, அப்புறம் வருத்தப்படாதீர்கள்
  • நிறைவாக ஒன்று, என்னதான் கை நிறையக் காசு வாங்கிக்கொண்டு பெரிய கம்பெனியில் பிரமாதமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அநேகமாக நீங்க அதை ரசிக்கமாட்டீர்கள், சொந்தமாக ஒரு விஷயத்தை உருவாக்குகிற த்ரில் உங்களைச் சும்மா விடாது, விரைவில் அடுத்த Entrepreneurial முயற்சியில் இறங்கிவிடுவீர்கள், இது நிச்சயம் Winking smile

***

என். சொக்கன் …

25 01 2011

நேற்று சூப்பர் ‘மோர்’க்கெட் ஒன்றில் பற்பசை வாங்கச் சென்றிருந்தேன். ஒரு ஷெல்ஃப் நிறைய ஏகப்பட்ட options, பல வண்ணங்கள், சுவைகள், மவ்த்வாஷ், ஃபயர் அண்ட் ஃப்ரீஜ் இன்னபிற innovations, சிறுவர்க்கு, டீனேஜருக்கு, 100% சைவருக்கு (அசைவ, வைணவ வெரைட்டிகளும் இருக்கக்கூடும்?) முதியோருக்கு, மூலிகைப் பிரியருக்கு எனப் பல specialisations…. பிரமித்து நின்றேன்.

ஒரே பிரச்னை, இவற்றை ஒப்பிடுவது பெரும்பாடாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை, வெவ்வேறு விலை, எதுவும் ரவுண்டாக இன்றி 170 கிராம் 38 ரூ, 190 கிராம் 42 ரூ, 245 கிராம் 90 ரூ என்று போட்டுக்குழப்புகிறார்கள். டூத் பேஸ்ட் விஷயத்தில் Brand Choice / Loyalty ஏதும் இல்லாதவர்கள் இவற்றில் எது cost effective என ஒப்பிட்டுப் பார்க்கக் குறைந்தபட்சம் ஒரு scientific calculator தேவைப்படும்போலிருக்கிறது.

கொஞ்சம் உற்றுப்பார்த்தபோது, இதேமாதிரி குழப்படி அநேகமாக எல்லா மளிகை சாமான்களிலும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, ஒரு ஷாம்பூ சிறிய சேஷேயில் வாங்கினால் ரூ 3/- அதையே டப்பாவாக வாங்கினால் ரூ 67/- நீங்கள் மாதாந்திரத் தேவைக்கு எதை வாங்குவீர்கள்?

அநேகமாக நாம் எல்லோரும் டப்பா ஷாம்பூதான் சிக்கனம் என்று நினைப்போம். ஆனால் கொஞ்சம் கவனித்துக் கணக்குப்போட்டால், சில Brandகளில் டப்பா ஷாம்பூ விலை குறைவாக உள்ளது, வேறு சிலவற்றில் ஒரு டப்பா வாங்குவதற்குப் பதில் 20 சாஷேக்கள் வாங்கினால் அதே அளவு ஷாம்பூ கிடைக்கிறது, பணம் கிட்டத்தட்ட 20% மிச்சமாகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை – சாஷேவைப் பிரித்துப் பயன்படுத்துகிற சிரமம் இல்லாமல் டப்பாவாக வாங்குவதால் நம்மிடம் கூடுதல் காசு (Convenience fee) வசூலிக்கிறார்களா? அல்லது, பிளாஸ்டிக் டப்பாவுக்கு 20% எக்ஸ்ட்ரா காசா? அல்லது, ’சாஷே வாங்குவோர் ஏழைகள், ஆகவே அவர்களுக்கு விலையைக் குறைக்கிறோம்’ என்கிற பொதுநல நோக்கமா? (சிரிக்காதீர்கள்! 🙂 )

யோசித்துப்பார்த்தால், இன்றைய தேதிக்குத் தங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவோர் வெவ்வேறு பிராண்ட்களின் விலைகளை one to one ஒப்பிட்டுப் பார்த்து எது மலிவு, எதை வாங்கலாம் என்று முடிவெடுக்க எளிய வழி எதுவுமே இல்லை. அவரவர் இஷ்டப்படி ஆளுக்கோர் அளவு, விலை என்று வைத்தால், கால்குலேட்டர் இன்றி கணக்குப் போட்டு முடிவெடுக்கமுடியாது, அதற்கு வாய்ப்பு / விருப்பம் இல்லாதவர்கள், அல்லது ‘என்னத்தை ஒப்பிட்டு என்ன ஆகப்போகுது?’ என்று நினைப்பவர்கள் காசை இழக்க வாய்ப்பு அதிகம் – அதைத்தான் இந்த பிராண்ட்கள் விரும்புகின்றனவோ?

வெவ்வேறு பிராண்ட்கள் என்றாலாவது பரவாயில்லை, தர வித்தியாசத்தினால் விலை வித்தியாசம் என்று சொல்லலாம் – பெரும்பாலும் ஒரே பிராண்ட்க்குள் இருக்கும் வெவ்வேறு பொட்டல வகைகளின் விலைகள்கூடக் கேனத்தனமாக வைக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த (கற்பனை) பட்டியலைப் பாருங்கள்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய்

நான்கு பாக்கெட்களுக்குள்ளும் இருப்பது ஒரே பிஸ்கட்தான் – ஆனால் இந்த நான்கில் நான் எதை வாங்கினால் மலிவு? ஒவ்வொன்றையும் 1 கிலோ எடைக்கு மாற்றிக் கணக்குப் போட்டு எது பெட்டர் என்று முடிவெடுப்பதற்குள் பொழுது விடிந்துவிடாதா?

ஆக, கடைக்கு வருகிறவர்கள் எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கக்கூடாது, Brand Value பார்த்துப் பொருள்களை அள்ளிச் செல்லவேண்டும். அதன்மூலம் மாதம் ஐநூறோ, ஆயிரமோ மிச்சமாகக்கூடும் என்று யோசிக்கக்கூடாது. அப்படியே யோசித்தாலும் ‘கால்குலேட்டரை வெச்சு கணக்குப் போட்டு வாங்கற நேரத்துல ஏதாவது ஒரு பிராண்டை எடுத்துகிட்டுப் போயிடலாம்’ என்று தீர்மானிக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்.

இப்படிக் குழப்பியடிக்காமல் பொருள்கள் அனைத்தும் 100 கிராம், 200 கிராம், கால் கிலோ, அரைக் கிலோ போன்ற standard அளவுகளில் வந்தால் ஒரே பிராண்டுக்குள், அல்லது போட்டி பிராண்ட்களை விரைவாக ஒப்பிட்டு வாங்குவது வசதியாக இருக்கும். அப்படி ஒரு சட்டம்(அல்லது Guideline?)கூட இந்தியாவில் இருக்கிறதாம். ஆனால் அதை மீறுகிறவர்கள் பொட்டலத்தின்மீது ‘Non-standard size’ என்று ஒரு Warning Message அச்சிட்டுவிட்டால் போதுமாம். சுத்த அபத்தம்!

இந்தப் பிரச்னையைத் தீர்க்க சுலப வழி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு Consumerஆக என் அனுபவத்தைச் சொல்வதென்றால், ஒவ்வொரு பொட்டலத்தின்மீதும் (அது எந்த அளவாக இருந்தாலும் சரி) அதன் 1 கிலோ / 1 லிட்டர் விலை என்ன என்பதை அந்தக் கம்பெனியே கணக்கிட்டு அச்சிடவேண்டும். மேலே பார்த்த உதாரணத்தை இதன்படி மாற்றினால், 19, 46, 220 கிராம் பொட்டலங்களைவிட, 95 கிராம்தான் cost effective என்று உடனே புரியும்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய் (கிலோ ரூ 263)
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய் (கிலோ ரூ 260)
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய் (கிலோ ரூ 210)
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய் (கிலோ ரூ 218)

இந்த வழிமுறை அமலுக்கு வந்தால் இரண்டு வெவ்வேறு பிராண்ட்கள், அல்லது ஒரே பிராண்டின் இரண்டு வெவ்வேறு பொட்டலங்களைச் சட்டென்று பார்த்து எது விலை மலிவு என்று சிரமமில்லாமல் கணக்கிடமுடியும், ஒப்பிடமுடியும், அதன்பிறகு அவற்றில் விலை குறைவானதை வாங்குவதோ விலை அதிகமானதை வாங்குவதோ என் இஷ்டம்!

அஃப்கோர்ஸ், இப்படி வாங்குபவருக்குச் சாதகமான ஒரு திட்டத்தை யாரும் அமல்படுத்தமாட்டார்கள், அமல்படுத்தவிடமாட்டார்கள் என்பது நிச்சயம், அது வேறு சமாசாரம்!

***

என். சொக்கன் …

05 08 2011

UPDATE:

நான் சொன்ன இந்த யோசனை ஏற்கெனவே பல நாடுகளில் அமலில் இருப்பதாக அறிகிறேன். நண்பர் இலவசக் கொத்தனார் ஒரு ஃபோட்டோகூட அனுப்பிவைத்திருக்கிறார். அதைக் கீழே தந்துள்ளேன். உலகம் சுற்றாத வாலிபனாக இருப்பதில் இதுதான் ஒரே அவஸ்தை :>

***

என். சொக்கன் …

10 08 2011

RTE எதிர்ப்புச் செய்தி பற்றி என்னுடைய நேரடி அனுபவம் ஒன்று.

சில தினங்களுக்கு முன் என் மகள் நங்கையின் 2ம் வகுப்புப் புத்தகங்கள் வாங்குவதற்காக அவளுடைய பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த அம்மையார் ‘RTE பற்றித் தெரியுமா?’ என்றார்.

‘தெரியாது, சொல்லுங்கள்’ என்றேன். படபடவென்று ஏதோ விளக்கினார்.

எனக்கு அவர் பேசியதில் பாதிக்குமேல் புரியவில்லை poor students, lack of confidence, quality of education என்று ஏதேதோ.

கடைசியாக ‘RTEக்கு எதிராக வாதாடுவதற்காக, இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் சேர்ந்து டெல்லியில் ஒரு வழக்கறிஞரை நியமித்திருக்கிறோம்’ என்றார். ’இதற்காக நீங்கள் பைசா தரவேண்டாம். ஆனால் RTE வந்தால் எங்கள் குழந்தைகளுக்குக் கெடுதல் என்று அரசாங்கத்திடம் சொல்லவேண்டும்’ என்றார்.

அப்போதும் எனக்கு விளங்கவில்லை. ’ஏதாவது அச்சு வடிவில் இருந்தால் கொடுங்கள், படித்துப் புரிந்துகொள்கிறேன்’ என்றேன்.

அவர் கொஞ்சம் தயங்கிவிட்டு ஒரு சீட்டைக் கொடுத்தார். அது ஏதோ வக்கீல் நோட்டீஸ்மாதிரி இருந்தது. தலைகீழாக நின்று படித்தாலும் புரியப்போவதில்லை.

’மன்னிக்கவும். எனக்குச் சரிவரப் புரியாத விஷயத்துக்கு ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிப்பது நியாயமில்லை’ என்று கையெழுத்திட மறுத்துவிட்டேன்.

அவர் முகத்தில் லேசான கோபம். ‘உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தின்மீது உங்களுக்கு அக்கறை இல்லைபோல’ என்று நேரடியாகவே சொன்னார். நான் கடுப்பாகிக் கிளம்பிவிட்டேன்.

வாசலில் ஒரு parent அதே வக்கீல் நோட்டீஸை வைத்துக்கொண்டு நின்றிருந்தார். ‘இது என்ன?’ என்றார் என்னிடம்.

’எனக்குத் தெரியவில்லை’ என்றேன்.

‘சரி பரவாயில்லை, எங்கே கையெழுத்துப் போடணும்ன்னாவது சொல்லுங்க’ என்றார். பதில் சொல்லாமல் திரும்பினேன்.

அதன்பிறகு RTEபற்றி யோசிக்கவே இல்லை. பல நாள் கழித்து நேற்று இந்தச் செய்தி படித்தபின் விஷயம் புரிகிறது –> http://goo.gl/hGbO2

அன்று கையெழுத்துப் போடாததற்காகச் சந்தோஷப்படுகிறேன். நங்கை எல்லாவகை மாணவர்களுடனும் கலந்து பழகிப் படிப்பதையே விரும்புகிறேன்.

தனியார் பள்ளிகள் RTEக்கு எதிராகப் பேசுவது business sense. அதன்மூலம் அவர்களுடைய நிஜமுகம் வெளிப்படுவது சந்தோஷம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் RTEக்கு எதிராக விவரம் புரியாமல் கையெழுத்திட்டால், அதுபற்றிக் கொஞ்சம் படித்துவிட்டு முடிவுசெய்ய சொல்லுங்கள். அதன்பிறகு கையெழுத்திடுவது அவர்கள் விருப்பம் – ஆனால் பள்ளிகளின் மிரட்டலுக்குப் பயந்துவிடவேண்டாம், RTE நிஜமாகவே அவசியமா, இல்லையா என்று நாமே யோசித்துத் தீர்மானிக்காமல் கையெழுத்திடுவதும், வெற்றுப் பத்திரத்தில் கைநாட்டு வைப்பதும் ஒன்றுதான்.

***

என். சொக்கன் …

27 04 2011

ட்விட்டரில் எழுதியது, சில மாற்றங்களுடன் இங்கே சேமித்துவைக்கிறேன்:

நங்கைக்குப் பள்ளி முடிந்தது. அத்தனை நோட்டுகளிலும் அவள் மீதம் வைத்திருக்கும் காலிப் பக்கங்களைப் பார்த்தால் கண்ணில் ரத்தம் வருகிறது.

அநேகமாக எல்லா நோட்டுகளிலும் 20 பக்கங்களே எழுதப்பட்டுள்ளன. மீதம் காலி. ஆனால் அடுத்த வருடம் கட்டாயம் புது நோட்டுகள் வாங்கணும். ரஃப் நோட்கள் உள்பட.

அதுவும் வெளியே வாங்கக்கூடாது – அவர்கள் தரும் நோட்டுகளைதான் வாங்கவேண்டும் – அவர்கள் சொல்லும் அதே விலையில்.

யூனிஃபார்ம் கிழியாமல் அளவு மாறாமல் நன்றாகவே இருந்தாலும், புதுசு வாங்கியாகவேண்டும். No Choice.

நான் பள்ளியில் படித்தபோது ஒரே நோட்டை மூன்றாகப் பிரித்து மூன்று பாடங்களுக்குப் பயன்படுத்துவோம். ஒரு பக்கம் வீணாகியது இல்லை.

விளம்பர நோட்டீஸ்கள், காலண்டர் தாள் பின்பக்கங்கள்தான் ரஃப் நோட் ஆகும். வருடம் ஒரு புது யூனிஃபார்மெல்லாம் கிடையாது.

செலவழிப்பதுபற்றிப் பிரச்னையில்லை. அது நியாயமாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரிடமும் வருடம் இத்தனை ரூபாய் பிடுங்கியே தீரவேண்டும் எனப் பள்ளிகள் திட்டம் போட்டுச் செயல்படுவதாகத் தோன்றுகிறது.

பேசாமல் அடுத்த மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் பரிசோதனை எலியாக்கலாமா என்று (சீரியஸாக) யோசிக்கிறேன்.

பாழாய்ப்போன பயம் தடுக்கிறது. ஒருவேளை செலவு செய்தால்தான் படிப்பு வருமோ? அபத்தமான சிந்தனை,ஆனால் பயம் உண்மை. நீரோட்டத்தோடு போகிறேன்.

***

என். சொக்கன் …

26 03 2011

’வாங்க சார். உட்காருங்க. சௌக்யமா?’

‘சௌக்யம்தான். ஆனா என்னை எதுக்காக இங்கே கூப்பிட்டிருக்கீங்கன்னு புரியலையே!’

‘கவலைப்படாதீங்க சார். ரிலாக்ஸ். உங்களை வெச்சு ஒரு சின்னப் பரிசோதனை செய்யப்போறோம்.’

’பரிசோதனையா?’

‘மறுபடி டென்ஷனாகறீங்களே. ஊசி போட்டு உங்களை டைனோசரா மாத்திடமாட்டோம் சார். இது ஒருவிதமான சோஷியல் டெஸ்ட்.’

‘ஃபேஷியல் தெரியும், அதென்ன சோஷியல்?’

‘அதாவது, ஒரு சமூக அமைப்புல இருக்கிற மக்கள் வெவ்வேற சூழ்நிலைகள்ல எப்படி நடந்துக்கறாங்க-ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி செய்யறோம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை!’

’சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?’

’இப்ப அடுத்த ரூம்ல ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவர் உங்களோட பார்ட்னர்.’

‘அப்படியா? நான் அவரைப் பார்த்ததே கிடையாதே!’

’உண்மைதான். அவரும் உங்களைப்  பார்த்தது கிடையாது. ஆனா இந்த விளையாட்டுல நீங்க ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ். சரியா?’

’ஓகே.’

‘இப்ப நான் உங்களுக்கு 100 ரூபாய் தர்றேன். இந்தத் தொகையை நீங்களே வெச்சுக்கலாம். இல்லாட்டி அடுத்த ரூம்ல இருக்கிறவருக்கு அனுப்பலாம்.’

‘முகம் தெரியாத ஒருத்தருக்கு நான் ஏன் பணம் அனுப்பணும்? இதை நானே வெச்சுக்கறேன்!’

‘கொஞ்சம் பொறுங்க சார். இந்தப் பணத்தை நீங்க அவருக்கு அனுப்பினா, நாங்க அவருக்கு எக்ஸ்ட்ராவா 4 மடங்கு காசு தருவோம், அதாவது 100 + 400 = 500 ரூபாய். இப்போ அவர் இந்தப் பணத்தைத் தானே வெச்சுக்கலாம், அல்லது உங்களுக்குப் பாதி, அவருக்குப் பாதின்னு பிரிச்சுக்கலாம்.’

‘அதாவது, நான் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தா, அவர் எனக்கு 250 ரூபாய் தர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இல்லையா?’

‘ஆமா. அதேசமயம், அவர் 500 ரூபாயையும் அவரே எடுத்துகிட்டு ஓடிப்போயிடவும் வாய்ப்பு இருக்கு.’

’உண்மைதான். நான் இப்ப என்ன செய்யறது?’

‘நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க சார். 100 ரூபாயை நீங்களே வெச்சுக்கறது பெட்டரா, அல்லது உங்க பார்ட்னரை நம்பி அதை விட்டுக்கொடுக்கறது பெட்டரா?’

சுவாரஸ்யமான விளையாட்டு. வந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த இன்னொரு ‘பார்ட்ன’ரை நம்புவதா வேண்டாமா என்று குழம்பிப் போனார்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒருவேளை கிடைக்கலாம் என்கிற ரூ 250/-ஐ நம்பி, இப்போது கையில் இருக்கும் ரூ 100/-ஐ இழக்கலாமா? அது சரியான முடிவுதானா?

ரொம்ப யோசித்தபிறகு, சிலர் நூறு ரூபாயைத் தாங்களே வைத்துக்கொண்டார்கள். பெரும்பாலானோர் அந்த இன்னொரு மனிதர் நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அதை அவருக்கு அனுப்பிவைத்தார்கள்.

இப்போது, அந்த இன்னொரு மனிதரின் நிலையில் இருந்து யோசியுங்கள். திடீரென்று உங்களுக்கு ரூ 500/- (100 + 400) கிடைக்கிறது. அதை உங்களுக்கு அனுப்பிவைத்தவர் பக்கத்து அறையில் இருக்கிறார். நீங்கள் அந்தப் பணத்தில் பாதியை அவரோடு பகிர்ந்துகொள்வீர்களா? அல்லது ‘அடிச்சதுடா லக்கி ப்ரைஸ்’ என்று பீட்ஸா பார்ட்டிக்குக் கிளம்பிவிடுவீர்களா?

மறுபடியும், பலர் நியாயமாக நடந்துகொண்டார்கள். ரூ 250/-ஐப் பக்கத்து அறைக்கு அனுப்பினார்கள். மிகச் சிலர் ஐநூறையும் தாங்களே அமுக்கிக்கொண்டார்கள்.

இதனால், பக்கத்து அறையில் இருந்தவர்களுக்குக் கடுப்பு. ‘நான் இந்தாளை நம்பினேன். இவன் என்னை ஏமாற்றிவிட்டானே’ என்று கொதித்தார்கள். ‘ச்சே, அந்த நூறு ரூபாயை நானே வெச்சுகிட்டிருக்கணும்’ என்று பொறுமினார்கள்.

இப்போது, இந்த விளையாட்டை நடத்திக்கொண்டிருந்தவர்கள் பக்கத்தில் வந்தார்கள் ‘என்ன சார்? ரொம்பக் கோவமா இருக்கீங்கபோல!’

‘ஆமா சார், அந்தாள் செஞ்சது அநியாயமில்லையா?’

‘உண்மைதான். வேணும்ன்னா, நீங்க அவரைப் பழிவாங்கலாம்!’

‘பழிவாங்கறதா? அது எப்படி?’

‘அவர் உங்ககிட்டேயிருந்து அநியாயமா காசைப் பிடுங்கிட்டார். இல்லையா? அதுக்குப் பதிலா, நீங்க எங்களுக்கு 1 ரூபா கொடுத்தீங்கன்னா நாங்க அவர்கிட்டேயிருந்து 2 ரூபாயைப் பிடுங்கிடுவோம். நீங்க 10 ரூபா கொடுத்தா அவர்ட்ட 20 ரூபாயைப் பிடுங்குவோம். 250 ரூபா கொடுத்தா, அவர் உங்களை ஏமாத்திச் சம்பாதிச்ச மொத்தக் காசையும் பிடுங்கிடுவோம். பழிக்குப் பழி! என்ன சொல்றீங்க?’

பாதிக்கப்பட்டவர்கள் யோசித்தார்கள், ’இந்த ஆளைப் பழிவாங்க நான் என்னுடைய பாக்கெட்டில் இருந்து பணம் செலவழிக்கவேண்டுமா? இதனால் எனக்கு என்ன லாபம்?’

இப்போது உங்களை அந்த இடத்தில் வைத்து பதில் சொல்லுங்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்து அந்த இன்னொரு மனிதருக்குத் தண்டனை(?) கொடுப்பீர்களா?

மாட்டீர்கள். இல்லையா? இந்த விளையாட்டு மொத்தமும் சுத்த முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இல்லையா? இந்த அறைக்குள் வந்தபோது உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு காசு இருந்ததோ, அதே அளவு காசு இப்போதும் இருக்கிறது. யாரும் உங்களிடமிருந்து காசைப் பிடுங்கவில்லை. சரிதானே? டெக்னிகலாக எந்தத் தப்பும் செய்யாத அந்த அடுத்த அறை மனிதரைத் தண்டிப்பதற்காக நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்தால் யார் முட்டாள்?

ஆனால், இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், பக்கத்து அறைக்காரரைத் தண்டிக்கவேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்கள். தங்களுடைய கைக்காசு 250 ரூபாய்வரை செலவழித்து, அவரிடம் இருக்கும் 500 ரூபாயைப் பிடுங்கினால்தான் அவர்களுக்கு நிம்மதி வந்தது.

இப்படிச் செய்ததால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. 250 ரூபாய் நஷ்டம்தான்.

அதனால் என்ன? நம்பிக்கை மோசடி செய்தவன் முறைப்படி தண்டிக்கப்பட்டுவிட்டான். அந்தத் திருப்தி போதுமே!

ஸ்விட்ஸர்லாந்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையின்போது, ’பழி வாங்கிய’ மனிதர்களுடைய மூளைக்குள் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ’என் காசு 250 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. தப்புச் செஞ்சவன் தண்டிக்கப்படணும்’ என்று யோசித்தபோது அவர்களுடைய மூளையில் சந்தோஷ உணர்வுகள் (feelings of pleasure) தூண்டப்பட்டதாம்!

இதை வாசித்தபோது எனக்குப் பகீரென்றது. இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களெல்லாம் நன்றாகப் படித்தவர்கள். சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்மட்டங்களில் இருக்கிறவர்கள். ஆனால் அவர்களுக்கும்கூட தங்களுடைய சொந்தக் காசை / நேரத்தை / உழைப்பைச் செலவழித்து தப்புச் செய்த ஒருவரைப் பழிவாங்குவதில் குரூர சந்தோஷம் இருக்கிறது. பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கு நாலு தர்ம அடி போடுகிற மனோநிலைதான் ’தப்புச் செஞ்சவங்களை விசாரணையெல்லாம் இல்லாம நிக்கவெச்சுச் சுடணும்’ என்பதில் வந்து நிற்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுகிறவர்களெல்லாம் வழக்கொழிந்துவிட்டார்களோ?

(Image Courtesy: http://www.danariely.com/about-dan/)

நான் இந்த ஆராய்ச்சியைப்பற்றிப் படித்தது Dan Ariely எழுதிய ‘The Upside Of Irrationality’ என்ற அற்புதமான புத்தகத்தில். சுமார் 300 பக்க அளவு கொண்ட இந்தப் புத்தகத்தை என்னால் தொடர்ச்சியாகப் படிக்கவே முடியவில்லை. அவ்வளவு விஷயங்கள், ஒவ்வொன்றின் பின்னணி, தாக்கம், சாத்தியங்களையெல்லாம் யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. மனித மனம் எப்படியெல்லாம் விநோதமாக, Irrational-ஆக இயங்குகிறது என்று வெவ்வேறு ஆராய்ச்சிகளுடைய துணையோடு மிக அழகாக, எளிமையாக விவரித்திருக்கிறார்.

Buy The Upside Of Irrationality: The Unexpected Benefits Of Defying Logic At Work And At Home Buy Predictably Irrational

இந்தப் புத்தகம், இதே ஆசிரியருடைய முந்தைய புத்தகமாகிய ‘Predictably Irrational’ இரண்டுமே நிஜமான முத்துகள். எல்லோரும் அவசியம் வாசிக்கவேண்டியவை.

இதுமாதிரி புத்தகங்கள் தமிழில் எப்போது வரும்? (மொழிபெயர்ப்பாகவேனும்!)

***

என். சொக்கன் …

21 12 2010


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,147 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031